தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, December 31, 2006

நன்றி சொல்ல உனக்கு - வார்த்தையில்லை எனக்கு!

2006 - எனக்கு மிகுந்த வருத்தமும், அதைவிட அதிக சந்தோஷத்தையும் கொடுத்த ஆண்டு...

முதல் மாதத்திலே அமெரிக்க விசா கிடைத்தது. கிடைத்த ஒரு மாதத்தில் நியு ஜெர்ஸியில் வந்து இறங்கினேன். இன்னும் கொஞ்ச நாள் இந்தியாவிலிருக்கவே விரும்பினாலும் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாததால் உடனே ஒத்துக்கொண்டு வந்தேன். இதில் மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால் ஆன்சைட் கிடைக்கவில்லை என்றால் திறமையில்லாதவன் என்று இந்த துறையிலிருப்பவர்களே சொல்வதுதான்.

இங்கே வந்த பிறகு ஏன் வந்தோம் என்றே நினைத்தேன். ஒரு சமயத்தில் எங்கே பைத்தியம் பிடித்துவிடுமோ என்றிருந்த நிலையில் கிடைத்ததுதான் இந்த வலையுலக அறிமுகம். ஒன்றிரண்டு மாதங்களில், எழுத வேண்டுமென்ற ஆசையில் இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன்.

என்ன எழுதுவதென்று தெரியாமல் தட்டு தடுமாறி நான் கண்டதையெல்லாம் எழுதியதை தொடர்ந்து படிப்பவர்கள் அறிவார்கள். நான் எழுதிய ஒவ்வொரு பதிவும் யாராவது ஒருவர் கொடுத்த உற்சாகத்தால்தான். இதற்கு முன் பரிட்சையை தவிர எங்கும் எழுதாத நான் எழுத பழகிக்கொள்வது இங்குதான். எனக்கு எது எழுத தெரியும் என்று எனக்கு தெரியாது. பல்சுவை என்று ஒரு சிலர் சொல்வதற்கும் காரணம் அதுதான். மனதில் தோன்றுவதை எல்லாம் எழுதுவது தான்.

என்னடா பல்சுவைனு சொல்றானேனு ஒரு சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆமாம். அதற்காகத்தான் இந்த பதிவு. தெரியாதவங்க இங்க போய் பார்த்துக்கோங்க.

தோத்ததுக்கே நன்றி சொல்றவன் இன்னும் சொல்லலையேனு தப்பா நினைச்சுக்காதீங்க. சர்வேசன் அவர்கள் நடத்திய சர்வேயில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

எனக்கு சத்தியமா தெரியும் என்னைவிட இங்க நல்லா எழுதறவங்க நிறைய பேர் இருக்கீங்கனு. இது உங்களுக்கும் தெரியும். இது எனக்கு இன்னும் நல்லா எழுதனும்னு எல்லாரும் கொடுத்த ஒரு டானிக்கா நான் எடுத்துக்கறேன். அவ்வளவுதான்.

சர்வேசன் ஏதோ பரிசுனு சொன்னாரே! அது என்னனு சொல்லவேயில்லைனு நினைக்கறீங்களா? உங்ககிட்ட சொல்லாம போயிடுவனா. பரிசு இதுதான் - $100. இதை நம் அனைவரின் சார்பாகவும் உதவும் கரங்களுக்கு அனுப்ப மிகுந்த சந்தோஷத்துடன் ஒத்து கொண்டார். என் வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷமான நாளாகவே இதை உணருகிறேன். என் எழுத்து மூலம் ஒருவருக்கு உதவ முடிவதே எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.

என்னடா தட்டுங்கள் திறக்கப்படும்ல பிடிச்ச வரினு சொல்லி இதை போட்டுட்டு "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;" இங்க விளம்பரப்படுத்தறானேனு நினைக்காதீங்க. இது என்னுடைய சம்பாதியத்தில் நான் கொடுத்த பணமல்ல. ஆகவே இது தர்மமல்ல.

இதை மேலும் இங்கு தெரியப்படுத்துவதற்கான காரணம். இதை படித்த பிறகு யாருக்காவது புத்தாண்டு பரிசாக அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு உதவ நினைத்தால் இதோ லிங்... (ரொம்ப சுலபமா அனுப்பலாம்)

வேறு யாருக்காவது இதே போல் மற்ற நிறுவனங்களுக்கு ஆன்லைனில் பணம் அனுப்புவது தெரிந்தால் பின்னூட்டத்தில் லிங் கொடுக்கவும்.

உங்கள் அனைவருக்கும் என் நன்றி மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Friday, December 29, 2006

நெல்லிக்காய் ஒரு பார்வை - சாத்வீகன்

நமது நண்பர் சாத்வீகன், நான் எழுதிய நெல்லிக்காய் தொடர்கதையை பற்றிய ஒரு விமர்சனம் எழுதி எனக்கு அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (நட்சத்திர வாரத்தில் இதை வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். கதையை முடிக்கவியலாத காரணத்தால் அப்போது வெளியிட முடியவில்லை)

நெல்லிக்காய் ஒரு பார்வை சாத்வீகன்

தமிழ் வலையுலகில் தொடர்கதைகள் அதிகமில்லை. வெட்டிப்பயல் அவர்களின் நெல்லிக்காய் தொடர்ந்து வந்து பதினோரு வாரங்களை தாண்டியுள்ளது.

வெட்டி இக்கதை மூலம் பெருவாரியான வாசகர்களை ஈர்த்துள்ளார். அடுத்து என்ன என்று வாசகரை காக்க வைப்பது நல்ல எழுத்தாளர்களுக்கு மட்டுமே சாத்தியம். வெட்டி அதை சாதித்துள்ளார்.


நெல்லிக்காய் ஒரு வித்தியாசமான சராசரி வாசகர் அறியாத கதைக்களம்.
இந்த கதை கணிப்பொறி துறையில் பணியாற்றுபவர்களை கதை மாந்தர்களாக கொண்டுள்ளது. ஒரு நாயகன், ஒரு நாயகி அவர்களின் காதல். பொதுவான காதல் கதையின் இலக்கணத்தை மீறாத கதை. ஆவலை தூண்டுவது கதையின் பிண்ணனி.

கதைநாயகன் துவக்கத்தில் வேலை தேடுபவனாக தொடங்கி மேற்செல்லும் கதை, இத்துறையில் நுழையும் ஒருவனின் அனுபவத்தை சொல்வதாகவும் உள்ளது. வெட்டி ஏற்கனவே சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க எழுதியவர்.

கதையில் அந்த தொடரின் கூறுகள் அங்கங்கே எட்டி பார்க்க காணலாம். குழு விவாதம் பற்றிய ஒரு பகுதி அதிலொன்று. அதனை கதையின் போக்கோடு இணைத்து சென்றமை நன்று.

சமூக அக்கறையை அங்கங்கே தூவி செல்கிறார். பிச்சைக்காரர்களை பற்றி கவலைப்படுவதாகட்டும், ஹெல்மட் அணிவதைப்பற்றியாகட்டும், சாதியினால் தடைபடும் காதலை பற்றியதாகட்டும். சில இடங்களில் இது நன்றாக பொருந்துகிறது. சில இடங்களில் இடறுகிறது.

தொடரில் வர்ணனைகள் அதிகம் இல்லை. வாய்ப்புகள் பல இருந்தும் வெட்டி அவற்றை நழுவ விடுகிறார். வர்ணனைகளை அவர் கொள்ளாமைக்கு காரணங்கள் இருக்கின்றன. அது அவரது வாசகர்களை பற்றிய புரிதலாகவும் இருக்கலாம்.
வெட்டியின் வாசகர்களில் பெரும்பாலோர் கணித்துறை சார்ந்தவர்கள். வலையில் பதிபவர்கள், பதியாதவர்கள் அனைவரும் இதில் அடங்குவர். அவர்களை பெருமளவில் அடைய விரிவாக விளக்கி எழுதுவது தடையாக அவர் கருதியிருக்கலாம்.

வர்ணனைகளை விட்டாலும் அதனை உரையாடல்களில் ஈடு செய்திருக்கிறார். இயல்பான உரையாடல்கள். அதுவே அவரது வாசகர்களை அவரின் கதைப்போக்கோடு ஒன்றச்செய்கிறது. மெல்லிய காதல் உணர்வு கதை முழுதும் ஓடி கவனத்தை ஈர்த்து இறுதியில் முழுமை பெறுகிறது.

கதையென்பது துவக்கத்தில் எழுத்தாளனால் துவங்கப்பட்டு கடைசியில் அவனால் தானாகவே எழுதப்பெற்றுக் கொள்ளும் போது மேலும் அழகுபெறும். வெட்டி கதையை அவ்வாறு அனுமதிக்கவில்லை, கதை துவக்கத்திலிருந்து இறுதி வரை ஒரே நோக்கில் நகர்ந்து கடைசியில் அதை நிறைவும் செய்கிறது. வெட்டியின் வாசகர்கள் எதிர்பார்த்தது போல் முடித்தீர்கள் என்று இறுதியில் சொல்ல அதுவும் காரணமாகிறது. வெட்டி குஷியாக சென்று காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார்.

பெரிய தொடர் என்ற அளவில் இது வெட்டி அவர்களின் முதல் முயற்சி. வெற்றி பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஆனால் வெட்டி கதை எழுதலில் மேலும் சில பரிமாணங்களை தாண்டி வர வேண்டும். சில பரீட்சார்த்த முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும். அவரால் மேலும் சிறந்த முறையில் கதை சொல்ல முடியும். அது வலைப்பதியாதவர்களான அவரது வாசகர்களை மேலும் ஈர்த்து வலைப்பதிவுலகை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

(வெட்டி தமது கதை முடிந்த நிலையிலும் மேலும் ஓர் பகுதி இட இருக்கிறார். திரையில் கதை முடிந்த நிலையில் மேலும் ஐந்து நிமிட காட்சிகளை காட்டுவார்களே அது போல.. சராசரி சினிமா ரசிகனை போல தமது வாசகர்கள் வெளியேற மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு.)

கடைசி பகுதியை வெளியிட்ட பிறகு அவரிடமிருந்து வந்த விமர்சனம்...

தமிழுக்காக அவ்வைக்கு அதியமான் தந்தது ஒரு நெல்லி...

இன்று தமிழ் இணைய வாசகர்களுக்காக வெட்டிப்பயலார் அவர்கள் தந்தது ஒரு நெல்லி..

கதை சற்றே அங்கங்கே கசந்தாலும் முடிந்த பின் அடிநாக்கில் முற்றிலும் இனிக்கிறது.

நன்றி. வாழ்த்துக்கள்.

Thursday, December 28, 2006

நெல்லிக்காய் - 12 இறுதி பாகம்

அனைவரின் ஆசிகளுடன், வாழ்த்துக்களுடனும் சீரும் சிறப்புமாக அருண்-தீபாவின் திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வாரம் தீபாவின் வீட்டிலும், அவள்

உறவினர்கள் வீட்டிலும் பலமாக விருந்து நடைபெற்றது. அடுத்த வந்த வார இறுதியில் தம்பதிகள் இருவரும் அருணின் சித்தப்பா வீட்டில் ஏற்பாடு செய்த விருந்திற்கு சென்றிருந்தனர்.

அங்கே அவனுக்கு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் தங்கையும், பதினோராம் வகுப்பு படிக்கும் தம்பியும் இருந்தார்கள். காலை டிபன் முடிந்து அனைவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தனர். சித்தப்பா வெளியே செல்ல...

"அம்மா... நீ போய் சீக்கிரம் சமைமா. நாங்க அண்ணன்டயும், அண்ணிட்டயும் பேச வேண்டியது நிறைய இருக்கு" அருணின் தங்கை சுமதி.

"அப்படி என்ன பேச போறிங்க ரெண்டு பேரும்?"

"சாப்ட்வேர் கம்பெனில எப்படி வேலை செய்வாங்கனு கேட்டு தெரிஞ்சிக்க போறோம். அதெல்லாம் உனக்கு புரியாதுமா. நீ சீக்கிரம் போய் சமை.

இவனுக்கு இப்பவே பசிக்குதாம்" அருகிலிருக்கும் தம்பியை காட்டி சொன்னாள்.

"ஆமாமா. எனக்கு இப்பவே பசிக்குது. நீ சீக்கிரம் போய் சமைமா" தம்பி கௌதம்.

"சரிடா கண்ணு. அம்மா சீக்கிரம் ரெடி பண்ணிடறேன்" சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றாள் அருணின் சித்தி.

"அப்பாடா... அம்மா போயிட்டாங்க. இப்பதான் ஜாலியா பேச முடியும். அண்ணி நீங்க அண்ணனை முதல்ல எங்க பார்த்தீங்கனு ஞாபகம் இருக்கா?"

"அடிப்பாவி இதுக்கு தான் சித்திய உள்ள போக சொன்னியா?" வேகமாக கேட்டான் அருண்

"அண்ணா. நான் உங்கிட்ட கேக்கல. நீ சும்மா இரு. நீங்க சொல்லுங்க அண்ணி" ஆர்வமாக கேட்டாள் சுமதி

முகத்தில் வெட்கத்துடன் பேச ஆரம்பித்தாள் தீபா... "பெங்களூர்ல... சிவாஜி நகர்ல"

"பராவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கியே" செல்லமாக பேசினான் அருண்

"அப்படினா... நீங்க வேலைக்கு சேறதுக்கு முன்னாடியே பழக்கமா?" முன்பை விட ஆர்வமாக கேட்டாள் சுமதி

"பழக்கம் தான்.. ஆனா அது வேற மாதிரி" கொஞ்சம் ஸ்டைலாக பதில் சொன்னான் அருண்

"அண்ணா.. நீ பேசன அவ்வளவுதான். நான் அவுங்ககிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன்" கொஞ்சம் சீரியஸாக பேசினாள் சுமதி

"சரி. அப்ப நான் வெளிய போயிடுவா?"

"உனக்கும் கேள்வி வரும். அப்ப நீ பதில் சொன்னா போதும். ஓகேவா?"

"சரிம்மா..."

"நீங்க சொல்லுங்க அண்ணி. அண்ணன் அன்னைக்கு உங்ககிட்ட என்ன பேசினாரு?
தீபா நீ அழகா இல்லைனு நினைக்கிறேன். உன்னை எனக்கு பிடிக்கல. நான் உன்னை காதலிக்கல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கனு
சொன்னாரா?"

