"டேய் கிருஷ்ணா! மணி 5:30 ஆச்சு... எழுந்திரி!" வழக்கம் போல் அம்மாவின் குரல்
"ஏம்மா! இப்படி உயிர வாங்கற!!! 7 மணிக்கு தான முகூர்த்தம்... பொறுமையா போயிக்கலாம்"
"ஏன்டா நேத்து நைட்டே நீ படுக்கறதுக்கு முன்னாடி சொன்னேன் இல்ல. காலைல சீக்கிரம் போகனும்னு"
"நம்ம கரெக்ட் டைமுக்கு போகலன்னா அங்க என்ன மாப்பிள தாலி கட்டறதையா நிறுத்த போறாரு"
"இப்படியெல்லாம் அதிக பிரசங்கித்தனமா பேசாத. உங்க அக்கா மாமனாரோட தம்பி பொண்ணு கல்யாணம். ஏற்கனவே அவ மாமனார் வேற உங்க அப்பா வராததுக்கே கோச்சுக்குவாரானு பயமா இருக்கு. நம்ம லேட்டா போனா அவ்வளவுதான்"
"அந்த ஆள எங்கயாவது போ சொல்லு. அப்பா என்ன ஓடி விளையாடவா போயிருக்காரு. வேலை விஷயமாத்தானே போயிருக்காரு. இவர் தப்பா நெனச்சா நாம ஒண்ணும் பண்ண முடியாது"
"இந்த பேச்சு பேசறதுக்கு நீ எழுந்திரிச்சு குளிச்சி, கெளம்பியிருக்கலாம்"
"சரி. நான் குளிச்சிட்டு வரேன்... காபி போட்டு வைங்க"
"அதெல்லாம் கல்யாண மண்டபத்துல போய் குடிச்சுக்கலாம்... நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா"
கல்யாண மண்டபத்திற்குள் போய் சேரும் போது மணி சரியாக 6:45.
"ஏம்மா... கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?" அக்காவின் குரலில் வழக்கம் போல் அதிகாரம் தெரிந்தது.
"எல்லாம் இவன் பண்ண வேல... இவன எழுப்பறதுக்குள்ள என் உயிரே போகுது"
"ஏன்டா ஒரு நாள் கூட உன்னால சீக்கிரம் எழுந்திரிக்க முடியாதா?"
"ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? நாங்க தான் முகூர்த்த நேரத்துக்கு முன்னாடி வந்துட்டோம் இல்ல"
"ஆமாம். எங்க உங்க வீட்ல இருந்து யாரையும் காணோம்னு இப்பதான் எங்க மாமியார் கேட்டாங்க"
"ஏன் ஆரத்தி எடுத்து வரவேற்கவா???"
"உனக்கு திமிருதான். அவுங்க முன்னாடி இப்படியெல்லாம் பேசி வைக்காத. அப்பறம் எனக்குத்தான் பிரச்சனை"
"சரி சரி நான் எதுவும் பேசல. அதுவும் இல்லாம நான் முகூர்த்தம் முடிஞ்சவுடனே கிளம்பறேன். எனக்கு கம்பெனில நிறைய வேலை இருக்கு"
"சரி முகூர்த்தம் முடிஞ்சவுடனே ஏழரைக்கு எல்லாம் பந்தி போட்டுடுவாங்க... சாப்பிட்டு போயிடு" அம்மாவின் குரல்
"என்னது பந்தியா??? ஏம்மா உயிர வாங்கற. காலங்காத்தால இவனுங்க கேசரி, இட்லி, வடை, பூரி, பொங்கல்னு தூக்கம் வர ஐட்டமா போட்டு உசுர வாங்குவாங்க. நான் கம்பெனில போய் ஏதாவது சாப்பிட்டுக்கறேன்"
"ஏன்டா ஐநூறு ரூபா மொய் வெக்கறோம். ரெண்டு பேர் கூட சாப்பிடலனா எப்படி?"
