தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, May 15, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - 2

முதல் பகுதி படிக்க இங்கே சொடுக்கவும்

அந்த அரசாங்க பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெரிய அளவில் கூட்டமில்லையென்றாலும், ஓரளவு கூட்டமிருந்தது.

எந்த க்ரூப் எடுப்பது என்று அங்கே நின்றிருந்த பெண்களின் பெற்றோர்கள் ஓரளவு தீர்மானித்திருந்தனர். காவேரியின் பத்தாம் வகுப்பு வகுப்பாசிரியர் அவளுக்கு "ஏ" க்ரூப் எடுக்குமாறு சொல்லி அனுப்பியிருந்தார். அவளுக்கு அது என்னவென்று பெரிதாக தெரியாத நிலையிலும், அது படித்தால் மேற்கொண்டு என்னவேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று அவர் சொல்லியிருந்த காரணத்தால் அவள் அந்த க்ரூப்பையே தெர்ந்தெடுத்திருந்தாள்.

ஒவ்வொருவராக பள்ளி முதல்வர் அறையில் சென்று அவர்களுக்குரிய க்ரூப்பை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தனர். காவேரி சென்ற பொழுது உள்ளே முதல்வருடன் மூன்று ஆசிரியைகள் நின்றிருந்தனர்.

சிகப்பு புடவை கட்டியிருந்த ஆசிரியை, காவேரியிடம் பேச ஆரம்பித்தார்.

"இங்க பாரும்மா. நீ கேட்ட க்ரூப்ல சீட்டு தீர்ந்துடுச்சி. மொத்தம் 60 பேரு தான் ஒரு வகுப்புல. எல்லா சீட்டும் முடிஞ்சிடுச்சி. அதனால நீ வேற எதாவது க்ரூப் எடுத்துக்கோ"

இதை கேட்டதும் காவேரிக்கு எதுவும் புரியவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒரு க்ரூப் மட்டும் தான்.

பக்கத்திலிருந்த கண்ணாடி அணிந்திருந்த டீச்சர் அவள் திருதிருவென்று முழிப்பதை பார்த்து புரிந்து கொண்டார்

"இங்க பாரும்மா, முதல் குருப் கிடைக்காதவங்க ப்யூர் சயின்ஸ் எடுப்பாங்க, இல்லைனா தையல் பாடம் எடுக்கலாம். உனக்கு எது விருப்பம்னு சொல்லு"

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தையல் படிக்கறதுன்னா அப்பா வீட்லயே படிக்கலாம்னு சொல்லுவாரு. பக்கத்து வீட்டு சரசு அக்காவைவிட வேற யார் நல்லா தைச்சிட போறாங்க. அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே அந்த சிகப்பு புடவை டீச்சர் பேச துவங்கினார்.

"புதுசா வந்திருக்க க்ரூப்பை விட்டுட்டீங்களே டீச்சர். கம்ப்யூட்டருக்குனு புது க்ரூப் வந்திருக்குமா. ஆனா இங்க யாருக்கும் பெருசா சொல்லி தர தெரியாது. ஆனா அதுல கணிதம், இயற்பியல், வேதியல் எல்லாம் இருக்கு. இந்த உயிரியல் பாடம் மட்டுமில்ல. "

அவர் சொல்லியதை கேட்டதும் அதையே படிக்கலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாள். அவர்களிடம் அதற்கான சம்மதமும் சொல்லிவிட்டு வந்தாள். அப்பாவுடன் கிராமத்திற்கு புறப்படும் போது அவளுக்கு ஒருவித வருத்தம் கலந்த பயமே மனதில் படர்ந்திருந்தது.

தினமும் கிராமத்திலிருந்து பேருந்து மூலமாக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தாள் காவேரி. அவள் பக்கத்து தெருவிலிருந்த செண்பகமும் அதே வகுப்பில் அவளுடன் படித்து கொண்டிருந்தது அவளுக்கு ஒருவிதத்தில் தைரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்தது. ஒரு வழியாக பள்ளியில் சேர்ந்து ஒன்றரை மாதங்களாகியிருந்தது.