"யாரு உங்க அண்ணனா? கிழிஞ்சிது. நான் அங்க பாவமா இருந்த பசங்களுக்கு இட்லி வாங்கி கொடுத்தது பிடிக்காம இதெல்லாம் பண்ண கூடாதுனு

அப்பவே அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு"

"ஏய் நான் அதிகாரம் எல்லாம் பண்ணல. அது தப்புனு தான் சொன்னேன்" வேகமாக சொன்னான் அருண்

"எது தப்பு? பாவமா இருக்கற பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது தப்பா?" தீபாவிற்கு துணைக்கு நின்றாள் சுமதி

"சரி நான் பேசல. நீங்களே பேசுங்க. நான் அப்பறமா சொல்றேன்" சூழ்நிலை சரியில்லாததால் ஒதுங்கி கொண்டான் அருண்.

"அப்பறம் நீங்க அண்ணனை பத்தி என்ன நினைச்சீங்க அண்ணி"

"வேண்டாம்மா... அத சொன்னா இங்கயே பிரச்சனையாயிடும்"

"அண்ணி.. அண்ணன் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. அதுவும் அப்ப அவர் உங்களுக்கு தெரியாதவர் தானே. தாராளமா சொல்லுங்க"

"இப்படி அதிகாரம் பண்றானே. இவனுக்கு பொண்டாட்டியா வரவ பாவம்னு நினைச்சுக்கிட்டேன்"

"அப்பறம்"

"அப்பறம் என்ன மறுபடியும் குருப் டிஸ்கஷன்ல பார்த்தேன்"

"வாவ்!!! ரெண்டு பேரும் எதிர் அணிதானே"

"பின்ன... நான் கொடுத்த தலைப்பு வேண்டாம்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தனவுடனே எனக்கு கோபம் தாங்கலை. ஆனா எல்லார் பேரையும் நியாபகம் வெச்சி பேசனவுடனே கொஞ்சம் அசந்துட்டேன். மேல் மாடில கொஞ்சம் கொஞ்சம் இருக்கு அதனால தான் தலைகனம்னு

நினைச்சிக்கிட்டேன்"

"ஓ! சரி... அண்ணா இப்ப நீ சொல்லு... அண்ணி அதுல என்ன பேசினாங்க?"

"அதுவா... முதல்ல நான் இவளை எப்படியாவது தோக்க வைக்கணும்னு தான் தலைப்பையே மாத்தினேன். ஆனா இவ பேசாமலே இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி... பேசினா எப்படியும் சண்டை போட்டு ஜெயிக்கலாம்னு பார்த்தேன். ஆனா இவ பேசவே இல்லை. அதனால கடைசியா

முடிவுரை கொடுக்க சொன்னேன். அதுல எல்லாரும் அசர மாதிரி பேசினா"

"அப்பவே உனக்கு பிடிச்சி போச்சா?"

"அதெல்லாம் இல்லை... எப்ப புடிச்சிதுனு கரெக்டா சொல்ல தெரியாது"

"அண்ணா.. பொய் சொல்லாத. ஒழுங்க சொல்லு"

"நிஜமா. வேணும்னா உங்க அண்ணியையே கேட்டு பாரு"

"அண்ணி நீங்க சொல்லுங்க. அண்ணனை உங்களுக்கு எப்ப பிடிச்சிது?"

"அப்படி ஒரு இடத்தை சொல்ல முடியாது. நிறைய இடமிருக்கு..."

"அண்ணி கொஞ்சம் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்"

தீபா அருணை தர்ம சங்கடமாக பார்க்க... அவன் கண்களாலே சம்மதமளித்தான்...

"நான் போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே என்னை ராஜிக்கூட உக்கார வைச்சது, ராஜியையும் கார்த்தியும் சேத்து வெச்சது, ஒரு பொண்ண வண்டீல உக்கார வெச்சி ஓட்டறதுக்கு கூச்சப்பட்டது, எனக்கு அடிப்பட்டவுடனே கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டது. எங்க அம்மாவை எந்த வேலையும் செய்யவிடாம ஹாஸ்பிட்டல பாத்துக்கிட்டது. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்..." சொல்லிவிட்டு அருணை பார்த்து அவள் புன்னகைத்தாள்.
அருணும் சந்தோஷத்தில் வானில் பறந்து கொண்டிருந்தான்...

"அண்ணி நீங்க போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே வேற ஒருத்தவங்கள உங்க பக்கத்துல உட்கார சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வரல"

"எனக்கு கோபம் தான். முதல்ல பாதி நாள் நான் தப்பா தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். இவர்கிட்ட பேசவே கஷ்டமா இருக்கும். என்னடா எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கானேனு கடுப்பா இருக்கும்... ஆனா போக போக புரிஞ்சிக்க ஆரம்பிச்சவுடனே எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு"

"ஆமாம் எதுக்கு இப்படி விசாரிச்சிட்டு இருக்க? நீ எதாவது பண்றியா? காலேஜ்ல படிக்கும் போது இதெல்லாம் பண்ணக்கூடாது. தப்பு. புரியுதா? அண்ணனாக மாறி தங்கைக்கு அறிவுருத்தினான் அருண்

"அதெல்லாம் இல்லைனா. எங்க காலேஜ் மேகசின்ல போட ஒரு கதை எழுதலாம்னு பார்த்தேன். சரி உங்க கதையே இண்ட்ரஸ்டிங்கா இருக்கேனு கேட்டுக்கிட்டு இருந்தேன்"

"அடப்பாவமே! காலேஜ் மேகசின்ல எதெல்லாமா போடுவாங்க?" தீபாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது...

"அதெல்லாம் போடுவாங்க... அந்த மேகசின் எடிட்டர் எங்க சீனியர்தான். என்ன பார்த்து எப்பவும் வழிஞ்சிக்கிட்டே இருப்பாரு. அதனால நான் போய் கொடுத்தா கண்டிப்பா போட்ருவாரு. சரி கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?"

"என்ன வைக்கலாம்?" அருணும் தீபாவும் யோசித்து கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரம் பார்த்து அருணின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பேப்பர் போட்டலம் இருந்தது.

"அப்பா கைல என்ன பொட்டலம்? பகோடாவா?" ஆர்வமாக விசாரித்தான் கௌதம்

"வர வழியில ஒரு பாட்டி நெல்லிக்காய் வித்துட்டு போச்சு. சரி இந்த வெயில்ல வித்துட்டு போகுதேனு வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க எல்லாம் சாப்பிடுங்க" வீட்டு மருமகளிடம் கொடுத்தார் சித்தப்பா...

"ஐயோ! அப்பா நெல்லிக்காய் கசுக்கும்பா. அதுக்கு பதிலா பகோடா வாங்கிட்டு வந்துருக்கலாம்" முகத்தில் வெறுப்புடன் சொன்னான் கௌதம்.

"நெல்லிக்காய் தாம்பா உடம்புக்கு நல்லது. அதுல விட்டமின் C இருக்கு.
அதுவுமில்லாம நெல்லிக்காய் சாப்பிடும் போதுதான் கசக்கும் சாப்பிட்டு முடிச்சு தண்ணி குடிச்சா அமிர்தம் போல இனிக்கும்"

இதை கேட்டவுடன் அருண், தீபா, சுமதி மூவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்து கொண்டனர்...

Monday, December 25, 2006

நட்சத்திர நன்றி!!!

என்னடா நேத்து சொல்ல வேண்டியதை இன்னைக்கு சொல்றானேனு தப்பா நினைச்சுக்காதீங்க. சுத்தி இருக்குற மக்கள்ட எல்லாம் நல்லா பேசியே ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங். அதனால இந்த வீக் எண்ட் அதிகமா கம்ப்யூட்டர் முன்னாடி உட்காராம அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோடையும், ரூம் மெட் கூடயும் ரொம்ப நாளைக்கு அப்பறம் உக்கார்ந்து ஜாலியா பேசிக்கிட்டே இருந்துட்டேன். (வேற என்ன வெட்டிக்கதை தான் ;))

பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து கலக்கன இடத்துல நமக்கு ஒரு வாரம் இடம்னு சொல்லும் போது சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். ஆனா திடீர்னு ஒரு பயம் வந்துடுச்சு. இலக்கியமா எதுவும் நமக்கு எழுத தெரியாது. சமுதாயத்துல நடக்கிற தப்புக்கு என்ன காரணம்னு ஆராய்ச்சி பண்ணி அறிவுப்பூர்வமா எழுதவும் நமக்கு தெரியாது. கவிதை தெரியாது. அரசியல் தெரியாது. பொருளாதாரம் தெரியாது.

இப்படி எதுவும் தெரியாம எப்படி ஒரு வாரத்தை சமாளிக்கறதுனு ரொம்ப யோசிக்க வேண்டியதா போயிடுச்சு. நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.

இன்னும் எழுத நினைத்த சில முக்கியமான கட்டுரைகளும், நகைச்சுவை பகுதிகளும் வேலை பளுவினால் முடியாமல் போனது. இன்னும் ஒரு சில பதிவுகளில் இருக்கும் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் போனது. அவை அனைத்தையும் வரும் வாரங்களில் சரி செய்துவிடுகிறேன். (கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - இனி தொடர்ந்து வரும்)

ஒரு வாரம் முழுதும் என்னால் தொடர்ந்து உற்சாகமாக எதையாவது எழுத முடிந்ததென்றால் அதற்கு முழு காரணமும் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் நன்றி. மேலும் எனக்கு இந்த வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நன்றிகள் பல.

Friday, December 22, 2006

கண்ணன் - கர்ணன்

நான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது.

அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெச்சி ஒரு சில தவறான முடிவு எடுத்தடறாங்க. அதுல என்னை ரொம்ப பாதிச்சது கர்ணன் படம்தான். கர்ணனை கண்ணன் ஏமாற்றி கொன்னுட்டார்னு நம்ம ஆளுங்களுக்கு கண்ணனை பிடிக்காம போயிடுது. இதுல கொடுமை என்னன்ன அவரை பிராடு, ஏமாற்றுக்காரர்னு நிறைய பேர் சொல்றத கேட்டுருக்கேன்.

நம்ம சினிமால சிவாஜி நடிச்சதால கர்ணனை அநியாயத்திற்கு நல்லவனா காண்பிச்சிருப்பாங்க. அதப்பத்தி பேசி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் பேச போவது கர்ணன் மரண தருவாயில் இருக்கும் போது கண்ணன் அவனுடைய தானத்தை எல்லாம் யாசகமாக ஏமாற்றி வாங்கி அவனை கொன்றுவிட்டான் என்ற குற்றச்சாட்டை பற்றியே பேச போகிறேன்.

கர்ணனின் மரணத்தை பற்றி வியாச பாரதத்தில் எவ்வாறு உள்ளது? அங்கே கண்ணன் வந்து கர்ணனுடைய தானத்தை யாசகமாக வாங்கினானா என்றால் இல்லை. போரில் கர்ணனின் தலையை கொய்தே அர்ச்சுணன் அவனை கொல்கிறான். அதுவும் கர்ணன் நிராயுதபாணியாக அந்த நேரத்தில் இல்லை. அவன் பிரம்மாஸ்திர பிரயோகத்தை யோசிக்க அந்த நேரத்தில் அவன் வாங்கிய சாபத்தால் அது அவனுக்கு மறக்கிறது. அந்த சமயத்திலே அவன் பார்த்தனால் கொல்லப்படுகிறான்.

சரி, இதையும் விட்டுவிடுவோம்... நாம் தமிழில் பார்த்த கர்ணன் படத்திற்கே வருவோம். கர்ணன் அம்புகளால் துளைக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். அங்கே அவன் செய்த புண்ணியம் அவனைக் காக்கிறது. இப்போழுது உங்களை பொறுத்தவரை கண்ணன் கர்ணனை ஏமாற்றி கொள்கிறான் இல்லையா???

அங்கே நடப்பதை நன்றாக பார்த்தால் உங்களுக்கே கண்ணனின் உயர்ந்த குணம் புரியும். கர்ணன் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகிறது. அங்கே கண்ணன் நினைத்திருந்தால் ஒரு அந்தணனையோ, அல்லது தேவேந்திரனை மீண்டும் வேடமிட்டு வர சொல்லியிருக்கலாம். யார் கேட்டாலும் கர்ணன் தானமளிக்கப்போகிறான். ஆனால் கர்ணனுக்கு புகழ் சேர்கக கண்ணனே வந்து யாசகம் வாங்குகிறான்.



மானிடருக்கும், தேவேந்திரனுக்கும் தானமளித்து பெரும் புகழ் பெற்ற கர்ணன் பரமாத்மாவிற்கே தானமளிக்க வழி செய்கிறான். அதுவும் கண்ணனாக சென்றிருந்தால் தாராளமாக கர்ணன் கொடுத்துவிடுவான். கண்ணனே நாராயணனின் அவதாரம் என்பது கர்ணனுக்கும் தெரியும்.

பரமாத்மா என்று அறிந்ததாலே அவ்வளவு எளிதாக அவன் தான் செய்த புண்ணியமனைத்தும் தானமளித்தான் என்று சுலபமாக அந்த வள்ளலை அனைவரும் குறைத்து மதிப்பிடக்கூடும். அதனாலே கண்ணன் ஏழை அந்தனனாக உருவெடுத்து போர்களத்தில் கர்ணன் முன் செல்கிறான். அதற்கு பிறகு அவனுக்கு பரமாத்வாவின் தரிசனம் கிடைக்கிறது. கிருஷ்ணனாக இருந்து அவதாரத்தை விட்டு வந்து நாராயணனாக மாறி தரிசனம் தந்து மீண்டும் கிருஷ்ணனாக மாறுகிறான். ரிஷிகளும், யோகிகளும், இந்திராதி தேவர்களும் எந்த தரிசனத்திற்காக அன்றாடம் ஏங்குகிறார்களோ அதை கர்ணனுக்கு அருளுகிறான்.

அர்ச்சுணனிற்கோ, தர்மனிற்கோக்கூட இந்த புகழ் கிடைக்கவில்லை. அவர்கள் மரணத்தின் போது நாராயணன் அவர்களுக்கு காட்சியளித்து மோட்சமளிக்கவில்லை. அதனால் கர்ணனுக்கு கண்ணன் அநியாயத்தை இழைத்தான் என்று சொல்வது நம் அறியாமையே!!!

பாண்டவர்கள் தவறே செய்யாதவர்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்த தவறிற்கு தான் அவர்கள் 12 ஆண்டுகள் வன வாசமும் ஒரு வருடம் அஞ்ஞானவாசமும் மேற்கொண்டனர். முதலில் மனதிலிருக்கும் இரும்பு திரையை விலக்கி பாருங்கள்.



