தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, November 13, 2009

அப்பாவாக‌ இருப்ப‌து...

பாப்பா வந்ததற்கு பிறகு எதுவும் எழுத முடிவதில்லை. வீட்டிற்கு செல்வதற்குள் இருட்டி விடுகிறது. நான் கதவை திறந்தவுடனே என்னை நோக்கி ஓடி வருகிறாள். ஓடி என்றால் ததக்கா புதக்கானு வேகமா நடப்பதை தான் சொல்கிறேன். வந்து காலை பிடித்துக் கொண்டவளை தூக்கலாமா என்று ஒரு நிமிடம் சிந்திக்கிறேன். வெளியே குளிரிலிருந்து வருவதால் கை மிகவும் குளுமையாக இருக்கும்.

இருந்தாலும் அவங்க‌ விட மாட்டாங்க‌. நான் துணி மாற்றி கை அலம்பி அவுங்கள‌ தூக்கும் வரை என்னை பின் தொடர்ந்து கொண்டே இருப்பாங்க. அப்பறம் தூக்கினதுக்கு அப்பறம் இரண்டு பேருக்குமே சந்தோஷம். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம்னு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சர்க்கரையின் சுவையை சுவைத்தால் தான் உணர முடியும். அதை ஆயிரம் பக்கம் எழுதி உணர வைக்க முடியாது. அது போல தான் இந்த உணர்வையும் எனக்கு விளக்க தெரியவில்லை.

என் மனைவியிடம் நீயும் உன் அப்பாவை இப்படி தான் குழந்தைல கொஞ்சிருப்பியா? அவரும் உன் மேல இதே மாதிரி தான் பாசமா இருந்திருப்பாரு இல்ல அப்படினு அசட்டுத்தனமான கேள்விகளை கேட்கிறேன். என் அக்காவைக் கூட என் அப்பா இப்படி தான் பாசமா வளர்த்திருப்பாருனு நினைத்து பார்க்கிறேன். எந்த பெண் கஷ்டப்பட்டாலும் அவளுடைய அப்பா மனசு எந்த அளவு கஷ்டப்படும் என்று எண்ணி முடிந்த வரை மனைவியை திட்டக் கூடாது என்று நினைக்கிறேன்.

லேப் டாப் முன்னாடி உட்கார்ந்த உடனே வந்து மடியில் அமர்ந்து கொள்கிறாள். அப்பறம் என்ன பண்ண முடியும். அவுங்க பாட்டு தான் யூ ட்யூப்ல ஓடும். வரான் வரான் பூச்சாண்டினு ஒரு பாட்டு இருக்கு. அது என் லாப் டாப்ல ஆயிரம் முறைக்கு மேல ஓடியிருக்கும். அடுத்து குவா குவா வாத்து, அம்மா இங்கே வா வா, எலியாரே எலியாரே, நிலா நிலா இப்படி ஒரு இருபது பாட்டு கேட்பாங்க.

அப்பறம் அவுங்களோட சாப்ட் டாய்ஸ் பிங்கி, டெட்டி, புலி, எலி எல்லாத்தையும் வெச்சிட்டு விளையாடுவாங்க. புலியை விட்டு அப்பாவை கடிக்க வைக்கிறது தான் விளையாட்டு. அதைப் பார்த்து பயங்கரமா சிரிப்பாங்க. ஒவ்வொரு அறையா புலி பொம்மையை எடுத்துட்டு நடப்பாங்க. அவுங்க எங்க சுவற்றுல இடிச்சிப்பாங்களோனு நாங்களும் அவுங்க பின்னாடியே போகனும்.

எனக்கு யாராவது ஃபோன் பண்ணா ஒரு பத்து நிமிஷம் இவுங்க பேசுவாங்க. அப்பவும் ஃபோன் வாங்கிட்டு நடந்துட்டே பேசுவாங்க. இப்படி நடந்து டயர்டானவுடனே குவா குவா வாத்து பார்த்துட்டே ஏதாவது சாப்பிடுவாங்க. அப்பறம் ஒவ்வொரு பாட்டா பார்த்துட்டே தூங்கிடுவாங்க. எப்படியும் மணி பதினொன்று பனிரெண்டு ஆகிடும். அதற்கு பிறகு ஏதாவது மெயில் வந்திருக்கானு பார்த்துட்டு முடிந்த வரை பதில் சொல்லிவிட்டு படுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

ஊரில் இருந்தால் இவுங்கள‌ பார்த்துக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு. சீக்கிரம் ஊருக்கு போகணும்.

Wednesday, September 30, 2009

உன்னை போல் ஒருவன் - ‍மாத்தி யோசி

உன்னை போல் ஒருவனை எல்லாரும் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. கூட்டத்தோட கோவிந்தா போடலாம்னு நானும் களம் இறங்கிட்டேன். இங்க எல்லாரும் படத்துல கமல் ரோலை நாசர் செஞ்சிருக்கலாம், பிரகாஷ் ராஜ் செஞ்சிருக்கலாம், சார்லி, ஓமக்குச்சி நரசிம்மன் செய்திருக்கலாம்னு கமலுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்துட்டாங்க. விஜயகாந்த் படத்துல வாசிம் கானா வருவாரே அவர் பண்ணிருக்கலாம்னு சொல்லாதது தான் மிச்சம்.

இவ்வளவு சிந்திக்கிற மக்கள்ஸ் கொஞ்சமாவது மாத்தி சிந்திச்சி பார்த்தீங்களா? இதே ரோலை விஜய், கவுண்டர், கேப்டன், லொள்ளு சபா மனோகர் இவுங்க எல்லாம் செய்திருந்தா எப்படி இருந்திருக்கும்? அப்படி கற்பனை செஞ்சி பார்த்தது தான் இந்த பதிவு.

இப்ப‌ அந்த‌ சாமானிய‌ன் ரோலை இளைய‌ த‌ள‌ப‌தி டாக்ட‌ர் விஜ‌ய் செய்திருந்தா எப்ப‌டி இருந்திருக்கும்...

அவ‌ர் கைல‌ விதவித‌மா பை எடுத்துட்டு போய் வைக்கும் போது அவ‌ர் கைய காட்டறோம், பையை காட்டறோம். பையைக் காட்டறோம், கையைக் காட்டறோம்.

அடுத்து மார்க்கெட்ல‌ அவ‌ர் காய் வாங்க‌ போகும் போது ஒரு குழ‌ந்தை மேல‌ த‌க்காளி விழ‌ போகுது. அதை அவ‌ர் நாலு கிலோமீட்ட‌ர் தூர‌த்துல‌ இருந்து பார்க்க‌றாரு. அப்ப‌டியே அங்க‌ இருந்து ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்து வ‌ந்து அந்த‌ த‌க்காளியை எட்டி உதைச்சி, அந்த‌ குழ‌ந்தையைக் காப்பாத்த‌றாரு. இப்ப‌ அந்த‌ குழ‌ந்தை ஆச்ச‌ரிய‌மா யாருனு பார்க்குது. அந்த குழந்தை முகத்தை ஜூம் பண்றோம். அப்ப‌டியே சிரிக்குது. இப்ப‌ தான் டாக்ட‌ர் முக‌த்தையே காட்ட‌றோம். இது தான் இண்ட்ரோ.

உட‌னே அங்க‌ ஒரு குத்துப் பாட்டு. டாக்ட‌ர் கை வைக்காத‌ க‌ருப்பு க‌ல‌ர் ப‌னிய‌ன் போட்டு ஆட‌றாரு. அந்த‌ கை வைக்காத‌ ப‌னிய‌ன் எதுக்குனா, அவ‌ர் சாமானிய‌னு சொல்ற‌ குறியீடு. அந்த‌ குத்து பாட்டு முடியும் போது, அங்க‌ ஒருத்த‌ன் ஒரு பொண்ணு இடுப்புல‌ கை வைக்க‌றான். உட‌னே ஒரு ஃபைட். அவ‌னுக்கு துணையா ஆயிர‌ம் பேர் ட்ரெயின்ல வ‌ராங்க. ஆட்டோ, லாரில எல்லாம் அடி ஆள் வரது அந்த காலம். இப்ப டாக்டர் ரேஞ்ச்க்கு ட்ரெயின் தான் கரெக்ட். எல்லாரையும் டாக்ட‌ர் அடிச்சி பிரிச்சி மேய‌ராரு. அவர் கடைசியா மார்கெட்ல ஆனியன் வாங்கல. ஏன்னா அவரே சாம்ஆனியன்.

இது எல்லாம் முடிஞ்ச உடனே மாடில போய் உக்கார்ந்து, கமிஷ்னருக்கு ஃபோன் போடறாரு.

விஜய் : அண்ணா.. வணக்கங்கண்ணா!!!

லால் : சொல்லுங்க விஜய். எப்படி இருக்கீங்க?

விஜய் : தமிழ் நாட்ல என்னைய கண்டுபிடிச்ச முதல் ஆள் நீங்க தான். (இது பஞ்ச்... ஸ்கிரினப் பார்த்து பேசுவாரு)

லால் : தமிழ் நாட்லயே இப்படி இழுத்து இழுத்து பேசற‌ ஒரே ஆள் நீ தான்.

விஜய்னு கண்டுபிடிச்சதுக்கு அப்பறம் படத்தை எப்படி கண்டினியூ பண்ண முடியும்னு நீங்க நினைக்கலாம். ஆனா டாக்டரால அது நிச்சயம் முடியும். என்ன இன்னும் ஒரு நாலு குத்துப் பாட்டு, பத்து ஃபைட் வரும். அவ்வளவு தான். ஏன்னா இதுல நம்ம டாக்டர் ஒரு காமன் மேன்...

..........

இப்ப அந்த காமென் மேன் ரோலை லொள்ளு சபா மனோகரும் கமிஷ்னர் ரோலை சந்தானமும் செய்திருந்தா எப்படி இருக்கும்?

ம‌ : ஹ‌லோ க‌மிஷ்ஷ்ஷ்ன‌ர் இருக்காரா? நான் தான் காஆம‌ன் மேன் பேச‌றேன்.

ச‌ : டேய் ம‌ண்டையா. நீ காம‌ன் மேனாடா. வேணும்னா டாப‌ர் மேனு சொல்லு. அந்த‌ நாயே வ‌ந்து உன் த‌லையை ந‌க்கி பாத்துட்டு செத்து போயிடும்.

ம‌: க‌மிஷ்ன‌ர்.. நாஆன் இந்த‌ ஊரை சுத்தி பாஆம் போட‌ போறேன்.

ச‌ : ஏன்டா. எவ‌னோ காக்காக்கு வெச்சிருந்த‌ ம‌சால் வ‌டையை எடுத்து தின்ன‌து இல்லாம‌ பாம் போட‌ போறேனு என‌க்கே ஃபோன் ப‌ண்ணி சொல்றியா? நீ சாதார‌ண‌மா போட‌ற‌ பாமே தாங்காது. இதுல‌ க‌ட‌லைப் ப‌ருப்பு எஃப்க்ட் சேர்ந்தா ஊர் தாங்காதே. இப்ப‌ நான் என்ன‌ ப‌ண்ணுவேன்.

ம‌ : நான் ஊருக்குள்ள பாம் போடாம‌ இருக்க‌ணும்னா நீங்க‌ நாலு தீவிர‌வாதியை ரிலீஈஈஸ் ப‌ண்ண‌னும்.

ச‌ : நாங்க‌ தீவிர‌வாதியை ரிலீஸ் ப‌ண்றோம்.. அது வ‌ரைக்கும் நீ உன் பாமை ரிலீஸ் ப‌ண்ணாம‌ இரு.

பாருங்க‌ ம‌க்க‌ளே. ஒரு க‌மிஷ்னர் எவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ங்க‌ளை ச‌மாளிக்க‌ வேண்டிய‌து இருக்குனு.

.........

சரி.. இப்ப மத்த நடிகர்கள் எல்லாம் ஃபோன் பண்ணிருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கெஸ்... எது எது எந்த நடிகர்னு நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க.

வ‌ண‌க்க‌ம். Gummisioner, நான்... Gaaman man பேசறேன்.
ஏன்னா நான் Gamman Man கூடயும் , க‌ட‌வுளோடையும் தான் கூட்ட‌ணி வைப்பேன்... ஆங்.

ஹலோ கமிஷ்னர்... நான் த‌னி ஆள் இல்லை... காம‌ன் மேன்.
ஏ நான் பேண்டுக்கு வெளிய‌ ஜ‌ட்டி போட‌ற‌ சூப்ப‌ர் மேன் இல்ல.. பேண்டுக்குள்ள‌ ஜ‌ட்டி போட‌ற‌ காம‌ன் மேன்.. அது...

ஹ‌லோ க‌மிஷ்ன‌ர். நான் காம‌ன் மேன் பேச‌றேன் க‌மிஷ்ன‌ர். நான் சொல்ற‌தை கேளுங்க‌ க‌மிஷ்ன‌ர். நான் ஊரை சுத்தி பாம் வெச்சிருக்கேன் க‌மிஷ்ன‌ர். க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்... க‌மிஷ்ன‌ர் க‌மிஷ்ன‌ர்...

டேய் அந்த‌ க‌மிஷ்ன‌ன் இருக்கானா? தீஞ்ச மண்டையா நான் தான்டா காம‌ன் மேன் பேச‌றேன்.

க‌ண்ணா... நான் காம‌ன் மேன் பேஸ்றேன்.
கண்ணா... கடலைப் போடற ஃபிகருங்க தான் மிஸ்ஸிடு கால் கொடுக்கும். காமென் மேன் கனெக்ஷன் கால் தான் பண்ணுவான்... இது எப்படி இருக்கு?

Wednesday, August 12, 2009

மூன்று விரல் - வாசிப்பனுபவம்

பொதுவாக ஒரு புத்தகம் படித்தால் அதைப் பிடித்திருக்கும் பட்சத்தில் நண்பர்களுக்கு அந்த புத்தகத்தை சிபாரிசு செய்வேன். ஆனால் மூன்று விரல் என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. இதை நண்பர்களுக்கு சிபாரிசு செய்யலாமா வேண்டாமா என்று இப்பொழுதும் தெரியவில்லை.

அப்படி குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். முன்னூறு (335) பக்க நாவலில் முதல் நூற்றைம்பது பக்கத்தை மூன்று நாட்கள் விட்டு விட்டு படித்தேன். கடைசி நூற்றைம்பது பக்கத்தை, புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்தேன். இது இரா.முருகன் அவர்களின் முதல் நாவலாம். அவருடைய எழுத்தை நான் படிக்கும் முதல் நாவல் கூட. அதனால் இருவரில் ஒருவருக்கு ஸ்டார்டிங் ட்ரபில் போல என நினைத்து கொண்டேன். ஆனால் அதிக பக்கங்கள் ஸ்டார்டிங் ட்ரபிள் இருப்பது தான் பிரச்சனை.

மூன்று விரல் புத்தகத்தை எனக்கு சிபாரிசு செய்தது மலர்வனம் லக்ஷ்மி அக்கா. என்னுடைய ஆடு புலி ஆட்டம் கதையைப் படித்துவிட்டு அதைப் பற்றி பேசும் பொழுது மூன்று விரல் தவறாமல் படிக்கவும், சாப்ட்வேர் இஞ்சினியர்களின் வாழ்க்கையைப் பற்றி வந்த முக்கியமான (முதல்) நாவல் என்று சொன்னார். அதனால் எப்படியும் மூன்று விரல் படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

முதல் நூறு பக்கம் தாண்டுவதற்குள் மூச்சு முட்டியது. பேசாம படிக்காம விட்டுடலாமா என்று சிந்தித்தேன். ஆனால் முழுதும் படிக்காமல் ஒரு புத்தகம் நன்றாக இல்லை என்று சொல்வது சரியா என்ற சந்தேகத்தில் அடுத்த ஐம்பது பக்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன்.அதன் பிறகு வேகம் எடுக்க ஆரம்பித்த புத்தகத்தை கீழே வைத்தது முதல் இப்பொழுது வரை சுதர்சனும், ராவும் என்னை விடாமல் துரத்துகிறார்கள்.

சுதர்சனுடன் பேங்காக்கிற்கு புறப்படும் குழுவில் ஒருவனாக நானும் பயணப்பட்டதைப் போலவே உணர்ந்தேன். ராவ் பாஸ்போர்ட் தொலைத்துவுடன் அதை நானும் சேர்ந்தே தேடினேன். விசா காலம் முடிந்து அவனுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளை என் டீமில் ஒருவனுக்கு நடப்பது போல பதறினேன். இந்திய மேனஜர் நீரஜை தமிழில் தெரிந்த அத்தனை “நல்ல” வார்த்தைகளிலும் அர்ச்சித்தேன்.