"ஏன். தெருல இருக்கறவங்க எல்லாத்தயும் கூப்பிட்டு வர வேண்டியதுதான? போம்மா நீ மொய் வெக்கறதால எல்லாம் என்னால சாப்பிட முடியாது"
எங்க அக்காவோட மாமியார் அவளை பார்த்து ஏதோ ஜாடை செய்து கூப்பிட அவள் இடத்தை காலி செய்தாள். அப்போது எங்களை பார்த்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து கொண்டிருந்தார்.
"நீங்க சாந்தி அம்மாதானே" எங்க அம்மாவை பார்த்து கேட்டார் அவர்.
ஏன் எல்லாம் இப்படி இருக்காங்க? கிருஷ்ணா அம்மானு சொன்னா குறைஞ்சிடுவாங்களா? வீட்ல இருக்குற பொண்ணு பேற சொல்லிதான் எல்லாம் சொல்லுவாங்க. அவளுக்கு தான் கல்யாணமாகி மாமியார் விட்டுக்கு போயிட்டா இல்ல. இனியாவது கிருஷ்ணா அம்மானு சொன்னா என்ன?
இந்த மாதிரி யார் சொன்னாலும் எனக்கு அவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். இவர் மேலும் வெறுப்பு வர தவறவில்லை.
"ஆமாம். நீங்க அருண் அம்மாதான?"
எங்க அம்மா நல்லவங்களா இருக்காங்க. பரவாயில்லை!!!
"ஆமாம். பாத்து எவ்வளவு நாள் ஆச்சு. அருண் நாலு வயிசு இருக்கும் போது கொயம்பத்தூர்ல இருந்து கெளம்பனது"
"ஆமாம். பதினஞ்சு பதினாறு வருஷம் ஆகிடுச்சு. அதான் பாத்தவுடனே கொஞ்சம் சந்தேகமா இருந்துச்சு"
"ஆமாம் சாந்தி, கிருஷ்ணா எல்லாம் எப்படி இருக்காங்க. என்ன பண்றாங்க?"
"சாந்திக்கு கல்யாணமாயிடுச்சு. 1 பையன் இருக்கான் 2 வயசு ஆகுது. இதுதான் கிருஷ்ணா. இஞ்சினியரிங் படிச்சுட்டு இங்க ப்ரிக்கால்ல வேலை செய்யறான்"
"ஓ! இவ்வளவு பெரிய பையானா வளந்துட்டான்"
ஆமாம் பதினஞ்சு வருஷமா வளராம அப்பு கமல் மாதிரியா இருப்பாங்க? லேசாக சிரித்து வைத்தேன்.
"சின்ன வயசுல எப்பவும் நீ அவுங்க வீட்லதான் இருப்ப" அம்மா ஒத்து ஊதினார்கள்.
"இப்ப உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்காது. அருண்ட கிள்ளு வாங்கிட்டு அழுதுட்டே உங்க வீட்டுக்கு ஓடிடுவ"
ஓ! இது வேற நடந்துருக்கா... அவனுக்கு இருக்கு.
"ஆமாம் அதுக்குத்தான் இவன் சூடு வெச்சிட்டானே!" அம்மா என்னை பார்த்து முறைத்து கொண்டே சொன்னார்கள்.
ஓ!!! பரவாயில்ல... அப்பவே நம்ம வெயிட்டு காமிச்சிட்டோம். மனதிற்குள் ஒரு சந்தோஷம்.
"ஆமாம் அருண் இப்ப என்ன பண்றா?"
"அருண் இங்க தான் காலேஜ்ல படிக்கறா"
"ஓ!!! காலேஜ் படிக்கிறாளா??? எந்த காலேஜ்"
"இங்கதான் அவினாஸிலிங்கம்ல ஹோம் சயின்ஸ் படிக்கிறா. இங்கதான நின்னுட்டு இருந்தா. எங்க காணோம்???
அங்க நின்னுட்டு இருக்கா. இருங்க கூப்பிட்டு வரேன்"
ஓ!!! அருண் பையன் இல்லயா? மனசன கொழப்பறதுலயே இருங்க...
மம்மி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு
அந்த ஆண்ட்டி சென்று 2 நிமிடத்திற்குள் வந்தார்கள். இந்த முறை அவருடன் ஒரு அழகான தேவதை இருந்தாள். பிங் சுடிதாரில் அழகாக இருந்தாள்.
