தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label software. Show all posts
Showing posts with label software. Show all posts

Sunday, March 28, 2010

குட்டிப் பாப்பா

அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.

இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.

“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”

உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.

தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.

“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.

அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.

“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”

“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.

அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.

”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”

“பாப்பானு எப்படி சொல்றீங்க?”

“எனக்கு ஜோசியம் தெரியும்”

“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”

“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”

“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”

“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”

”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”

“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”

“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”

“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்‌ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”

“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”

“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”

“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”

“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”

“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”

“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”

“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”

“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”

“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.

நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.

நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.

இது வரை என்னுடைய நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.

“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”

“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”

“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”

”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.

ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.

ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.

”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது

தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.

மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.

வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.

தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்

“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”

”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”

வைத்தேன்.

“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”

“”

“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”

“ஆகும்னு”

“தூக்கறாங்களாம். அதான்…”

“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”

“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”

“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”

“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”

“அப்பறம் என்ன பிரச்சனை?”

“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”

“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”

”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”

உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது. மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.

..................................


இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Thursday, June 18, 2009

மணல் கயிறு = Linked List

மணல் கயிறு படத்தை ரீமேக் பண்ண சொல்லி நம்ம புதுகை தென்றல் அக்கா விசு சாருக்கு ஒரு கோரிக்கை வெச்சிருந்தாங்க. விசு சார் பிஸியா இருக்கறதால நாமலே முயற்சி செய்வோம்னு கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட்

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணு போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே. போன பதிவுல அட்வைஸ் பண்ண பொண்ணு பேரையே (வித்யா) வெச்சிடுவோம்.

நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.

வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற. அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கெரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னமா நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான் வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3. பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான் மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டெலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?

வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும் வாய்ப்பிருக்கு. அதான்.

நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.

வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்...


------------------------

இதை இங்கயும் படிக்கலாம் :)

நான் எவ்வளவு சொல்லியும் என் பேரு முரளிதரன் தான், நான் திண்டுக்கல்ல இருக்குற ஒரு காலேஜ் Professorனு உலகத்துக்கு எடுத்து சொல்லும் சாருவுக்கும், விவாதங்களே பிடிக்காதபட்சத்திலும் எனக்கு அறிவுரைக் கூற தனது பொன்னான நேரத்தை வீணாக்கி என் மேல் இருக்கும் பாசத்தால் தனிப்பதிவு போட்ட என் அருமை நண்பர், உலகமகா எலக்கியவாதி தம்பி உமாக்கதிருக்கும் நன்றி :)

Thursday, June 11, 2009

ஒட்டுக் கேட்டதும் பாட்டுப் போட்டதும்!!!

நேத்து ஏதேச்சயா மேனஜர் ரூம் பக்கம் போயிட்டு இருந்தேன். பார்த்தா அங்க அவர் எங்க டீம் லீட் கிட்ட பேசிட்டு இருந்தாரு, என்னடா நம்மல பத்தி ஏதோ பேசறாரேனு பார்த்தா,

மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.


உடனே என் மனசுல பாட்டு கேட்க ஆரம்பிச்சிது.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


...........

இப்ப முழுப் பாட்டு

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை!
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மீசிக் ஸ்டார்ட் )

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே

அப்ரைஸல் பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!

ப்ரோமோஷன்களை பெறுவதெல்லாம்
ஜால்ரா அடிப்பதனாலே!!!


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


(மறுபடியும் மீசீக்)

(டீம் மெம்பர்ஸ் ஒன் பை ஒன்... ஹை பிட்ச்ல)

கால காலத்துக்கும் இப்படியே நாம சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க வேண்டியது தானா?

நாம மேனஜர் ஆகறது எப்ப?

இன்னும் எத்தனை நாளைக்கு தான் நாம கோடிங் பண்ணிட்டு இருக்கறது?

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே

ஓராயிரம் லைட் இயர் ஆகட்டுமே
நம் கோடிங்கின் ஸ்டாண்டர்ட் மட்டும் நிலைக்கட்டுமே
வரும் காலத்திலே நம் தலைமுறைகள்
நாம் சாப்ட்வேர் இஞ்சினியரில்லை என்ற முழங்கட்டுமே


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!


மேனஜர் : டீம் லீட்! சீக்கிரமே நம் கம்பெனி சொர்கபுரி ஆகிவிடும் போலிருக்கிறது.

டீம் லீட் : எல்லாம் இந்த சாப்ட்வேர் இஞ்சினியர்களின் உழைப்பால் தானே?