தாய்லாந்தில் க்ளைண்ட் டீம் இந்தியர்களை நடத்திய விதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் தான் எங்களையும் இங்கே அமெரிக்காவில் நடத்துவார்கள். அவ்வாறு நடத்தும் க்ளைண்டிற்கு மிக நேர்மையாக நடந்து கொள்ள முடியாமல் நம்மை குறைவாக நடத்தும் இந்திய மேளாலருக்கு நேர்மையாக நடந்து கொள்ளும் அபத்தம் சுதர்சனுக்கும் ஏற்படுகிறது.

வீட்டில் அப்பாவிற்கு பிரச்சனை வரும் போது ஊரிலிருக்கும் நண்பனை அழைத்து பார்த்து கொள்ள சொல்வது ஆன்சைட் வரும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்க கூடிய ஒன்று. பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு பிரச்சனைகளை சுதர்சன் சந்திக்கும் பொழுது அதில் எந்த வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. இந்தியாவிலிருக்கும் போது அப்படி பைத்தியம் பிடிக்கும் நிலையில் கையில் குடையை வைத்து கொண்டு சொட்ட சொட்ட நினைந்து நடந்திருக்கிறேன். அப்படியே கழுத்திலிருக்கும் டேகை தூக்கி எறிந்துவிட்டு ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிவிடலாமா என்று தோன்றியிருக்கிறது.

உலகில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்சனை நம் வாழ்க்கையில் பெரிய சலனத்தை ஏற்படுத்த கூடிய வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் பற்றிய அனைத்து பிம்பங்களும் முதல் ஆன்சைட் ட்ரிப்புகளிலே அடித்து நொறுக்கப்படும். அதை மூன்று விரலிலும் காணலாம்.

வெறும் இரண்டு பாத்திரங்களைப் பற்றி மட்டும் அதிகம் பேசிவிட்டது போல தெரிகிறது. இங்கிலாந்தில் பிராஜக்ட் பிடித்து கொடுக்கும் ஜெஃப்ரி, க்ளைண்டாக வந்து காதலியாக மாறிய‌ சந்தியா, உடன் படித்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான மிளகாய் மண்டி நண்பன் ராஜேந்திரன், அம்மா அப்பா பார்த்து வைத்த புஷ்பவல்லி (புஷ்பா, இந்த பெயர் படித்ததும் இருவர் பட ஐஸ்வர்யா ராய் நினைவிற்கு வந்தார்), எப்படா ஆஃபிஸ் முடியும், பாய் ஃபிரெண்டுடன் ஊர் சுற்ற வேண்டும் என்று காத்திருக்கும் பேங்காக் அழகி னாய் என அனைவரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

இந்த நாவலை முடித்த விதத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஏதோ பதற்ற‌த்தில் முடித்ததைப் போல தோன்றியது. வெண்ணிலா கபடி குழு படம் இறுதி காட்சியில் இயக்குனருக்காக எப்படி வருந்தினேனோ அவ்வாறே இரா.முருகனுக்காக வருந்தினேன். இவ்வளவு சூப்பரா கொண்டு வந்துட்டு இப்படி முடிச்சிட்டாரேனு.

சரி, படிக்கலாமா வேண்டாமானு சொல்லுனு கேட்டீங்கனா, முதல் சில பக்கங்களை வேகமாக உருட்டிக் கொண்டு சுதர்சனுடன் பேங்காக் புறப்படுங்கள் என்றே சொல்வேன். முடிந்தால் ஏதாவது பயணத்தின் பொழுது படியுங்கள். இந்த நாவலை வீட்டில் அமைதியாக படிப்பதை விட பயணத்தின் பொழுது படிப்பது சுகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

புத்தகம் கிடைக்குமிடம் :

கிழக்கு பதிப்பகம்
விலை - 150 ரூ

Saturday, August 01, 2009

சமீபத்தில் படித்த புத்தகங்கள்!!!

புத்தகங்களை விமர்சிக்க எனக்குத் தெரியாது என்பதால் இது வெறும் வாசிப்பனுபவம் மட்டுமே.

வேர்பற்று - இந்திரா பார்த்தசாரதி
இந்திய சுதந்திர போராட்டத்தின் இறுதி கட்டத்தில் துவங்குகிறது கதை. சாதியத்தை வெறுக்கும் ஒரு பிராமண இளைஞனை (கேசவன்) மையமாக கொண்டு எழுதப்பட்டது. நாவலின் கதையை சொல்லி அதை வாசிக்கும் அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை. மேலும் புத்தகம் தற்பொழுது என் கையில் இல்லாததால் சரியான வாக்கியங்களை எடுத்து தர

இயலவில்லை. நினைவில் இருந்து எழுதுகிறேன்.

எனக்கு இந்த நாவலில் பிடித்த சில விஷயங்களை மட்டும் சொல்லி விடுகிறேன்.

சாதி பற்று, சாதி எதிர்ப்பு என்று இரு தரப்பு மக்களையும் விட மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்படும் கேசவனுடைய தந்தை நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

ஒரு பெண் அருகில் இருக்கும் போது ஆண்கள் எப்படியெல்லாம் தங்களை வெளிப்படுத்தி கொள்ள முயல்வார்கள் என்பதை அழகாக காட்டியிருப்பார் இ.பா. இதை நான் பல முறை அனுபவத்திருக்கிறேன். சாதாரணமாக நான்கு ஆண்கள் பேசிக் கொள்ளும் போது நடக்கும் உரையாடலில் ஒரு பெண் வந்துவிட்டால், அது சதுரங்க ஆட்டமாக மாறிவிடும். ஒவ்வொரு உரையாடலும் ஒரு சதுரங்க ஆட்ட காய் நகர்த்தலைப் போல இருக்கும். இது இந்நாவலில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் இந்த சதுரங்க ஆட்டத்தில் சில காய்களை அந்த பெண்ணே வெட்டுவது எனக்கு பாலச்சந்தர்தனமாகப் பட்டது. இது என் எண்ணம் மட்டுமே.

கேசவன் ஆதாயத்திற்கு (சைக்கிளுக்காக) கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு, ஏங்கல்ஸை வைத்து நியாயப்படுத்த முயலும் போது, “ஏங்கல்ஸே இவ்வாறு சொல்லியிருக்கிறார்”

(எப்படியும் சக தோழருக்கு ஏங்கல்ஸ் இப்படி சொல்லியிருக்க மாட்டார் என தெரியாது என்ற நம்பிக்கையில்), “அவர் அதை வேற சந்தர்ப்பத்தில சொன்னார்”னு சக தோழர் சொல்லும் போது நம்மை அறியாமல் சிரித்து விடுவோம்.

அதேப் போல கேசவனுடைய பெரியப்பாவை சாமியார் ஆக்க முயலும் போதும் நம்மை அறியாமல் சிரிக்க வைத்து விடுகிறார் இ.பா.

இதை விட நான் ரசித்த இடம், கேசவனுடைய அறைத் தோழன் கிருஷ்ணன் சொல்லும் ஒரு விஷயம். “வார்த்தைகளின் பயன்களை தெரியாமல் நாம் அவற்றை அளவுக்கு அதிகாம பேசி அவற்றின் சாரத்தை இழந்து விட செய்கிறோம். ஒரு வேளை இதை உணர்த்துவதற்க்காகத்தான் காந்திஜி மௌன விரதம் இருக்கிறார் போல”

அதே போல் இந்த வரியும், “நாட்டிற்கு விடுதலை கிடைத்ததும் முதல் பலி. தேசத்தின் தந்தை”

காந்திஜியின் மரணத்தின் பொழுது நம்மை அறியாமல் ஒரு சோகம் மனதில் அப்பிக் கொள்கிறது.

சாதியை எதிர்க்கும் பிராமணனிற்கு மார்க்ஸை விட்டால் வேறு வழியில்லை என கேசவன் நினைப்பதாகவே என் மனதில் பட்டது. பிறகு தன்னுடைய சாதி எதிர்ப்பைக் காட்டவே தமிழில் மேற்படிப்பை படித்து பெரு அவதிக்குள்ளாகிறான். இறுதியில் திருப்பாவை(திருவாய்மொழி?) பாடி வேலை வாங்குகிறான். சாதியை எதிர்த்து பயணப்பட்டவன், திருமண் இட்டுக் கொண்டு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். நாவல் முடிகிறது.

மானசரோவர் - அசோகமித்திரன்
ஒரு தமிழ் கதாசிரியனுக்கும் (கோபால்) ஒரு மிக பிரபலமான (சத்யன் குமார்) இந்தி நடிகருக்கும் இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்ட நாவல். நல்ல புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நிச்சயமாக இந்த புத்தகத்தை நான் சிபாரிசு செய்வேன். (இந்த வாக்கியத்தில் புத்தகம் என்ற வார்த்தை இரண்டு முறை வருகிறது. இதைப் போல ஒரு வாக்கியத்தை அந்த கதாசிரியன் கண்டிப்பாக எழுத மாட்டான்). மானசரோவரை, எளிமையாகப் புனையப்பட்ட கனமான கதை என்று சொல்லலாம்.

எனக்கு நாவலில் பிடித்த விஷயங்களை சொல்வதாக இருந்தால் முழு நாவலையும் கொடுக்க வேண்டியதிருக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. பிடித்த இடங்களை குறிக்க ஆரம்பித்து கடைசியில் பார்த்தால் பாதி புத்தகத்திற்கு மேலாக குறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. முதல் வாசிப்பில் தெரியாத ஒரு தவறு இரண்டாம் வாசிப்பில் பட்டது. இதைத் தான் முத்துலிங்கம் அவர்களுடன் பேசிக் கொண்டு வந்ததாக முந்தையை பதிவில் சொன்னேன். நாவலைப் படிக்காதவர்கள் அடுத்த பத்தியை தயவு செய்து வாசிக்க வேண்டாம்.

கதை முழுக்க தன்மை (First Person) நிலையிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது கதை சொல்லியின் மனவோட்டத்திலிருந்து. இப்படி சொல்லப்படும் கதைகளின் பலவீனமாக நான் கருதுவது, சஸ்பன்ஸைக் காப்பாற்ற முடியாது. அதுவும் ராஜா இறந்த நிலையில், ஜம்பகம் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு நிலையிலிருக்கும் போதும் நிச்சயம் சத்யன் குமார் மனதில் அவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட அந்த சஸ்பன்ஸ் காட்சி ஓடியிருக்க வேண்டும். அது தான் சாதாரண மனிதனின் மனநிலை. மேலும் சத்யன் குமார் குற்றவுணர்ச்சியில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். அப்படி நினைத்துப் பார்க்கும் போது அது நமக்கு சஸ்பன்ஸாக இருக்க முடியாது. இது ஒரு பெரிய சறுக்கலாக என் மனதில் பட்டது. ஆனால் இது இரண்டாம் வாசிப்பில் ஒரு எழுத்தாளனாக பார்க்கும் போது ஏற்பட்டது தானே ஒழிய முதல் வாசிப்பில் அது தோன்றவில்லை.

காலவெள்ளம் - இந்திரா பார்த்தசாரதி
மீண்டும் இந்திரா பார்த்தசாரதி. மீண்டும் பிராமணக்குடும்ப கதை. இந்த கதையின் களம் திருவரங்கம். இது தான் இ.பாவின் முதல் நாவலாம்.

வேர்பற்றில் வரும் அதே வசனம் காலவெள்ளத்திலும் வருகிறது. “மக்களுக்காக புரட்சியா அல்லது புரட்சிக்காக மக்களா?” இது இ.பாவில் மனதில் பல நாட்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கதையை நாடகமாக எடுத்தால் ஆயிரம் எபிசோடுகள் எடுக்கலாம். நிச்சயம் ஹிட். என்னைப் பெரிதும் கவரவில்லை.

ஆகாயத் தாமரை - அசோகமித்திரன்
அசோகமித்திரன் எழுத்து என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை கதையின் அடித்தளத்தில் ஒரு சோகம் ஓடிக் கொண்டிருந்தாலும் கதையில் பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைப்பதினாலா என்று தெரியவில்லை. கசப்பான காபியில் சர்க்கரையின் சுவைத் தெரிவதைப் போல. இவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். எவ்வளவு கடினமான விஷயத்தையும் எளிமையாக சொல்லிவிடுகிறார்.

அகாயத் தாமரை, ஒரு இருபத்தைந்து வயது இளைஞனின் கதை. நான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மனதிற்கு பிடித்த ஒரு காரியம் செய்யப் போக அதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை முன் வைத்து எழுதப்பட்ட கதை. மானசரோவருடன் இதை ஒப்பிட முடியாது என்றே தோன்றுகிறது. சென்னை வாசிகளுக்கு இந்த நாவல் பிடித்து போக வாய்ப்புகள் மிக அதிகம். சென்னைப் பிடிக்காத என்னைப் போன்றோர்களுக்கும் பிடிக்கும் :)

இந்த நான்கு புத்தகங்களுமே கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.

மானசரோவர்
ஆகாயத்தாமரை
வேர்பற்று

தற்போது சுதேசமித்திரனின் ஆஸ்பத்திரி படித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வித்தியாசமாக, சுவாரஸ்யமாக பல இடங்களில் நகைச்சுவைக் கலந்து சிந்திக்க வைக்கிறது. படித்து முடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


Thursday, July 30, 2009

சுவாரஸ்ய விருது (?)

சுவாரஸ்யமாக எழுதுவது ஒரு கலை, அது அவ்வளவு எளிதாக கை கூடாது என்பதில் எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. படிப்பவர்களை கவரும் வண்ணமும் தொடர்ந்து படிக்க வைப்பதும் அவ்வளவு சாதாரணமில்லை என்பது இப்பொழுது எனக்கு புரிகிறது. நான் சமீப காலமாக எழுதும் பதிவுகளில் சுவாரஸ்யமாக இருப்பவை மிக சில தான் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும், ”நீயும் ரவுடி தான், வந்து வண்டில ஏறிக்கோ”னு அன்புடன் அழைத்த நண்பர் வசந்த குமாருக்காக இந்த பதிவு.

முதலில் வசந்த குமாருடன் எனக்கு ஏற்பட்ட நட்பைப் பத்தி சொல்லிவிடுவது நல்லது. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிவியல் சிறுகதை போட்டியில், தவறான புரிதல் காரணமாக எனக்கும் வசந்திற்குமிடைய சிறிய மனக்கசப்பு ஏற்பட்டது.

”அறிவியல்னா வானத்துல இருந்து ஏலியன் வரதும், டைம் மிஷினும்னு தான் நினைக்கற இடத்துல நான் என்ன பண்றது :-)

வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))”

இப்படி நான் சொல்லப் போக, அது அப்படியே வளர்ந்து சண்டையாகி, சமாதானமாகி, நட்பாகி விட்டது :)

வசந்த் போட்டியில் வென்ற பிறகு, அவருடைய கல்லூரி நண்பர்கள் குழுவிற்கு அதை தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த குழுவில் என் அறை தோழனும் இருந்தான். அவன் மிக மகிழ்ச்சியாக சொல்லும் போது தான் எனக்கு வசந்த் அவனுடைய கல்லூரி நண்பர் என்பது தெரிந்தது. என் அறைத் தோழனுக்கு வலையுலக போட்டி, சண்டை எதுவும் தெரியாது :). அதைக் கேள்விப்பட்டதும், ”வசந்த் சண்டை போட்டானா? நம்பவே முடியல” என்று சொன்னான். ஏன்னா நான் சண்டை போடறது ரொம்ப சாதாரண விஷயம்.

அப்பறம் வசந்தோட பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். சிறுகதைகள் எழுதவும், சிறுகதைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மிகவும் விருப்பமுள்ளவர். உரையாடல் போட்டிக்கு அவர் செய்த பணி குறிப்பிடத்தக்கது. சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள் இதை நிச்சயம் ஒரு முறை படித்துப் பார்ப்பது நல்லது.

விருதிற்கு நன்றி வசந்த்.

இனி, இந்த விருதை நான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். இது தான் மிகவும் கடினமான பணியாக கருதுகிறேன். வெறும் பெயரளவிலோ, நட்பிற்காகவோ இதை நான் செய்ய விரும்பவில்லை. சுவாரஸ்யப் பதிவர்கள் என்பதை, சுவாரஸ்யமாக பதிவு எழுதுபவர்கள் என்று எடுத்து கொள்கிறேன். அதாவது எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக கொடுப்பவர்கள் என்ற கணக்கில் எழுத துவங்குகிறேன். இதில் ஒரு சிலருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கலாம். இருந்தாலும் இன்றைய நிலையில் என் மனதில் தோன்றும் சுவாரஸ்யமான எழுதுபவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். இதை விருது என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது பாராட்டு என்று எடுத்துக் கொண்டாலும் சரி. Just a token of appreciation. விருப்பப்பட்டால் நீங்கள் இதை தொடரலாம்.