மேலும் கண்ணன் நினைத்திருந்தால் போரில் ஆயுதமேந்தியிருக்கலாம். சுதர்சன சக்கரத்தை எதிர்க்க உலகில் எதுவும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அவன் போரில் ஆயுதமேந்தாமல் வேறும் சாரதியாகவே இருந்தான். ஒரு சமயத்தில் ஆயுதமுமெந்தினான். அதுவும் பக்தருக்காகவே.

போரின் இரண்டாம் நாள் அர்ச்சுணனின் சினத்தை கட்டுப்படுத்த முடியாமல் கௌரவர்கள் அஞ்சினர். பீஷ்மர், துரோனர் இருவருடைய ரதங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. போரின் முடிவில் கௌரவர்களுக்கு பெருத்த நஷ்டம். அன்று இரவு துரியோதனன் பிதாமகரை சந்தித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து, பாட்டனார் மேல் சந்தேகத்துடனும் பேசினான்.

அதை கண்டு கொதித்த பிதாமகர், போரில் கண்ணன் ஆயுதமேந்தாதவரை நம்மை கண்டிப்பாக அவர்களால் வெல்ல முடியாது என்று சொல்லவே அமைதியாகிறான் துரியோதனன். பிதாமகரின் வாக்கை காக்க தன் வாக்கை மீறி போரின் மூன்றாம் நாள் ஆயுதமேந்துகிறான் கண்ணன். அதையும் மற்றவர் உணராவண்ணம் பார்த்தன் மேல் கோபப்பட்டு பிதாமகரை தாக்குவது போல் நடிக்கிறான்.

மேலும் போரில் பழியை அவனே ஏற்கிறான். காந்தாரியின் சாபத்தையும் ஏற்று அவன் குலமே அழியும் பாவத்தையும் ஏற்கிறான். இப்படி பக்தருக்காகவே வாழ்ந்து பழியையும் சாபத்தையும் ஏற்கும் கண்ணனுக்கு போரினால் குண்டுமணி அளவு பலனுமில்லை. நியாயத்தை நிலைநாட்டுவதை தவிர...

Thursday, December 21, 2006

பாஸ்டன் சந்திப்பு - பாபாவின் பார்வையில்

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்
----------------------------------------------

இந்த சந்திப்பு இலக்கியத் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி விடக்கூடாது என்பதற்காக, பதிவை இலக்கியத்தரமாக்கும் முயற்சியாக இரு கவிதைகள்:

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் - எஸ்.பாபு : ஈ - தமிழ் | பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சந்திப்புகள்


பத்மா அரவிந்த் பாஸ்டன் வரப்போவதாக தெரிய வந்ததுதான் இந்த சந்திப்புக்கு கால்கோள். பத்மா அரவிந்தை சந்திக்க பலரும் பிரியப்படவே, அதையே பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பாக ஆக்கலாம் என்னும் எண்ணம் எழுந்தது.

பத்மா வரப்போகிறார் என்று அறிந்தவுடன் இந்த வார நட்சத்திரம் (வெட்டிப்பயல்) பாலாஜியை தொடர்பு கொண்டு, நத்தார் தினத்தை முன்னிட்டு வரவேற்பு கொடுக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். அங்கிருந்து வி.பி. பாலாஜி மற்ற ஒருங்கிணைப்புகளை முழுவதுமாக கவனித்துக் கொண்டார். நியூ ஜெர்சியில் இருந்து கண்ணபிரான் ரவி ஷங்கரை வரவழைத்தார். சந்திப்பு களை கட்டியது.


யாரெல்லாம் வந்திருந்தார்கள்?

1. தேன் துளி பத்மா அரவிந்த்

2. மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர்

3. வெயிலில் மழை ஜி

4. வெட்டிப்பயல் பாலாஜி

5. பாடும் நிலா பாலு! சுந்தர்

6. Navan's weblog நவன்

7. பார்வை மெய்யப்பன்

8. வேல்முருகன்

9. 'பிரக்ஞை' ரவி ஷங்கர்

10. அரை பிளேடு


கடைசி நேரத்தில் வர இயலாதவர்கள்:

1. Blogger: User Profile: சனியன்

2. வெற்றியின் பக்கம் வெற்றி


ஆத்திகம் எஸ்கே, செல்வன், சிகாகோவில் இருந்து தேன் சிறில் அலெக்ஸ், அட்லாண்டாவில் இருந்து சந்தோஷ்பக்கங்கள் சந்தோஷ் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துக்களைப் பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாக டானிக்காகவும் இருந்தது.


என்ன பேசினோம்?

மதியம் 1 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், பின்னிரவு இரண்டு மணி வரை தொடர்ந்தது. இதனாலேயே பேசிய பலதும் மறந்து போகுமளவு ஆயிற்று. விளையாட்டுப் போட்டியை நேரடியாக, லைவ் ரிலேவாக ரசிப்பதுதான் சுகம். ஆடி முடித்து, முடிவு தெரிந்தபிறகு ஹைலைட்ஸ் பார்ப்பது பிடிக்கும் என்றாலும், ஆட்டத்தை, இருக்கை நுனியில் அமர்ந்து, நகம் பிய்த்துக் கொண்டு, ரீப்ளே கடுப்பாகி சுவைப்பது போல் வராது. வித்தியாசமான பந்துவீச்சுகளும், முக்கிய திருப்பங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடுவதில்தான் வல்லுநர் பார்வையே அடங்கியிருக்கிறது.

எனக்கு ஆரம்பத்தில் பேசின விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும் எனபதற்கேற்ப துவக்கத்தில் பிரக்ஞை ரவி பகிர்ந்த இரு கட்டுரைகளை சொல்லலாம்.

சோமாலியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுகிறார்கள். அன்னிய தேசம்; புரியாத மொழி. தங்கள் மொழி பேசுபவர்கள் மெயிண் (Maine) மாகாணத்தின் கிராமமொன்றில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு படையெடுக்கிறார்கள். ஏற்கனவே அங்கு வசிப்பவர்களும் சோமாலியர்கள்தாம் என்றாலும், அவர்கள் வேறொரு இனம். அவர்களை அடக்கியாண்ட இனத்தை சேர்ந்த அகதிகள் இப்போது தங்கள் மொழி பேசுபவர் அருகாமையை நாடி அந்த இடத்திற்கு அடைக்கலம் கோருகிறார்கள்.

ஏற்கனவே தங்களை அடக்கியாண்டவர்களுடன் என்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்று ஒரு சாரார் கோபம் கொள்கிறார்கள். 'இவர்கள் அடிமைகளாக இருக்க வாய்க்கப்பட்டவர்கள்தானே... இப்படிப்பட்டவர்கள் இன்றைய சூழ்நிலையிலும் மேலோர் ஆகிய நமக்கு உதவ வேண்டும்' என்று காரசாரமான மாற்றுக் கருத்துடன் இன்னொரு சாரார்.

சமகாலப் பிரச்சினைகளுக்கு இது ஒரு தேர்ந்த ஒப்புமையாக இருக்கும் என்பதை நான் இங்கு எழுதியதை விட இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக விளக்கினார்.

பேச்சு சுவாரசியத்தில் அறிவார்ந்த முடிவெடுக்கும் திறனுக்கு திரும்பினோம். Rationale என்னும் பதமே கேள்விக்குறியது. வாழ்க்கையே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக artificial intelligence வல்லுநரும் அறிபுனை எழுத்தாளருமான எம்.ஐ.டி. பேராசிரியர் கருதுகிறார்.

'தண்ணீர் மேலே விழுந்தால் குடை பிடிக்க வேண்டுமா?' என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது ரோபோ.

'ஆம்'

'மழைக்கு சரி. ஆனால், காலையில் நீங்களே பூத்துவாலைக்கடியில் போய் நிற்கிறீர்களே! அப்போதும் நான் குடை பிடிக்கத்தானே வேண்டும்?' மீண்டும் ரோபோவின் வினயமான லாஜிக்கலான கேள்வி.

சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தருவதற்கு முதியோரை விட இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. கிட்னி மாற்றினாலும், அறுவை சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்பு (இளமையை விடக்) குறைவு; மேலும் வாழ்ந்து முடித்தவர்கள் என்று rational-ஆக வயதானோரை தீர்த்துக் கட்டலாமா என்று விவாதம் சென்றது.


வலைப்பதிவுகள்

பெரும்பாலான பேச்சு இதை சுற்றியே அமைந்தது. பிடித்த வலைப்பதிவுகள் எது? ஏன் பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை?

எப்பொழுது படிப்பீர்கள்? எத்தனை நேரம் செலவிடுவீர்கள்? நண்பர் எழுதினால் படித்தே தீருவீர்களா? எப்படி 'அதிகம் பார்வையிடப்பட்டவை' ஆவது? எவ்வாறு வாசகர் பரிந்துரை நட்சத்திரங்களை ஏற்றுவது? பூங்கா, கில்லி பரிந்துரைகள் எவ்வாறு இருக்கிறது? புதிய பதிவர்களுக்கு உதவி எவ்வாறு கிடைக்கிறது?

வெளிப்படையாக எழுதுதல் அவசியமா? சாத்தியமா? வலைப்பதிவை எவ்வாறு மதிப்பிடுவது? எது சிறந்த பதிவாகக் கருதப்படும்? பார்வையாளர் எண்ணிக்கை முக்கியமா? பின்னூட்டங்களுக்கு மயங்கலாமா?

பதிவுகளில் என்ன எழுதுவது என்பது குறித்து எவருக்கும் சந்தேகங்கள் இல்லை.


பத்மா அரவிந்த்

சனி மாலையின் நட்சத்திர விருந்தினரான பத்மா மிகக் குறைவாகவே பேசினார். நல்ல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், சிறப்பான மேடைப் பேச்சாளராக இருக்க வேண்டாம் என்பது போல், அவ்வப்போது சன்னமான குரலில் எண்ணங்களை ஓடவிட்டார்.

கேம்பஸ் இண்டர்வ்யூ நேர்காணலில் நடக்கும் க்ரூப் டிஸ்கசன் போன்ற அடிதடி சூழலில், கவர்ச்சிகரமான தலைப்புகளும், புரட்சிகரமான தடாலடிகளும் மேலெழுந்தது. இன்னும் கொஞ்சம் பத்மாவை கேள்வி கேட்டு, அனைவரின் வினாக்களும் பதிலளிக்குமாறு அமைத்திருக்கலாம்.


பிரக்ஞை ரவி

தேர்ந்த சினிமா விமர்சகர்; மானுடவியலாளர் என்பதற்கு ஒப்ப, பல இடங்களில் விவாதங்களை ஒழுங்குப்படுத்தினார். பெண் வலைப்பதிவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். அமெரிக்க இதழியலில் வெளிவரும் சினிமா விமர்சனங்களின் கூறுகளை சுவையாக விளக்கினார்.

'எந்த ஒரு ஊடகமுமே ஆரம்பத்தில் தரத்தை கொண்டிருப்பதில்லை; உச்ச நிலையையும் எளிதில் அடைவதில்லை' என்னும் கருத்து வலைப்பதிவுகளில் நிலவும் க்வாலிடி குற்றத்திற்கு சிறப்பான சமாதானமாக இருந்தது.


கண்ணபிரான் ரவி கேயாரெஸ்

விளையாட்டாக சென்ற தருக்கங்களையும் கிண்டல்களையும் பல இடங்களில் நேர்படுத்தினார். திடீரென்று உணர்ச்சிவேகமாகப் போய்விடும் தருணங்களில் ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையால் இயல்பாக்கினார்.

  • 'பதிவரின் வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்ன?';
  • 'பாலியல் குறித்த கட்டுரைகள், புனைவுகள் ஏன் மிக அரிதாகவே வலைப்பதிவுகளில் வெளியாகிறது?'
  • 'ஆன்மிகம் என்றால் என்ன? ஏன் எல்லோரும் ஆன்மிகத்தை நாட வேண்டும்?'

    என்று பல சேரியமான வித்துக்களைத் தூவி உரையாடலை உற்சாகமாக்கினார்.


    மற்றவர்கள்

    'வெயிலில் மழை' ஜி ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். 'வெட்டிப்பயல்' பாலாஜி தன் கருத்துக்களை தெளிவாக முன்வைத்து ஜோராக உரையாடினார். கொஞ்சம் தாமதமாக வந்ததாலோ என்னவோ, நைட் வாட்ச்மேன் போன்று ஒரமாக நின்று கொண்டே 'பாடும் நிலா பாலு' சுந்தர் அமைதி காத்தார். அதிகம் வலைப்பதியாததால் ஒவர் ஹெட் ட்ரான்ஸ்மிஷன் ஆன சில நிகழ்வுகளை விழிப்புடன் நவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    'பார்வை' மெய்யப்பன் இன்னும் பல இடங்களில் தன் விரிவான வாசிப்பையும் பரந்துபட்ட அவதானிப்புகளையும் முன்வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். சபாநாயகராக வேல்முருகன் அதிகம் அறியாத தகவல்களை முன்வைத்து தன் கருத்துக்களை காரசாரமாக விவாதித்து சந்திப்புக்கு உரமூட்டினார். அரை பிளேடு பல மறுமொழிகளுடன் தருக்கங்களுக்கு பொருள் கூட்டினார்.


    கேட்க மறந்த கேள்விகள்

    ஏன் வலைப்பதிகிறோம்? எப்படி பதிவுகளை உருவாக்குகிறோம்? பதிவினால் என்ன சாத்தியாமாகும் என்று நம்புகிறோம்? வலைப்பதிவதால் என்ன கிடைக்கிறது? தொடக்கத்தில் கிட்டும் என்று நினைத்ததற்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள தூரம் என்ன? இன்றைய நிலையில் ஏன் தொடர்கிறோம்?


    அடுத்த சந்திப்புகளில் கருத்தில் கொள்ள சில ஆலோசனைகள்

    விவாதங்களை மூன்றாக பிரிக்கலாம். முதல் பகுதியில் அனைவரும் பங்கு கொள்ள அவசியம் வாய்ப்பு தரப்படும். கலந்துகொள்பவர்களின் கேள்விக்கு அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிர வேண்டும். ஒரு பதிவர் குறைந்தது ஒரு கேள்வியாவது கேட்க வேண்டும். ஒரு கேள்விக்காவது முதல் ஆளாக பதில் தர வேண்டும். ஆம்/இல்லை போன்று இல்லாமல் பதில்கள் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இரண்டாவது பகுதியாக வலைப்பதிவு சுவாரசியங்கள்: என்னுடைய பதிவில் வந்த ரசமான பின்னூட்டம், அதிக மறுமொழிகள் பெறுவது, வார்ப்புரு மாற்றுவது, மறுமொழி பெறுவது போன்ற அவசியமான துப்புகள். சந்தேக விளக்கங்கள். பல காலமாக எழுதித் தள்ளுபவரின் அனுபவ ஆலோசனைகள்.