முதல் மாதம் நடந்த மாத தேர்வில் வேதியியலில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். அதில் காவேரியும் அடக்கம். அவளுக்கு நினைத்து பார்க்கவே வெட்கமாக இருந்தது. இது வரை கிராமத்து பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து வந்தவளுக்கு இந்த தோல்வி ஒரு வகையில் அதிர்ச்சியே.

பின்னர் செண்பகம் சொல்லி தான் அவளுக்கு விஷயம் புரிந்தது. அந்த டீச்சரிடம் டியூஷன் படிக்கும் மாணவிகள் மட்டுமே தெர்ச்சி பெற்றிருப்பதாகவும், மற்றவர்கள் எல்லாம் வேண்டுமென்றே ஃபெயிலாக்கினார் என்றும் புரிந்தது. அவரிடம் கண்டிப்பாக டியூஷன் சேர வேண்டும் என்ற உண்மை அவளுக்கு புரிய ஆரம்பித்தது. வகுப்பில் இருக்கும் அனைவரும் அவரிடம் டியுஷன் சேர்ந்தனர். காவிரிக்கு அப்பாவிடமிருந்து டியூனுக்கு முப்பது ரூபாய் வாங்குவதே அவளுக்கு பெரிய விஷயமாக பட்டது.

அவள் டியூஷன் போன போது அந்த வீட்டிலிருந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். வேதியியல் டீச்சரின் வீட்டுக்காரர், ஆண்கள் பள்ளியில் கணக்கு வாத்தியாராம். நன்றாக கணக்கு பாடம் சொல்லி தரக்கூடியவர். அவர் வீட்டில் மாணவர்கள் கூட்டம் குவிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு முக்கிய காரணம் வேதியியல் டீச்சரிடம் படிக்கும் பெண் பிள்ளைகள் தான் என்பது அவருக்கும் தெரியாமலில்லை.

அப்படி ஒரு நாள் அவள் டியூஷனிலிருந்து வரும் போது தான் வினோத்தை பார்த்தாள்...

(தொடரும்...)

....................................................................................................................................

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

மூன்றாவது அத்தியாயத்தை எழுத காதல் ஆராய்ச்சியாளர், தன்னடக்கத்தின் மொத்த உருவம் அண்ணன் CVR அவர்களை அழைக்கிறேன்.

Friday, May 04, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - நியு ஜெர்சி - 2

உள்ள போனவுடனே அறிமுகப்படலம் முடிஞ்சிது...

அப்பறம் அங்கே பேசியதை தென்றலும், KRSம் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிட்டாங்க. அப்பறம் இன்னாத்துக்கு நீ எழுதறனு கேக்காதீங்க. அதுல அவங்க சொன்ன ஒரு சில விஷயத்தை இன்னும் விளக்கமா சொல்லிடலாம்னு பாக்கறேன்.

விக்கிப்பீடியா தமிழ்ல 10,000 இடுகைகள் இருக்குனு பார்த்த கொத்ஸ் ஆச்சரியப்பட்டு போயிட்டாரு. அவர்களோட சேர்ந்து நம்ம எல்லாரும் தோள் கொடுக்கனும். தமிழ்ல தேடினா கிடைக்காததே இல்லைனு ஒரு நிலையை உருவாக்கனும்னு சொல்லி ஃபீல் பண்ணாரு. அதுக்கு என்னவெல்லாம் செய்யலாம்னு யோசிக்கும் போது வந்த கருத்துக்கள்

- விக்கிப்பீடியாக்குனு ஒரு ஃபார்மெட் இருக்கு. அதே ஃபார்மேட்ல எழுதினா தான் அதுல போட முடியும். அதனால அதுக்குனு ஒரு குழு மாதிரி ஆரம்பிச்சி, நம்ம பதிவர்கள் எழுதுற கட்டுரைகளை அந்த பாணிக்கு மாத்தி வீக்கிப்பீடியால ஏத்திட்டு, அந்த பதிவருக்கும் ஒரு லிங் கொடுத்தா அடுத்து அவரே அதே போல் எழுத ஒரு தூண்டுகோளாக இருக்கும். அதே மாதிரி நல்ல கட்டுரைகளை பாக்கறவங்க அந்த குழுவிற்கு தெரிவிக்கலாம்.
அவர்கள் உதவுவார்கள்.