டுபுக்கு -
எழுதும் எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதுபவர். நகைச்சுவை இவருடைய களம். இயல்பான நகைச்சுவையில் பின்னு பெடலுடுப்பவர். இவருடைய பதிவுகளைப் படித்து தான் நான் எழுத துவங்கினேன். பதிவர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ நையாண்டி செய்வது அவ்வளவு கடினமானது இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் ஏற்கனவே நம் மனதில் இருக்கும். ஆனால் இவர் பதிவுகளில் அப்படி இருக்காது. எதார்த்தமாக வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நபர்களையும் வைத்து நகைச்சுவையில் புகுந்து விளையாடுவார். என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஜொள்ளித் திரிந்த காலம், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு.

வெறும் நகைச்சுவைக்காக மட்டும் இவரை சொல்லவில்லை, இவருடைய கதைகளில் இருக்கும் சோகமும் எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்த கதை, சாமியாண்டி.

கப்பி பய -
மாதத்திற்கு நான்கு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்று எந்த கணக்கும் வைத்துக் கொள்ளாத பதிவர். எழுத விஷயம் இருக்கும் போது எழுதுவார். மற்ற சமயங்களில் அமைதி காப்பார். நகைச்சுவை, சிறுகதை, பயணக்குறிப்பு, விமர்சனம் என்று ரவுண்டு கட்டி அடிப்பவர். இதில் எதுவும் சுமார் என்று கூட சொல்ல முடியாது. அனைத்தும் தரமானதாக இருக்கும். ”கப்பி மாதிரி வித்தியாசமான களம் எடுத்து முயற்சி செய்யிப்பா” என்று போன மாதம் கூட ஒரு நண்பர் எனக்கு அறிவுரை கூறினார். அப்படி எழுத முடியாததால தான் நான் வெட்டியா இருக்கேனு சொல்லி எஸ் ஆகிட்டேன்.

கப்பியோட குறிப்பிட்ட எந்த பதிவும் நான் கொடுக்கவில்லை. முழு வலைப்பதிவையும் நீங்கள் மேயலாம்.

லக்கி லுக்
லக்கி லுக் சிறுகதைகள் மட்டும் என்னை அவ்வளவாக கவர்வதில்லை. மற்ற படி அவர் எழுதும் அத்தனைப் பதிவுகளும் சர வெடி தான். அரசியல் பதிவாகட்டும், மொக்கைப் படங்களுக்கு அவர் எழுதும் விமர்சனங்களாகட்டும், எதிர் பதிவுகளாகட்டும், புத்தக விமர்சனமாகட்டும், நகைச்சுவைப் பதிவுகளாகட்டும் எதிலும் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. அது மட்டும் இல்லாமல் லக்கியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் மேல் மற்றவர்கள் குறை சொல்லும் போது அவருடைய பதிவுகளில் விஸ்வரூபம் எடுப்பார்.

போலிப் பிரச்சனை போது அவர் அந்த பிரச்சனைகளில் தலையிடாமல் அட்டகாசமான பதிவுகளை கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது மட்டும் அவர் அந்த பதிவுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருந்தால் இந்நேரம் லக்கி லுக், யுவ கிருஷ்ணாவாக மாறியிருப்பாரா என்பதே சந்தேகம். புதிய பதிவர்களும், பிரபல பதிவர்களும் லக்கியிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடமிது. பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

பினாத்தல் சுரேஷ்
கிரியேட்டிவிட்டி கிங். மார்கெட்டிங் துறையில் இருந்தால் எங்கோ சென்றிருப்பார். அவ்வளவு கிரியேட்டிவிட்டி. இவருடைய ஒரு சில பதிவுகளை புரிந்து கொள்ளவே நமக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி வேண்டும். இல்லை முன்னெச்செரிக்கை வேண்டும். நகைச்சுவை, சிறுகதை இரண்டிலும் இவர் கில்லி. பினாத்தலாருடைய சிறுகதைகளைவிட அவருடைய அவருடைய நகைச்சுவைப் பதிவுகளும், மூளைக்கு வேலை கொடுக்கும் பதிவுகளும் எனக்கு பிடிக்கும். அவருடைய ஃபிளாஷ் பதிவுகளும், தமிழ் மணத்தில் பிரபங்களில் பதிவும் எனக்கு மிகவும் பிடித்தவை.

இவரை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாமானு தெரியலை... இருந்தாலும் இவருடைய வலைப்பதிவை நான் தொடர்ந்து படிக்கிறேன். அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என்.சொக்கன்
வலையில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது சொக்கனின் எழுத்துக்கள். Blog - Digital Diary போல பயன்படுத்துபவர். அவருடைய அனுபவங்களை அவர் அழகாக சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருடைய எழுத்தில் கொஞ்சம் கூட போலித்தனம் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய ஒரு பதிவைப் படித்தாலும் தொடர்ந்து அத்தனைப் பதிவுகளையும் படிக்க வைக்கும் எழுத்துக்களைப் பார்க்க முடியும்.

Monday, July 20, 2009

அ.முத்துலிங்கத்துடன் சிறு(கதை) பயணம்

வீட்டில் ஒரு வாரமாக இணையம் இல்லை. அலுவலகத்தில் இருந்து எழுத நேரம் இல்லை. எழுத பல விஷயங்கள் கிடைத்த இந்த வாரத்தில் இப்படி அமைந்தது வருத்தமே.

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களான ஜெயமோகனையும், அ.முத்துலிங்கத்தையும் சந்தித்து பேசும் வாய்ப்பு இந்த வாரத்தில் அமைந்தது. ஒரு உண்மை என்னவென்றால் இவர்கள் இருவரின் எழுத்தையும் இவர்களை சந்திப்பதற்கு முன் நான் படித்ததில்லை என்பதால் அவர்களிடம் தரமான கேள்விகளை கேட்க எனக்கு தெரியவில்லை. இருப்பினும் உடன் வந்த நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களில் அவர்களுடைய ஆளுமையை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.

ஜெமோவைப் பற்றி எழுத நிறைய, நிறைய இருப்பதால் இந்த பதிவில் அவரைப் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை.

அ.முத்துலிங்கம் அவர்களுடன் காரில் நான்கு மணி நேரம் பயணிக்கும் பொழுது ஓரளவு உரையாட முடிந்தது.

எழுத்தாளர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்களைப் போல பேசுவார்கள் என்ற எனது எண்ணம் நேற்று அடியோடு மாறியது. அ.முத்துலிங்கம் அவ்வளவு அமைதி. எந்த கேள்வியென்றாலும் ஒரு நிமிடம் தன்னை தயார் செய்து கொண்டு நிதானமாக பேச துவங்குகிறார். அவருடைய தமிழ் தேன்.

அவரிடம் பேசும் போது நான் பல அபத்தங்களை செய்தேன். ஆனால் அப்படி செய்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் க‌ற்றுக் கொண்ட‌வைக‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

சென்ற‌ வார‌ம் அசோக‌மித்திர‌னின் மான‌ச‌ரோவ‌ர் ம‌ற்றும் இந்திரா பார்த்தசார‌தியின் வேர்ப‌ற்று ப‌டித்திருந்தேன். மான‌ச‌ரோவ‌ர் க‌தையில் இருக்கும் ஒரு த‌வ‌றை சுட்டிக்காட்டி அதைப் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

அதற்கு பிறகு நான் ஒரு கதையை சொல்லி, அதை நாவலாக எழுதலாம் என்று யோசித்து கொண்டிருப்பதாக சொன்னேன்.

"எந்த தமிழில் எழுதுவீர்கள்" என்று கேட்டார். எந்த தமிழ் என்றால் என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை.

"நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் தமிழ் ஒரு மாதிரி இருக்கும். பத்தாம் வகுப்பு பிள்ளைகளின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். ஒரு எழுத்தாளனின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். நீங்கள் எந்த தமிழில் எழுதுவீர்கள்?"

நான் மௌனமாக இருந்தேன்.

அவ‌ர் என்னிட‌ம் இந்த‌ கேள்வி கேட்ப‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம், அத‌ற்கு முன், "கதை எழுத, புத்தகம் படிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை" என்று சொன்ன கருத்து தான். அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னது தவறு என்று சில நிமிடங்களிலே புரிந்து கொண்டேன்.

மீண்டும் அவ‌ரே ஆர‌ம்பித்தார், உதாரணத்திற்கு ஜெயமோகனின் கிளம்புதல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்

"இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும்"

"இதை நீங்கள் எப்படி எழுதியிருப்பீர்கள்?"

என் நீயூரான்கள் துரிதமாக வார்த்தைகளை தேடின.

"எனது விமானம் புறப்பட்டது என்று எழுதியிருப்பீர்களா?"

இருக்கலாம். இல்லை அதில் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம். இருந்தாலும் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி காணாமல் போனது என்று நிச்சயம் எழுதியிருக்க முடியாது.

"ஒரு எழுத்தாளனின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டும்"

மொழியை பயன்படுத்தும் அழகு தான் கதைக்கு உயிர் கொடுக்கிறது. அதை நான் இன்று வரை முயன்றதில்லை. முடியாது என்பது மட்டுமே என் எண்ணம். முடியாது என்று எண்ணுவதை விட முயன்று தோற்றால் ஒரு பெருமை இருக்கும் என்று தோன்றுகிறது.

அதன் பிறகு திண்ணை ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடந்த சந்திப்பில், முத்துலிங்கம் அவர்கள் சிறுகதையைப் பற்றி குறிப்பிட்ட சில விஷயங்கள்.

சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விட மிக கடினமான விஷயம்.

அவர் நேர்காணல் எடுக்க சென்ற உலகின் மிக சிறந்த எழுத்தாளர் ஒருவரின் மேஜையில் ஆறு சிறுகதைகள் பாதி எழுதிய நிலையில் இருந்தனவாம். அவருக்கு ஒரு சிறுகதையை எழுதி முடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் ஆகுமாம்.

பிறகு இரவு திரும்பும் பொழுது மீண்டும் சிறுகதைகளைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன்.

"ஆங்கிலத்தில் இன்று வரும் சிறுகதைகளுக்கு நிகராக தமிழில் ஒரு கதை கூட வருவதில்லை. ஆங்கிலத்தில் சிறுகதைகள் சுமார் நாற்பது முதல்அறுபது பக்கங்கள் வரை இருக்கின்றன. சமீபத்தில் தமிழில் வந்த மிக சிறந்த சிறுகதை ஊமைச் செந்நாய். அதன் தரத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள்."

ஊமைச் செந்நாய் படித்த பொழுது இது சிறந்த கதை என்பதை நானும் உணர்ந்தேன். படித்து முடித்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். அதை மீண்டும் படிக்க வேண்டும்.

இந்த நான்கு ‍ஐந்து மணி நேர உரையாடலில் ஒரு இடத்தில் கூட அவர், "என்னுடைய **** இந்த கதையில்...." என்று குறிப்பிடாதது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.

அதைப் போலவே அவருடைய சிறுகதை ஒன்றைப் பற்றி உடன் வந்த நண்பர் வேல்முருகன் ஒரு கேள்வியை முன் வைத்தார். ஒரு மகன் தன் தந்தை தன்னிடம் சொன்ன கதையை சொல்வதைப் போல ஒரு கதை. அதில் இவ்வாறு வருகிறது.

"அந்த சந்தையில் தான் நான் முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்"

இதில் சில வார்த்தைகளில் தவறு இருக்கலாம். "முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்" என்பது தான் இங்கே விவாதத்திற்கு எடுத்து கொண்ட வாக்கியம். இதில் அந்த பெண் என்பது அவன் தாயை அவர் பார்த்தை தான் குறிப்பிடுகிறது. ஆனால் இது வாசகர்களுக்கு அந்த தந்தை வேறு ஒரு பெண்ணை பார்த்ததாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாக வேல்முருகன் சொன்னார். சுஜாதாவைப் போன்ற எழுத்தாளர்கள் இவ்வாறு தவறு செய்ததில்லை என்றும், முத்துலிங்கமும் இவ்வாறு வேறு எங்கும் தவறு செய்ததில்லை என்றும் சொன்னார்.

பாபா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. முத்துலிங்க‌ம் உட‌ன‌டியாக‌ ஏற்றுக் கொண்டார். அந்த‌ இட‌த்தில் அவ‌ர் ஒரு நிமிட‌ம் சிந்தித்தாக‌வும், அத‌ன் பிற‌கே எழுதிய‌தாக‌வும் சொன்னார். மீண்டும் ஒரு முறை ப‌டித்து அதை மாற்ற‌ ஏதாவ‌து வ‌ழி இருந்தால் செய்வ‌தாக‌ சொன்னார். அவ‌ருடைய‌ இந்த‌ பெருந்த‌ன்மை என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.

"அங்கு தான் முதன் முதலில் என் அம்மாவைப் பார்த்தார்" என்று வரலாமா என்று நான் கேட்டேன். அது தவறு என்று இருவரும் சொன்னார்கள். அவர் தந்தை பார்க்கும் போது அவள் அவனுக்கு அன்னை இல்லை. என்னுடைய தவறை உடனடியாக புரிந்து கொண்டேன்.

ஒரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌த்தை சொல்ல‌ த‌வ‌றிவிட்டேன். நான் அசோக‌மித்திர‌ன் க‌தையைப் ப‌ற்றி சொன்ன‌வுட‌ன், "அசோக‌மித்திர‌ன் க‌தைக‌ள் ப‌டிக்க‌ எளிமையாக‌ இருந்தாலும், ஆழ‌மான‌வை. அவ‌ற்றை ஒரு முறைக்கு மேல் ப‌டிக்க‌ வேண்டும். அவ‌ரைப் போல எளிமையாகவும், அழுத்தமாகவும் எழுதுவ‌து மிக‌வும் க‌டின‌மென்றும் சொன்னார்"

முத்துலிங்க‌த்தின் க‌தைக‌ள் த‌வ‌ற விட‌க்கூடாத‌வை என்று சந்திப்பிற்கு வந்த ட்விட்ட‌ர் புக‌ழ் இல‌வ‌ச‌க் கொத்த‌னாரும் சொன்னார்.

அ.முத்துலிங்கம் அவ‌ர்க‌ளின் புத்த‌ங்க‌ளை இங்கே வாங்க‌லாம். இங்கேயும் வாங்க‌லாம்.

சிறுக‌தைக‌ளை இங்கேயும் வாசிக்க‌லாம். நானும் வாசித்துவிட்டு உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

Wednesday, July 08, 2009

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

கவிதை எனக்குப் புரியாத‌ ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்ப‌தைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

குட்டிசுவற்றில் அமர்ந்து
கடக்கும் ஃபிகர்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்த இளைஞ‌ன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன ஃபிகர்கள்.

இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவனும்... நானும்

வகுப்பறையில் அவ‌னுக்கு
ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று
தலையை நிமிர்த்தி
பார்க்கிறான் அவன்.

எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
த‌லையை டேபிளில்
சாய்க்கிறேன் நான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

க‌டைசி க‌வுஜைக்கு கொஞ்ச‌ம் நிறைய‌ யோசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்க‌லாம்.

Tuesday, July 07, 2009

பாட்ஷா - வலையுலக விமர்சனங்கள்!!!

சூப்பர் ஸ்டார் நடித்த ”பாட்ஷா” படம் வரும் போது தமிழ்ல நிச்சயம் வலைப்பதிவு யாரும் எழுதிருக்க மாட்டாங்க. அதனால பாட்ஷா படம் இன்னைக்கு சூழ்நிலைக்கு வந்திருந்தா இல்லைனா அன்னைக்கு இந்த அளவுக்கு நாம எல்லாம் இருந்திருந்தா நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் விமர்சனம் எழுதிருப்பாங்கனு ஒரு கற்பனை.


ஏர்சிம் :


பாட்ஷா ‍..
தவறு செய்பவர்களை தண்டிப்பவருக்கு பாட்ஷா, கஷ்டப்படும் ஆட்டோக்காரர்களுக்கு மாணிக்கம். இது தான் முதல் முடிச்சு.


மாணிக்கம் ஏன் பாட்ஷாவாக மாறினான்? அவனுக்கு மட்டன் பிரியாணி கிடைக்காததினாலா? அப்படியே மட்டன் பிரியாணி கிடைத்தாலும் அதில் லெக் பீஸ் கிடைக்காததாலா? அவன் மறுபடி மாணிக்கமான பின்பு அந்த பாட்ஷாத்தனம் என்ன செய்யும்? இது இரண்டாவது முடிச்சி...