    மூன்றாவதாக இலக்கியம், அரசியல், நாட்டுநடப்பு குறித்த விவாதங்கள்: கடந்த வருடத்தில் எந்தப் புத்தகம் முக்கியமானது? ரெஹ்மான் தமிழுக்கு துரோகம் இழைக்கிறாரா? ஈழம் குறித்து என்ன செய்கைகள் செய்யலாம்? எவ்வாறு நமது தொண்டு ஆர்வங்களை ஒருங்கிணைத்து பலப்படுத்தலாம்?


    கடைசியாக...

    என் மனைவிக்கு நன்றி.

    எங்களின் ஆழ்ந்த வலைப்பதிவர் வாக்குவாதத்தின் நடுவே 'அடுத்து நான் என்னப்பா செய்யலாம்?' என்று குதித்த குழந்தையை மேய்த்தது; சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது; சந்திப்புக்கு உறுதுணையாக நின்று, உவகையுடன் செயல்பட்டது. நன்றிகள் பல!


    அடுத்து...

    விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.

    - பாலாஜி
    பாஸ்டன்
  • Tuesday, December 19, 2006

    புது வெள்ளம்!!!

    1904ஆம் ஆண்டு நாசிக் நகரில் ப்ளேக் நோய் தாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலமாயினர். உயிருக்கு பயந்து ஊரை விட்டு பலர் காலி செய்தனர். ப்ளேக் நோயால் இறந்தவர்களை தொடவே அவர்கள் உறவினர்களும் அஞ்சினர். அந்த நிலையில் ஊரில் பெருவணிகனாக இருந்த 25 வயதே நிரம்பிய ராகுல் சின்ஹா என்பவர் களமிறங்கி இறந்தவர்களை தன் முதுகில் சுமந்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்றார். இதை பார்த்து அவருடைய நண்பர்களும் அவருக்கு உதவினர்.

    1909ல் 9 வயதில் திருமணம் செய்து, கணவனை இழந்த, தன் சகோதரியின் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்து புரட்சியை ஏற்படுத்தினார்.

    நாசிக் நகரின் சிறப்பு மாஜிஸ்ட்ரேட்,நகர வங்கி, மத தேவஸ்தான அறக்கட்டளை தலைவர் போன்ற 29 துறைகளுக்கு தலைவராக பணியாற்றிய அவர் காந்திஜியின் வழி சேர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து பதவிகளையும் தூக்கியெறிந்தார்.

    ஒரு பவுன் 10 ரூபாய் பெறாத அந்த காலத்தில் வருடத்திற்கு 20,000 ஈட்டும் குடும்ப தொழிலை விட்டு நாட்டு விடுதலையில் பங்கு கொண்டார். நாசிக் நகரில் ஆங்கிலேயரால் முதன் முதலில் 144ல் கைதி செய்யப்பட்டார். அதன் பிறகு காந்திஜியின் அறைகூவலை ஏற்று அன்றிலிருந்து அவர் கதராடையையே உடுத்த ஆரம்பித்தார். அவரது குடும்பத்தினறையும் அவ்வாறே செயல்பட வைத்தார்.

    கள்ளுக்கடை மறியலை காந்திஜி துவங்குவதற்கு காரணமே இவரின் மனைவியும், தங்கையும் தான். கள்ளுக்கடை மறியலையும் தானே முன்னின்று நடத்தினார். மேலும் கள் உற்பத்திக்காக தன் நிலத்தில் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட மரத்தை வெட்டி வீழ்த்தினார்.

    மகாராஷ்ட்ரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் 4 ஆண்டுகள் தலைமை ஏற்று நடத்தினார். இடஒதுக்கிட்டீன் தேவையை முதன்முதலில் பறை சாற்றியவரும் இவரே. மகாராஷ்ட்டிரத்தில் நிலவிய தீண்டாமையை ஒழிக்க இவர் போராடிய அளவிற்கு யாருமே இந்தியாவில் போராடியதாக தெரியவில்லை.

    இவர் கட்சி தலைமை பதவி வகித்திருந்தாலும் ஆட்சியில் அமர முற்பட்டதில்லை. இவர் விருப்பப்பட்டிருந்தால் எளிதாக முதலமைச்சராகியிருக்கலாம். ஆனால் பதவியை இவர் விரும்பவில்லை. செல்வ சீமானான இவருக்கு பணத்திலும் விருப்பமில்லை. பிற்காலத்தில் காந்திஜியின் பாதையையே தவறென்று கடுமையாக சாடினார். புகழுக்கு ஆசைப்பட்டிருந்தால் காந்திஜிக்கு ஜால்ரா போட்டு மென்மேலும் புகழடைந்திருக்கலாம். ஆனால் இவருக்கு பணம், பெயர், புகழ் எதிலும் ஆசையில்லை. போராட்டமே இவர் வாழ்க்கையாக இருந்தது.

    எந்த மனிதனும் மற்றவனுக்கு குறைந்தவனில்லை என்று உரக்க கூவினார். மனிதனே மனிதனை அடிமைப்படுத்துவதை எதிர்த்து போராடினார். இதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் அடித்து நொறுக்கி அவனுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கினார். அது விநாயகர் சிலையாக இருந்தாலும் சரி இராமர் திருவிக்ரகமாக இருந்தாலும் சரி.

    "நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
    நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?"

    இதை புரிந்தவர்களுக்கு அவரின் செயல் எந்த விதத்திலும் தவறாக படாது. இந்து மதத்தில் புரையோடிக்கிடந்த தவறுகள் இவரால் அடித்து நொறுக்கி சீர்பட்டன. தேங்கி கிடந்த குட்டையில் புதுவெள்ளம் பாய்ந்து அதை தூய்மை செய்தது.
    கோவிலுக்கு வெளியே நின்று வணங்கியவர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட வழி பிறந்தது.

    எரிமலைகள் வெடிக்கும் போது ஒரு சில ரோஜாக்களும் கருகுவதை போல இவரின் போராட்டத்தால் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவருடைய ஒரு சில கொள்கைகளில் தவறிருக்கலாம். அதை இவரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். நானும் உங்களை போல ஒரு சாதாரண மனிதன்தான் என்று. இவரின் போராட்டங்கள் எதுவும் அவருடைய சுயநலத்திற்காக செய்யப்படவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். கடைசி வரை மக்களின் உண்மையான விடுதலைக்காகவும், சுயமரியாதைக்காகவுமே போராடினார்.

    சரி இப்போது சொல்லுங்கள் இந்த நபர் நல்லவரா? கெட்டவரா?

    நண்பர்களே ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டது. மேலே நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் ஒருமுறை படிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
    தவறான சொல் - சரியான சொல்
    நாசிக் - ஈரோடு
    ராகுல் சின்ஹா - ஈ.வே.ராமசாமி (@) பெரியார்
    மகாராஷ்ட்ரா - தமிழ்நாடு

    எதுக்கு இவன் பேரை மாத்தி போட்டானு பாக்கறீங்களா? ஒரு சிலர் இந்த பேரை கேட்டவுடனே மனசுக்கு முன்னாடி ஒரு இரும்பு திரையை போட்டுக்கறீங்க. வாழ்க்கை முழுதும் சுயநலம் பாராமல் போராடிய ஒருவனை வெறும் கடவுள் மறுப்பு கொள்கைகளில் அடைத்து வைக்க முடியாது.
    வரும் 24ஆம் தேதி அவரின் மறைந்த நாளை முன்னிட்டு இந்த பதிவை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.

    பின்குறிப்பு:
    இந்த பதிவிற்கு சாதி பெயர்களுடனோ, பெரியாரை தரக்குறைவாக தாக்கி வரும் பின்னூட்டங்களோ வெளியிடப்படமாட்டாது.

    நெல்லிக்காய் - 11

    தீபாவிடம் கோபமாக பேசியதால் கொஞ்சம் வருத்தமும், கார்த்திக்கிற்கு ராஜியால் ஏற்பட்ட காயத்தால் கோபமும் கொண்ட ஒரு மன நிலையிலிருந்தான் அருண்.

    ஒரு மணி நேரத்திற்கு பின்பு தீபாவிற்கு போன் செய்தான்.

    "ஹலோ. சொல்லு எப்ப வர?"

    "ஏன் கேக்கற?"

    "கேட்டா ஒழுங்கா பதில் சொல்லு"

    "இவர் பெரிய இவரு. கேட்டா நாங்க உடனே சொல்லிடனும். என்ன தான் ஆட்டோ பிடிச்சி வர சொல்லிட்ட இல்லை. அப்பறம் நான் எப்ப வந்தா உனக்கு என்ன?"

    "இங்க பாரு மனுசன டென்ஷனாக்காத. இப்ப நீ சொல்லலனா நான் கட் பண்றேன்"

    "ஏய்! கட் பண்ணிடாத இரு. நான் காலைல ஒரு 5:30 மணிக்கா வருவேன். நீ எழுந்திரிச்சிடுவியா? உனக்கு கஷ்டமா இருந்தா நான் ஆட்டோலயே வந்துக்கறேன். அப்பறமா நாம மீட் பண்ணலாம்"

    "அதெல்லாம் எழுந்திரிச்சிடுவேன். சரி இது என்ன ஒரு வாரம் முன்னாடியே வர?"

    "வீட்ல பயங்கர போர். அம்மாவும் காலைல ஸ்கூலுக்கு போயிடுவாங்க. வீட்ல தனியா இருக்க பிடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்பா இருந்தாரு. இப்ப தனியா இருக்கவே கஷ்டமா இருக்கு. அதான் இங்க இருக்குற டாக்டரை போய் பார்த்தேன். அவரு ப்ராப்ளம் இல்லை. நீங்க கிளம்பலாம்னு சொன்னாரு. அதான் உடனே புறப்பட்டு வரேன்"

    "சரி. நாளைக்கு காலைல மீட் பண்ணலாம்"

    "ஓகே. பை"

    போனை அணைத்தான்.

    சரியாக காலை 5:30 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்தான். அவள் பஸ் ஒரு பதினைந்து நிமிடம் கழித்தே வந்தது. அவனை பார்த்தவுடனே மிகவும் உற்சாகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்.

    "வந்து ரொம்ப நேரமாச்சா?"

    "இல்லை. இப்பதான். உன் செல்லுக்கு கூப்பிட்டேன். ரிங் போயிட்டே இருந்துச்சு"

    "ஓ! மறந்தே போயிட்டேன். ராத்திரி சைலண்ட் மோட்ல வெச்சிருந்தேன்"

    "சரி. போகலாமா?"

    "ஒரு காபி குடிச்சிட்டு போகலாமா?"

    "சரி வா"

    இருவரும் அருகிலிருக்கும் ஹோட்டலுக்கு சென்றனர்.பெரும்பாலும் அனைவரும் அங்கே காபியே குடித்து கொண்டிருந்தனர்.இருவரும் காபி ஆர்டர் செய்து 2 நிமிடத்தில் ஆவி பறக்க அவர்கள் முன் இருந்தது.

    "அருண், இந்த நேரத்தில நான் உன்னை வர சொன்னனே! உனக்கு வித்யாசமா தெரியலையா?"

    "ஆமாம் வித்யாசமாத்தான் தெரியுது. அதனால தான் வந்தேன்"

    "எனக்கு எப்படி சொல்றதுனே தெரியல" அருண் அவளை வித்யாசமாக பார்த்தான்

    "எங்கம்மா, நீயும் நானும் லவ் பண்றோமானு என்கிட்ட கேட்டாங்க?"

    "நீ என்ன சொன்ன?"

    "நான் அப்படியெல்லாம் எதுவும் இல்லைனு சொன்னேன்"

    "அத சொல்லத்தான் என்னைய இங்க வர சொன்னியா?"

    "இல்லை. நீங்க ரெண்டு பேரும் விரும்பினா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாங்க. எங்க அம்மாவுக்கு உன்னை எப்படி பிடிச்சுதுனே தெரியல"

    "ஏன்னா உங்க அம்மா நல்லவங்க அவுங்களுக்கு என்னை பிடிச்சியிருக்கு"

    "அப்ப என்னை கெட்டவனு சொல்றியா?"

    "அப்ப உனக்கு என்னைய பிடிக்கலையா?" அருண் இதை கேட்டதும் தீபாவால் பதில் சொல்லமுடியவில்லை. தயங்கியவாறே மெதுவாக கேட்டாள்

    "முதல்ல, உனக்கு என்னை பிடிச்சிருக்கா?"

    "பிடிச்சிருக்கு. ஆனா உனக்கு தான் என்னை பிடிக்கலையே"

    "யார் சொன்னா?"

    "நீ தான் உங்க அம்மாகிட்ட சொன்னியே"

    "ஆமாம் அவுங்க கேக்கும் போது எதுக்கு கேட்டாங்கனு தெரியல. உன்னை கேக்காம ஒத்துக்கவும் மனசில்லை. அப்பறம் நீ உங்க வீட்ல பேசி முதல்ல சம்மதம் வாங்கணும். அதனால நான் எதுவும் எங்க அம்மாகிட்ட சொல்லல"

    "அடிப்பாவி. அதுக்குள்ள இவ்வளவு விஷயமிருக்கா? நான் எங்க வீட்ல கேட்டு சம்மதம் வாங்கினாத்தான் லவ் பண்ணவே ஒத்துக்குவியா? இது அநியாயமா இல்லை?"

    "இங்க பாரு. கடைசியா உங்க வீட்ல ஒத்துகலனா உங்க அப்பா, அம்மாவை விட்டு நீ வரணும். அவுங்க மனசு கஷ்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிக்கணும். அதுக்கு பேசாம முதல் ஸ்டேஜ்லையே அவாய்ட் பண்ணிடலாமே. நான் உன் காதலை ஏத்துக்கலைனும், நீ என்னை காதலிக்கவே இல்லைனு நானும் நினைச்சிட்டு இருந்துக்கலாம்"

    "பெரிய வார்த்தையெல்லாம் பேசற. அப்பறம் உனக்கு நிஜமாலுமே என்னை பிடிச்சிருக்கா?"