மேனஜர் : சந்தேகமென்ன? நமக்கு வாய்த்த டீம் மெம்பர்கள் மிக மிக திறமைசாலிகள். ஆனால் வாய் தான் காது வரை நீளம்.

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்

ஓப்பனிங்ஸ் ரெசஷனில் குறைந்திருக்கும்
சரியானதும் ரெஸ்யூமேக்கள் பாய்ந்திருக்கும்
நம் கோட் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று சாப்ட்வேர் இஞ்சினியர்கள் பலன் பெறலாம்.


ரெசஷன் என்பதெல்லாம்
அமெரிக்கா திவாலானதினாலே
கோடிங்கை செய்வதெல்லாம்
பில்லிங்கு வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்பவருக்கு வாழ்க்கையில்லை
லே ஆஃப் என்ற எண்ணம்
கொண்ட மேனஜர் வாழ்ந்ததில்லை!!!

அப்படியே இது மனசுல ஓடி முடியறதுக்கும், Balaji, Can you please do this?னு என் டீம் லீட் பிங் பண்றதுக்கும் சரியா இருந்தது.

அப்படியே தலைவர் பாட்டையும் பார்த்துட்டு போங்க...


Sunday, May 31, 2009

உரையாடல் போட்டிக்கான எனது சிறுகதை

சிறுகதைப் போட்டி என்றால் முடிந்த வரை கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். வெற்றி தோல்வி பற்றி பயம் இருந்தாலும் அதை விட கலந்து கொள்வதே மகிழ்வாக உள்ளது. பெரும்பாலும் என் கதைகள் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களம் கொண்டதாக இருப்பதாக ஒரு புகார் :). புதிதாக முயலும் பட்சத்தில், நன்றாக வருவதை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டும் என்பது எனது ஆசை.

போட்டி என்று வரும் பொழுது நான் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களமாக கொள்வது இல்லை. இந்த முறை அதையும் பொருட்படுத்தாது உரையாடல் போட்டிக்கு சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியையே களமாக வைத்து எழுதியிருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம், முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதை நான் உணர்ந்ததன் விளைவே.

Ethics, Values எல்லாம் வேலை செய்பவர்களுக்கே தவிர, நிறுவனங்களுக்கு இல்லை. அதைப் பதிவு செய்து வைப்பது என் கடமையாக நான் உணர்கிறேன். நாளை உலக பொருளாதாரம் சரியாகும் பட்சத்தில், புதிதாக வேலையில் வருபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்து பிறகு ஆப்பை அசைத்த குரங்கு போல மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.

ரொம்ப பேசாதடா வெண்ட்ரு. கதை எங்கனு கேட்டீங்கனா... கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Monday, May 25, 2009

சாப்ட்வேர் சக்கரம்!!!

காலங்காத்தால ஃபோன் பண்றதே இந்த அம்மாவுக்கு வேலையாப் போயிடுச்சி.

”என்னய்யா தூங்கிட்டு இருக்கியா?”

”இல்லை கபடி ஆடிட்டு இருக்கேன். ஏம்மா. எத்தனை தடவை சொல்லிருக்கேன். காலைல ஏழு மணிக்கு முன்னாடி ஃபோன் பண்ணாதீங்கனு. என்ன விஷயம்”

“இல்லய்யா, அந்த ரவி மாமா இருக்காரு இல்லை”

“ரவி மாமாவா? யார் அது?”

“என் அண்ணனோட சகலடா”

“சரி அவருக்கு என்னம்மா? சீக்கிரம் சொல்லுங்க. நான் இன்னும் ஒரு அரை மணி நேரம் தான் தூங்க முடியும்”

“உன் அத்தையோட தங்கச்சிப் பொண்ணு மீனாக்கு உங்க கம்பெனில வேலைக் கிடைச்சிருக்காம்”

“சரி. அதுக்கு?

“இப்ப தான் முதல் முறையா பெங்களூர் வருதாம். நேத்து தான் ரவி மாமா ஃபோன் பண்ணி விசாரிச்சாரு. நான் உன் நம்பரைக் கொடுத்திருக்கேன். ஏதாவது உதவி கேட்டா பண்ணுப்பா. சரியா?”

”ஏம்மா இப்படி எல்லாருக்கும் நம்பர் கொடுக்கற? எனக்கு இருக்குற வேலைக்கு அதெல்லாம் பண்ண முடியுமானு தெரியலை. காலைல எட்டரைக்கு போனா ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு தான் வரேன்”

“பாவம்யா. தனியா ஊரை விட்டு வருது. முடிஞ்ச வரைக்கும் உதவி பண்ணுயா. சரியா?”