இந்த இரண்டு முடிச்சிக்களுக்கு இடையில் இருக்கும் நூலில் ஆட்டோக்காரர்களின் வாழ்க்கையையும் ஆட்டோவையும் தொங்கவிடுகிறது திரைக்கதை....


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வைத்தியக்காரன் :


ஏர்சிம், நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே இதுதான் சிறந்தது என்று அடித்து சொல்லலாம்.


'பாட்ஷா' படத்தினுள் இன்னொரு படம் நுணுக்கமாக இருக்கிறது. பிளாஷ் பேக்கிற்குள் ஒரு ஃபிளாஷ் பேக். அதன் அடியை அழகாக பிடித்து இழுத்திருக்கிறீர்கள்.


படம் முழுக்கவே எதிர்மறைகளால் ஆனவைதான். உதாரணமாக, மாணிக்கம், ‍ பாட்ஷா; (இரண்டையும் சேர்த்தால் "மாணிக் பாட்ஷா" அது தான் படத்தோட கதை)


படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் மாணிக்கத்தை முதலில் காட்ட மாட்டார்கள். பூசணிக்காயைத் தான் காட்டுவார்கள். அது ஒரு குறியீடு. ஆனால் பாம்பேயில் நேராக பாட்ஷாவைக் காட்டுவார்கள். அதாவது இங்கு மட்டும் தான் அவன் பாட்ஷா. அவனை அவனாகவே ஏற்கிறார்கள்.


மொத்தத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒரு அர்த்தம், குறியீடு இருக்கிறது.


சாரி ஏர்சிம். பின்னூட்டம் பதிவை விட நீண்டுவிட்டது.


................................................


சாதுஷா :


பாட்ஷா அண்ணன்களின் காவியம்.


"தங்கச்சிக்கு அண்ணன்னா எனக்கு அண்ணன். எனக்கு அண்ணன்னா உங்களுக்கு அண்ணன். உங்களுக்கு அண்ணன்னா ஊருக்கெல்லாம் அண்ணன். அண்ணன்டா...". நடுமண்டைல பலமான இரும்பு கம்பியால ”நச்சு”னு அடிச்ச மாதிரி இருந்தது இந்த வசனம். தங்கச்சி இருக்குற அண்ணன்களுக்கு தெரியும் அதன் வலிமை.


இது நட்புக்கான படமா? இல்லை. பழிவாங்கும் படமா? இல்லை. அப்பா செண்டிமெண்ட் படமா? இல்லை. பின்ன?


"வள்ளி", சில ஆண்டுகளுக்கு முன் வந்து சினிமா பார்ப்பவர்களின் கண்ணில் காலை விட்டு ஆட்டியது. பீரு தன்னுடைய விமர்சனத்தில் அதை "மொக்கைகளின் காவியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இது ஏன் அண்ணன்களின் காவியம்?


எத்தனை வித அண்ணன்கள். தங்கைகளை, ரம்பையும் ஊர்வசியும் மாதிரி செம சைட்டுடானு ஆனந்த்ராஜ் சொல்லும் போது தலை குனிந்து நிற்கும் ஒரு அண்ணன். அதைக் கேட்டு கோபம் கொள்ளும் ஒரு அண்ணன். தம்பியை தடுத்து நிறுத்தும் ஒரு அண்ணன்.


விஜயக்குமாருக்கு டாட்டராக இருக்கும் யுவராணியை, நீ கண்டிப்பா டாட்டர் ஆகறனு, டாக்டருக்கும் டாட்டருக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு அப்பாவி அண்ணன். தங்கை ஃபெயிலானதும் அவளை வெறுப்பேற்றி வாசலில் ஆரத்தி எடுக்கும் ஒரு அண்ணன். தன் தங்கை ஒரு டுபுக்கு மண்டையனைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் திருமணத்தை நடத்தி வைக்க போராடும் ஒரு அண்ணன். இப்படி அண்ணன்களில் பல பரிமாணங்கள்.


கஜேந்திரா எடுத்த சுரேஷ் கிருஷ்ணாவா? அடப்போங்கடா. இவரைப் போயி இத்தனை நாளா பாபா, ஆளவந்தானு எடுக்க வைச்சிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


வராதகவுண்டன்:
நக்மா, யுவராணி என்ற இரண்டு அழகு தேவதைகள் பற்றி எழுதாத சாதுஷாவுக்கு கண்டனங்கள்.


....................................................................


காவி.மன்னன் :


பாட்ஷாவும் பார்ப்பனர்களின் சனாதன மதமும்


பழிக்கு பழி, நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. பழிக்கு பழியும், நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். பிறகு அந்த மாவில் இட்லி, தோசை என்று சுடுவார்கள். ச்சே. ஒரு ஃப்ளோல அப்படியே வந்துடுச்சி. இப்ப பாயிண்டை பிடிக்கிறேன்.


இந்துவாக இருப்பவன் அப்பாவியாகவும், நேர்மையாளனாகவும், பரோபகாரியாகவும் இருப்பது போல் காட்டியுள்ளார்கள். அதே நபர் முஸ்லீமாக மாறும் போது கொலை செய்பவராகவும், கொடுரமாக ஒரு கிருஸ்துவனின் கையில் கத்தியால் குத்துவதைப் போலவும் காட்டியுள்ளார்கள். அங்கே கூட ஒரு இந்துவின் கையில் கத்தியைக் குத்தவில்லை. பிள்ளையார் சதூர்த்தி கொண்டாடும் இந்துக்களை சென்று காப்பாற்றுகிறார். அதே போல் முஸ்லிமாக இருக்கும் அன்வர் பாட்ஷாவைக் கொல்கிறார்கள். இந்துவாக இருக்கும் மாணிக்கத்தை விட்டு விடுகிறார்கள்.


வில்லனாக ஒரு கிருஸ்துவனைக் காட்டியுள்ளார்கள். அவன் பல கொலைகளை செய்வது போலவும், கள்ளக்கடத்தல், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போலவும் காட்டியுள்ளார்கள். அவனை எதிர்க்க, இந்துவாக இல்லாமல் இஸ்லாமியனாக மாறி நாயகனும் கள்ளக்கடத்தல் மற்றும் தாதாவாக மாறுவது போல் காட்டியுள்ளார்கள். கடைசியில் மாணிக்கத்தின் ஆட்களில் ஒரு சீக்கியனைத் தான் கொல்கிறார்கள். அப்பொழுது கூட இந்துக்களுக்கு பிரச்சனை இல்லை.


முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது கிருஸ்துவர்கள் என்பதாகவே காட்டப்படுகிறது. அதே போல் கள்ளக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இஸ்லாமியர்களாக காட்டப்படுகிறது. இது சனாதன மதத்தைப் பின்பற்றும் இந்துக்களின் பொறாமையே காரணம்.


குறிப்பிட தகுந்த பின்னூட்டம்.


fer0z 9@ndhi :


இதில் சில பொதுவான கருத்துகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்துக்களின் மன நிலை மாற வேண்டும். எனக்குத் தெரிந்து மற்ற இரு மதத்தினரைவிட மிக ஆபத்தானவர்கள் இவர்கள். படத்தைப் பற்றி சொல்ல எதுமில்லை.. நான் பார்க்கவில்லை.


...............


புறநாழிகை மண் சகாதேவன், லேண்ட் லைனேந்திரன் விமர்சனம் எல்லாம் போடணும்னு பார்த்தேன். பதிவு ஏற்கனவே ரொம்ப பெருசாகிடுச்சி. பதிவு பிடிச்சிருந்தா சொல்லுங்க. அடுத்து நிறைய படத்துக்கு இப்படி விமர்சனம் பார்க்கலாம்.

Monday, July 06, 2009

அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு...

அன்புள்ள வெட்டிப்பயல் அவர்களுக்கு, (மன்னிக்கவும்...இப்படி தான் உங்கள் பெயர் வெப் சைட்-இல் இருந்தது)


முதலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்பும் எண்ணம் எனக்கு ஒரு இருபது நிமிடத்துக்கு முன்புதான் வந்தது. நானும் கடந்த ஆறு மாதங்களாக அனைவரது படைப்புகளையும் மிகுந்த விருப்பத்துடன் படித்து வருகிறேன். முதன் முதலில் இங்கு இருக்கும் நகைசுவையான படைப்புகளுக்காக மட்டும் எல்லாவற்றையும் படித்து கொண்டிருந்தேன். முதன் முதலில் இருந்து என்ன நேற்று இரவு வரை கூட அதே மாதிரிதான்... ஆனால் நேற்று இரவு இரண்டு மணிக்கு மேல் என்னால் என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. எங்கோ கிடைத்த ஒரு லிங்க் -இல் இருந்து உங்கள் ப்லாக்-க்கு வந்தேன்... முதலில் ஏதோ ஒரு உங்களின் படைப்பை பார்த்துகொண்டிருக்கும் பொது வலது பக்கத்தில் இருக்கும் கதைகள் எனும் தலைப்பை பாத்தேன்... அங்கு "தூறல்" என்ற தலைப்பில் இருந்த ஒரு கதையை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது... நான் உண்மையாக சொல்கிறேன் ... இதுவரை அந்த கதையை எத்தனை முறை திரும்ப திரும்ப படித்தேன் என்று எனக்கு தெரியவில்லை...
கதையை முதன் முறை படித்து முடித்த போது எத்தனை துளி கண்ணீர் வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை. அந்த கதையில் வரும் உரையாடல்களும், நேர்த்தியும் எனக்கு அப்படியே மனப்பாடம் ஆகிவிட்டது. என்னிடம் உள்ள ஒரே நல்ல பழக்கம் என்று நான் சொல்வது, படிப்பது... நான் படித்தது நன்றாக இருந்தால் ஒரு இரண்டு பேரிடமாவது அதை பற்றியும், அதை எழுதியவரை பற்றியும் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால் இந்த முறை மட்டும் என்னோவோ தெரியவில்லை, உங்களுக்கு என் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியை சொல்ல வேண்டும் போல் இருந்தது.. நான் முதன் முதலாக அரை பக்கத்துக்கு மேல் ஒரு மெசேஜ் டைப் பண்ணுவது இதுவே முதன் முறை அதுவும் தமிழில். (எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்)

இன்று (சண்டே) முழுவதும் நான் பேருந்தில் மட்டுமே இந்த பெங்களூர் முழுவதயும் சுற்றி வந்தேன் (வேலை விசயமாக). ஆனால் என் முன்னால் எத்தனை கார்த்திக்கும், ஆர்த்தியும் கடந்து சென்றார்கள் என்பதே எனது கனவாக இருந்தது. இன்னும் எத்தனை பேரை சந்திப்பேன் என்பது மட்டுமே என் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.

( நான் படித்தவர்களில் சிலர் பரிசல், அதிஷா, லக்கிலுக், கார்கி,நர்சிம் என ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது...) அவர்களின் எழுத்துகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். (Edited by Vettipayal)

ஒரு வேண்டு கோள், எனக்காக இந்த கடிதத்தை உங்கள் ப்ளாகில் நீங்கள் பதிய வேண்டும்... நான் அதை பார்க்கும் சந்தோஷம் எனக்கு கிடைக்க வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
உங்களின் புது வாசகன்...

.............................................

நண்பரே,
உங்களுடைய மடலுக்கு மிக்க நன்றி.

உங்களுடைய மடலில் இருந்து ஒரு வரியை மட்டும் நீக்கி விட்டேன். அது வீணாக பிரச்சனையை உருவாக்கும்...

நீங்கள் முதல் முறை தமிழில் டைப் செய்வதாக சொல்லியிருக்கிறீர்கள். எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை. http://tamileditor.org/ பயன்படுத்தலாம். அல்லது nhm பயன்படுத்தலாம்.

தூறல்” அளவிற்கு எனக்கு பேர் வாங்கி கொடுத்த கதை எதுவும் இல்லைனு நினைக்கிறேன். அந்த கதை தேன்கூடு போட்டி மரணம் என்ற தலைப்புக்காக எழுதியது. ஆனால் ஏனோ அனுப்பவில்லை. தூறல் என்னோட மூணாவது சிறுகதை. அதற்கு பிறகு இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஆனால் அது அளவுக்கு எதுவும் பிரபலமாகவில்லை :)

கார்த்திக்கும், ஆர்த்திக்கும் நன்றி

நண்பர் சதீஷுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

.................................................

நண்பர்கள் பல முறை சேட்ல என் கதையைப் பற்றி சொல்லும் விஷயங்கள்.

பெங்களூர்
செல் ஃபோன் உரையாடல்கள்
ட்ராஃபிக் ஜாம்
கிருஷ்ணா கஃபே
பஸ் பயணம்
ஃபுட் கோர்ட்
சண்டை
சமாதானம்

இதையெல்லாம் மாத்தி மாத்தி போட்டா ஒரு புது கதை. இது தான் வெட்டி ஸ்டைல்னு :)

உண்மையாக்கூட இருக்கலாம். மாத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

Sunday, July 05, 2009

கசினோவில் காசு சம்பாதிப்பது எப்படி?

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு.

முதல் காரணம், வாழ்க்கைல பெருசா இண்டரஸ்டிங்கா எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் இருந்தா நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கு மொனொடானஸாக வாழ்க்கை இருப்பதால் பெரிதாக பகிர்ந்து கொள்ள எதுவுமில்லை. அடுத்த மாதம் எப்படியும் பர்மிதா பாப்பா இங்கே வந்துவிட்டால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

..............

இந்த ஆறு மாசத்துல நிறைய தடவை கசினோ சென்று வந்துவிட்டேன். அதிகமாக காசு தேத்தவில்லை என்றாலும் பெரிதாக எதுவும் இழக்கவுமில்லை. அங்க எனக்கு பிடித்த விஷயமே அந்த டென்ஷன் தான்.

நான் ரோலே மட்டும் தான் விளையாடுவேன். அதுவும் அவுட்டர்ல வைக்க மாட்டேன். உள்ளே நம்பர்களில் தான் வைப்பேன். ஆனா பல தடவை அவுட்டரில் நான் சொல்லியது வந்துவிடும். குறிப்பாக எந்த பனிரெண்டில் வரும் என்பது. ஒண்ணு வெச்சா மூணு :)

நான் விளையாடும் போது நடந்த சில சுவாரஸியங்கள். நம்ம லிமிட் எப்பவும் இருநூறு டாலர் தான். அதுக்கு மேல நிச்சயம் விளையாட மாட்டேன். ஒரு தடவை நான் விளையாடிட்டு இருக்கும் போது ஒரு வயசான தாத்தா வந்து பக்கத்துல நின்னு ஒரு ரெண்டு ஆட்டம் பார்த்தாரு. அப்பறம் ரெண்டாயிரம் டாலருக்கு சிப் வாங்கினாரு. எல்லாமே ப்ளாக் (100$) சிப். அதை அப்படியே நம்பர்ல பிரிச்சி வெச்சாரு. ஒரு சில நம்பர்ல ஒரு சிப், ஒரு சில நம்பர்ல ரெண்டு சிப் வெச்சாரு.




விளையாட்டு தெரியாதவங்களுக்கு இங்க ஒரு விஷயம் சொல்லிடறேன். ரோலேல மொத்தம் முப்பத்தி எட்டு நம்பர் இருக்கும். 0, 00, 1-36. இதுல நம்பர்ல வெச்சி, வந்ததுனா ஒரு சிப்க்கு முப்பத்தி ஆறு தருவாங்க (வெச்சதையும் சேர்த்து). Odd, Evenல வெச்சா ஒரு டாலருக்கு ரெண்டு. 0-12, 13-24, 24-36ல வெச்சா ஒரு டாலருக்கு மூணு டாலர். அப்படி எல்லாம் Probability பேஸ் பண்ணி தான்.

இப்ப அவர் இருபது சிப் வாங்கி சில, பல நம்பர்ல வெச்சாரு. கடைசியா சுத்தறதுக்கு முன்னாடி, முப்பத்தி அஞ்சில இருந்த ஒரு சிப் எடுத்து முப்பத்தி நாலுல மாத்தினாரு. முப்பத்தி நாலுல ஏற்கனவே ஒரு சிப் வெச்சிருந்தாரு. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்பும் இல்லை. முப்பத்தி நாலுல இருநூறு டாலர் சிப். நான் எப்பவுமே முப்பத்தி நாலுல ஒரு நாலு, அஞ்சி வைப்பேன்.

அவர் முப்பத்தி அஞ்சில இருந்து எடுத்து வெச்சவுடனே எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சி. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்புமே இல்லை. சரினு கடைசி நேரத்துல நான் ஒரு ரெண்டு சிப் எடுத்து முப்பத்தி அஞ்சில வெச்சேன்.

