தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label வாழ்த்துகள். Show all posts
Showing posts with label வாழ்த்துகள். Show all posts

Thursday, July 30, 2009

சுவாரஸ்ய விருது (?)

சுவாரஸ்யமாக எழுதுவது ஒரு கலை, அது அவ்வளவு எளிதாக கை கூடாது என்பதில் எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. படிப்பவர்களை கவரும் வண்ணமும் தொடர்ந்து படிக்க வைப்பதும் அவ்வளவு சாதாரணமில்லை என்பது இப்பொழுது எனக்கு புரிகிறது. நான் சமீப காலமாக எழுதும் பதிவுகளில் சுவாரஸ்யமாக இருப்பவை மிக சில தான் என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும், ”நீயும் ரவுடி தான், வந்து வண்டில ஏறிக்கோ”னு அன்புடன் அழைத்த நண்பர் வசந்த குமாருக்காக இந்த பதிவு.

முதலில் வசந்த குமாருடன் எனக்கு ஏற்பட்ட நட்பைப் பத்தி சொல்லிவிடுவது நல்லது. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிவியல் சிறுகதை போட்டியில், தவறான புரிதல் காரணமாக எனக்கும் வசந்திற்குமிடைய சிறிய மனக்கசப்பு ஏற்பட்டது.

”அறிவியல்னா வானத்துல இருந்து ஏலியன் வரதும், டைம் மிஷினும்னு தான் நினைக்கற இடத்துல நான் என்ன பண்றது :-)

வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))”

இப்படி நான் சொல்லப் போக, அது அப்படியே வளர்ந்து சண்டையாகி, சமாதானமாகி, நட்பாகி விட்டது :)

வசந்த் போட்டியில் வென்ற பிறகு, அவருடைய கல்லூரி நண்பர்கள் குழுவிற்கு அதை தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த குழுவில் என் அறை தோழனும் இருந்தான். அவன் மிக மகிழ்ச்சியாக சொல்லும் போது தான் எனக்கு வசந்த் அவனுடைய கல்லூரி நண்பர் என்பது தெரிந்தது. என் அறைத் தோழனுக்கு வலையுலக போட்டி, சண்டை எதுவும் தெரியாது :). அதைக் கேள்விப்பட்டதும், ”வசந்த் சண்டை போட்டானா? நம்பவே முடியல” என்று சொன்னான். ஏன்னா நான் சண்டை போடறது ரொம்ப சாதாரண விஷயம்.

அப்பறம் வசந்தோட பதிவுகள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். சிறுகதைகள் எழுதவும், சிறுகதைகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் மிகவும் விருப்பமுள்ளவர். உரையாடல் போட்டிக்கு அவர் செய்த பணி குறிப்பிடத்தக்கது. சிறுகதை எழுத ஆர்வமுள்ளவர்கள் இதை நிச்சயம் ஒரு முறை படித்துப் பார்ப்பது நல்லது.

விருதிற்கு நன்றி வசந்த்.

இனி, இந்த விருதை நான் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். இது தான் மிகவும் கடினமான பணியாக கருதுகிறேன். வெறும் பெயரளவிலோ, நட்பிற்காகவோ இதை நான் செய்ய விரும்பவில்லை. சுவாரஸ்யப் பதிவர்கள் என்பதை, சுவாரஸ்யமாக பதிவு எழுதுபவர்கள் என்று எடுத்து கொள்கிறேன். அதாவது எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக கொடுப்பவர்கள் என்ற கணக்கில் எழுத துவங்குகிறேன். இதில் ஒரு சிலருக்கு ஏற்கனவே விருது கிடைத்திருக்கலாம். இருந்தாலும் இன்றைய நிலையில் என் மனதில் தோன்றும் சுவாரஸ்யமான எழுதுபவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். இதை விருது என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது பாராட்டு என்று எடுத்துக் கொண்டாலும் சரி. Just a token of appreciation. விருப்பப்பட்டால் நீங்கள் இதை தொடரலாம்.

டுபுக்கு -
எழுதும் எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதுபவர். நகைச்சுவை இவருடைய களம். இயல்பான நகைச்சுவையில் பின்னு பெடலுடுப்பவர். இவருடைய பதிவுகளைப் படித்து தான் நான் எழுத துவங்கினேன். பதிவர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ நையாண்டி செய்வது அவ்வளவு கடினமானது இல்லை. ஏனென்றால் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் ஏற்கனவே நம் மனதில் இருக்கும். ஆனால் இவர் பதிவுகளில் அப்படி இருக்காது. எதார்த்தமாக வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும், நபர்களையும் வைத்து நகைச்சுவையில் புகுந்து விளையாடுவார். என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஜொள்ளித் திரிந்த காலம், நாமதேவரும் கைப்பிடி சுண்டலும், நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு.