    "எத்தனை தடவை இதையே கேப்ப?"

    "எத்தனை தடவை கேட்டாலும் சொல்லனும். புரியுதா? இப்பவே இப்படி பண்ணா நாளைக்கு கல்யாணத்துக்கப்பறம் நீ என்னை மதிக்கவே மாட்ட போலிருக்கே"

    "அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். இப்ப முதல்ல உங்க வீட்ல பேசி பர்மிஷன் வாங்கு. வா கிளம்பலாம். எல்லாம் நம்மையே ஒரு மாதிரி பாக்கறாங்க"

    "சரி வா"

    இருவரும் கிளம்பினர். வண்டியில் செல்லும் போது ராஜி வீட்டில் நடந்ததை சொல்லி கொண்டே வந்தான்...

    சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு...

    "என்ன கணேசன் பையனுக்கு இவ்வளவு சீக்கிரம் நிச்சயம் வைக்கறீங்க?"

    "என்னங்க பண்றது. லவ் பண்ணி தொலைச்சிட்டான். கட்டிக்கிட்டா இந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்குவனு சொல்றான். சரி இந்த "அலைபாயுதே" படத்த மாதிரி ஓடி போயி கட்டிக்காம நம்ம கால்ல விழுந்து கெஞ்சிட்டிருக்கனேனு ஒத்துக்கிட்டேன். பொண்ணும் நல்ல குடும்பத்து பொண்ணுதான்"

    "நம்ம சாதி மாதிரி தெரியலையே"

    "ஆமாம் நம்ம சாதி இல்லைதான். என்னங்க செய்ய? நாம கடன்ல இருக்கும் போது எந்த சாதிக்காரன் நம்ம வீட்டுக்கு வந்தானு கேக்கறான். அவன் கேட்டதும் நியாயமாத்தான் இருக்கு. அவன சுத்தி மலை மாதிரி அவன் ஃபிரெண்ட்ஸ் இருக்காங்களாம். இப்பவெல்லாம் சொந்தக்காரவங்களைவிட நண்பர்கள் தான் முக்கியமா போயிடறாங்க"

    "என்ன இருந்தாலும் சொந்த பந்தம் மாதிரி வருங்களா?"

    "சரிவிடுங்க. எல்லாத்தையும்விட நமக்கு அவன் தானே முக்கியம். அந்த பொண்ணும் நாங்க ஒத்துக்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொல்லிடுச்சி.
    இவ்ளோ நல்ல பசங்கள எதுக்கு பிரிச்சிக்கிட்டு? சந்தோஷமா இருக்கட்டுமே. நாளைக்கு நமக்கு கடைசி காலத்துல கஞ்சி ஊத்த போறது அந்த பொண்ணுதானே. சாதி சாதினு பார்த்து பண்ணி வெச்சி கடைசில நம்மல வீட்டுவிட்டு துரத்தற பொண்ணா வந்துட்டா என்ன பண்ண?"

    "அதுவும் சரிதான்"

    .........

    "சரி இப்பவாவது சொல்லு" அருண் கெஞ்சி கொண்டிருந்தான்.

    "என்ன?"

    "ஐ லவ் யூனு"

    "அதெல்லாம் முடியாது. கல்யாணத்துக்கு அப்பறம் தான்"

    "அடிப்பாவி. நிச்சயம்தான் ஆயிடுச்சே"

    "சரி நீ கண்ண மூடிக்கோ நான் சொல்றேன்"

    சரி நீங்க எல்லாம் காதை மூடிக்கோங்க... தீபா அருண்கிட்ட "ஐ லவ் யூ" சொல்றத யாரும் ஒட்டு கேக்காதீங்கோ...

    (தொடரும்...)

    பின்குறிப்பு:
    மக்களின் விருப்பத்திற்கிணங்க இன்னும் கொஞ்சம் ஜாலியான வசனங்களுடன் அடுத்த பாகத்தில் முடிவடையும்...

    அடுத்த பகுதி

    Friday, December 15, 2006

    நெல்லிக்காய் 10

    கார்த்திக் அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் அருணிற்கு எதுவும் புரியவில்லை. கார்த்திக்கிடம் நேராக சென்றான்.

    "கார்த்திக் என்னாச்சு? ஏன் அழுவற?" அருண் குரலை கேட்டதும் கார்த்திக் தலையை நிமிர்ந்து பார்த்தான்.

    "சொல்லுடா ஏன் அழுவற என்னாச்சு? வீட்ல எதாவது ப்ராபளமா?"

    "ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேக்காத. என்னை கொஞ்ச நேரம் தனியா இருக்கு விடு. ப்ளீஸ்"

    கார்த்திக் சொன்னதை கேட்டதும் அருண் வெளியே ஹாலிற்கு சென்று பழைய புத்தகம் ஒன்றை எடுத்து புரட்டி கொண்டே சன் மியூசிக் பார்க்க ஆரம்பித்தான்.

    சுமார் ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு கார்த்திக் வெளியே வந்து அருண் அருகில் அமர்ந்தான்.

    "ராஜி ஏதாவது சொன்னாளா?" அருண் சொல்லியதை கேட்டதும் கார்த்திக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.

    "ஆமாம்டா. அவ வீட்ல அவளுக்கு போன வாரமே மாப்பிளை பாத்திருக்காங்க"

    "ஹும்"

    "சும்மா வந்துதானே பாத்திருக்காங்கனு அவ லேசா விட்டுட்டா. அவங்க வீட்ல மூணு நாள் கழிச்சி ஓ.கேனு சொல்லிட்டாங்களாம்"

    "ஹோ"

    "உடனே அவ அவுங்க அம்மாக்கிட்ட எங்க விஷயத்தை சொல்லிருக்கா. அவுங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாங்க"

    "ஹும்"

    "அவுங்க அப்பாக்கு தெரிஞ்சி அவளை அடிச்சிருக்காரு.வீட்லயே ரெண்டு நாள் பூட்டி வெச்சிருக்காரு"

    "என்னடா இந்த காலத்துலையும் இப்படியெல்லாம் நடக்குதா?"

    "நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க"

    "அவுங்களுக்கு என்ன பிரச்சனையாம்? உனக்கு என்ன குறைச்சல்?"

    "காதலிக்கறது தப்பாம். அது ஒழுக்கமில்லாதவங்கதான் செய்வாங்கனு அவுங்க அம்மா சொல்றாங்களாம்"

    "என்னது? ஒழுக்கமில்லாதவங்கதான் காதலிப்பாங்களா? அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?
    சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா? இல்லை நீங்க தான் ஏதாவது தப்பு தண்டா பண்ணீங்களா? அவுங்க அப்பா என்ன சொன்னாரு?"

    "நான் அவுங்க கேஸ்ட் இல்லையாம். அவருக்கு அதே கேஸ்ட்ல லவ் பண்ணியிருந்தாலும் போனா போகுதுனு கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாராம்"

    "என்னடா இது லூசுத்தனமா இருக்கு? யார்டா ஜாதிய பாத்து காதலிப்பா? நம்ம யாருக்கும் யார் என்ன கேஸ்ட்னே தெரியாது. அப்படி இருக்கும் போது என்னடா பேச்சி இது?"

    "அவர் அவுங்க ஜாதி சங்கத்துல முக்கியமான ஆளாம். அவர் பொண்ணை வேற ஆளுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாதாம். ரொம்ப கண்டிப்பா சொல்றார்"

    "அவருக்கு அவர் பொண்ணு சந்தோஷத்தைவிட ஜாதி தான் முக்கியமா போச்சா?"

    "அப்படித்தான் சொல்றார். இந்த காதல் கத்திரிக்காயெல்லம் சின்ன வயசுல எல்லாருக்கும் வரது தான். எல்லாம் கல்யாணமான சரியா போயிடும்னு சொல்றார். என்னை பேசவேவிடலை"

    "நீ அவங்க வீட்டுக்கு போறேனு ஏன் எங்கிட்ட சொல்லல. இல்லைனா நானும் வந்து பேசிருப்பேன் இல்லை"

    "அவ போன் பண்ணி யாரும் வேணாம் நீ மட்டும் வானு சொன்னா. சரி என்ன பண்ணிட போறாங்கனு நானும் போனேன்"

    "வேற யாராவது இருந்தாங்களா?"

    "அவுங்க பெரியப்பாவாம். ஏதோ போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல இருக்காராம். ரொம்ப திமிரா உக்கார்ந்திருந்தார். என்னைய எதுவும் பேசவேவிடலை. இதுக்கு மேல நான் ஏதாவது பிரச்சனை பண்ணா என்னை ஏதாவது கேஸ்ல உள்ள தூக்கி போட்டுடுவாங்களாம்"

    "என்ன அவுங்களுக்கு தான் ஆள் தெரியுமா? என் க்ளாஸ் மேட் விநோத் அவுங்க மாமா ஆளுங்ககட்சில MLAவா இருக்காரு. நீ சொல்லு நான் இப்பவே விநோத்ட பேசறேன்"

    "டேய் அதெல்லாம் வேண்டாம். ராஜியே என்கிட்ட கடைசியா பேசினா, அவுங்க அப்பா, அம்மாதான் அவளுக்கு முக்கியமாம் என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்னு சொன்னா"

    "அப்பறம் என்ன....... உன்னைய லவ் பண்றேன்னு சொல்லனும்"

    "சரி விடுடா. எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நினைச்சிக்கறேன். என்ன எப்பவும் அவ நினைப்பாவே கொஞ்ச நாள் இருக்கும். அப்பறம் மறந்துடும்"

    "என்னடா சாமியார் மாதிரி பேசற?"

    "இல்லைடா நான் உண்மைய தான் பேசறேன். அவளுக்கு அந்த மாப்பிளைனு கண்டிப்பா ஃபிக்ஸ் ஆயிடுச்சி. நம்ம எதுவும் பண்ண முடியாது" சொல்லிவிட்டு ரூமிற்குள் சென்று மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

    அருணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சரியாக அந்த நேரம் பார்த்து அருணின் செல்போன் சிணுங்கியது... எடுத்து பார்த்தான்

    Deepa Calling...

    அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே எடுக்காமல் விட்டுவிட்டான்.
    தொடர்ந்து அவள் கூப்பிடவே நான்காவது முறையாக அடிக்கும் பொழுது எடுத்தான்.

    "ஏய் ஏன் இவ்வளவு நேரம் எடுக்கலை?"

    "ஒண்ணுமில்லை... விஷயத்தை சொல்லு"

    "நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு இப்ப உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு இங்க டாக்டர் சொல்லிட்டாரு"

    "சரி"

    "நான் இன்னைக்கு நைட்டே புறப்பட்டு ஊருக்கு வரேன். நீ காலைல பஸ் ஸ்டாப் வரீயா"

    "நான் என்ன உன் டிரைவரா? ஆட்டோ பிடிச்சி ஹாஸ்டலுக்கு போயி சேரு"

    "இல்லை உன் கூட வந்தா தானே அடிப்படும்" சொல்லிவிட்டு சிரித்தாள் தீபா.

    "நீ என்ன சொல்றனு எனக்கு புரியலை. நான் நாளைக்கு வர மாட்டேன். இப்ப போனை வைக்கிறேன்" சொல்லிவிட்டு போனை அணைத்தான்.

    ஒரு நிமிடத்திற்குள் அவள் திரும்ப அழைக்க, என்ன செய்வதென்று தெரியாமல் போனை ஆஃப் செய்து வைத்தான்...

    என்ன திடீர்னு புதுசா நம்மல பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்றா? புரியாமல் தவித்தான் அருண்...

    (தொடரும்...)

    அடுத்த பகுதி

    Wednesday, December 13, 2006

    வலைப்பதிவர் சந்திப்பு - பாஸ்டன்

    நண்பர்களே,
    ஏற்கனவே நம்ம பாபா சொன்ன மேட்டர்தான்... வர சனிக்கிழமை நம்ம பாஸ்டன் ஏரியாவுல வலைப்பதிவர் சந்திப்பு நடக்க போகுது. வலைப்பதிவர் சந்திப்புனா வலைப்பதிபவர்கள் மட்டும் இல்லை. படிக்கறவங்களும் தாராளமா வரலாம்.

    உங்களை கேள்வி எல்லாம் கேட்டு யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. சும்மா என்ன பேசறாங்கனு நம்ம கேட்டுட்டு அப்பப்ப ஏதாவது கருத்து சொல்லிட்டு வரலாம். கருத்து இல்லைனாலும் பரவால தாராளமா வாங்க. நல்ல சாப்பாடு கிடைக்கும். இதையெல்லாம் நம்பி தான் நானும் போறேன் :-)

    சரி யார் யார் வராங்கனு பார்க்கலாம்...

    தேன் துளி பத்மா அரவிந்த்
    நவன்'ஸ் வெப்லாக
    பார்வை
    மெய்யப்பன்
    வேல் முருகன்
    பாஸ்டன் பாலா
    கண்ணபிரான ரவி சங்கர்
    பாடும் நிலா பாலு சுந்தர்
    வெயிலில் மழை ஜி


    இடம்: பாஸ்டன்
    நாள்: டிசம்பர் 16, சனிக்கிழமை
    நேரம்: மதியம் 2 மணியிலிருந்து...

    தொடர்புக்கு: bsubra@yahoo.com அல்லது bsubra@gmail.com

    ஏற்கனவே பாபா நிறைய வாக்குறுதி கொடுத்திருக்காரு... நானும் என் பங்குக்கு ஒண்ணு கொடுக்கறேன்...

    1. அடுத்து வரும் உங்கள் பதிவுக்கு நீங்கள் விரும்பும் பட்சத்தில் 10 - 100 வரை பின்னூட்டங்கள் அளிக்கப்படும்.

    we will meet... will meet... meet

    நெல்லிக்காய் - 9

    தீபா கண் திறந்து பார்க்கும் போழுது அழுது அழுது வீங்கிய அவள் அம்மாவின் முகமே அவள் கண்களில் முதலில் பட்டது. அவள் அருகில் ராஜி அமர்ந்திருந்தாள். அருணையோ, கார்த்திக்கையோ அங்கு காணவில்லை.

    அவள் மெதுவாக அம்மா என்று கூப்பிட்டதை கேட்டு இருவரும் அவளை பார்த்து மகிழ்ச்சியும் பதற்றமும் நிறைந்த நிலையில் அவள் அருகில் வந்தனர்.