அவர் என்னை பார்த்து சிரிச்சிட்டு, May be I am wrongனு சொன்னாரு. எனக்கும் முப்பத்தி நாலுல வந்தா சந்தோஷம் தான். எல்லாருமே செம டென்ஷன். கடைசியா பார்த்தா முப்பத்தி..... நாலு வந்துடுச்சி... ஒரே கொண்டட்டம் தான். இப்ப அவருக்கு ஏழாயிரம் டாலர் கொடுத்தாங்க.

மறுபடியும் சிங்கம் ரெண்டாயிரம் டாலரோட களம் இறங்குச்சு. மறுபடியும் நிறைய நம்பர்ல ஒரு சிப், சில நம்பர்கள்ல ரெண்டு சிப். அந்த தடவை அவர் ஒரு நம்பர்ல வெச்சிருந்தது வந்துச்சு. இப்ப மூவாயிரத்தி ஐநூறு டாலர் ஜெயிச்சாரு.

அடுத்து மறுபடியும் களம் இறங்கினாரு. இந்த தடவை எதுவும் ஜெயிக்கல. உடனே ஒரு இருநூறு டாலர் டிப் கொடுத்துட்டு கிளம்பிட்டாரு. நான் திக்கி, திணறி நானூறு டாலர் தான் ஜெயிச்சேன்.

இது நடந்தது Foxwoodsல.

..............

போன மாசம் நண்பனை பார்க்க Delaware போயிருந்தேன். உடனே அடுத்த நாள் Atlantic City போகலாம்னு முடிவு பண்ணோம். ஒரு தடவை Atlantic Cityக்கு போய் பயங்கர கஷ்டப்பட்டோம். ஆனா அந்த தடவை மூணு ஆட்டம் தான் ஆடினோம். மூணு தடவையும் ஜெயிச்சோம். அது 0-12, 13-24, 24-36ல வெச்சி ஜெயிச்சது. சீசர்ஸ் காசினோல.

இந்த தடவை தாஜ் மகால் கேசினோ போனோம். மூணு பேரா போனதால விளையாடக்கூடாதுனு முடிவு பண்ணிருந்தேன். ஏன்னா மூணு பேர் போனா விளங்காதுனு ஒரு செண்டிமெண்ட். ஒரு தடவை அப்படி போய் இருநூறு டாலரும் போச்சு. ஆனா உள்ள போனவுடனே என் கண்ணு வழக்கம் போல ரோலே டெபில்ல, முன்னாடி ஜெயிச்ச டேபில் நம்பர் எல்லாத்தையும் நோட் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அதுல ஒரு டேபில்ல எல்லாமே என் நம்பர் தான். நான் எப்பவும் சில குறிப்பிட்ட நம்பர்கள்ல வைப்பேன். அதே நம்பர்ஸ் வந்திருந்தது. உடனே நண்பன்ட ஒரு நூறு டாலர் கடன் வாங்கி களம் இறங்கினேன்.

முதல் ரவுண்ட், 0 வந்து ஆப்பு அடிச்சிது. ஆஹா... ஆரம்பமே அசத்துதேனு தோணுச்சு. ஆனா அன்னைக்கு என்னுமோ நாம இன்னைக்கு நிச்சயம் பணம் விட மாட்டோம்னு மனசுல தோணுச்சு. சரினு அடுத்த ரவுண்ட். மறுபடியும் 0. நிச்சயம் ஆப்பு தானு முடிவாகிடுச்சி. அடுத்து பதினெட்டு. இதுக்கு முன்னாடி நான் இருநூறு தோக்கும் போதும் கடைசியா முடிச்சி வெச்சது பதினெட்டு தான். நூறு டாலர் அவுட். தாஜ் மகால் ராசி இல்லை. ஏன்னா அது அழுவாச்சி மஹால்னு அப்ப தான் தோணுச்சு.

சரி, விட்றா சண்முகம்னு சீசர்ஸ்க்கு கிளம்பினோம். சீசர்ஸ்ல ஏற்கனவே ஜெயிச்ச ஹிஸ்டரி இருக்கு. ஆனா மூணு பேர்ல விளையாடணும்னு வந்த ரெண்டு பேரும் வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு வந்தாங்க. சரி ஏழுரையை எவ்வளவு நேரம் தான் நாமலே சுமக்கறதுனு அவுங்களை களம் இறங்க சொன்னேன். ஒரு நண்பன் சீசர்ஸ்ல ரொம்ப நேரமா விளையாடி நூறு டாலரை விட்டான். அப்ப தான் சரி, ஏழரையை பாஸ் பண்ணியாச்சி, இனிமே நாம களம் இறங்கலாம்னு முடிவு பண்ணேன்.

அப்பறம் சாப்பிட்ட Bally's கசினோ போனோம். ரொம்ப நேரமா சுத்திட்டே இருந்தோம். என் நம்பர்ஸ் வர டேபில் எதுவுமே இல்லை. எல்லாமே பயங்கரமான வேரியேஷன் இருந்தது. கொஞ்ச நேரம் போனவுடனே என் நம்பர் வர டேபில் ஒண்ணு பிடிச்சோம். இந்த தடவை சேஃப் கேம் ஆடணும்னு ஆட்டத்துக்கு இருபத்தி அஞ்சி டாலரா பிரிச்சிக்கிட்டேன்.



முதல் மூணு ஆட்டம் அவுட். கடைசி இருபத்தி அஞ்சி. இந்த இருநூறும் போச்சுனா இதுக்கு மேல கசினோ பக்கமே கால் வைக்க கூடாதுனு முடிவு பண்ணினேன். கடைசியா நான் ரெண்டு சிப் வெச்சிருந்தது வந்தது. எழுபது டாலர். மறுபடி எழுபதையும் உள்ளே வெச்சேன். அது அப்படியே இருநூறுக்கு மேல வந்துடுச்சி. நண்பன், வாடா பாலாஜி கிளம்பிடலாம்னு சொன்னான். நல்ல நேரம் இருக்கும் போது கிளம்பறது முட்டாள் தனம்னு அதிகமா பெட்டிங் ஆரம்பிச்சேன்.

ஒரு ஐநூறு, அறுநூறு டாலர் பக்கம் வந்துடுச்சி. இப்ப தான் சரி, ரிஸ்க் எடுக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த ட்ரிப்புக்கு மொத்த செலவு எவ்வளவோ அதை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன். மீதி ஜெயிச்ச காசு ஒரு நானூறு இருந்தது. அதை ரெண்டா பிரிச்சி ரெண்டு ஆட்டம் வைக்கலாம்னு முடிவு. ஜெயிச்சா லம்பா கிடைக்கும். தோத்தா நஷ்டம் எதுவுமில்லை. ஒரு சில நம்பர்ல இருபது சிப்புக்கு மேல கூட வெச்சேன்.

அஞ்சில வைக்கலாமா ஏழுல வைக்கலாமானு கடைசியா ஒரு குழப்பம். கிட்டதிட்ட பத்து டோக்கன் இருந்தது, ரெண்டிலும் பிரித்து வைத்திருக்கலாம். ஆனா இதுவே ரிஸ்க் எடுக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டு ஆடற கேம். அதனால நோ சேஃப் பெட். ஏழுல வெச்சேன். கரெக்டா அஞ்சு வந்துடுச்சி. சூப்பர்.

அடுத்து கடைசி இருநூறு. இந்த தடவையும் போன முறை மாதிரியே ஹை பெட்ஸ் தான். கடைசியா பதினெட்டுல வந்து நின்னுச்சி. பதினெட்டுல மட்டும் இது வரைக்கும் மூணு தடவை மாட்டி வெளிய வந்திருக்கேன். அப்படி என்னடா இந்த நம்பருக்கும் நமக்கும் எப்ப பார்த்தாலும் தகராறுனு நானும் ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.

என் கூட வந்த நண்பர் ஒருத்தர் விளையாட ஆரம்பிச்சிட்டாரு. அவரு வெளிய ரெட் ப்ளாக்ல விளையாடிட்டு இருந்தாரு. அப்ப ஒரு சிங்கி வந்தாரு. ரெண்டாயிரத்துக்கு ப்ளாக் சிப் வாங்கினாரு. ஆஹா இன்னைக்கும் ஒருத்தனா? அப்படினு பாக்க ஆரம்பிச்சேன். மனுஷன் அவுட்டர்ல விளையாட ஆரம்பிச்சாரு. தொடர்ந்து அஞ்சு ரெட் வந்திருந்தது. ஆயிரம் டாலரை ப்ளாக்ல வெச்சாரு.

எங்களுக்கு டென்ஷன். கூட வந்தவரு என்ன பண்றதுனு தெரியாம வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாரு. டீலர் சுத்த ஆரம்பிச்சாரு. நமக்கு டென்ஷன் எகிற ஆரம்பிச்சிது. பார்த்தா ரெட். திரும்பவும் ப்ளாக்ல வெச்சாரு. நமக்கா இங்க ஹார்ட் பீட் எகிறுது. மறுபடியும் ரெட். ரெண்டாயிரம் அவுட்.

திரும்ப ரெண்டாயிரம் டாலர்க்கு சிப் வாங்கினாரு. மறுபடியும் ப்ளாக்லயே வெச்சாரு. மொத்தம் ஏழு தடவை ரெட். நிச்சயம் இப்ப ப்ளாக் தான் வரும்னு கூட இருந்த நண்பரும் ப்ளாக்ல வெச்சாரு. மறுபடியும் டென்ஷன். எல்லாரும் இப்ப அந்த சிங்கி ஜெயிக்கணும்னு வேண்டிக்க ஆரம்பிச்சாங்க. இந்த தடவை.... யும் சிகப்பு தான். எல்லாருக்குமே ஷாக். அவன் அசராம அடுத்து கருப்புலயே வெச்சான். மறுபடியும் சிகப்பு வந்தா நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்னு அதைப் பாக்கற தைரியம் இல்லாததால நாங்க கிளம்பிட்டோம்.

அப்பறம் பதினெட்டு நம்பரைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். எங்க காலேஜ்ல பதினேட்டு ரோல் நம்பர் யாரு, அவனுக்கும் நமக்கும் ஏதாவது தகராறு இருந்திருக்கா, பதினெட்டாவது வயசுல நமக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்கா, சபரி மலைக்கு போகும் போது ஏதாவது தப்பு பண்ணோமா? இப்படி பல சிந்தனை. அப்பறம் பார்த்தா தான் தெரியுது, தங்கமணியோட பிறந்த நாள் பதினெட்டாம் தேதி வருதுனு. இதுக்கு மேல நீ விளையாடின, அவ்வளவு தான் காலி. பேசாம நீ கிளம்புனு வார்னிங் கொடுக்க தான் அப்ப அப்ப வந்து ஆப்பு வெச்சிருக்குனு புரிஞ்சிது.

................

கடைசியா...

கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....

ஒரே வழி...

கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.

Saturday, July 04, 2009

விடாது கருப்பு - மர்ம தேசம்

ஊன் மெய்க்கு பிரதானம்
மைதூனத்தின் விதானம்
சூதானமாய் யோசித்தால்
விடையோ இரண்டு
நிதானமாய் யோசித்தால்
உண்டு விருந்து

இந்த விடுகதையில் தொடரோட முதல் பகுதி ஆரம்பிக்குது. ஊருக்கே தெரியும் இந்த விடுகதையின் விடையில் தான் ஊரே தேடும் பொன்பானை பொதிந்திருக்கும் ரகசியம் இருக்கிறது.

விடாது கருப்பு, மர்ம தேசம் தொடரின் இரண்டாவது தொடர். இது நான் பனிரெண்டாவது படிக்கும் போது வந்தது. அப்ப ஹாஸ்டல்ல இருந்ததால பார்க்க முடியல. ஆனா க்ளைமாக்ஸ் ஏப்ரல்ல வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இந்த நாடகத்தோட க்ளைமாக்ஸ் மட்டும் பார்த்தேன். அப்படி ஒரு க்ளைமாக்ஸ் பார்த்ததுக்கு அப்பறம் அந்த நாடகத்தைப் பார்த்தே தீரணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.

ராஜ் டீவில மறுபடியும் போடும் போதும் பார்க்க முடியல. அப்பறம் இங்க வந்ததுக்கப்பறம் மே லாங் வீக் எண்ட்ல வீட்ல தனியா இருந்தேன். செம போர். அப்ப இண்டர்நெட்ல மேயும் போது இந்த தொடர் முழுதும் rajshri.comல இருந்தது. பார்க்க ஆரம்பித்தேன். மூணு நாள் முழுதும் உட்கார்ந்து எண்பத்தி இரண்டு பகுதியும் பார்த்து முடிச்சிட்டேன். இப்படி ஒரு சீரியல் (வேண்டும்னா சினிமாவையும் சேர்த்துக்கலாம்) என்னை கவர்ந்தது இல்லை. அட்டகாசமான டைரக்‌ஷன்.

இந்த அளவுக்கு ஒரு மர்மம் நிறைந்த திரைக்கதை தமிழ்ல வந்திருக்குமானு சந்தேகம் தான். சினிமாவைப் பொருத்தவரை மர்மம் நிறைந்த திரைப்படங்கள்னு பார்த்தா அந்த நாள், அதே கண்கள் வேற எதுவும் இருக்கானு சட்டுனு நினைவுக்கு வரல. அதிலும் அதே கண்களை லிஸ்ட்ல சேர்த்துக்க முடியாது. ஏன்னா என்னைப் பொருத்தவரை அத்தனை கதாபாத்திரங்களும் முதலிலே தெளிவாக காட்டப்பட வேண்டும். சடார்னு எங்கயோ இருந்து வர மாதிரி காட்றதுல புத்திசாலித்தனம் இல்லை. அந்த வகைல அந்த நாள் அட்டகாசமான படம்.

விடாது கருப்பு நாடகத்தை அந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதுவும் அன்றும், இன்றும்னு ஒரே பாகத்துல காட்டினது புத்திசாலித்தனம். அதுவும் அன்றும் முழுக்க முழுக்க ராசுவின் பார்வையில் காட்டப்பட்டிருக்கும். அத்தனை சீன்களிலும் அவன் இருந்திருப்பான்.

கதை இது தான். தொட்டக்கார மங்கலம்னு ஒரு கிராமம். அந்த கிராமத்துல நடக்குற தப்புக்கு எல்லாம் கருப்பு சாமி தண்டனை நிச்சயம் உண்டு. அந்த ஊருக்கு தோழியின் காதலை சேர்த்து வைக்க வரும் ஒரு டாக்டர் கம் எழுத்தாளர், அந்த கருப்பு நிச்சயம் கடவுள் அல்ல, மனிதன் தான் என நிருபிக்க முயலுவது தான் கதை. ஆனா கடைசில நாடகம் முடிந்த பிறகும் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியின் இயக்கமா என யோசிக்க வைப்பது கதாசிரியரின் புத்திசாலித்தனம்.

இந்த கதைக்குள்ளே பல கதைகள், ஊரையே ஏமாற்றி நகைகளை புதைத்து வைத்து செத்துப் போகும் பேச்சிக் கிழவி, வாலிப வயதில் பல பாவங்களை செய்து கருப்புவினால் கையை இழுந்து அதற்கு பிறகு எப்பொழுதும் பேசாத கட்டயன், பொன் பானையைத் தேடும் ஆனைமுடியான் (ஆண்மை உடையார்), கருப்பு தான் கண் கண்ட தெய்வம் என நம்பும் ஆனைமுடியான் மனைவி,
சின்ன வயதிலிருந்தே பேச்சிக்கிழவி, கட்டயன் செய்யும் பாவங்களைப் பார்த்து வளரும் ராசு, திருடனாய் இருந்து திருந்தி, தான் திருடிய நகைகளை அதை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க துடிக்கும் பிரம்மன், இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க துடிக்கும் ரீனா, இந்த உலகில் தன்னுடைய பங்கு என்ன என தெரிந்து கொள்ள பித்து பிடித்து அலையும் டாக்டர் நந்தா, ஊரையும், ஆனைமுடியான் குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கும் பூசாரி. இப்படி அட்டகாசமாக படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்கள்.

எண்பத்தி ஓராவது பாகம் முடியும் போது இது மனிதனின் செயல் தான் என புரிந்து கொள்ளும் நாம், கடைசிப் பகுதியைப் பார்த்ததும், இது நிஜமாலுமே மனிதனின் செயலா என சிந்திக்க துவங்கிவிடுவோம். அது தான் கதையின் வெற்றி. அதே போல் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியா என ஆராய்ச்சியை செய்யாமலே இருந்திருக்கலாம் என்றும் தோன்ற ஆரம்பித்தது.

