தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label மூன்று விரல். Show all posts
Showing posts with label மூன்று விரல். Show all posts

Wednesday, August 12, 2009

மூன்று விரல் - வாசிப்பனுபவம்

பொதுவாக ஒரு புத்தகம் படித்தால் அதைப் பிடித்திருக்கும் பட்சத்தில் நண்பர்களுக்கு அந்த புத்தகத்தை சிபாரிசு செய்வேன். ஆனால் மூன்று விரல் என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. இதை நண்பர்களுக்கு சிபாரிசு செய்யலாமா வேண்டாமா என்று இப்பொழுதும் தெரியவில்லை.

அப்படி குழப்பத்தில் ஆழ்த்தும் அளவிற்கு அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். முன்னூறு (335) பக்க நாவலில் முதல் நூற்றைம்பது பக்கத்தை மூன்று நாட்கள் விட்டு விட்டு படித்தேன். கடைசி நூற்றைம்பது பக்கத்தை, புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்தேன். இது இரா.முருகன் அவர்களின் முதல் நாவலாம். அவருடைய எழுத்தை நான் படிக்கும் முதல் நாவல் கூட. அதனால் இருவரில் ஒருவருக்கு ஸ்டார்டிங் ட்ரபில் போல என நினைத்து கொண்டேன். ஆனால் அதிக பக்கங்கள் ஸ்டார்டிங் ட்ரபிள் இருப்பது தான் பிரச்சனை.

மூன்று விரல் புத்தகத்தை எனக்கு சிபாரிசு செய்தது மலர்வனம் லக்ஷ்மி அக்கா. என்னுடைய ஆடு புலி ஆட்டம் கதையைப் படித்துவிட்டு அதைப் பற்றி பேசும் பொழுது மூன்று விரல் தவறாமல் படிக்கவும், சாப்ட்வேர் இஞ்சினியர்களின் வாழ்க்கையைப் பற்றி வந்த முக்கியமான (முதல்) நாவல் என்று சொன்னார். அதனால் எப்படியும் மூன்று விரல் படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

முதல் நூறு பக்கம் தாண்டுவதற்குள் மூச்சு முட்டியது. பேசாம படிக்காம விட்டுடலாமா என்று சிந்தித்தேன். ஆனால் முழுதும் படிக்காமல் ஒரு புத்தகம் நன்றாக இல்லை என்று சொல்வது சரியா என்ற சந்தேகத்தில் அடுத்த ஐம்பது பக்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன்.அதன் பிறகு வேகம் எடுக்க ஆரம்பித்த புத்தகத்தை கீழே வைத்தது முதல் இப்பொழுது வரை சுதர்சனும், ராவும் என்னை விடாமல் துரத்துகிறார்கள்.

சுதர்சனுடன் பேங்காக்கிற்கு புறப்படும் குழுவில் ஒருவனாக நானும் பயணப்பட்டதைப் போலவே உணர்ந்தேன். ராவ் பாஸ்போர்ட் தொலைத்துவுடன் அதை நானும் சேர்ந்தே தேடினேன். விசா காலம் முடிந்து அவனுக்கு நடக்கும் நிகழ்ச்சிகளை என் டீமில் ஒருவனுக்கு நடப்பது போல பதறினேன். இந்திய மேனஜர் நீரஜை தமிழில் தெரிந்த அத்தனை “நல்ல” வார்த்தைகளிலும் அர்ச்சித்தேன்.

தாய்லாந்தில் க்ளைண்ட் டீம் இந்தியர்களை நடத்திய விதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் தான் எங்களையும் இங்கே அமெரிக்காவில் நடத்துவார்கள். அவ்வாறு நடத்தும் க்ளைண்டிற்கு மிக நேர்மையாக நடந்து கொள்ள முடியாமல் நம்மை குறைவாக நடத்தும் இந்திய மேளாலருக்கு நேர்மையாக நடந்து கொள்ளும் அபத்தம் சுதர்சனுக்கும் ஏற்படுகிறது.

வீட்டில் அப்பாவிற்கு பிரச்சனை வரும் போது ஊரிலிருக்கும் நண்பனை அழைத்து பார்த்து கொள்ள சொல்வது ஆன்சைட் வரும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்க கூடிய ஒன்று. பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு பிரச்சனைகளை சுதர்சன் சந்திக்கும் பொழுது அதில் எந்த வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. இந்தியாவிலிருக்கும் போது அப்படி பைத்தியம் பிடிக்கும் நிலையில் கையில் குடையை வைத்து கொண்டு சொட்ட சொட்ட நினைந்து நடந்திருக்கிறேன். அப்படியே கழுத்திலிருக்கும் டேகை தூக்கி எறிந்துவிட்டு ஏதாவது ஒரு பேருந்தில் ஏறிவிடலாமா என்று தோன்றியிருக்கிறது.

உலகில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் பிரச்சனை நம் வாழ்க்கையில் பெரிய சலனத்தை ஏற்படுத்த கூடிய வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் பற்றிய அனைத்து பிம்பங்களும் முதல் ஆன்சைட் ட்ரிப்புகளிலே அடித்து நொறுக்கப்படும். அதை மூன்று விரலிலும் காணலாம்.

வெறும் இரண்டு பாத்திரங்களைப் பற்றி மட்டும் அதிகம் பேசிவிட்டது போல தெரிகிறது. இங்கிலாந்தில் பிராஜக்ட் பிடித்து கொடுக்கும் ஜெஃப்ரி, க்ளைண்டாக வந்து காதலியாக மாறிய‌ சந்தியா, உடன் படித்து இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான மிளகாய் மண்டி நண்பன் ராஜேந்திரன், அம்மா அப்பா பார்த்து வைத்த புஷ்பவல்லி (புஷ்பா, இந்த பெயர் படித்ததும் இருவர் பட ஐஸ்வர்யா ராய் நினைவிற்கு வந்தார்), எப்படா ஆஃபிஸ் முடியும், பாய் ஃபிரெண்டுடன் ஊர் சுற்ற வேண்டும் என்று காத்திருக்கும் பேங்காக் அழகி னாய் என அனைவரும் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

இந்த நாவலை முடித்த விதத்தில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. ஏதோ பதற்ற‌த்தில் முடித்ததைப் போல தோன்றியது. வெண்ணிலா கபடி குழு படம் இறுதி காட்சியில் இயக்குனருக்காக எப்படி வருந்தினேனோ அவ்வாறே இரா.முருகனுக்காக வருந்தினேன். இவ்வளவு சூப்பரா கொண்டு வந்துட்டு இப்படி முடிச்சிட்டாரேனு.

சரி, படிக்கலாமா வேண்டாமானு சொல்லுனு கேட்டீங்கனா, முதல் சில பக்கங்களை வேகமாக உருட்டிக் கொண்டு சுதர்சனுடன் பேங்காக் புறப்படுங்கள் என்றே சொல்வேன். முடிந்தால் ஏதாவது பயணத்தின் பொழுது படியுங்கள். இந்த நாவலை வீட்டில் அமைதியாக படிப்பதை விட பயணத்தின் பொழுது படிப்பது சுகமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

புத்தகம் கிடைக்குமிடம் :

கிழக்கு பதிப்பகம்
விலை - 150 ரூ