- ஏற்கனவே ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகளை மொழி பெயர்க்கலாம். ஒரு சிலருக்கு கதை, கவிதை எழுத வராமலிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இதை போல் ஆங்கிலத்திலிருக்கும் கட்டுரையை மொழி பெயர்ப்பது எளிதாக இருக்கலாம். தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பிலிருப்பவர்களுக்கு இதை போல் எழுதுவது சுலபமாக இருக்கலாம்.

- முடிந்த அளவு அனைத்து வலைப்பதிவர்களும் விக்கி தமிழிற்கு ஒரு லிங் கொடுக்கலாம்.

- வாரத்திற்கு ஒரு 4-5 தலைப்பு கொடுத்து அதை எழுத சொல்லலாம். இல்லையென்றால் ஆறு விளையாட்டு மாதிரி ஒரு விளையாட்டு ஆரம்பிச்சி ஒரு பதிவை எழுதி விக்கியில் போட சொல்லலாம்.

- எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இதை செய்யனும்னு யோசிக்கறீங்களா? நமக்கு தேவையான தகவல்கள் தமிழில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைக்குமென்றால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன?

- இது இப்ப ரொம்ப பெரிய விஷயமா தெரியலாம். ஆனா எழுத பழகிவிட்டதென்றால் அப்பறம் அடிச்சி ஆடலாம். சிறுதுளி பெருவெள்ளம்...

என்ன எல்லாம் ரெடிதானே???

கொத்ஸ் வந்து நீங்க ஆரம்பிங்க...

பதிவுலகில் ஆக்டிவிசம் எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது...

திருநேல்வேலியிலிருக்கும் ஒருவருக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ ஒரு உதவி தேவைப்பட்டால் அது வலைப்பதிபவர்களால் எந்த அளவுக்கு உதவமுடியும் என்று ஆரம்பித்தார்கள்.

என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல் ரவி போல் ஓரிருவர் செய்யும் உதவி போல் பெருமளவு செய்யக்கூடிய சாத்தியம் என்ன? என்று விவாதிக்கப்பட்டது. பாபா, இதை நீங்க தொடருங்க.


அடுத்து தமிழ்மண முக்கோண பட்டன் குறித்து பேசினாங்க...

தமிழ்சசி சிரிச்ச முகத்தோட பதில் சொன்னாரு. ஒரு நாளைக்கு 100 கணக்குல வருதுங்கனு. அவர் சொல்லும் போதுதான் ப்ராக்டிக்கலா ஒரு திரட்டில எவ்வளவு கஷ்டம்னு புரியுது. ஒரு குருப் பதிவு போட்டா அதுக்கு எதிர் குருப்ல இருந்து வரும்னு சொன்னாரு. தமிழ்மணத்துல இருக்கற எல்லாரும் இதை சுலபமா புரிஞ்சிக்கலாம்.

அதே மாதிரி எந்த ஒரு முடிவும் தனியா எடுக்கறதில்லை. எல்லாத்தையும் குழுவா சேர்ந்து தான் பண்றோம்னு சொன்னாரு.

அடுத்து user customization செய்யலாம்னு இருக்கோம். அதை செஞ்சிட்டா பாதி பிரச்சனை குறைஞ்சிடும்னு சொன்னார். அதுக்காகத்தான் ஆவலோட இருக்கேன்.

அப்பறம் புதுசா பதிவெழுத போவதாக சொல்லி சம்பத் என்பவர் வந்திருந்தார். எங்களின் உரையாடல்களுக்கு பிறகு கண்டிப்பாக மனதை மாத்தியிருப்பார்னு நினைக்கிறேன்... (இவனுங்க மொக்கை தாங்க முடியலைடானு)

பத்மா அரவிந்த மேடம் வயதான இந்தியர்களுக்கு எவ்வாறு இன்சூரன்ஸில் உதவுவது அப்பறம் இயற்கை சீற்றங்களில் உயிரிழக்கும் இந்தியர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு ஒரு பொதுவான வழி கொண்டு வருவது குறித்து பேசினார்.