என்னைப் பொருத்தவரை நாடகத்தின் பலமே அன்று பகுதியில் வரும் பேச்சிக்கிழவி, ராசு, கட்டயன் தான். அதுவும் பேச்சிக்கிழவியும் ராசுவும் அட்டகாசமான நடிப்பு. பேச்சிக்கிழவியின் திமிர், இதுவரை நான் பார்த்த வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது போல் தோன்றியது. இவ்வளவு சாமார்த்தியமான கிழவியை (பாத்திரத்தை) இதுவரையில் பார்த்தே இல்லைனு கூட சொல்லலாம். பின்னாடி இந்த கிழவியை அசுரினு சொல்லும் போது, அது எந்த விதத்திலும் குறைவு இல்லைனு தான் தோணும். கருப்பு நிச்சயமா மனுஷன் தான் பின்னாடி ரீனா நம்பறதை விட, கிராமத்திலே இருந்து கருப்பு மனுஷன் தானு அந்த பாட்டி அத்தனை வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிப்பதே அதோட திறமைக்கு சான்று. அப்பறம் ஊரையே ஆட்டிப்படைக்கும் திருடன் மொக்க மாயனை கொன்று அவன் திருடின நகைகளையே கொள்ளை அடிப்பது, பிரம்மனை போலிஸ்ல பிடித்து கொடுப்பது, நியாயம் கேட்டு வரும் ஊர் மக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது என துவம்சம் செய்திருக்கும் அந்த பாட்டி பாத்திரம். அதுவும் நியாயம் கேக்க வர ஊர்மக்களை பிரிச்சி மேயறது அட்டகாசமான சீன். பேச்சிக்கிழவி பேசும் போது அந்த வீடே அதிர்வது போல் எதிரோலிப்பது அருமை.

சின்ன வயது ராசுவாக நடித்திருக்கும் மாஸ்டர் லோகேஷ் பத்தி சொல்லலைனா என்னை விடாது கருப்பு. அவ்வளவு அட்டகாசமான நடிப்பு. மொத்த நாடகத்தோட கனத்தையும் தாங்கறது அந்த பாத்திரம் தான். ஒவ்வொரு பாகத்திலும் புதிது புதிதாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பான். நல்லவர்கள் கெட்டவர்கள்னு எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதைப் பார்க்கும் நமக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும்.

இந்த தொடரைப் பார்க்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கலாம்.

நாடகம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். Contain spoilers...

நாடகம் பார்த்து முடிக்கும் போது மனம் முழுவதும் சின்ன வயது ராசு தான் நிறைந்து இருந்தான். கண்ணு முன்னாடியே நடக்குற அநியாயத்தைப் பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் துடித்து, மனம் நொந்து அவனுக்குள் கருப்பு ஒரு ஆல்டராக உருவாகுவது அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. ஆனா பின்னாடி அவனே தப்பு செய்யும் போது அவனுக்கு கிடைக்கும் தண்டனை ஏனோ மனதை பாதிக்கவே செய்தது.

ராசுவோட பாத்திரத்தை அப்படியே உளி கொண்டு செதுக்கும் சிற்ப கலைஞரைப் போல செதுக்கியிருக்கிறார் இயக்குனர் (கதாசிரியர்). இவனுக்கு மல்டிப்பில் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் நமக்கு புரிந்திருக்கும். ஆனா கடைசியா அவனுடைய கருப்பு ஆல்டரே அவனுக்கு தண்டனைக் கொடுப்பது பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது.

அவனுக்கு இப்படி ஒரு மனநோய் வருவதற்கு காரணம் பேச்சிக்கிழவி மட்டுமல்ல, அவனுடைய அம்மாவும் தான். கருப்பு மேல் அவள் வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையும் ஒரு வகையில் காரணம் தான். இல்லைனா அவனுக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அவனும் அந்த பாட்டியுடன் சேர்ந்திருப்பான். அதே போல கிழவியின் மரணத்திற்கு பிறகு அவளுடைய நம்பிக்கையால் தான் குடும்பமே அந்த பூசாரியின் பேச்சுக்கு அடிமையாகி இருக்கும். இப்படி பல விஷயங்கள் மனதில் ஓடின.

அதே மாதிரி ரீனா அவளுடைய வாழ்க்கையில் நடந்த துன்பத்தை வைத்து இந்த கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அளந்தது தவறு. அவள் அமைதியாக ஊரை விட்டு போயிருந்தாலும் ராசுவின் மரணம் தவிர்க்க பட்டிருக்கும். எது எப்படியோ, சந்திரமுகி, அந்நியனை விட இது சிறந்த திரைக்கதை அமைப்பு கொண்டது. நாகா, இந்த தொடரை இயக்கியதற்காக பெருமை கொள்ளலாம்.

மின்பிம்பங்கள் இந்த நாடகத்தை ஒரு DVDயில் தர முயற்சி செய்யலாம். மகாபாரதம் சீரியல் இப்படி CDக்களில் பார்த்திருக்கிறேன். பல மொக்கைப் படத்தைப் பார்ப்பதற்கு இப்படி நல்ல சீரியல்களைப் பார்க்கலாம்.

Sunday, June 28, 2009

உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?

சமீபத்துல விஜய் டீவி நீயா? நானா? நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான ஒரு தலைப்புல பேசிட்டு இருந்தாங்க. உயர்கல்வி படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?

இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்து வேலைக்கு சென்ற சிலரையும் அல்லது வேலைத் தேடிக் கொண்டிருக்கும் சிலரையும் கூப்பிட்டு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

என்னோட கேஸ்ல நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது என் பெற்றோர்களின் விருப்பம். அதனாலே SRVல எங்களுடைய சக்திக்கு மீறி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று படித்து கொண்டிருந்தேன். SRVல என் கூட படித்த டாக்டர் பிள்ளைகள் மிக அதிகம். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த தொழிலில் உள்ள கஷ்டங்கள் தெரிய ஆரம்பித்தது.

முதல் தலைமுறை டாக்டர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் எனவும், அவர்கள் முதல் பத்து பதினைந்து வருடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள் எனவும், அதன் பிறகே வசதி வாய்ப்பு வந்தது என்றும் என் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மனதில் மூன்று விதமான எண்ணங்கள், டாக்டருக்கு படித்தால் அதை வெறும் சேவை மனப்பாண்மையோடு செய்ய வேண்டும். காசு, பணத்தில் அக்கரை இருக்க கூடாது. ஆனால் இது சாத்தியமில்லை. முதல் சில வருடங்கள் அப்படி இருந்தாலும் பின்னால் காசு, பணம், புகழ் இதை தேடி தானாக சென்று விடுவேன். அப்படி செல்லும் பட்சத்தில் என்னுடைய பெற்றோர்கள் அதை அனுபவிக்க சாத்தியமில்லை. எனக்கு அடுத்த தலைமுறை மட்டுமே அதை அனுபவிக்கும்.

அடுத்து எனக்கு பாடத்தில் பிடித்தது Nuclear Physics. அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும். நன்றாக படிப்பவன் நன்றாக சம்பாதிக்கும் தொழிலிற்கு செல்ல வேண்டும் என்பது நம் சமுதாயத்தில் எழுதப்படாத சட்டம். இதை உடைக்கும் தைரியம் எனக்கு இல்லை.

மூன்றாவது ஐடி. இதை நான் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் பணம். சின்ன வயதிலே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அப்பா, அம்மாவிற்கும் பெருமை இருக்கும். இது தவறாக கூட தெரியலாம். ஆனால் என் நான்கு தாய் மாமாக்களும் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பொழுது, ஒரு சாதாரண கிளார்க் மகனான எனக்கு சின்ன வயதிலிருந்தே பணம் சேர்ப்பது தான் குறி.

புனித வளனார் பள்ளிக்கு மட்டும் போகாமல் இருந்திருந்தால் ஒரு மனிதாபிமானமில்லாத பிஸினஸ் மேனாக நான் இருந்திருப்பேன். பள்ளியிலே தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன். இப்படி இருந்த என்னை மாற்றியது நான் ஹாஸ்டலில் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான்.

நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன். இந்த முடிவு நான் எடுத்தது பரிட்சைக்கு ஒரு மாசத்திற்கு முன்பு தான். அதுவரை நான் தூங்கும் போது கூட பயாலஜி புத்தகம் என் கையில் இருக்கும். அதற்கு பிறகு தீர்மானமாக முடிவு எடுத்த பிறகு நான் பயாலஜி படிக்கவே இல்லை.

மதிப்பெண்கள் வந்த பிறகு பார்த்தால் பயாலஜியில் தான் அதிக கட் ஆஃப். 1.5 மதிப்பெண் கட் ஆஃப் சேர்த்து வந்திருந்தால் டாக்டர் சீட் கிடைத்திருக்கும். கடைசி ஒரு மாதத்தில் படித்ததால் இஞ்சினியரிங் கட் ஆஃப் மிகவும் குறைவு தான். வீட்டில் இம்ப்ரூவ்மெண்ட் செய்ய சொன்னார்கள். என் ரூமேட் இருவர் மீண்டும் இம்ப்ரூவ்மெண்ட் சேர்ந்துவிட்டார்கள். அதனால் என்னையும் அதில் சேர்ந்து டாக்டருக்கு படிக்க வைக்க அப்பா அம்மா முடிவு செய்தார்கள். நான் நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட்டேன். பஞ்சாயத்து பண்ண எங்க மாமா வீட்டிற்கு வந்தார். டாக்டருக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கிகாரம் மற்ற இத்யாதிகள் அனைத்தையும் விளக்கினார். எனக்கு தெரியாதது புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை.

கடைசியாக என் அம்மாவிடம், உங்களுக்காக நான் படிக்கணும்னா டாக்டருக்கு படிக்கிறேன். ஆனா என் விருப்பம் இஞ்சினியரிங் படிக்கறது தான் அப்படினு சொன்னேன். என் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்காக நீ படிக்க வேண்டாம். உனக்கு என்ன படிக்குதுனு தோணுதோ அதே படினு சொல்லிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லுவாங்க.

அப்பறம் கவுன்சிலிங் போகும் போது அப்பா கூட வந்தாரு. நான் ஐடினு முடிவு பண்ணிட்டேன். எங்க செட்ல முதல்ல ஃபில் ஆனது ஐடி. அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ். சேரும் போது இது ரெண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. உள்ள சீட் செலக்ட் பண்றதுக்கு போகும் போது கூட அப்பா, PSGல ஏரோநாட்டிகள் இருக்கு. எடுத்துக்கறயா? இல்லை அண்ணா யுனிவர்சிட்டில சிவில் இருக்கு எடுத்துக்கறயானு கேட்டேட்டே வந்தாரு. நான் எதுவும் சொல்லல. உள்ள போய் முதல் ஆப்ஷன் கோவை ராமகிருஷ்ணா ஐடி, ரெண்டாவது திருவண்ணாமலை அருணைல ஐடி. முதல் ஆப்ஷனே கிடைத்துவிட்டது.

இது நான் இஞ்சினியரிங் சேர்ந்த கதை. எதுவுமே தெரியாம தான் நான் ஐடி சேர்ந்தேன். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஐடி சரியத் துவங்கியது. தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனா இது நான் எடுத்த முடிவு. அதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும். இதையே பெற்றோர்கள் முடிவு செய்திருந்தால் நிச்சயம் பழியை அவர்கள் மேல் போட்டிருப்பேன். நீங்க தான சேர்த்து விட்டீங்க. இப்ப நீங்க தான் செலவு பண்ணனும் என்று திமிர் தனம் செய்திருப்பேன். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லை. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்று படித்தேன். எங்க க்ளாஸ்லயே நான் ஒருவன் தான் எல்லா லேபிலும் 90 சதவிகிதத்திற்கு மேல்.

படித்து முடித்த பின்பும் வேலை இல்லை. வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிச்சயம் எல்லாரும் என்னை கேலி பேசுவார்கள். நாங்க சொன்னதை கேட்டிருக்கலாம் இல்ல. சும்மா ஒரு போர்ட் மாட்டி கிளினிக் வெச்சிருந்தா கூட காசு வரும், இப்ப பார்த்தியானு கூட சொன்னார்கள். இந்த கோபத்தில் உடனே பெங்களூர் கிளம்பினேன். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆறு மாசம் வெறும் உப்புமா மட்டும். காபி குடிக்க ஆசையாக இருக்கும். ஆனா செலவாகும்னு போகறதுக்கு யோசிப்போம். அஞ்சு பேர் மூணு ரூபாய் போட்டு காபி குடிக்கறதுக்கு வீட்டுக்கு பால் வாங்கி வந்து காபி போட்டா பதிமூணு ரூபாய்ல முடிச்சிடலாம். ரெண்டு ரூபா மிச்சம்னு கணக்கு போட்டு காபி போட்டிருக்கோம். இந்த கஷ்டத்தை எல்லாம் மனசு ஏத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் இது நான் தேர்ந்தெடுத்த வழி. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை நான் தான் தாண்டியாகனும். ஆறு மாசம் கஷ்டத்திற்கு பிறகு ஒரு நல்ல வழி கிடைத்தது. ரெண்டு வேலை வாங்கினேன்.

என் சொத்தக்காரவங்க ஒருத்தர் கூட அப்ப ஐடி துறைல இல்லை. இன்னும் ஒருத்தர் கூட அமெரிக்கால இல்லை. இங்க மூணு, நாலு நாள் லீவு விட்டா நிறைய பேர் சொந்தக்காரவங்க வீட்டுக்கு போவாங்க. ஒரு வழிக்காட்டி கூட இல்லாத நிலையிலும் இந்த துறைல வந்து வெற்றி பெற முடிந்ததுனா ஒரே காரணம், இது நான் தேர்ந்தெடுத்த வழி. கை கொடுத்து தூக்கிவிட ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நான் பழி போட்டு தப்பிக்க வழியும் இல்லை. போராடி தான் வெற்றி பெற முடியும். போராட துணிவை இந்த நான் என்ற Ego கொடுக்கும்.

இப்ப நீ என்ன தான் மேன் சொல்ல வரனு கேட்டா, பெற்றோர்களே, பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!

தலைவர் பாணில சொல்லணும்னா ”உன் வாழ்க்கை உன் கையில்”னு அவுங்களுக்கு சொல்லிடுங்க. நல்லது கெட்டதை சொல்லுங்க. வழியை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.

Thursday, June 25, 2009

உரையாடல் போட்டிக்கான கதை

சாப்ட்வேர் களம் இல்லாம ஒரு நல்ல கதை எழுதணும்னு ஆசைப்படும் போது, தானா ஒரு செய்தி வந்து மாட்டியது. அந்த உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது இந்த கதை.


தலைப்பு உபயம் : பெனாத்தலார்

வழக்கம் போல உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Saturday, June 20, 2009

பர்மிதா குட்டிக்கு - 2

அன்புள்ள பர்மி குட்டிக்கு,
இது நான் உனக்கு எழுதும் இரண்டாவது கடிதம். நம்ம நைனாக்கு வேற வேலையே இல்ல போல, சும்மா லெட்டரே எழுதிட்டு இருக்காருனு நீ நினைக்கலாம். நீ என் பக்கத்துல இருந்தா இது எல்லாம் எழுத நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்காது. நீ அவ்வளவு அட்டகாசம் பண்றதா உங்க அம்மா கம்ப்ளைண்ட் பண்றாங்க. இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம ரொம்ப சமத்தா இருக்கனு இது வரைக்கும் வந்த ரிப்போர்ட்ஸ் சொல்லுது. நீ எங்க போனாலும் அங்க இருக்குற எல்லாரையும் அட்ராக்ட் செஞ்சிடறனு எல்லாருமே சொல்லிட்டாங்க. உனக்கு தினமும் திருஷ்டி சுத்தி போட சொல்லி தான் சொல்றாங்க. இதைப் படிக்கும் போதும் அதே மாதிரி எங்களுக்கு பேர் வாங்கி தர மாதிரி இருந்தா சந்தோஷம்.

இது என் லாப்டாப்பில் இருக்கும் படம்.

சரி, நான் ரொம்ப் ப்ளேட் போட விரும்பலை. இன்னைக்கு ஒரு கதை சொல்லப் போறேன். இந்தக் கதையைப் படிக்கும் போது ரொம்ப வித்யாசமா இருக்கும். இந்த மாதிரி ஒரு கதையை நான் எங்க நைனா டயரில படிச்சிருக்கேன். 1982வது வருஷ டைரி அது. அந்த வருஷம் தான் நான் பொறந்தேன். அது படிச்சிட்டு உன் பாட்டிக்கிட்ட திட்டு வாங்கினேன். படிச்ச பையன் தானே நீ, என்ன இருந்தாலும் அப்பா டைரியைப் படிக்கலாமானு? அந்த மாதிரி எல்லாம் நீ திட்டு வாங்க வேண்டாம்னு தான் நானே அதை உனக்கு எழுதி வெச்சிடறேன்.

