இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்து வேலைக்கு சென்ற சிலரையும் அல்லது வேலைத் தேடிக் கொண்டிருக்கும் சிலரையும் கூப்பிட்டு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
என்னோட கேஸ்ல நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது என் பெற்றோர்களின் விருப்பம். அதனாலே SRVல எங்களுடைய சக்திக்கு மீறி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று படித்து கொண்டிருந்தேன். SRVல என் கூட படித்த டாக்டர் பிள்ளைகள் மிக அதிகம். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தான் அந்த தொழிலில் உள்ள கஷ்டங்கள் தெரிய ஆரம்பித்தது.
முதல் தலைமுறை டாக்டர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் எனவும், அவர்கள் முதல் பத்து பதினைந்து வருடத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்கள் எனவும், அதன் பிறகே வசதி வாய்ப்பு வந்தது என்றும் என் நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு மனதில் மூன்று விதமான எண்ணங்கள், டாக்டருக்கு படித்தால் அதை வெறும் சேவை மனப்பாண்மையோடு செய்ய வேண்டும். காசு, பணத்தில் அக்கரை இருக்க கூடாது. ஆனால் இது சாத்தியமில்லை. முதல் சில வருடங்கள் அப்படி இருந்தாலும் பின்னால் காசு, பணம், புகழ் இதை தேடி தானாக சென்று விடுவேன். அப்படி செல்லும் பட்சத்தில் என்னுடைய பெற்றோர்கள் அதை அனுபவிக்க சாத்தியமில்லை. எனக்கு அடுத்த தலைமுறை மட்டுமே அதை அனுபவிக்கும்.
அடுத்து எனக்கு பாடத்தில் பிடித்தது Nuclear Physics. அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால் B.Sc Physics படிக்க போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் செருப்படி கிடைக்கும். அல்லது பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைக்கும். நன்றாக படிப்பவன் நன்றாக சம்பாதிக்கும் தொழிலிற்கு செல்ல வேண்டும் என்பது நம் சமுதாயத்தில் எழுதப்படாத சட்டம். இதை உடைக்கும் தைரியம் எனக்கு இல்லை.
மூன்றாவது ஐடி. இதை நான் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் பணம். சின்ன வயதிலே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அப்பா, அம்மாவிற்கும் பெருமை இருக்கும். இது தவறாக கூட தெரியலாம். ஆனால் என் நான்கு தாய் மாமாக்களும் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பொழுது, ஒரு சாதாரண கிளார்க் மகனான எனக்கு சின்ன வயதிலிருந்தே பணம் சேர்ப்பது தான் குறி.
புனித வளனார் பள்ளிக்கு மட்டும் போகாமல் இருந்திருந்தால் ஒரு மனிதாபிமானமில்லாத பிஸினஸ் மேனாக நான் இருந்திருப்பேன். பள்ளியிலே தினமும் குறைந்தது இரண்டு மூன்று ரூபாய் சம்பாதிப்பேன். பிடி பீரியட் முடிந்து தண்ணி தாகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு மூடி தண்ணிர் ஒரு ரூபாய்க்கு விற்றுருக்கிறேன். இப்படி இருந்த என்னை மாற்றியது நான் ஹாஸ்டலில் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் தான்.
நியாயமான ஒரு முறையில் அரசாங்கத்தை ஏமாற்றாத, ஒழுங்காக டேக்ஸ் கட்டி நிறைய சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும் ஒரு காரணத்திற்காகவே IT எடுப்பது என முடிவு எடுத்திருந்தேன். இந்த முடிவு நான் எடுத்தது பரிட்சைக்கு ஒரு மாசத்திற்கு முன்பு தான். அதுவரை நான் தூங்கும் போது கூட பயாலஜி புத்தகம் என் கையில் இருக்கும். அதற்கு பிறகு தீர்மானமாக முடிவு எடுத்த பிறகு நான் பயாலஜி படிக்கவே இல்லை.
மதிப்பெண்கள் வந்த பிறகு பார்த்தால் பயாலஜியில் தான் அதிக கட் ஆஃப். 1.5 மதிப்பெண் கட் ஆஃப் சேர்த்து வந்திருந்தால் டாக்டர் சீட் கிடைத்திருக்கும். கடைசி ஒரு மாதத்தில் படித்ததால் இஞ்சினியரிங் கட் ஆஃப் மிகவும் குறைவு தான். வீட்டில் இம்ப்ரூவ்மெண்ட் செய்ய சொன்னார்கள். என் ரூமேட் இருவர் மீண்டும் இம்ப்ரூவ்மெண்ட் சேர்ந்துவிட்டார்கள். அதனால் என்னையும் அதில் சேர்ந்து டாக்டருக்கு படிக்க வைக்க அப்பா அம்மா முடிவு செய்தார்கள். நான் நிச்சயம் முடியாது என்று சொல்லிவிட்டேன். பஞ்சாயத்து பண்ண எங்க மாமா வீட்டிற்கு வந்தார். டாக்டருக்கு சமூகத்தில் கிடைக்கும் அங்கிகாரம் மற்ற இத்யாதிகள் அனைத்தையும் விளக்கினார். எனக்கு தெரியாதது புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை.