அடத்ததாக ஜெயஸ்ரீ குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையில் தமிழ் சொல்லி தருவதற்காக அவர் எடுத்து கொண்ட முயற்சிகளை வலையெற்றுவது குறித்து பேசினார்.

VSK ஐயா மைசூர்பா கொடுத்து அசத்தினார். அதைவிட பல மடங்கு சுவையான திருவாசகத்தையும் பரிசளித்தார். சில நாட்களாக எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தையும் அவரிடம் தெளிவுபடுத்தி கொண்டேன். அது என்ன விஜய டீ ராஜேந்தர் மாதிரி விஜய SKவா என்று கேட்டேன். அதற்கு SK என்ற பெயரில் அவரைவிட வயதில் பெரிய ஒருவர் இருப்பதால் மாற்றிவிட்டேன் என்று கூறினார். (மனதிற்குள் உனக்கு எதுவும் பிரச்சனையில்லை உன்னைவிட பெரிய வெட்டி யாரும் இல்லை என்று நினைத்திருப்பாரோ??). SK ஐயா பழக இனிமையானவர்.

அப்பறம் எங்க மாவட்டத்துக்காரர் நெய்வேலி விச்சு இருந்தாரு. நான் புனித வளனார்னு சொன்னவுடனே ரட்சகர்னு பிரின்சிபால் பெயரை சொல்லி மனதில் மகிழ்ச்சியை வர வைத்தார். (I love my school like anything...) அப்பறம் அவர் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதிய கதையை பற்றி சொன்னார். நான் கண்டிப்பா படிக்கிறேனு வழக்கம் போல சொல்லிட்டு எப்பவும் போல மறந்துட்டேன்.

அப்பறம் எடிசன் ரங்கா மைசூர்பா சாப்பிட்டதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்று சொன்னார். நாங்களும் யாரிடமும் சொல்லவில்லை :-)

புலி, ஷைலஜா அக்கா, சந்தோஷ் தொலைபேசியில் அழைத்து பேசினர்.

அப்பறம் பாபாவோட பத்து கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்னு ஏற்கனவே தயாராகாதது ரொம்ப நல்லதா போயிடுச்சி. (நேரமில்லை)

கொத்ஸ்ம், KRSம் எவ்வளவோ சொல்லியும் எங்களால் சாப்பிட போக இயலவில்லை. மதியம் சாப்பிட்டதே வயிறு முழுக்க இருந்துச்சி. அப்பறம் மைசூர்பா, நெய் முறுக்கு, கிரிம் பீஸ்கட், Diet Pepsi Lime (இதை யாருங்க செலக்ட் செஞ்சது???), பாப் கார்ன், சிப்ஸ், சல்சா அவ்வளவு தான்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு அதுக்கு மேல என்ன சாப்பிட முடியும்?

ஒரு வழியா புறப்பட்டு வந்து சேர்ந்தோம். தென்றல்தான் பாவம், என் மொக்கைய பாபா பல தடவை கேட்டிருக்கிறார். வழி முழுக்க நான் போட்ட மொக்கைய தாங்கிட்டு மனுசன் ரொம்ப தெளிவா வீட்டுக்கு வழி சொன்னாரு... அப்பறம் பாபா என்னை வீட்ல இறக்கிவிடும் போது 12:30.

அதுக்கு மேல வந்து கமெண்ட் மாடரேஷன் எல்லாம் பண்ணிட்டு, காலைல இருந்து வந்த பதிவெல்லாம் படிச்சி முடிச்சிட்டு படுக்கும் போது 3. அடுத்த நாள் காலை 7:30க்கு எல்லாம் போனை போட்டு ஆன்லைன் வர சொல்லி ஆணி புடுங்க சொல்லிட்டானுங்க :-(

இப்படி ஒரு வழியாக வெற்றிகரமாக முடிந்தது நியு ஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பு...

கொத்ஸ், KRS மிக்க நன்றி... பட்டையை கிளப்பிட்டீங்க...