குழந்தை பிறக்கப் போகுதுனு தெரிந்தவுடனே, நிச்சயம் அது இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, இன்று அனைவரையும் வரவேற்று நல்வாழ்வு கொடுக்கும் அமெரிக்கா கடைசி வரை அப்படி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சிறுபான்மையினராக இந்த இடத்தில் என் சந்ததியினர் வாழ்வதில் விருப்பமும் இல்லை. பிற்காலத்தில் எனக்கு பிறகு நீங்கள் வந்து இங்கே வாழலாம். அதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் இதை நான் ஆரம்பிக்க வேண்டாம் என்ற ஒரு எண்ணம் தான். மேலும் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்லயே படிச்சிட்டேன், அம்மா, அப்பாவோட கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருக்கணும் என்ற எண்ணமும் இருக்கிறது.

உன் பாட்டி சமையலுக்கு ஈடு இணையே இல்லை. நான் சும்மா சொல்லல. இது நம்ம சொந்தக்காரவங்க எல்லாருமே சொல்ற ஒரு விஷயம் தான். ஆனா அதை தொடர்ந்து சாப்பிடும் கொடுப்பினை எனக்கு இல்லை. அவர்களை இந்த நாட்டிற்கு கொண்டு வர முடியாது. என் அம்மாவால் ஒரு வாரம் கூட இங்கு தங்க முடியாது. அவர்களை இங்கு அழைத்து வரும் எண்ணமும் இல்லை. இங்கே பணம் சம்பாதிக்க வந்திருக்கிறேன். ஓரளவு சம்பாதித்தவுடன் இந்தியா வந்துவிடுவேன். இப்படி பல காரணம். அதனால் உனக்கு இந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. நான் எடுத்த இந்த முடிவு முட்டாள் தனமாக இருக்கலாம். அப்படி இருந்தால் என் முட்டாள் தனத்தை நீ உன் புத்திசாலித்தனத்தால் ஈடுகட்டி கொள்ளவும்.

உன் அம்மா 2008 ஜூன் மாதம் இந்தியா சென்றாள். என்னை 2008 அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியா அனுப்பி விட்டார்கள். அது என் விருப்பத்தின் பேரில் தான். நீ பிறக்கும் போது உன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை. அதை விட என் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம். வந்தவுடன் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தேன். நீ நவம்பர் இருபத்தி நாலு அன்று பிறப்பாய் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதனால் அப்பொழுது ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.

சென்னையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு, கள்ளக்குறிச்சி சென்றுவிட்டேன். திங்கள் அன்று பெங்களூரில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். என்னுடைய திட்டம் சனி இரவு புறப்பட்டு, ஞாயிறு காலை பெங்களூர் சென்று, ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாள் அலுவலகம் செல்லலாம் என்று. அது மட்டுமில்லாமல் ஞாயிறன்று நண்பர்களுடன் ஊர் சுற்றலாம் என்றும் ஒரு திருட்டு எண்ணம்.

சனிக்கிழமை காலையில் வந்த என் மாமா (பக்தவச்சலம்), ”ஏன் பாலாஜி சனிக்கிழமையே போற? ஞாயிறு காலைல இட்லி கறிக்குழம்பு எல்லாம் சாப்பிட்டு புறப்படலாம் இல்லைனு” சொன்னாரு. எனக்கு பகல்ல ட்ராவல் பண்றது சுத்தமா புடிக்காது. ஒரு நாள் முழுக்க வீணாகிவிடும் என்ற எண்ணம் வேறு. அதனால் அவர் பேச்சை நான் கேட்கவில்லை. அவர் பல முறை சொல்லியும் நான் கேட்கவில்லை. பொதுவாக அவர் சொன்னால் நான் கேட்பேன். அன்றும் கேட்டிருக்கலாம்.

சனிக்கிழமை புறப்பட்டு பெங்களூர் சென்றுவிட்டேன். 2006 பிப்ரவரில தான் நான் பெங்களூர்ல இருந்து பாஸ்டன் புறப்பட்டேன். 2008 நவம்பர் 2 அன்று நான் பெங்களூர் சென்ற பொழுது எனக்கு நான் இறங்க வேண்டிய இடமே தெரியவில்லை. எலக்ட்ரானிக் சிட்டிக்கு நான் வைத்திருந்த அடையாளங்கள் முழுதும் அழிக்கப்பட்டிருந்தன. ரோடிலிருந்து இன்ஃபோஸிஸ் பில்டிங்கே தெரியவில்லை. மடிவாளா சென்று அங்கிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு ஆட்டோவில் வந்து சேர்ந்தேன். ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்லா பேசினார். சார் காலைல நாலரை மணிக்கு வந்து விடறேன், ஒரு பத்து ரூபாய் சேர்த்து கொடுங்க சார்னு கேட்டாரு. மத்த எல்லாரும் ஆட்டோ ஸ்டாண்ட்ல அடாவடியா விலை பேசிய போது இவர் அன்பாக பேசினார். அதற்காக அவர் கேட்டதை விட பத்து ரூபாய் சேர்த்தே கொடுத்தேன். ஆல்பம்னு ஒரு படத்துல க்ளைமாக்ஸ்ல விஜயகுமார் சொல்வது, ஒருத்தன் நல்லது பண்ணும் போது அதற்குரிய பலனை நாம அவனுக்கு கொடுக்கணும். அப்ப தான் நல்ல விஷயங்கள் பரவும்னு. அது எனக்கு மறக்கவே இல்லை.

கெஸ்ட் அவுஸ்ல போய் நான் என் ரூமில் செட்டில் ஆகும் பொழுது மணி ஐந்து. தூக்கம் வரவில்லை. டீவி பார்த்து கொண்டிருந்தேன். ஒரு ஏழரை மணி வாக்கில் என் நண்பன் பரட்டைக்கு ஃபோன் செய்தேன் (அவன் பெயர் அருள் மாதரசன். One of my Best Friend). என்னிடம் செல்ஃபோன் இருந்தது, ஆனால் சிம் கார்ட் இல்லை. அன்று தான் சென்று வாங்க வேண்டும் என்பது திட்டம். பத்திரமாக ஊர் போய் சேர்ந்தேனா என அம்மா, நைனா பயந்து கொண்டே இருப்பார்கள். அதனால் அவனுக்கு ஃபோன் செய்து, கள்ளக்குறிச்சிக்கு ஃபோன் செய்து சொல்லிவிட சொன்னேன். அவனுக்கு அன்று MBA க்ளாஸ் இருந்ததால் மதியம் ஒரு மணிக்கு வந்து என்னை வெளியே அழைத்து சொல்வதாக சொல்லியிருந்தான். அவனால் என்னை அழைக்க முடியாது. அதனால் அவனை மதியம் நான் அழைப்பதாக சொல்லியிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். பிறகு பத்து மணி வாக்கில் எழுந்து குளித்துவிட்டு, கம்பெனியை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து சென்றேன். என்னடா சுத்திப் பாக்கற அளவுக்கு என்ன இருக்குது நினைக்காதே. நடந்து சென்றால் இன்போஸிஸை சுற்றிப் பார்க்க குறைந்தது முப்பது நிமிடமாவது எடுக்கும், நன்றாக சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால் இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். உள்ளே STD செய்ய ஒரு டெலிஃபோன் பூத் இருந்தது. அதைப் பிடித்தால் உன் அம்மாவிற்கும், என் அம்மாவிற்கும் ஃபோன் செய்யலாம் என்ற திட்டமும் இருந்தது. அன்று ஞாயிறு என்பதால் கடை மூடியிருந்தது.

மீண்டும் கெஸ்ட் அவுஸ் வந்து சேரும் போது மணி பதினொன்று முப்பது ஆகியிருந்தது. ஒரு அரை மணி நேரம் டீவி பார்த்து கொண்டிருந்தேன். பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. பரட்டைக்கு ஃபோன் செய்துவிட்டு அவனுடைய திட்டத்தை தெரிந்து கொண்டு சாப்பிட செல்லலாம் என்ற எண்ணத்தில் அவனை அழைத்தேன். அவனுடைய காலர் ட்யூன் “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா” என்ற பாடல். இரண்டாவது ரிங்கில் எடுத்துவிட்டான்.

”பாலாஜி, நானே உனக்கு எப்படி ரீச் பண்றதுனு ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உன் வீட்ல பெயின் வந்துடுச்சினு, ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்களாம். உடனே கிளம்பு. நான் எலக்ட்ரானிக் சிட்டி தான் வந்துட்டு இருக்கேன். எந்த கேட்டுக்கு வரதுனு சொல்லு நான் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்”னு சொன்னான்.

எனக்கு ஒரு நிமிஷம் ஒன்றுமே புரியவில்லை. உடனே அனைத்தையும் பேக் செய்துவிட்டு கிளம்பினேன். மூன்று வருடத்திற்கு முன்பு உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் ஐந்து வழிகள் இருந்தன. பாதுகாப்பு காரணமாக அதை இரண்டாக்கி விட்டார்கள். பரட்டைக்கு அதில் ஒரு கேட் தான் தெரியும். அதனால் அவனுக்கு தெரிந்த கேட் ஒன்றிற்கு வர சொல்லிவிட்டு, சைக்கிளில் புறப்பட்டேன். நான் வெளியே சென்று பத்து நிமிடத்தில் அவன் வந்து சேர்ந்துவிட்டான். உடனே அவனிடமிருந்து ஃபோன் வாங்கி உன் அம்மாவிற்கு அழைத்தேன். உன் தாத்தா தான் எடுத்தார்.
”மாப்பிளை, காலைல அஞ்சு மணிக்கு எல்லாம் பெயின் வர ஆரம்பிச்சிடுச்சி. உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு வந்துட்டோம். எப்படியும் சுகப்பிரசவம் ஆகிடும்னு டாக்டர் சொல்றாங்க. நீங்க உடனே புறப்பட்டு வாங்க மாப்பிளை”னு சொன்னாரு. அப்படியே உன் அம்மாவிற்கும் பேசினேன். ரொம்ப வலிப்பதாக கூறினாள். சுமார் நான்கு மணி நேரமாக இப்படி வலி இருப்பதாக கூறினாள். பொறுத்து கொள்டா, பாப்பா வந்துட்டா எல்லாம் சரியாகிடும். நான் உடனே புறப்பட்டு வரேனு சொன்னேன். நான் சொன்னது சரியா தப்பானு கூட எனக்கு தெரியாது. ஏதாவது சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக சொன்னேன்.

என் அம்மா, நைனாவும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்கள். நான் ஃபோன் செய்யும் போது அவர்கள் தாம்பரத்தில் இருந்தார்கள். நான் டென்ஷனாக இருப்பதைப் புரிந்து கொண்ட பரட்டை, என்னை ஊருக்கு எப்படி சீக்கிரம் அனுப்புவது என்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். ஊருக்குள் சென்று டிராவல்ஸ் வண்டியை பிடித்து செல்வதை விட, ஓசூர் சென்று அங்கிருந்து செல்வதே நல்ல திட்டமாகப்பட்டது. எலக்ட்ரானிக் சிட்டியிலே என் பெயரில் லீஸ் எடுத்த வீடு ஒன்று இருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு எடுத்த வீடு, ஆள் மாறி ஆள் வந்து கொண்டிருந்தார்களே தவிற அதை யாரும் காலி செய்யவில்லை. அங்கே சென்று என் பெட்டியை எல்லாம் வைத்துவிட்டு, பரட்டையின் பல்சரில் ஓசூருக்கு புறப்பட்டோம்.

வழி முழுதும் ஃபோன் மேல் ஃபோன். எப்படியும் ஒரு மணி நேரத்தில் நீ பிறந்துவிடுவாய் என்பது தெரிந்தவுடன், அதைத் தெரிந்து கொண்டு புறப்படலாம் என்று திட்டமிட்டேன். ஓசூர் சரவண பவனில் சென்று இருவரும் நன்றாக சாப்பிட்டோம். பிறக்க போவது பையனா பெண்ணா என்பது எங்களுக்கு தெரியாது. அமெரிக்காவில் சொல்கிறோம் என்று சொல்லியும் நாங்கள் கேட்கவில்லை. அனைவரும் பையன் என்றே நினைத்திருந்தோம். அதற்கு முக்கிய காரணம் எனது நாடி ஜோதிடம். அதுவரை அதில் சொல்லியது எல்லாம் துல்லியமாக நடந்து வந்தது. எங்களுக்கு தெரிந்து நாங்கள் சொல்லவில்லை என்பது என் அம்மாவின் எண்ணம்.

சாப்பிட்டு விட்டு ஓசூர் பேருந்து நிலையம் வந்தோம். அது தற்காலிகமாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம். சென்னை பேருந்துகள் அங்கே நிறைய இருந்தன. ஆனால் பஸ் ஏறிவிட்டால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என்று, நீ பிறக்கும் வரை அந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். என் வாழ்வில் மிகவும் பரபரப்பாக இருந்த நிமிடங்கள் அவை. அதை எதனுடனும் ஒப்பிட எனக்கு தெரியவில்லை.

இந்த நிமிடங்கள் என் மனைவியுடன் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தியாவே வந்திருந்தேன். ஆனால் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு இடத்தில் இருந்தேன், அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சில் சில பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். நான் போய் அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டேன். என் டென்ஷன் எதுவும் அவர்களை தொற்றி கொள்ளாமல் அவர்கள் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தார்கள்.

என்னுடைய டென்ஷனைப் பார்த்து பரட்டை என் அருகே வந்து அமர்ந்து கொண்டான். ”டென்ஷன் ஆகாதடா பாலாஜி. எல்லாம் நல்லபடியா நடக்கும்”னு சொன்னான். அது எனக்கும் தெரிந்திருந்தது. உடனே என் மாமனாரிடமிருந்து அழைப்பு. “சிசேரியன். பெண் குழந்தை மாப்பிளை. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. எந்த பிரச்சனையும் இல்லை”னு சொன்னாரு. உடனே பரட்டையிடம் சொன்னேன், “மகாலஷ்மியே வந்து பிறந்திருக்காடா. கங்கிராட்ஸ்”னு சொன்னான். எனக்கு கண் கலங்கிவிட்டது (பரட்டை ரோமன் காத்தலிக். இருந்தாலும் அவன் மகாலஷ்மினு தான் சொன்னான். இதை எதுக்கு இங்க சொல்றேனு பாக்கறியா? நீ என்னை மாதிரி இருந்தா, அவர் க்ரிஸ்டியனாச்சே, அவர் நிஜமாலுமே மகாலஷ்மினு தான் சொன்னாரானு நீ கேட்டாலும் கேட்கலாம்). சென்னை செல்லும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸில் ஏற்றிவிட்டான்.

நான் சென்னை வந்து சேரும் பொழுது மணி எட்டரை இருக்கும். உதயம் தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கினேன். உன் தாத்தா வந்து என்னை அழைத்து சென்றார். வழியெல்லாம் உன்னைப் பற்றிய புராணம் தான். நீ பிங் கலரில் இருப்பதாகவும் அங்கே இருந்த டாக்டர்கள் அனைவரும் உன்னைப் பற்றி பெருமையாக பேசியதாகவும் சொன்னார். அந்த மருத்துவமனையில்
முதல் மாடியில் உங்கள் அறை இருந்தது. நீ என் அம்மா மடியில் இருந்தாய். நேராக உள்ளே வந்த நான், உன்னைப் பார்க்காமல் என் மனைவியைப் பார்க்க சென்றேன். அவள் கையைப் பிடித்து நெற்றியில் ஒரு முத்தம் வைத்தேன். என் அம்மா, நைனா, மாமா, மாமியார் இருந்ததைப் பற்றி கவலைப்படவில்லை. அனைவரது கண்ணும் என் மேல் தான்.

என் அம்மா தான் பேச ஆரம்பித்தார்கள். ”நான் சொன்னேன் இல்லை. நேரா உன்னைப் பார்க்க தான் வருவான்னு” அப்படினு. நான் வருவதற்கு முன்பே அங்கே ஒரு வாக்குவாதம் நடந்ததாம், நான் வந்ததும் யாரை முதலில் பார்ப்பேன் என்று. உன்னைத்தான் பார்ப்பேன் என்று உன் தாத்தா சொல்லியிருந்தாராம். ”இல்லை, அவன் பொண்டாட்டியைத் தான் முதல்ல பார்ப்பானு” எங்க அம்மா சொல்லியிருந்தாங்களாம். அம்மா சொல்லைக் காப்பாற்றிய பிள்ளை. “சிசேரியனா இல்லாம நார்மல் டெலிவரியா இருந்திருந்தா நான் முதல்ல பாப்பாவைப் பார்த்திருக்கலாம்” அப்படினு சொன்னேன். அப்பவும் பார்த்திருப்பேனானு தெரியல.