    "அம்மா, தங்கம்! நாங்க பேசறது உனக்கு கேக்குதாமா?" அவள் அம்மா பரிதாபமாக கேட்டாள்.

    ஏற்கனவே பல முறை கண் திறந்தும் மயக்க நிலையிலே இருந்தாள் தீபா. அதனால் அவள் அம்மா அவள் குரலை கேட்டதும் மகிழ்ச்சியுற்றாள்.

    "கேக்குதும்மா! அருணுக்கு என்னாச்சு? அவனுக்கு ஒண்ணுமாகலையே?" திக்கி திணறி கேட்டாள் தீபா

    "இல்லைமா. அந்த தம்பிக்கு ஒண்ணுமாகலை. உனக்கும் இனிமே எந்த பிரச்சனையுமில்லைனு டாக்டர் சொல்லிட்டாரு. ஒரு வாரத்துல நம்ம வீட்டுக்கு போயிடலாம்டா சாமி. உனக்கு எதுவும் வலிக்குதாடா?"

    "பேசனா வலிக்குதும்மா"

    "தலைல அடிப்பட்டதால கட்டு போட்ருக்காங்கடா. அதனால அப்படித்தான்டா இருக்கும். இன்னும் ஒரு ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்னு டாக்டர் சொல்லியிருக்காருடா. நீ பேசாமா தூங்கு சாமி"

    சொல்லிவிட்டு அவள் அம்மா டாக்டரை கூப்பிட சென்றாள்.

    "ராஜி! அருண் எங்க?"

    "அவன் காலைல இருந்து இங்க தான் இருந்தான். ஒரு வாரம் முழுக்க அவன் லீவ் போட்டு காலைல இருந்து சாயந்தரம் வரைக்கும் அம்மாக்கூடத்தான் இருக்கான். சாயந்தரமானா நான் வந்தவுடனே அவன் போயிடுவான்"

    "ராஜி அவனை கஷ்டப்பட வேண்டாம்னு சொல்லு. அவன் வேண்டாம்னு சொல்லியும் நான் தான் வண்டில போகலாம்னு சொன்னேன். நாளைக்கு காலைல அவன் வரும் போழுது நான் முழிச்சிட்டு இருப்பனானு தெரியாது. இப்பவே நான் அவன்ட ஒரு வார்த்தை பேசிடறதா?"

    "வேணாம்பா. நீ தூங்கு. அவன்ட நான் சொல்லிக்கறேன்"

    "சரி மறக்காம சொல்லிடு" சொல்லிவிட்டு மீண்டும் கண்ணசந்துவிட்டாள்.

    அடுத்த இரண்டு நாட்களில் அவளால் நன்றாக பேச முடிந்தது.அருணோடு தனியாக பேசும் சந்தர்ப்பங்களே அவளுக்கு அமையவில்லை. பெரும்பாலும் அவள் அம்மா அங்கே இருந்ததால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. அப்போழுது அவள் அம்மா ஊரிலிருக்கும் மாமாவிற்கு போன் செய்ய வெளியே போனாள். சரியாக அந்த நேரம் பார்த்து அங்கே வந்து சேர்ந்தான் அருண்.

    "தீபா! ஹவ் ஆர் யூ ஃபீலிங் நவ்? தெரியாம அந்த மாதிரி ஆயிடுச்சு. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி"

    "உனக்கெல்லாம் எவன் லைசன்ஸ் கொடுத்தான். நேரா போயி லாரில விட்டுட்டு என்ன ஸாரி பூரினு சொல்லிட்டு இருக்க?"

    "என்னது நான் தப்பா லாரில விட்டனா? அவன் ராங் சைட்ல வந்தான்"

    "லாரினா ராங் சைட்ல தான் வருவான். நீ தான் பார்த்து ஓட்டணும்."

    "இந்த கதை நல்லா இருக்கு. உன்னைய நேரா போயி விட்ருக்கணும். என் தப்புதான்"

    "முதல்ல வண்டில ஒரு அழகான பொண்ண ஏத்திட்டு போகும் போது, நிதானமா ஓட்டணும்னு தெரியனும்"

    "தீபா! மண்டைல அடிப்பட்டதால உனக்கு பழசெல்லாம் மறந்து போச்சினு நினைக்கிறேன். அழகான பொண்ணுனு யாரப்பத்தியோ பேசிக்கிட்டு இருக்க. நான் வண்டில ஏத்திட்டு போனது உன்னயத்தான்"

    "நக்கலா? நான் அழகா, இல்லையானு போய் உனக்கு பக்கத்து க்யூபிக்கல்ல உக்கார்ந்திருப்பானே ராஜிவ். அவனை போயி கேட்டு பாரு"

    "நான் அவனை கேக்கறது இருக்கட்டும் முதல்ல நீ ஒழுங்கா கண்ணாடிய பாரு. போதும்"

    அந்த நேரம் பார்த்து அவள் அம்மா சரியாக வந்து சேர்ந்தாள்.

    "என்ன தம்பி ஏதோ கண்ணாடினு சொல்லிட்டு இருந்தீங்க போலருக்கு"

    "அது ஒண்ணுமில்லை ஆண்ட்டி! ஆக்ஸிடெண்ட்ல கண்ணுக்கு ஏதாவது பிரச்சனையாயிருக்குமா? கண்ணாடி போடனுமானு கேட்டா. நான் அதெல்லாம் தேவையில்லைனு சொல்லிட்டு இருந்தேன்"

    "ஏன் கண்ணு... எல்லாம் நல்லா தெரியுது இல்லை. ஏதாவது மங்களா தெரியுதா?"

    "அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. சும்மா தான் கேட்டேன்"

    "ஏன் தம்பி, உங்களுக்கு இத்தனை நாள் லீவு எப்படி கொடுத்தாங்க?"

    "அது ஒண்ணுமில்லைங்க ஆண்ட்டி. ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சினு மெடிக்கல் லீவு போட்டுட்டேன்"

    மெடிக்கல் லீவ் என்று ஒரு லீவே இல்லையென்று தீபாவிற்கு நன்றாக தெரிந்திருந்தது. அருண் சம்பளமில்லாத விடுமுறையில் (லாஸ் ஆப் பே) இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள்.

    "அம்மா, நான் தான் இப்ப நல்லா ஆயிட்டனே. இதுக்கு மேல இங்க துணைக்கு ஒரு ஆள் வேணுமா?"

    அருணுக்கு அவள் சொல்லியது நன்றாக புரிந்தது.

    "ஆமாமா. இந்த தம்பிக்கு தான் ரொம்ப கஷ்டத்த கொடுத்துட்டோம். தம்பி நீங்க எதுக்கு தம்பி இனிமே கஷ்டப்பட்டுக்கிட்டு. நானே பாத்துக்கறம்பா. அவ வேற கஷ்டப்படறா"

    "இன்னும் ரெண்டு நாள் தானே ஆண்ட்டி. அதனால ஒண்ணும் பிரச்சனையில்லை. நீங்க இங்க இருக்கற வரைக்கும் கூட இருந்து பாத்துக்கிட்டோம்னு ஒரு திருப்தி இருக்கும். அதனால தான். அதுவும் இல்லாம நான் ஏற்கனவே லீவுக்கு சொல்லிட்டேன். இனிமே ஆபிஸிம் போக முடியாது" ஒரு வழியாக சமாளித்தான் அருண்.

    "சரிப்பா. நீ இருக்கறதும் ஒரு துணைக்கு நல்லாதான் இருக்கு. எங்க ஊர்னா என் தம்பி எப்படியும் ஏன் கூடவே இருப்பான். இவ அப்பாரு மட்டும் இந்நேரமிருந்தா இவளை ராணி மாதிரி பாத்துக்குவாரு" சொல்லிவிட்டு லேசாக கண் கலங்கினாள்.

    இரண்டு நாளும் அவளுடனே இருந்தான் அருண்.அவளை டாக்டர் பதினைந்து நாட்கள் வீட்டில் நன்றாக ரெஸ்ட் எடுக்குமாறு கூறியிருந்தார்.

    தீபாவிற்கு இப்படியானதற்கு தன் கவனக்குறைவே காரணமென்று அருண் மிகவும் கவலைப்பட்டு கொண்டிருந்தான். தினமும் அவளுக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தான். பாதி நேரம் அவர்கள் பேச்சு சண்டையிலே முடிந்தது. இருந்தாலும் அடத்த நாள் யாராவது ஒருவர் மற்றவரை அழைத்து பேசி கொண்டிருந்தனர்.

    ஒரு வாரம் முடிந்த நிலையில் வார இறுதி நாளில் வெளியே சென்றிருந்த கார்த்திக் வீட்டிற்குள் வந்து நேராக கட்டிலில் போய் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தை பார்த்து அருண் திடுக்கிட்டான்.

    (தொடரும்...)

    அடுத்த பகுதி

    Sunday, December 10, 2006

    நெல்லிக்காய் - 8

    ஒரு மணி நேரமான பின்பும் அருணும் தீபாவும் வராததால் ராஜிக்கு கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது.

    "என்ன இவ்வளவு நேரமாகியும் அவுங்க ரெண்டு பேரையும் காணோம். நீ எதுக்கும் அருணுக்கு போன் பண்ணி பாரு"

    "சரி நம்மல டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு பொறுமையா வருவான். நீ ஒண்ணும் கவலைப்படாத" கார்த்திக் சொல்லி கொண்டிருக்கும் போதே தீபாவின் செல் போனிலிருந்து அழைப்பு வந்தது.

    "ஏய் சொல்லு எங்க இருக்கீங்க?"

    ""

    "ஏய் என்னாச்சு? ஏன் இவ்வளவு பதட்டமா பேசற?"

    ""

    "என்ன ஆக்ஸிடெண்டா? யாருக்கும் எதுவுமாகலையே?"

    ""

    "மலர் ஹாஸ்பிட்டல்ல இருக்கியா? இதோ நாங்க உடனே வரோம். நீ எதுக்கும் பயப்படாத"


    கார்த்திக் டென்ஷனாக பேசிக்கொண்டிருந்ததை கேட்டு ராஜிக்கும் பயம் அதிமானது.

    "கார்த்திக் என்னாச்சு? யார் பேசனா?"

    "அருண் பேசினான். அவுங்க வண்டி ஏதோ ஆக்ஸிடண்டாயிடாச்சாம். தீபாக்கு நல்ல அடியாம். மலர் ஹாஸ்பிட்டல்ல அட்மீட் பண்ணியிருக்காங்களாம். சரி வா முதல்ல நம்ம அங்க போவோம். அவனுக்கு தனியா என்ன செய்யறதுனே தெரியாம டென்ஷான இருக்கான்"

    "அவளுக்கு எதுவும் ஆகலை இல்லை"

    "தெரியல. வா போகலாம்" சொல்லிவிட்டு வேகமாக பைக் நோக்கி சென்றான்.

    அவர்கள் ஹாஸ்பிட்டல் ரிசப்ஷனில் விசாரித்து கொண்டிருக்கும் போதே அருண் வந்து சேர்ந்தான். அருண் கையில் ஒட்டியிருந்த ப்ளாஸ்திரிகள் அவனுடைய காயத்தை மறைத்திருந்தன.

    "டேய் என்னாச்சு? தீபா எங்க?" பதட்டமாக விசாரித்தான் கார்த்திக்.

    "தீபா ஐ.சி.யூல இருக்கா. தலைல அடிப்பட்டிருக்கு. கையும் ஃப்ராக்ச்சர் ஆகியிருக்கலாம்னு சொன்னாங்க. எக்ஸ் ரே எடுக்க வேண்டியிருக்கு. பயப்பட வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க"

    "ஆக்ஸிடெண்ட் எப்படியாச்சு?"

    "ஒரு லாரிக்காரன் ராங் சைட்ல வந்து இடிச்சிட்டு நிறுத்தாம போயிட்டான். அக்கம் பக்கத்துல இருக்கவங்க தான் வந்து உதவி செஞ்சாங்க. என் வண்டிய பக்கத்துலயே ஒரு மெக்கானிக் ஷாப்ல நிறுத்திட்டு வந்திருக்கோம். வண்டிலயிருந்து விழுந்ததுல என் மொபைலும் காணோம்"

    "ஓ! அதுதான் நீ அவ மைபல்ல இருந்து கூப்பிட்டயா? சரி உனக்கு ஒண்ணும் பெருசா அடிப்படலையே?" அக்கறையாக விசாரித்தாள் ராஜி

    "நான் மட்டும் ஹெல்மட் போடலைனா இந்நேரம் மார்ச்சுவரில தான் இருந்திருப்பேன்" சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த ஹெல்மட்டை காட்டினான். அதில் இரண்டு இடங்களில் உடைந்து தன் எஜமானரின் உயிரை காப்பாற்றிய சந்தோஷத்தில் பல்லிளித்து கொண்டிருந்தது.

    "ஓ காட்...நல்ல வேளை நீ ஹல்மெட் போட்டிருந்த... இல்லைனா நினைச்சு பார்க்கவே முடியல" வேதனை கலந்த முகத்துடன் சொன்னாள் ராஜி.

    சரியாக அந்நேரம் அங்கே வந்த நர்ஸ், "ஏம்பா அந்த பொண்ண கூப்பிட்டு வந்தது நீதான?" அருணை பார்த்து கேட்டார்

    "ஆமாங்க" டென்ஷனாக சொன்னான் அருண்

    "நீங்க அவருக்கு என்ன வேணும்?"

    "ஃபிரெண்ட்ஸ்" வேகமாக சொன்னாள் ராஜி.

    "அவுங்களோட அப்பா, அம்மா இல்லையா?"

    "அவளுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான்" வார்த்தைகளை விழுங்கி விழுங்கி சொன்னாள் ராஜி. அருணுக்கு இதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அப்பா இல்லாத ஒரு பொண்ணு கூட இத்தனை நாள் சண்டை போட்டு அவ மனச சங்கடப்படுத்திருக்கிறோம் என்ற எண்ணம் அவன் மனதில் முள் போல் குத்தியது.

    "அவளுக்கு அவசரமா ஒரு சர்ஜரி செய்ய வேண்டியிருக்கு"

    "மேடம் எவ்வளவு செலவானாலும் பண்ணுங்க. நாங்க பார்த்துக்கறோம்" பதற்றமாக சொன்னான் அருண்.