Thursday, May 03, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - நியு ஜெர்சி - 1

வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னே என் டீம் லீடரிடம் சொல்லி வைத்தேன். எந்த காரணத்திற்காகவும் இந்த வார சனிக்கிழமை என்னால் வேலை செய்ய முடியாது. ஒரு முக்கியமான சொந்த வேலை இருக்கிறது என்று. இதை தான் சொந்த செலவுல சூனியம்னு நம்ம வலைப்பதிவுலகில் சொல்றாங்க. சரி சனிக்கிழமை தானே சொந்த வேலை, அப்ப ஞாயித்தி கிழமை பையன் சும்மா தான் இருக்கானு ஆணி புடுங்க சொல்லிட்டாங்க.

தமிழ்சசிக்கிட்ட எப்படியும் பேசி 40சட்டத்தை தூக்க வைக்கனும்றதுதான் என்னோட முக்கியமான திட்டம். ஆனா அதுக்கு தேவையே இல்லைனு சரியா வெள்ளிக்கிழமை ராத்திரியே அதை மாத்திட்டாங்க. சரி இதுக்கு மேல நம்ம கண்டிப்பா இந்த சந்திப்புக்கு போகனுமானு யோசிச்சிட்டு இருந்தேன். சரவண பவன்ல சாப்பிடறதுக்காவது போகலாம்னு முடிவு செஞ்சி புறப்பட்டுவிட்டேன். அதுவுமில்லாம பாபாட்ட பேசினா ஒரு நாள் முழுக்க கூட பேசலாம். அவ்வளவு விஷயம் பேசுவாரு. அதுவும் கூட புதுசா தென்றல் வேற வராரு. அவர்ட கொஞ்சம் மொக்கை போடலாம்னு முடிவு பண்ணிருந்தேன்.

ஒரு வழியா 7 மணிக்கு எழுந்து Comment moderation பண்ணிட்டு இருந்தேன். பாபா ஆன்லைனில் வந்து 8:30க்கு வீட்டுக்கு வந்துடுவேனு சொன்னாரு. சரி இதுக்கு மேல ஆன்லைன்ல இருந்தா ஆபத்துனு கிளம்பி ரெடியாகி 8:15க்கு எல்லாம் வெளியே வந்து போட்டோ எடுத்துட்டு இருந்தேன். Spring ஆரம்பமானதால் பூக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருந்துச்சு.

பாபா சொன்ன நேரத்துக்கு சரியா வந்தாரு. அப்படியே நம்ம தென்றல் வீட்டை நோக்கி போனோம். அவர் வீட்ல இருந்து ஒரு பத்து வீடு தள்ளி போய் காரை நிறுத்தி அவருக்காக காத்து கொண்டிருந்தோம் (தவறுதலாக). தூரத்தில் ஒரு இளைஞர் வந்து கொண்டிருந்தார். அவர் எங்களை நோக்கி வர, சின்ன பையன் மாதிரி இருக்காரேனு பார்த்தோம். சரி எதுக்கும் ஜன்னலை திறந்து வைப்போம்னு வெச்சோம். பக்கத்துல சிரிச்சிக்கிட்டே வந்து "நிலால நெருப்பு வெச்சா நெப்ட்யூன்ல வெடி வெடிக்கும்"னு கோட் வேர்டை சொன்னவுடனேதான் அது தென்றல்னு உறுதியாச்சி. உடனே பாபாவும் "வெட்டுக்கிளி தங்கச்சரம் செவ்வாய் கிரகத்துல ஃப்ளாப்"னு எங்க கோட் வேர்டை சொல்லி நாங்கதான் தமிழ் வலைப்பதிவர்கள்னு உறுதி செஞ்சோம். உடனே தென்றல் காரில் ஏறினார்.

அப்படியே தென்றல் எத்தனை நாளா ப்ளாக் படிக்கிறாரு, எந்த எந்த ப்ளாக் எல்லாம் படிப்பாருனு பாபா கேட்டுட்டு வந்தாரு. அவர் 6 மாசமா படிக்கிறார்னு சொன்னாரு. அவள் விகடன் மூலமாகத்தான் வலைப்பதிவுலகம் பழக்கமானதுனு சொன்னாரு. ஆனா 6 மாசமா ரொம்ப அதிகமா படிச்சி இருக்காரு. அவர் சொன்னதுல பாதி ப்ளாக் எனக்கு தெரியல. ஆனா பாபாக்கு எல்லாம் தெரிஞ்சிருந்துச்சி.