இது செல்ஃபோன்ல எடுத்தது. உன்னோட முதல் ஃபோட்டோ. நீ பிறந்த இரண்டு நாட்கள் கழித்து எடுத்தது. உன் பாட்டி மடியில் இருக்கிறாய். நீ பிறக்கும் போது இந்த துணில இருக்கும் கலரை விட பிங்காக இருந்தாய்.

ஒரு நிமிடத்தில் உன்னை வந்து பார்த்தேன். இவ்வளவு பிங் நிறத்தில், இவ்வளவு அழகாக ஒரு குழந்தையை நான் பார்த்ததில்லை. இது பொய் இல்லை. சத்தியம். அவ்வளவு அழகு நீ. உன் கையை தொட்டுப் பார்த்தேன். என் வாழ்வின் மிகவும் சந்தோஷமான தருணம் அது. I was proud. அப்படியே உன்னையே கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.

எனக்கு தூக்க தெரியாது. இருந்தாலும் என் அம்மா உன்னை என் மடியில் படுக்க வைத்தார்கள். அப்ப நான் எப்படி உணர்ந்தேனு எனக்கு வார்த்தைல எழுத தெரியலை. ரொம்ப சந்தோஷமா இருந்தேனு மட்டும் சொல்லலாம். நீ பிறந்து ஒரு மணி நேரம் வரை உன்னை வெளியே கொண்டு வரவில்லையாம். சரியாக உன் தாத்தா, பாட்டி இருவரும் கள்ளக்குறிச்சியிலிருந்து வந்த பிறகு தான் கொண்டு வந்தார்களாம். முதலில் உன் அம்மாவின் பாட்டியிடம் கொடுக்க சொல்லி என் அம்மா சொல்லிவிட்டார்களாம். வயதில் பெரியவர் கையில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தில். அடுத்து உன் பாட்டி கைகளில் நீ வந்தாய். ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு கிளம்பினேன். என் அம்மாவும், மாமியாரும் அங்கு இருந்து உன்னைப் பார்த்துக் கொண்டார்கள்.

இது ஒரு மாதத்திற்குள் எடுத்தது. நீ உன் அம்மாவின் பாட்டி கையில் இருக்கிறாய்.

அன்று இரவு நீ சரியாக தூங்காமல் அனைவருக்கும் வைகுண்ட ஏகாதசியை கொடுத்தாயாம். நான் அடுத்த நாள் காலை வந்தவுடன் உன் மேல் வந்த முதல் கம்ப்ளைண்ட் அது தான். அன்று முழுதும் உன்னுடன் தான் இருந்தேன். உன் தாத்தாவிற்கு தான் அலைச்சல் அதிகம். அன்று இரவு நான் வீட்டிற்கு செல்வதற்கு முன்,
“குட்டி. இன்னைக்கு ஒழுங்கா தூங்கணும். அவ்வாக்கு எல்லாம் கஷ்டம் கொடுக்க கூடாது. நல்ல பொண்ணுனு பேர் வாங்கணும். சரியா” அப்படினு சொல்லிட்டு போனேன். அடுத்த நாள் வந்தா ஆச்சரியம். நீ அன்னைக்கு சமத்தா தூங்கினயாம். நைனா சொன்னவுடனே கேட்டுட்டாளேனு எங்க அம்மாக்கு ஆச்சரியம். எனக்கு பெருமை.

அன்பு முத்தங்களுடன்,
நைனா...

Thursday, June 18, 2009

மணல் கயிறு = Linked List

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...


------------------------

இதை இங்கயும் படிக்கலாம் :)

நான் எவ்வளவு சொல்லியும் என் பேரு முரளிதரன் தான், நான் திண்டுக்கல்ல இருக்குற ஒரு காலேஜ் Professorனு உலகத்துக்கு எடுத்து சொல்லும் சாருவுக்கும், விவாதங்களே பிடிக்காதபட்சத்திலும் எனக்கு அறிவுரைக் கூற தனது பொன்னான நேரத்தை வீணாக்கி என் மேல் இருக்கும் பாசத்தால் தனிப்பதிவு போட்ட என் அருமை நண்பர், உலகமகா எலக்கியவாதி தம்பி உமாக்கதிருக்கும் நன்றி :)

Sunday, June 14, 2009

பசங்க

”பசங்க படத்தை நிச்சயம் மிஸ் பண்ணிடாத” இதை தேவ் அண்ணா, கைப்ஸ் அண்ணா ரெண்டு பேருமே சாட் பண்ணும் போது சொன்னாங்க.

நேத்து தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. என் ரூமெட்கிட்ட பயங்கர பில்ட் அப் கொடுத்துட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். இந்த வருஷத்துலயே இதை சிறந்த படம்னு வேற சொல்றாங்க. இன்னொரு அஞ்சலினு சொல்றாங்க அப்படி இப்படினு பயங்கர பில்ட் அப். 



பெயர் போடும் போதே ஓரளவு கிரியேட்டிவிட்டி தெரிஞ்சிது. சின்ன பசங்க விளையாட்டு எல்லாம் பேக் க்ரவுண்ட்ல வரும், பெயர் அப்படியே ப்ளாக் ஸ்கிரின்ல ஓடிட்டு இருக்கும். அதுக்கு அப்பறம் அந்த மூணு வாண்டுகளைப் பத்தி போலிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கும் போதும் அந்த பசங்களைக் காட்டும் போதும் ஓவர் பில்ட் அப்பா தெரிஞ்சிது. 

அதே மாதிரி அன்புக்கரசு அறிமுகமும் செம பில்ட் அப். அவன் வண்டி ஓட்டறதும், எக்ஸர்சைஸ் செய்யறதும் ஏதோ பத்ரி படம் பார்க்கற எஃபக்ட்ல இருந்தது. எனக்கு அதைப் பார்க்கும் போது செம கடுப்பு. இந்த படத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பானு. அதுவும் சின்ன பசங்களுக்குள்ள கேங் வார்னு காட்டும் போது அதைவிட எரிச்சல். ஆனா அதுவே போக போக அந்த பசங்களால பெற்றோர்களுக்கிடைய ஆரம்பிக்கும் பிரச்சனைனு களம் மாறும் போது சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

அதுக்கப்பறம் அப்பா, அம்மாக்கிடைய நடக்கும் பிரச்சனை பசங்கள எப்படி பாதிக்குதுனு பார்க்கும் போது ஏதோ மனசைக் குத்த ஆரம்பித்துவிட்டது. அன்புக்கரசு அப்பாவும் வாத்தியாரும் பேசிக் கொள்ளும் இடம் மிகவும் ரசித்தேன். இந்த மாதிரி கணவன், மனைவி சண்டை நான் நிறைய பார்த்திருக்கேன். அதனால பாதிக்கப்பட்ட பசங்களும் எனக்கு தெரியும். 

என் அப்பா, அம்மா கூட நாங்க சின்ன வயசுல இருக்கும் போது இப்படி நிறைய சண்டைப் போட்டிருக்காங்க. அன்புக்கரசு அழுத மாதிரி நான் கூட அழுதிருக்கேன். அப்பறம் நான் பெருசாக பெருசாக சண்டை ஓரளவு குறைந்தது. இப்பக்கூட எப்பவாது சண்டைப் போட்டா ”ஆமாம் புது மணத் தம்பதிகள். சண்டை போடறீங்க. நிறுத்துங்க” அப்படினு நான் கிண்டல் பண்றதுல ரெண்டு பேரும் சண்டையை நிறுத்திடுவாங்க.


அப்பறம் அன்புக்கரசு சித்தப்பாக்கும், ஜீவா அக்காக்கும் நடுவுல ஓடற காதல் ட்ராக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரசிக்கும்படியா இருந்தது. அதுவும் பல நாடுகள்ல இருந்து ஃபோன் பண்ற கான்செப்ட் அட்டகாசம். நல்லா சிரிக்க வைத்தது.

ஜீவா, அன்பரசு ரோல் பண்ண சின்ன பசங்க ரெண்டு பேருமே அட்டகாசமா நடிச்சிருந்தாங்க. குறிப்பிட்டு சொல்லனும்னா எனக்கு ஜீவா ரோல்ல பண்ண குட்டிப் பையன் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. அதே போலவே பகோடா, குட்டிமணி, அப்பத்தா ரோல்ல நடிச்ச பசங்களும் அருமை. படத்துல நடிச்ச யாருமே குறை சொல்ற மாதிரி நடிக்கல. எல்லாமே இயல்பான நடிப்பு தான். 

சில காட்சிகள்ல இயல்புக்கு மீறி, பிஞ்சிலே முத்தின மாதிரி காட்டியிருந்தாலும் ரசிக்கும் படியாவே இருந்தது. இந்த படத்தை பசங்களுக்கு ரெக்கமெண்ட் பண்றதை விட பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் ரெக்கமெண்ட் செய்வேன். நிச்சயம் பாருங்க. முதல் பாதியை இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருந்தா மிகச் சிறந்த படமா வந்திருக்கும். சசிக்குமார் நல்ல இயக்குனர் மட்டுமில்ல நல்ல தயாரிப்பாளரும் கூடனு நிருபிச்சிருக்காரு. இயக்குனர் பாண்டிராஜுக்கு என் வாழ்த்துகளும், நன்றிகளும். 

தியேட்டரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். 

சும்மா கடைசியா ஒரு பஞ்ச் : “பசங்க” - பசங்களுக்கான படமல்ல. பசங்களைப் பற்றிய படம். பெரியவர்களுக்காக

Thursday, June 11, 2009

காதல்னா சும்மா இல்லை

இன்னைக்கு எங்கயே ஆன்லைன்ல மேஞ்சிட்டு இருக்கும் போது (மேயறதுக்கு நீ என்ன மாடானு கேட்டு புடாதீங்க) ராஜ் டீவி திரை விமர்சனம் பார்க்க வாய்ப்பு கிடைச்சிது. அதுல அ, ஆ, இ, ஈ விமர்சனமும், காதல்னா சும்மா இல்லை விமர்சனமும் பார்த்தேன். ரெண்டு படமும் நல்லா இருக்குற மாதிரி ஒரு எண்ணம். சரி இன்னைக்கு எப்படியும் பார்த்துடுவோம்னு களம் இறங்கினேன். காதல்னா சும்மா இல்லை பார்க்க வாய்ப்பு கிடைச்சிது.

”காதல்னா சும்மா இல்லை” இந்த படத்துக்கு பெரிய மைனஸா நான் நினைக்கிறது படத்தோட பேர் தான். எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. கமிலினியைத் தேடி கதாநாயகன் புறப்படும் இடத்தில் ஆரம்பிக்கும் படம் ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடிக்கும் போது முடிகிறது. கதாநாயகியைத் (கமிலினி) தேடும் படலத்தில் வாழ்க்கையை புரிந்து கொள்கிறார் பணக்கார நாயகன். அவருடைய இருபது லட்ச ரூபாய் பைக்கை ஆட்டயைப்போட (திண்டிவனம் ஏரியால இந்த வார்த்தை எல்லாம் புழங்குவாங்களானு தெரியல) அவருக்கு உதவுவது போல சேருகிறார் ரவி கிருஷ்ணா. பிறகு அவரே நாயகனுக்கு நாயகியைக் கண்டுபிடிக்க உதவுகிறார். 

காதல்ல மொத்தம் மூணு வகை இருக்காம், லவ், பிக் லவ், க்ரேட் லவ். லவ் ரெண்டு மாசம் எஃபக்ட் இருக்குமாம், பிக் லவ் ரெண்டு வருஷம் எஃபக்ட் இருக்குமாம். க்ரேட் லவ்னா மொத்த வாழ்க்கையையே மாத்திடுமாம். இந்த படம் மூணாவது வகை காதலைப் பத்தி தான் பேச போகுதுனு படத்து பேரை வெச்சே சொல்லிடலாம்.

படத்துல எனக்கு பிடித்த விஷயங்களை சொல்லிடறேன்.

படம் பார்க்கவே ஜாலியா இருந்தது. ரவி கிருஷ்ணா இப்படி எல்லாம் கூட நடிப்பாரானு ஒரு சந்தேகம். ஒரு வகைல அவருக்கு ஏத்த கேரக்டர் தான். அதை அழகா செய்திருந்தார். அவர் பேசற தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சது. டயலாக்ஸும் அருமை. “உங்க பைக்கு சும்மா பறக்குது பாஸு. ஜப்பான்காரன்னா சும்மாவா? அவன் மூக்கு தான் சப்பை. மூளை செம்ம ஷார்ப்பு” இந்த மாதிரி பல வசனங்கள் எனக்கு பிடிச்சிருந்தது. ரவி கிருஷ்ணா படத்துக்கு பெரிய ப்ளஸ். 7G படத்துக்கு பிறகு அவர் நல்லா பண்ண படமா இது தான் எனக்கு தெரிஞ்சிது. 


கமிலினி வழக்கம் போல ரொம்ப அழகு, ரொம்ப அமைதி. செம ஹோம்லி. 

அடுத்து கதாநாயகனா அறிமுகமான ஷர்வானந்தும் குறை சொல்ற மாதிரி இல்லை. முதல் படத்துக்கு நிறைவா செஞ்சிருக்காருனே சொல்லலாம். குறிப்பா ஆக்‌ஷன் சீன்ல அவரோட பாடி லேங்வேஜ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சரியா அழ வரலை. ஆனா முதல் படம்னு மன்னிச்சிடலாம். 

படத்துல டச்சிங் சீன்ஸ் நிறைய இருக்கு. கமிலினி அறிமுகமே அப்படி ஒரு டச்சிங் சீன்ல தான். 


”ஜெய் சம்போ சம்போ சம்போ” பாட்டு எனக்கு பிடிச்சிருந்தது.   

படத்துல சில குறைகளும் இருக்கு. அநேகமா இது தெலுகு படம் காப்பியா இருக்கும்னு நினைக்கிறேன். நக்சலைட் சீன்ஸ் எல்லாம் அப்படி தான் தெரியுது. திண்டீவனம் ஏரியால எங்க நக்சலைட்ஸ் இருக்காங்க? அந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் தெலுகு படத்துக்கு தான் ஒத்து வரும். அதையெல்லாம் தூக்கிட்டு தமிழ் படத்துக்கு ஏத்த மாதிரி மாத்திருக்கனும். 

அதே மாதிரி படத்தை இன்னும் ரொம்ப அழகா கவிதை மாதிரி சொல்லியிருக்கலாம்னு தோணுது. கொஞ்சம் வெட்டியிருக்கணும். அப்பறம் ரசிக்கிற மாதிரியான காட்சிகளை இன்னும் அதிகமாக்கியிருக்கலாம். 

பார்க்க வாய்ப்பு கிடைத்தா தவறாம பார்க்கலாம். 

ஒட்டுக் கேட்டதும் பாட்டுப் போட்டதும்!!!

நேத்து ஏதேச்சயா மேனஜர் ரூம் பக்கம் போயிட்டு இருந்தேன். பார்த்தா அங்க அவர் எங்க டீம் லீட் கிட்ட பேசிட்டு இருந்தாரு, என்னடா நம்மல பத்தி ஏதோ பேசறாரேனு பார்த்தா,

மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.


உடனே என் மனசுல பாட்டு கேட்க ஆரம்பிச்சிது.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


...........

இப்ப முழுப் பாட்டு

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை!
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மீசிக் ஸ்டார்ட் )

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!

ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மறுபடியும் மீசீக்)

(டீம் மெம்பர்ஸ் ஒன் பை ஒன்... ஹை பிட்ச்ல)

கால காலத்துக்கும் இப்படியே நாம சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டியது தானா?

நாம மேனஜர் ஆகறது எப்ப?

இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம கோடிங் பண்ணிட்டு இருக்கறது?

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே
வரும் காலத்திலே நம் தலைமுறைகள்
நாம் சாப்ட்வேர் இஞ்சினியரில்லை என்ற முழங்கட்டுமே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

அப்படியே இது மனசுல ஓடி முடியறதுக்கும், Balaji, Can you please do this?னு என் டீம் லீட் பிங் பண்றதுக்கும் சரியா இருந்தது.

அப்படியே தலைவர் பாட்டையும் பார்த்துட்டு போங்க...