    "இல்லைங்க. ரிலேட்டிவ்ஸ் யாராவது கையெழுத்து போடணும். இல்லை கார்டியன் யாராவது கையெழுத்து போடணும். அப்பத்தான் நாங்க ப்ரொஸிட் பண்ண முடியும். அவுங்க கார்டியன் யாராவது இங்க இருந்தா சீக்கிரம் வர சொல்லுங்க. அத சொல்லத்தான் வந்தேன்" சொல்லிவிட்டு வேகமாக ஐ.சி.யூ நோக்கி நடந்தார் நர்ஸ்.

    மூவருக்கும் என்ன செய்வதேன்றே புரியாத நிலையில், கார்த்திக்கிற்கு திடீரென்று ஏதோ தோன்ற அவனுடைய செல்போன் எடுத்து யாருக்கோ போன் செய்தான்.

    இருவரும் அவனை பார்க்க அவன் அதிர் முனையிலிருப்பவரிடம் பேசியதிலிருந்து புரிந்து கொண்டனர்.

    அடுத்த 5 நிமிடத்தில் நர்ஸ் அவர்களிடம் வந்தார். "நீங்க xxxxx கம்பெனில வேலை செய்யறீங்களா? இப்பதான் உங்க ஹெச்.ஆர் மேனஜர் போன் பண்ணார். அவர் பொறுப்பேத்துக்கறேன்னு சொல்லிட்டார். நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துக ஆப்பரேஷன் செய்ய போறோம். அவுங்க அம்மாவை வர சொல்லி போன் பண்ணிடுங்க" சொல்லிவிட்டு நகர்ந்தார்.

    "ராஜி, ப்ளீஸ் தீபா அம்மாக்கு நீயே போன்ல பேசிடேன். எதுவும் பயப்பட வேண்டாம்னு சொல்லு" அருண் கவலையுடன் சொல்லி கொண்டிருந்தான்.

    அடுத்த நாள் காலை 9 மணிக்கு தீபா அம்மா ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்த போழுது தீபாவிற்கு ஆப்பரேஷன் முடிந்து அவளுக்காக ஒதுக்கப்பட்ட ரூமில் மயக்கமான நிலையில் இருந்தாள். அவள் அருகில் அருணும், ராஜியும் அம்ர்ந்திருந்தனர்.

    (தொடரும்...)

    பி.கு: மக்களே! ஒரு சின்ன அட்வைஸ். கதையோட சொல்லிட்டாலும் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்லிடறேன்.
    1) வண்டியிலே போகும் போது தயவு செஞ்சு ஹெல்மட் போட்டுட்டு போங்க!!!
    2) HR நம்பர் மொபைல்ல வெச்சிக்கோங்க. ஏதாவது பிரச்சனைனா அவருக்கு கூப்பிட்டீங்கனா உடனே வந்து உதவி செய்வார். இது வெளியூர் போயி மொழி தெரியாத இடத்தில இருக்கவங்களுக்கு ரொம்ப உதவும்.

    சரி நான் அப்பீட் ஆயிக்கறேன்...

    அடுத்த பகுதி

    Friday, December 08, 2006

    புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது!!!





    இன்னைக்கு தாங்க வாழ்க்கைல முதல் தடவையா பனி பெய்யறத பாக்கறேன். நானும் வந்த நால்ல இருந்து இது எப்படி இருக்கும்னு பார்க்கனும் ரொம்ப ஆர்வமாயிருந்தேன். சும்மா லைட்டா நம்ம தெர்மாகோல் மாதிரி இருக்குங்க.

    பனி பெய்யறதை பார்த்தவுடனே ஆபிஸ் போற அவசரத்துலயும் வெளிய வந்து பனில போட்டோவெல்லாம் எடுத்தாச்சு :-). நாங்க போட்டோ எடுக்கறதை பார்த்துட்டு அந்த வழியா போன ஒரு வெள்ளைக்கார ஃபிகரு ஒரு மாதிரி பார்த்துட்டு போச்சு.

    ஏன்னா குளிராத மாதிரி ஒரு எஃபக்ட் கொடுத்துட்டு (ஜாக்கெட் கழுட்டிட்டு டி-சர்டோடு) போட்டோ எடுத்துட்டு இருந்தோம். ஆனா இந்த காத்து அடிச்சாதாங்க உசுரே போற மாதிரி குளிருது.

    எப்படித்தான் சினிமால எல்லாம் ஹீரோயின்ஸ் இந்த மாதிரி பனில குட்டி பாவடை போட்டுட்டு ஆடறாங்கனே தெரியலை. இந்த விஷயத்துல நம்ம Gaptain ரொம்ப மோசம். அவர் பாகிஸ்தானி தீவிரவாதிகளை பிடிக்க காஷ்மீர் போவாரு. கூடவே நம்ம ஹீரோயின்ஸையும் கூப்பிட்டு போயிடறாரு. தீவிரவாதிய பிடிக்கறதுக்கு க்ளைமாக்ஸ்ல இவுங்க ஒரு டேன்ஸ் தீவிரவாதிங்க முன்னாடி கண்டிப்பா ஆடுவாங்க.

    இந்த கொடுமைல ஒரு டூயட் (Gaptain உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?) வேற இருக்கும். அதுல அவர் மட்டும் விவரமா சட்டை, ஸ்வட்டர், ஜாக்கேட், அதுக்கு மேல இன்னும் ஏதாவது ரோஸ் கலர்ல கண்ணு கூசற மாதிரி போட்டுட்டு பனில நிப்பாரு.நம்ம ஹீரோயின்ஸ் அவரை சுத்தி சுத்தி ஆடனும். அதுவும் குட்டை பாவடை போட்டு அந்த குளிர்ல ஆடனும். படத்துல பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனா அவுங்களை நினைச்சா இப்ப பாவமா இருக்கு...

    இப்ப இந்த பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது...
    வெயிலின் அருமை பனியில் தெரியும் :-)

    Tuesday, December 05, 2006

    நெல்லிக்காய் 7

    காய் 6
    மக்களே ஒரு சிலர் கதையை மறந்திருக்கக்கூடும்... அதனால் போன பகுதியின் கடைசி சில வரிகள்

    "சரி சும்மா சண்டை போடாம சாப்பிடுங்க.ரெண்டு பேரும் பெரிய ஆளுங்க தான். அதுவும் இல்லாம ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்தாதான் அவுங்களுடைய உண்மையான ரசிகர்கள்" நச்சென்று சொல்லிமுடித்தான் கார்த்திக்...

    "சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...

    அருண் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...

    ஒரு வழியாக படம் பார்த்துவிட்டு அனைவரும் வெளியே வந்தனர். ராஜிக்கும் அருணுக்கும் படம் பிடித்திருந்தது.

    "மணி அஞ்சே கால்தான் தான் ஆகுது. பேசாம பெசண்ட் நகர் பீச் போயிட்டு அப்படியே ஈவனிங் டின்னர் சாப்பிட்டு போலாமா?" என்றான் கார்த்திக்.

    "அப்படியே அஷ்டலட்சுமி கோவிலுக்கும் போய்ட்டு வரலாம்", தீபாவை சம்மதிக்க வைக்க ராஜி வேகமாக சொன்னாள்.

    அருணும் தீபாவும் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்க, அருணுக்கு "நைட் டின்னரும்னா ஓ.கே" என்று அவன் சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது.

    "தீபா, நான் ராஜிய என் கூட வண்டீல கூப்பிட்டு போறேனே. நீ அருண்கூட வரியா ப்ளீஸ்" பரிதாபமாக கெஞ்சினான் கார்த்திக்.

    "ஏய் அதெல்லாம் வேணாம். நாங்க பஸ்லயே வரோம்" வேகமாக சொன்னாள் ராஜி.

    "எதுக்கு ரெண்டு வண்டி இருக்கும் போது நீங்க பஸ்ல வரணும்? பாரு தீபாவே ஓகே சொல்லிட்டா. உனக்கு என்ன?" கார்த்திக் எப்படியாவது ராஜியை சம்மதிக்க வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.

    "நான் எப்ப ஓ.கே சொன்னேன்?" முகத்தில் அதிர்ச்சியோடு கேட்டாள் தீபா

    "ப்ளீஸ் ப்ளீஸ் நீ என் பெஸ்ட் ஃப்ரெண்ட் இல்லை" தீபாவிடம் கெஞ்சினான் கார்த்திக். அருணுக்கு கார்த்திக்கை பார்க்க பாவமாக இருந்தது.

    "தீபா நீ என்கூட வருவியா? மாட்டியா" கொஞ்சம் தைரியத்தை வர வழித்து கொண்டு கேட்டான் அருண்.

    அருணை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் மூவரும். தீபாவும் வேறு எதுவும் பேசாமல் "ஹிம்" என்று பொறுமையாக சொன்னாள்.

    கார்த்திக்கிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.

    நால்வரும் வண்டியை நெருங்கினர். அருணுடைய சாவி திடீரென்று காணாமல் போனது.
    "கார்த்திக் நீ முன்னாடி ராஜிய கூப்பிட்டு போயி கோவில்ல இரு. சாவி நம்ம உக்கார்ந்த சீட்ல தான் இருக்கும்னு நினைக்கறேன். நான் போய் பார்த்து எடுத்துட்டு வரேன். தீபா நீ என் கூட வா"சொல்லிவிட்டு யார் சம்மதத்திற்கும் எதிர்பார்க்காமல் வேகமாக தியேட்டரை நோக்கி நடந்தான் அருண்.

    தீபாவும் அவன் பின்னாலே வேகமாக ஓடினாள்.

    "இவன்கிட்ட இதுதான் பிரச்சனை. சரி நம்ம கிளம்பலாம்" சொல்லிவிட்டு கார்த்திக்கும் ராஜியும் கிளம்பினர்.

    தியேட்டர் அருகே சென்றவுடன் அருண் நின்று தீபா வரும் வரை காத்திருந்தான். அவன் அருகில் வந்ததும் "சரி வா 23Cல போகலாம்" என்றாள் தீபா.

    "சாவி? உள்ள போய் பார்க்க வேணாமா?" ஆச்சரியமாக கேட்டான் அருண்.

    "இங்க பாரு அருண், சாவி உன்கிட்டதான இருக்குனு எனக்கு நல்லா தெரியும். நான் ஒண்ணும் கார்த்திக்கோ, ராஜியோ இல்லை. நீ அவ்வளவு உரிமையா கூப்பிடும் போதே எனக்கு தெரியும் இதுல ஏதாவது ஃபிராடு தனம் வெச்சிருப்பனு"

    அருணுக்கு தீபாவை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.அவனை அங்குலம் அங்குலமாக புரிந்து வைத்திருக்கிறாளென்று.

    "ஃபிராடா? யார் நானா? பாவம் அவன் ரொம்ப ஆசைப்படறானெனுதான் இந்த மாதிரி பண்ணேன்.அதுவும் சாவி தொலையற ஐடியா எனக்கு வண்டி கிட்டக போனவுடனேதான் வந்துச்சு.நான் கூப்பிட்டவுடனே நீ பதில் எதுவும் சொல்லாம வரேனு சொன்னதுதான் இன்னும் கொஞ்சம் பயமாயிடுச்சு"

    "ஏன் வண்டில போகும் போது நான் தள்ளிவிட்டுடுவன்னு பயமா?"

    "தள்ளிவிட்டா நீயும் தான் விழனும். உனக்கு விருப்பமில்லைனு உன் முகத்திலே தெரிஞ்சிதே"

    "ஆமாம். இவர் பெரிய சைக்காட்ரீஸ்ட். விருப்பமில்லாம நான் எதையும் சொல்லமாட்டேன். அதே மாதிரி உன்னய மாதிரி ஃபிராடு தனம் எனக்கு தெரியாது"

    "யார் நான் ஃபிராடா? சரி... அப்ப வா என் வண்டியிலே போகலாம்"

    "சரி வா..." சொல்லிவிட்டு அருணுக்கு காத்திராமல் வண்டியை நோக்கி சென்றாள் தீபா

    அருணுக்கும் என்ன சொல்வதென்றே தெரியாமல் வண்டியிருக்குமிடத்திற்கு சென்று வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

    எதை பற்றியும் யோசிக்காமல் வண்டியில் அருண் பின்னாள் அமர்ந்தாள்.

    அருணுக்கு தீபா மனதை புரிந்து கொள்ள முடியாத குழப்பத்துடன் வண்டியை கோவிலை நோக்கி செலுத்தினான். எப்ப பாரு சண்டை போடறா, வார்த்தைக்கு வார்த்தை ஃபிராடுனு சொல்றா, நம்மல அங்குல அங்குலமா புரிஞ்சி வெச்சிருக்கா... இவ நம்மல பத்தி என்னதான் நினைக்கிறா???

    பீச்ல கண்டிப்பா இத பத்தி பேசணும். எப்படியும் கார்த்திக்கும், ராஜியும் பிஸியா இருப்பாங்க. அதனால தாராளமா பேசலாம். வழக்கமா எல்லா பொண்ணுங்க மாதிரி நீ என் ஃபிரெண்டுனு சொல்லுவா. பசங்கள பத்தி தெரியாதானு கேட்பா. இவக்கிட்ட நம்ம எதுக்கு கேக்கனும்? கண்டிப்பா நான் கேக்க மாட்டேன்.

    இவ்வாறு அவன் மனம் பல திசைகளில் யோசித்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு திருப்பத்தில் அருண் வேகமாக திருப்ப அதே சமயம் எதிர் திசையிலிருந்து வந்த ஒரு லாரியும் வலது பக்கம் திருப்ப, லாரியில் மோதி அருணும் தீபாவும் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர்...

    (தொடரும்)

    அடுத்த பகுதி

    Monday, December 04, 2006

    சைனிக்குடு

    சைனிக்குடு - போக்கிரியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு நடித்து வெளியாகியிருக்கும் படம்.


    சைனிக்குடு என்றால் போர்வீரன் என்று பொருள். மக்களுக்காக போராடும் கல்லூரி மாணவர்களை(?) பற்றியும் அதற்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் சொல்ல முயன்றிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் (அறைகுறை தெலுகை வைத்து சொல்லவில்லை). படம் நன்றாக புரிந்தது ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்றுதான் புரியவில்லை.



    ஆரம்ப காட்சியில் வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், கேமரா கொண்டு சென்ற விதமும் அசத்தலாக வந்திருக்கிறது. அதன் பிறகு பல காட்சிகள் ஆயுத எழுத்தை நினைவு படுத்தியது. வழக்கம் போல 'குண்டா' அரசியல்வாதியாக இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். அவருக்கு வலது கை போல பிரகாஷ்ராஜ்.