அப்பறம் KRS வேற ரெண்டு மூணு தடவை போனுக்கு கூப்பிட்டிருக்காரு. ஆனா பாட்டு சத்தத்துல நான் கவனிக்கவே இல்லை. என்னடா இவ்வளவு நேரமாச்சி பொறுப்பா போன் பண்ணலையே KRSம், கொத்ஸ்ம் என்ன பண்ணிட்டு இருக்காங்கனு தெரிஞ்சிக்கலாம்னு போன எடுத்து பார்த்தா 4, 5 மிஸ்டு கால்ஸ். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பண்ணியிருக்காங்க. அப்பறம் KRSக்கு போன் பண்ணா, வேற ஒரு குரல். எப்படி இருக்கீங்கனு கேக்கறாரு. நல்லா இருக்கேனு சொல்லிட்டு, ஆமா நீங்க யாருனு கேட்டா VSKனு சொல்லி சிரிச்சாரு. அவர்ட நேர்ல பார்த்தா ரொம்ப நாளா கேக்கனும்னு நினைச்சிட்டு இருந்த கேள்வியை எப்படியும் இன்னைக்கு கேக்கனும்னு மனசுல ஒரு எண்ணம் வந்துச்சி.

அப்படியே மதியம் சாப்பாட்டை KRS வீட்ல சாப்பிடலாம்னு அவருக்கு வலை விரிக்க ஆரம்பிச்சோம். மதியம் ஜெர்ஸி வந்து சேர எப்படியும் ஒரு 1:30 ஆயிடும் அந்த நேரத்துக்கு ஏதாவது ஹோட்டல் திறந்திருக்குமானு கேட்டேன். அவரா அப்பாவியா 4 - 5 மணி வரைக்கும் லஞ்ச் கிடைக்கும் அதெல்லாம் பயப்படத்தேவையில்லைனு சொல்லி ஏமாத்திட்டாரு. சரி நம்ம லேசுப்பட்ட ஆளானு அப்படியே இங்க தமிழ்நாடு சாப்பாடு கிடைக்குமானு ஒரு பிட்ட போட்டேன். உடனே 4 - 5 கடை சொல்றாரு. அதுல வேற செட்டிநாடு ஸ்டைல், கொங்கு ஸ்டைல் இப்படி பல ஸ்டைல் சொல்றாரு. இதுக்கு மேல எப்படி கேக்கறதுனு யோசிக்கும் போது தான் ஒரு முக்கியமான மேட்டரு தெரிஞ்சிது. அவர் வீட்ல வெளியூர் போயிருக்காங்க அவர்தான் சமையல்னு. நல்ல வேளை மாட்லனு ஒரு அட்டகாசமான ஹோட்டல் போய் சாப்பிட்டோம்.

அந்த ஹோட்டல் பன்னீர் புர்ஜி அட்டகாசமா இருக்குனு பாபா எவ்வளவு சொல்லியும் நான் சாப்பிடல. முக்கிய காரணம் குலாப் ஜாமுனை உள்ளே நுழைந்தவுடனே பார்த்தது தான் :-). வயிறு முழுக்க சாப்பிட்டு மீட்டிங் சென்றோம். அப்படியே விட்டுருந்தா அங்கயே ஒரு நல்ல தூக்கம் போட்டிருப்பேன்...

மீட்டிங் நடக்கற இடத்துக்கு போனவுடனே கீழ வந்து கதவு திறந்து பாசமா கூப்பிட்டு போனாரு நம்ம KRS...

அங்க போனா எல்லாரும் Cricket Match பார்த்துட்டு இருந்தாங்க. இது தான் பதிவர்கள் ஆடும் கிரிக்கெட் மேட்ச்னு பதிவு போட்டாரா? தென்றல் வேற நம்ம எந்த டீமுக்கு ஆடனும்னு அப்பாவியா கேட்டாரு. பாஸ்டன் Red Soxனு சொல்லி ஏமாத்தளாமானு பார்த்தேன்.ஆனா பாபா அதுக்கு சான்ஸ் கொடுக்கல.