கடைசியாக என் அம்மாவிடம், உங்களுக்காக நான் படிக்கணும்னா டாக்டருக்கு படிக்கிறேன். ஆனா என் விருப்பம் இஞ்சினியரிங் படிக்கறது தான் அப்படினு சொன்னேன். என் அம்மாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்காக நீ படிக்க வேண்டாம். உனக்கு என்ன படிக்குதுனு தோணுதோ அதே படினு சொல்லிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லுவாங்க.
அப்பறம் கவுன்சிலிங் போகும் போது அப்பா கூட வந்தாரு. நான் ஐடினு முடிவு பண்ணிட்டேன். எங்க செட்ல முதல்ல ஃபில் ஆனது ஐடி. அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ். சேரும் போது இது ரெண்டுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. உள்ள சீட் செலக்ட் பண்றதுக்கு போகும் போது கூட அப்பா, PSGல ஏரோநாட்டிகள் இருக்கு. எடுத்துக்கறயா? இல்லை அண்ணா யுனிவர்சிட்டில சிவில் இருக்கு எடுத்துக்கறயானு கேட்டேட்டே வந்தாரு. நான் எதுவும் சொல்லல. உள்ள போய் முதல் ஆப்ஷன் கோவை ராமகிருஷ்ணா ஐடி, ரெண்டாவது திருவண்ணாமலை அருணைல ஐடி. முதல் ஆப்ஷனே கிடைத்துவிட்டது.
இது நான் இஞ்சினியரிங் சேர்ந்த கதை. எதுவுமே தெரியாம தான் நான் ஐடி சேர்ந்தேன். நான் சேர்ந்த அடுத்த ஆண்டு ஐடி சரியத் துவங்கியது. தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது. ஆனா இது நான் எடுத்த முடிவு. அதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும். இதையே பெற்றோர்கள் முடிவு செய்திருந்தால் நிச்சயம் பழியை அவர்கள் மேல் போட்டிருப்பேன். நீங்க தான சேர்த்து விட்டீங்க. இப்ப நீங்க தான் செலவு பண்ணனும் என்று திமிர் தனம் செய்திருப்பேன். ஆனால் அதற்கு எல்லாம் வழி இல்லை. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்று படித்தேன். எங்க க்ளாஸ்லயே நான் ஒருவன் தான் எல்லா லேபிலும் 90 சதவிகிதத்திற்கு மேல்.
படித்து முடித்த பின்பும் வேலை இல்லை. வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிச்சயம் எல்லாரும் என்னை கேலி பேசுவார்கள். நாங்க சொன்னதை கேட்டிருக்கலாம் இல்ல. சும்மா ஒரு போர்ட் மாட்டி கிளினிக் வெச்சிருந்தா கூட காசு வரும், இப்ப பார்த்தியானு கூட சொன்னார்கள். இந்த கோபத்தில் உடனே பெங்களூர் கிளம்பினேன். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். ஆறு மாசம் வெறும் உப்புமா மட்டும். காபி குடிக்க ஆசையாக இருக்கும். ஆனா செலவாகும்னு போகறதுக்கு யோசிப்போம். அஞ்சு பேர் மூணு ரூபாய் போட்டு காபி குடிக்கறதுக்கு வீட்டுக்கு பால் வாங்கி வந்து காபி போட்டா பதிமூணு ரூபாய்ல முடிச்சிடலாம். ரெண்டு ரூபா மிச்சம்னு கணக்கு போட்டு காபி போட்டிருக்கோம். இந்த கஷ்டத்தை எல்லாம் மனசு ஏத்துக்கிட்டதுக்கு ஒரே காரணம் இது நான் தேர்ந்தெடுத்த வழி. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை நான் தான் தாண்டியாகனும். ஆறு மாசம் கஷ்டத்திற்கு பிறகு ஒரு நல்ல வழி கிடைத்தது. ரெண்டு வேலை வாங்கினேன்.
என் சொத்தக்காரவங்க ஒருத்தர் கூட அப்ப ஐடி துறைல இல்லை. இன்னும் ஒருத்தர் கூட அமெரிக்கால இல்லை. இங்க மூணு, நாலு நாள் லீவு விட்டா நிறைய பேர் சொந்தக்காரவங்க வீட்டுக்கு போவாங்க. ஒரு வழிக்காட்டி கூட இல்லாத நிலையிலும் இந்த துறைல வந்து வெற்றி பெற முடிந்ததுனா ஒரே காரணம், இது நான் தேர்ந்தெடுத்த வழி. கை கொடுத்து தூக்கிவிட ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நான் பழி போட்டு தப்பிக்க வழியும் இல்லை. போராடி தான் வெற்றி பெற முடியும். போராட துணிவை இந்த நான் என்ற Ego கொடுக்கும்.
இப்ப நீ என்ன தான் மேன் சொல்ல வரனு கேட்டா, பெற்றோர்களே, பிள்ளைகளை அவர்கள் வழிகளில் விடுங்கள். அவர்கள் முடிவு தவறாகவும் இருக்கலாம். ஆனால் அதை எப்படியும் போராடி வெல்ல துணிவு அவர்களுக்கு இருக்கும். இது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி என்பதை மட்டும் அவர்களும் நினைவுப் படுத்துங்கள். நல்ல வழியிலே செல்வார்கள்!!!
தலைவர் பாணில சொல்லணும்னா ”உன் வாழ்க்கை உன் கையில்”னு அவுங்களுக்கு சொல்லிடுங்க. நல்லது கெட்டதை சொல்லுங்க. வழியை பிள்ளைகள் தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.