    படத்தில் ஏதாவது வித்யாசம் காட்ட வேண்டுமென்று த்ரிஷாவை இர்ஃபான் கானை காதலிக்க வைத்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு அதையே பயன்படுத்தியிருக்கிறார்கள். த்ரிஷா பார்க்க நன்றாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார்.


    மகேஷ்பாபு அவருக்கு கொடுத்ததை அருமையாக செய்திருக்கிறார். ஆனால் ப்ரிவியூ பார்த்தாரா? என்றுதான் தெரியவில்லை. ஹாரிஸ் ஜெயராஜிற்கு அந்நியனும், தொட்டி ஜெயாவும் தெலுகில் டப்பிங்காகி விட்டது என்று யாராவது சொல்லியிருக்கலாம். ரீ-ரெக்கார்டிங்கிற்கு மனிதனுக்கு நேரமில்லை போலும் அப்படியே cntr-c, cntrl-v செய்துவிட்டார். இதில் முக்கியமான சண்டை காட்சிக்கு அந்நியனை அப்படியே போட்டுவிட்டார். அப்பரச்சித்துடு (அந்நியன்) தெலுகில் பயங்கர ஹிட்டென்று அவருக்கு யாரும் சொல்லாதது வருத்தமே...




    ஒக்கடு (கில்லி) இயக்கிய குணசேகரிடமிருந்து இந்த படம் வந்தது பலத்த ஏமாற்றமே! படத்தில் திரைக்கதையும், எடிட்டிங்கும் பயங்கர மோசம்.

    சரி யாரையாவது பாராட்டியே ஆகனுமே... கேமரா மேனையும், கிராபிக்ஸ்க்கான காட்சிகளுக்காக உழைத்த டீமையும் நிச்சயம் பாராட்டலாம். முதலமைச்சரிடம் மகேஷ் பாபு பேசும் இந்த குறிப்பிட்ட வசனங்கள் பிடித்திருந்தது.
    "வானத்திலிருந்து பார்க்கும் போது எல்லாமே பச்சையாத்தான் தெரியும். கீழ இறங்கி பார்த்தாதான் உண்மை புரியும்"
    "ஒரு கோடி எண்ண ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் ஒன்றிலிருந்துதான் எண்ண ஆரம்பிக்க வேண்டும்" (இது ஒரு மாணவர் MLA ஆனதற்கு க்ளைமாக்ஸில் பேசும் வசனம். ஆயுத எழுத்து வசனம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.)

    சரி கடைசியா நீ என்ன சொல்ல வரனு கேக்கறீங்களா? உங்களுக்கு மகேஷ் சுத்தமா பிடிக்காதா?. அவர் மேல பயங்கர வெறுப்பு அப்படினா நீங்க இந்த படம் பார்க்கலாம். அவர் கஷ்டப்பட்டு நடிச்சத எப்படி மோசமான திரைக்கதையால வீணாக்கியிருக்காங்கனு. யாம் பெற்ற துன்பம் யாரும் பட வேண்டாம் என்றே இந்த பதிவு!!!

    Saturday, December 02, 2006

    நெல்லிக்காய் - 6

    காய் 5

    அருண் நேராக அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று கார்த்திக் அருகில் அமர்ந்தான்.

    "ராஜி என்ன உன் முகத்த பார்த்தா அழுத மாதிரி தெரியுது. கார்த்திக் எதாவது திட்னானா? என்கிட்ட பயப்படாம சொல்லு நான் பார்த்துக்கறேன்"

    ராஜி அருணை முறைக்க முயன்று முடியாமல் அவளையும் மீறி சிரித்துவிட்டாள்.

    கார்த்திக் முகத்தை கடுமையாக வைக்க முயற்சி செய்து கொண்டு அருணிடம் பேசினான். "டேய்! ராஜிக்கிட்ட என்ன சொன்ன?"

    "ஏன்டா இப்ப உன் முன்னாடித்தானே சொன்னேன்? காதுல விழலய?"

    "இப்ப இல்லை. முன்னாடி காபி குடிக்கும் போது என்ன சொன்ன?"

    "நேத்து நைட் நடந்தத சொன்னேன்"

    "நேத்து நைட் என்ன நடந்ததுனு சொன்ன?"

    என்ன சொல்வதென்று தெரியாமல் ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு நிதானமாக பேசினான்.

    "அது இருக்கட்டும். நான் உன்னை பத்தி என்ன சொல்லிருந்தாலும் அவ ஏன் அழுவனும்?"

    அனைவரும் மௌனமாக இருந்தனர். இதற்கு ராஜியாலோ, கார்த்தியாலோ பதில் சொல்ல முடியவில்லை. அருண் மீண்டும் பேச துவங்கினான்.

    "ஏன்டா இது என்ன தமிழ் சினிமாவா? லவ் பண்ணிட்டு கடைசி வரைக்கும் யார்ட்டயும் சொல்லாம, கடைசியா ரெயில்வே ஸ்டேஷன்ல சொல்றதுக்கு. எனக்கு இந்த மாதிரி சொன்னா ஈஸியா அவ மனசுல இருக்கறத கண்டுபிடிக்கலாம்னு தோனுச்சு. நான் சொன்னேன். இப்ப என்ன நான் அவள்ட சாரி சொல்லனுமா? ராஜி, நான் சொன்னதெல்லாம் விளையாட்டுக்கு. ஐ யம் ஸாரி. போதுமா?"

    ராஜி பதட்டமாக பேச துவங்கினாள், "ஐயய்யோ அதெல்லாம் இல்லை அருண். நீ மட்டும் இந்த மாதிரி பண்ணலைனா நாங்க ரெண்டு பேரும் இப்படியேத்தான் கடைசி வரைக்கும் இருந்திருப்போம். ரொம்ப தேங்க்ஸ் அருண்"

    "தேங்ஸ் எல்லாம் இருக்கட்டும். சீட்ல இருந்து நம்ம வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது. அங்க மேனஜர் கேட்டா இன்கம்டேக்ஸ் டிப்பார்ட்மெண்ட்கு போயிருக்கோம் சொல்ல சொல்லிருக்கேன். நீங்க உங்க லவ்வ ஈவனிங் கண்டினியூ பண்றீங்களா? இப்ப சீட்டுக்கு போவோம்" அருண் சொல்லி முடிக்கவும் கார்த்திக் கோபமாக பார்த்தான்.

    "டேய் உன்னய மாதிரி நாங்க என்ன பெஞ்ச்லயா இருக்கோம்? திட்டறதா இருந்தா மதியம் திட்டு. அப்ப தான் ஒருத்தவங்க சந்தோஷப்படுவாங்க. நாங்க இப்ப கிளம்பறோம்" சொல்லிவிட்டு அருண் எழுந்திரிக்க ராஜியும் எழுந்திரித்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் கார்த்திக்கும் எழுந்திரித்தான்.

    "நான் உங்க கூட பில்டிங் வரைக்கும் வரனே" அவன் பரிதாபமாக சொன்னதை கேட்டு ராஜி சிரித்துவிட்டாள்.

    "உன்னய வராதனு சொன்னா கேக்கவா போற... வா" அருண் சொல்லிவிட்டு இருவருக்கும் காத்திருக்காமல் அவன் பில்டிங் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

    வார இறுதியன்று காலை 7 மணிக்கே எழுந்து வேகமாக கிளம்பினான் கார்த்திக்.

    அருண் படுக்கையிலிருந்தே கண்களை பாதி திறந்த நிலையிலே பேசினான்.

    "எங்கடா இவ்வளவு சீக்கிரம் கிளம்பற? யாராவது சொந்தக்காரவங்களை பார்க்க போறீயா?"

    "இல்லடா மச்சான். இன்னைக்கு நாங்க படத்துக்கு போறோம்டா. அவ காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்"

    "சரி என்ன படம்டா?"

    "வேட்டையாடு விளையாடு போகலாம்னு ப்ளான். ராஜி கமல் ஃபேன் தெரியும் இல்ல. என் ராசி எப்படியோ கமல் படம் ரிலிஸாயிடுச்சு"

    "வேட்டையாடு விளையாடா?" அவசரமாக படுக்கையிலிருந்து எழுந்திரித்தான் அருண்.

    "டேய்! நீ எதுக்கு எழுந்திரிக்கற? தூங்கு. வேணும்னா நான் உனக்கு நாளைக்கு ஷோக்கு டிக்கட் எடுத்துட்டு வரேன். நம்ம திரும்ப போகலாம்"

    கார்த்திக் சொன்னதை புரிந்து கொண்டு, "நாங்களும் இன்னைக்கு தான் பார்ப்போம். நான் ஒன்னும் உன் கூட வரலை. தனியா போறேன்" சொல்லிவிட்டு மீண்டும் படுத்துகொண்டான் அருண்.

    அரை மணி நேரத்திற்கு பிறகு அருணை எழுப்பினான் கார்த்திக்.

    "டேய் ராஜி இப்ப தான் போன் பண்ணா. அவ தனியா வரதுக்கு பயப்படறாடா. யாராவது பார்த்தா பிரச்சனையாயிடும்னு. அதனால தீபாவையும் கூப்பிட்டு வரனு சொல்லிருக்கா"

    "சரி அதுக்கென்ன இப்ப?" கோபமாக கேட்டான் அருண்.

    "இல்லடா. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கும் போது தீபாக்கு போர் அடிக்கும். அதனால நீயும் எங்கூட வரணும். ப்ளீஸ்டா. நீ கண்டிப்பா வருவேனு சொல்லிட்டேன்டா"

    "அவளுக்காக எல்லாம் என்னால வர முடியாது"

    "நீ அவளுக்காக வர வேண்டாம்டா. எனக்காக வாடா. ப்ளீஸ்! நீ எனக்கு பெஸ்ட் ஃபிரெண்ட் இல்லை. ப்ளீஸ்டா"

    "அதெல்லாம் முடியாதுடா. எனக்கு இப்ப தூக்கம் வருது" சொல்லிவிட்டு போர்வையால் தலையை மூடிக்கொண்டு தூங்கினான்.

    "நீ என் கூட இன்னைக்கு வந்தா உனக்கு படத்துக்கு டிக்கெட், லஞ்ச் எல்லாம் நான் ஸ்பான்சர். ஓ.கேவா?" இதை கேட்டதும் சந்தோஷமாக எழுந்து உட்கார்ந்தான் அருண்.

    "நைட் டின்னரும்னா ஓ.கே"

    "சரி வா. எழுந்து கிளம்பு"
    கார்த்திக் சொல்லியவுடன் எழுந்து வேகமாக கிளம்பினான் அருண்.

    ஜெமினி ஃபிளை ஓவர் அருகிலிருக்கும் சரவண பவனின் கிளையான ஸ்வாதிஸில் அனைவரும் சந்தித்தனர்.

    "ஸாரி லேட்டாயிடுச்சு" ராஜி பதட்டத்துடன் சொன்னாள்.

    "அதெல்லாம் பரவாயில்லை" வழிந்து கொண்டே சொன்னான் கார்த்திக்.

    அதை பார்த்த அருண்"ரொம்ப வழியாதடா! நாங்க டிக்கெட் ரிசர்வ் பண்ணியாச்சு. சீக்கிரம் சாப்பிட்டு போகலாம். வாங்க"

    உள்ளே சென்று அனைவரும் சாப்பிட துவங்கினர்.

    "கமல் எப்படியும் பட்டைய கிளப்பிருப்பாரு. போலிஸ் ட்ரெஸ்ல சான்சே இல்லாம இருக்காரு. பாரேன் இன்னும் வயசான மாதிரியே தெரியால" அருண் ஆர்வமாக சொல்லி கொண்டிருந்தான்

    "என்ன இருந்தாலும் எங்க மூன்று முகம் ரஜினி மாதிரி வருமா? இல்லை கொடி பறக்குது மாதிரி ஸ்டைல் வருமா?" தீபா நக்கலாக சொன்னாள்.

    "கொடி பறக்குதெல்லாம் ஒரு படம். அதை போய் வேட்டையாடி விளையாடோட கம்பேர் பண்றா பாரு. போலிஸ் ட்ரெஸ்ல எங்க தலைவரு குருதிப் புனல்ல வருவாரு பாரு. அந்த ரெஞ்சுக்கு வருமா?" கொஞ்சம் சீரியசாக பதில் சொன்னான் அருண்.

    "ஹலோ என்ன இருந்தாலும் எங்க சந்திரமுகி ரெக்கார்டா உங்க வேட்டையாடு விளையாடு ப்ரேக் பண்ண முடியுமா? இல்லை அதுல பாதியாவது வருமானு பாருங்க" தீபாவும் விட்டு கொடுக்காமல் வாதாடினாள்.

    "என்ன பேசற 4 நேஷனல் அவார்டு, 18 பிலிம் பேர் அவார்ட் வாங்கிருக்காரு. அவரோட 6 படம் ஆஸ்கருக்கு அனுப்பியிருக்காங்க. சொல்ல போனா முதல் படத்துலயே நேஷனல் அவார்ட் வாங்கிருக்காரு. உங்க ரஜினிய முதல்ல ஒரு நெஷனல் அவார்ட் வாங்க சொல்லு பார்க்கலாம்" தீபாவின் வாயை மூடுமளவுக்கு புள்ளி விவரங்களுடன் பேசினான் அருண்

    "இங்க பாரு. அவார்ட் முக்கியமில்ல. இதுல பணம் தான் முக்கியம். கமல வெச்சி படம் எடுத்து யாரும் பெரியாளானதா வரலாறில்லை. ஆனா எங்க தலைவர பாரு. எத்தனை நடிகர்கள் அவரை வெச்சி படம் எடுத்துருக்காங்க. எங்க தலைவர் பிளாப் படம் பாபா அளவுக்கு கூட உங்க தலைவர் ஹிட் படம் வசூலாகாது" அருணால் பேச முடியாத அளவுக்கு பேசினாள் தீபா.

    சரியாக அந்த நேரம் அவர்கள் சொல்லியிருந்ததை கொண்டு வந்து வைத்தார் ஹோட்டல் சப்ளையர்.

    "சரி சும்மா சண்டை போடாம சாப்பிடுங்க.ரெண்டு பேரும் பெரிய ஆளுங்க தான். அதுவும் இல்லாம ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். நீங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்தாதான் அவுங்களுடைய உண்மையான ரசிகர்கள்" நச்சென்று சொல்லிமுடித்தான் கார்த்திக்...

    "சண்டை போட்ட ஃபிரெண்ட்ஸ் இல்லைனு யார் சொன்னா?" வேகமாக சொன்னாள் தீபா...

    அருண் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்...


    (தொடரும்...)

    அடுத்த பகுதி