வெறும் நகைச்சுவைக்காக மட்டும் இவரை சொல்லவில்லை, இவருடைய கதைகளில் இருக்கும் சோகமும் எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்த கதை, சாமியாண்டி.

கப்பி பய -
மாதத்திற்கு நான்கு பதிவாவது எழுதிவிட வேண்டும் என்று எந்த கணக்கும் வைத்துக் கொள்ளாத பதிவர். எழுத விஷயம் இருக்கும் போது எழுதுவார். மற்ற சமயங்களில் அமைதி காப்பார். நகைச்சுவை, சிறுகதை, பயணக்குறிப்பு, விமர்சனம் என்று ரவுண்டு கட்டி அடிப்பவர். இதில் எதுவும் சுமார் என்று கூட சொல்ல முடியாது. அனைத்தும் தரமானதாக இருக்கும். ”கப்பி மாதிரி வித்தியாசமான களம் எடுத்து முயற்சி செய்யிப்பா” என்று போன மாதம் கூட ஒரு நண்பர் எனக்கு அறிவுரை கூறினார். அப்படி எழுத முடியாததால தான் நான் வெட்டியா இருக்கேனு சொல்லி எஸ் ஆகிட்டேன்.

கப்பியோட குறிப்பிட்ட எந்த பதிவும் நான் கொடுக்கவில்லை. முழு வலைப்பதிவையும் நீங்கள் மேயலாம்.

லக்கி லுக்
லக்கி லுக் சிறுகதைகள் மட்டும் என்னை அவ்வளவாக கவர்வதில்லை. மற்ற படி அவர் எழுதும் அத்தனைப் பதிவுகளும் சர வெடி தான். அரசியல் பதிவாகட்டும், மொக்கைப் படங்களுக்கு அவர் எழுதும் விமர்சனங்களாகட்டும், எதிர் பதிவுகளாகட்டும், புத்தக விமர்சனமாகட்டும், நகைச்சுவைப் பதிவுகளாகட்டும் எதிலும் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. அது மட்டும் இல்லாமல் லக்கியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவர் மேல் மற்றவர்கள் குறை சொல்லும் போது அவருடைய பதிவுகளில் விஸ்வரூபம் எடுப்பார்.

போலிப் பிரச்சனை போது அவர் அந்த பிரச்சனைகளில் தலையிடாமல் அட்டகாசமான பதிவுகளை கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது மட்டும் அவர் அந்த பதிவுகளுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டிருந்தால் இந்நேரம் லக்கி லுக், யுவ கிருஷ்ணாவாக மாறியிருப்பாரா என்பதே சந்தேகம். புதிய பதிவர்களும், பிரபல பதிவர்களும் லக்கியிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய பாடமிது. பிரச்சனையின் பொழுது அதைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை விட தரமான பதிவுகள் கொடுப்பதே உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

பினாத்தல் சுரேஷ்
கிரியேட்டிவிட்டி கிங். மார்கெட்டிங் துறையில் இருந்தால் எங்கோ சென்றிருப்பார். அவ்வளவு கிரியேட்டிவிட்டி. இவருடைய ஒரு சில பதிவுகளை புரிந்து கொள்ளவே நமக்கு கொஞ்சம் கிரியேட்டிவிட்டி வேண்டும். இல்லை முன்னெச்செரிக்கை வேண்டும். நகைச்சுவை, சிறுகதை இரண்டிலும் இவர் கில்லி. பினாத்தலாருடைய சிறுகதைகளைவிட அவருடைய அவருடைய நகைச்சுவைப் பதிவுகளும், மூளைக்கு வேலை கொடுக்கும் பதிவுகளும் எனக்கு பிடிக்கும். அவருடைய ஃபிளாஷ் பதிவுகளும், தமிழ் மணத்தில் பிரபங்களில் பதிவும் எனக்கு மிகவும் பிடித்தவை.

இவரை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாமானு தெரியலை... இருந்தாலும் இவருடைய வலைப்பதிவை நான் தொடர்ந்து படிக்கிறேன். அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என்.சொக்கன்
வலையில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது சொக்கனின் எழுத்துக்கள். Blog - Digital Diary போல பயன்படுத்துபவர். அவருடைய அனுபவங்களை அவர் அழகாக சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருடைய எழுத்தில் கொஞ்சம் கூட போலித்தனம் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய ஒரு பதிவைப் படித்தாலும் தொடர்ந்து அத்தனைப் பதிவுகளையும் படிக்க வைக்கும் எழுத்துக்களைப் பார்க்க முடியும்.