பொதுவா சொந்தகாரர்கள் இருக்கும் இடத்தில் நான் நல்ல பிள்ளை. ஆனா இந்த முறை அம்மா பக்கத்துல இருந்ததையும் மறந்துவிட்டேன்.
2 நிமிடத்திற்குள் அறிமுகப்படலம் முடிந்து திரும்பிவிட்டாள். நானோ கனவுலகிலே சஞ்சரித்து இருந்தேன். அக்கா வந்து பேசியவுடன் தான் நினைவு திரும்பியது.
ஒருவழியாக சாப்பாடு பந்தியிலிருந்தும் தப்பித்து வெளியே வந்தேன்.
"ஏன் தம்பூல பையை வாங்காம வந்துட்ட? தேங்கா போட்ருக்காங்க"
அம்மா அக்கறையாக வழியனுப்ப வந்தாங்கனு பாத்தேன்... இல்ல மொய்கணக்க எப்படியாவது சரி பண்ணனும் வந்துருக்காங்க
"அம்மா அசிங்கமா தாம்பூலம் எல்லாம் என்னால வாங்க முடியாது. நீ பொறுமையா வரும் போது வாங்கிட்டு வா"
"சரி. நீ என்ன சொன்னாலும் கேக்கவே மாட்ட"
வெளியே வந்து திரும்பும் போது மண்டபத்திற்கு வெளியில் அவள் நின்று கொண்டிருந்தாள்.
"என்னங்க இங்க நின்னூட்டு இருக்கீங்க?" கூச்சப்படாமல் பேசினேன். அவளை தவிர வேறு யார் நின்றிருந்தாலும் பேசியிருக்க மாட்டேன் என்றே தோன்றியது.
"இல்ல காலேஜ்க்கு நேரமாச்சு. ஆட்டோ கிடைக்குமானு பாத்துட்டு இருக்கேன்"
"நானும் அந்த வழியாத்தான் போறேன். வேணும்னா வாங்க ட்ராப் பண்ணிடறேன்"
"இல்லைங்க உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்"
"அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க... நான் அந்த வழியாத்தான் போறேன்"
"சரி எனக்கும் நேரமாச்சு. நீங்க அந்த டர்னிங்ல நிக்கறீங்களா? நான் வந்து ஏறிக்கிறேன். இங்க யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க"
"யாருங்க தப்பா நினைக்கப் போறா. நீங்க வாங்க"
"இல்லைங்க வேணாம்" தயங்கினாள்.
"சரி நான் டர்னிங்ல வெயிட் பண்றேன்"
எல்லாமே இப்படித்தான் ஊர ஏமாத்தறாங்களா?
சரியாக மூன்று நிமிடத்திற்குள் வந்து வண்டியில் என் பின்னால் அமர்ந்தாள்.
இன்னைக்கு நல்ல நாள்தான்.
"ஆமாம்... உங்க பேர் கிருஷ்ணாதான?"
"ஆமாம்" இது தெரியாமத்தான் என் பின்னாடி வந்து உட்கார்ந்தாளா? கலிகாலம்.
"உங்க பேர் அருணாங்க?"
"அருண் இல்லைங்க... அருணா. வீட்ல பையன் யாரும் இல்லாததால என்ன அருண்னு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கறாங்க. சரி நீங்க சாப்பிட்டீங்களா?"
"இல்லை. நீங்க?"
"நானும் சாப்பிடல. முதல் பந்தில உக்காந்தா அசிங்கமா இருக்குமேனு சாப்பிடாமலே வந்துட்டேன். எங்க காலேஜ் முன்னாடி ஒரு அண்ணபூர்ணா இருக்கு அங்க வேணும்னா ரெண்டு பேரும் சாப்பிடலாமா?"
"சாப்பிடலாமே" இன்னைக்கு உண்மையாலுமே அதிர்ஷ்ட நாள்தான்.
இருவரும் ஆளுக்கு ஒரு ரோஸ்ட் ஆர்டர் செய்தோம்.