உள்ளே போய் எல்லாரிடமும் நான் தான் வெட்டினு பெருமையா சொல்லிக்கிட்டேன்.எல்லாரும் உன்னைய பார்த்தாலே தெரியுதுங்கற மாதிரி ஒரு லுக் கொடுத்தாங்க. கொத்ஸ் அட்டகாசமா ஆபிஸ் ரூம் பிடிச்சிருந்தாரு. அவருக்கு தான் முதல்ல நன்றிய சொல்லனும். அட்டகாசமா அரெஞ்ச் பண்ணியிருந்தாரு. அடிக்கடி ப்ளாக் எல்லாம் refer பண்ண, ப்ரொஜக்டர் எல்லாம் வெச்சியிருந்தாரு. அப்பறம் Power point எல்லாம் போட்டு டைவர்ட் ஆகாம இருக்கற மாதிரி பாத்துக்கிட்டாரு. அப்பறம் சாப்பிட வேற பல ஐட்டங்கள் இருந்துச்சி. அதெயல்லாம் நான் சரியா நோட் பண்ணல. KRS கரெக்டா போட்டிருக்காரு ;)

அங்கே என்ன பேசினோம்... இது அடுத்த பதிவில்...

Tuesday, May 01, 2007

இது கண்ணன் பாடல் இல்லையா???

இந்த பாட்டு கண்ணன் பாட்டு இல்லைனு ஒரு ஆன்மீக பதிவர் சொல்றாரு. மக்களே! நீங்களே சொல்லுங்க. இது கண்ணன் பாட்டா இல்லையானு...

இந்த பாடலை பாடியவர் பரவை நாச்சியார் . அவர் கண்ணனை தன் பேரனாக நினைத்து பாடுகிறார்.

மதுர வீரன் தானே...
அவன உசுப்பிவிட்ட வீணே
இனி விசுலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே

(இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)

ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

(காட்டின் அரசனான சிங்கம் போல கம்பீரமாக நடந்து வருகிறான் என் செல்ல பேரன். அவன் சாதாரணமாக யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். அவனை உன் அசுரர்களை அனுப்பி சீண்டினால், அவர்கள் உதை பட்டு சாவார்கள். வேண்டாம் கம்சா...)

ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டாள் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)


ஏ புலிய போல
ஏ புலிய போல துணிஞ்சவன்டா எங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீச போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தாஆஆஆ
ஆ ஆ ஆ இந்தா

(போராடும் குணம் கொண்ட புலியை போல் எதற்கும் அஞ்சாதவன் என் பேரன். அசுரர்களாகிய உங்கள் அனைவரையும் பஞ்சு மிட்டாய் போல் பிய்த்தெரிய போகிறான்.அந்த காலத்தில் பெரும்பாலும் மல்யுத்தமே நடைபெறும். அதில் அனைவரையும் பஞ்சை பிய்ப்பது போல் எளிதாக கொன்றனர் பலராமனும், கண்ணனும்)

ஏ சூறாவளி
ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்க எல்லாம் மிரண்டு போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வெச்சி நொறுக்குடாடே


(கண்ணனை அழிக்க சடகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ சூறாவளி கற்றாக மாறி ஊரையே அழித்து கொண்டு வருகிறான். அந்த சூறாவளி காற்றை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆனால் கண்ணனோ சடகாசுரனை அழித்து மக்களை காப்பாற்றுகிறான். அதனால் மகிழ்ந்து அனைவரும் முறுக்கு செய்து தீபாவளி அன்று சாப்பிடுகிறார்கள்.


ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்கள பனைமரமா புடுங்கி இப்ப வீச போராண்டி
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா



மீண்டும் கண்ணனை அழிக்க விருத்திகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ காளையை போல் உருமெடுத்து வருகிறான். அதை உணர்ந்த கண்ணன் அருகிலிருக்கும் பனைமரத்தை பிடுங்கி அடித்து விருத்திகாசுரனை கும்மென்று அடித்து கொன்று விடுகிறான்

இவ்வளவு பலம் வாய்ந்த என் கண்ணனோடு மோதாதே கம்சா என்று எச்சரிக்கிறார் பரவை நாச்சியார்...


இப்பவாது சொல்லுங்க, இது கண்ணன் பாட்டு தானே ;)