"உங்களத்தான் நான் நினைவு தெரிஞ்ச நாளா தேடிக்கிட்டு இருக்கேன்"
என்னடா இப்படி சொல்றா? இவ எதுக்கு என்ன தேடனும். ஒரு வேளை "தித்திக்குதே"வா இருக்குமா? ச்ச இத கூட ஞாபகம் வெச்சிக்காம இருந்துட்டேனே. என்னை நானே நொந்து கொண்டேன்.
"என்னையா? ஏன்?"
"இங்க பாருங்க"
அவள் கையை நீட்டினால், அதில் நீட்டமாக ஒரு தழும்பு தெரிந்தது.
"என்னங்க எதோ தழும்பு மாதிரி இருக்கு"
"நல்லா கேளுங்க! நீங்க வெச்சது தான். நான் ஏதோ தெரியாம கிள்ளிட்டன்னு அடுப்புல இருந்து கொள்ளிக்கட்டை எடுத்து என் கைல வெச்சிட்டீங்களாம். எங்க அம்மா சொன்னாங்க"
இது கேக்கத்தான் என் கூட வண்டீல வந்தாளா? அக்கறையா சாப்பிட போகலாம்னு சொன்னது கூட இதுக்குத்தானா? நான் தான் அவசரப்பட்டுட்டனா?
"என்னங்க நான் என்ன தெரிஞ்சா பண்ணேன். ஏதோ தெரியாம கோபத்துல பண்ணது. எனக்கு சத்தியமா ஞாபகம் கூட இல்ல. அப்ப எனக்கு வயசு என்னா ஒரு ஆறு இல்லனா ஏழு இருக்குமாங்க? அப்ப பண்ண தப்புக்கு இப்ப வந்து கேட்டீங்கனா நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா சொல்லுங்க ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்"
அதிகமா பேசின மாதிரி தோன்றியது.
"ஆமாம். இதுக்கு போய் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணுவாங்களா? தெரியாம ஏதாவது சின்னதா பண்ணியிருந்தா பரவாயில்ல. தண்ணி காயறதுக்கு அடுப்பாங்கறைல வெச்சிருந்த விறகு கட்டய எடுத்துட்டு வந்து வெச்சிருக்கீங்க" கோபமாக பேசினாள். ஆனால் சமாதானமாகிவிடுவாள் என்று தோன்றியது.
"சரி அந்த சம்பவம்(?) உங்களுக்கு ஞாபகம் இருக்கா?"
"இல்ல. எங்க அம்மாதான் சொன்னாங்க"
"பாருங்க உங்களுக்கும் ஞாபகமில்ல. எனக்கும் ஞாபகமில்ல. அப்பறம் எதுக்கு நீங்க இவ்வளவு டென்ஷம் ஆகறிங்க?"
"ஆமாம். உங்களுக்கு என்ன? சின்ன வயசுல எல்லாம் என்ன கரிகால சோழன் மாதிரி இவ கரிக்கை சோழினு ஓட்டுவாங்க. அப்ப இருந்தே உங்க மேல எனக்கு கோபம்"
"கரிக்கை சோழி ரொம்ப நல்லா இருக்கே!"
"என்னது?" முறைத்தாள். ஆனால் செல்லமாக முறைப்பது போல்தான் எனக்கு தோன்றியது.
"இப்ப என்ன பண்ண சொல்றீங்க? வேணும்னா நீங்களும் என் கைய சுட்டுக்கோங்க. தெரிஞ்சே யாராவது இந்த மாதிரி பண்ணுவாங்களா? அதுவும் அழகான பொண்ணு கைய சுடறதுக்கு யாருக்காவது மனசு வருமா?" ஓரளவு வழியாமல் சொன்னேன்.
"ரொம்ப ஐஸ் வெக்காதீங்க. நான் உங்களுக்கு சூடு எல்லாம் வெக்க போறதில்ல. இந்த பில்ல பே பண்ணிட்டு, என்ன காலேஜ்ல இறக்கி விட்டுடுங்க"
சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"நான் தெரியாம பண்ணிருந்தாலும், ஐ ரியலி ஃபீல் சாரி. மன்னிச்சுடுங்க"
"பரவாயில்ல. உங்க மேல ரொம்ப கோவமா இருந்தேன். இப்ப எல்லாமே போயிடுச்சு"
ஒரு வழியாக அவளை காலேஜில் இறக்கிவிட்டு, வேலைக்கு சென்றேன். நாள் முழுதும் அவள் நியாபகமாகவே இருந்தது. வீட்டிற்கு வந்து சேரும் போது மணி 7 ஆகியிருந்தது.
"இவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தா? அவ மாமியார் வீட்ல இருந்து துரத்திவிட்டுட்டாங்களா?"
"டேய்! என்ன யாரும் தொரத்தல.. உன்னத்தான் நம்ம வீட்ல இருந்து துரத்திடுவாங்கனு நினைக்கிறேன்" அக்கா சிரித்து கொண்டே சொன்னாள்.
"என்ன யாரும் துரத்த முடியாது. அம்மா சூடா ஒரு கப் காபி கொடேன்"
"ஒரு அஞ்சு நிமிஷம் இரு. கொண்டு வரேன்"
"ஆமாம். அக்கா இன்னைக்கு காலைல ஒரு ஆண்ட்டி நம்ம அம்மாட்ட பேசிக்கிட்டு இருந்தாங்களே, அவுங்கள உனக்கு ஞாபகம் இருக்கா?"
"இருக்கே! நம்ம அருண் அம்மா. ஏன் உனக்கு ஞாபகமில்லையா?"
"இல்ல. அவுங்க நமக்கு என்ன வேணும்?"
"நம்ம பக்கத்து வீட்ல இருந்தாங்க. இப்ப சொந்தக்காரவங்க ஆகிட்டாங்க!" நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள். மனசுல பெரிய புத்திசாலினு நினைப்பு.
"கொஞ்சம் தெளிவா சொல்லு" கோபமாக கேட்டேன்
"எங்க மாமனாரோட தங்கச்சி விட்டுக்காரோரோட தம்பியோட சகல விட்டுக்காரரோட தங்கச்சியோட பொண்ணுட பையனைத்தான் அவுங்க கல்யாணம் பண்ணியிருக்காங்க" மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு.
"அவுங்க நமக்கு என்ன வேணும்" கோபத்தை அடக்கி கொண்டு கேட்டேன்
"அவங்க வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் முறை ஆகறாரு"
"என்னது? அண்ணனா? அவர் வயசு என்ன? என் வயசு என்ன? இப்ப உண்மைய சொல்லல உன் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது தலைல ப்ளேடு பொட்டுடுவன். ஆமாம்"
"ஏன்டீ அவனோட விளையாடற? அண்ணனும் இல்ல தம்பியுமில்ல. கொஞ்சம் தூரத்து சொந்தம்தான். அந்த பொண்ணு அருண பாத்தவுடனே எனக்கு புடிச்சு போச்சுடா. சரின்னு அவ அம்மாட்ட பேசி பாத்தேன் அவளும் சரி ஜாதகம் அனுப்பறேன் ஒத்து வந்துச்சுனா முடிச்சிக்கலாம்னு சொன்னா. உனக்கு புடிச்சியிருக்கா?"
அம்மா நீயே என் தெய்வம். உனக்கு கண்டிப்பாக கோவில் கட்டணும்.
"ஆமாம். அந்த பொண்ண இவன் "பே"னு பாத்தததான் கல்யாண மண்டபத்துல எல்லாரும் பாத்தாங்களே" அக்கா நக்கலாக சிரித்து கொண்டே சொன்னாள்.
இதுக்குத்தான் அப்ப இருந்து இப்படி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாளா?
"என்ன கேக்காம எப்படி நீங்க ஜாதகம் பத்தியெல்லாம் பேசலாம்" கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தேன்.
"சரி. அவனுக்கு பிடிக்கலயாம். வேணாம்னு சொல்லிடுங்கம்மா" அக்கா ரொம்ப அக்கறையாக பேசினாள்.
"அதில்லமா... ஜாதகம் எல்லாம் மூட நம்பிக்கை. அது பாக்க வேணாம்னு சொன்னேன்" நான் வழிந்து கொண்டே சொன்னதை பார்த்து அம்மாவும், அக்காவும் சிரித்தனர்.