“சரி சரி. இனிமே ஊருல இருந்து யாராவது வராங்கனு நம்பர் கொடுக்காதீங்க. நான் ராத்திரி பண்ணறேன்”

பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். கண்ணை மூடியவுடன் டார்டாய்ஸ் சுத்த துவங்கியது, திருக்கோவிலூர் தனலட்சுமி கல்யாண மண்டபத்தில் கொண்டு போய் என்னை நிறுத்தியது. நான் புது சட்டை, டிராயர் போட்டிருந்தேன். எனக்கு ஒம்பது வயதிருக்கலாம். அந்த அறை முழுக்க பெண்கள்.அந்த சிகப்பு, நீலம், வெள்ளை கலர் நிறைந்த ஜமக்கலத்தில் என் அக்காவுடன் அமர்ந்து  புளியங்கொட்டைகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தேன். 

“ஏய் என் அத்தை மடியில நீ ஏண்டி படுத்திருக்க. எழுந்திரிடி” பானுவின் குரல்.

“ஏய் இது ஏன் அத்தை. நான் எழுந்திரிக்க மாட்டேன்” மீனாவின் குரல்

“அத்தை! நீங்க எனக்கு தானே அத்தை. அவளுக்கு நீங்களே சொல்லுங்க அத்த” பானு என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நான் ரெண்டு பேருக்கும் அத்தை தான்மா. நீ வேணா இந்த மடில தலை வெச்சி படுத்துக்கோ” சொல்லிவிட்டு பானுவை படுக்க வைத்தார்கள்.

“என்னடி இப்பவே ரெண்டு பேரும் அத்தைக்கு சண்டை போடறீங்க. நாளைக்கு யாரு வினோத்தை கல்யாணம் பண்ணிக்க போறாங்களோ அவுங்களுக்கு தான் அவுங்க அத்தை. யாரு கட்டிக்கறீங்க சொல்லுங்க” பக்கத்திலிருந்த காந்தா பாட்டி சொல்லிவிட்டு சிரித்தாள். இதை கேட்டதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வேகமாக எழுந்து என் அம்மா அருகே சென்றேன்.

“ஏய் ரெண்டு பேரும் எழுந்திரிங்க. இது எங்க அம்மா. நான் தான் எங்கம்மா மடில தலை வெச்சி படுப்பேன். வேணும்னா நீங்க ரெண்டு பேரும் உங்க அம்மா மடில தலை வெச்சி படுத்துக்கோங்க. எழுந்திரிங்க” சொல்லிவிட்டு எட்டி உதைக்க ஆரம்பித்தேன். பானு எழுந்துவிட்டாள். அதற்குள் காந்தா பாட்டி என்னை கையை பிடித்து இழுத்துவிட்டார்கள்.

“பொம்பளை புள்ளைங்களை இப்படி எட்டி உதைக்கலாமா? மகாலஷ்மிங்கப்பா. இப்படி எல்லாம் பொம்பளை புள்ளைங்களை எட்டி உதைச்சா தரித்தரம் வந்துடும்பா. இனிமே என்னைக்கும் இப்படிப் பண்ணாத. புரியுதா” அதட்டினார்கள்.

“அப்பறம் நான் சொன்னா எழுந்திரிக்க வேண்டியது தானே. எங்கம்மா மடில எதுக்கு அதுங்க தலை வெச்சி படுக்கணும்?”

“அவுங்க அத்தை மடில தலை வெச்சி படுத்திருக்காங்க. அத்தை மடி மெத்தையடினு பாட்டு கூட இருக்கே. நீ வேணும்னா போய் உங்க அத்தை மடில படுத்துக்கோ. இல்லைனா வெளிய போய் விளையாடு. போ” துரத்திவிட்டார்கள். நானும் கோபத்தில் மீண்டும் ஒரு முறை படுத்திருந்த மீனாவை எட்டி உதைத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். 

அதற்கு பிறகு அவளை பார்த்த நியாபகம் இல்லை. அவளைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுவதோடு சரி. என் அக்கா கல்யாணத்திற்கு கூட ரவி மாமா தான் வந்தாரே தவிர மீனா வரவில்லை.

குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பினேன். சரியாக எட்டரை மணிக்கு என் சீட்டில் இருந்தேன். ஆன்சைட் கால் ஆரம்பித்து ஒரு மணி நேரம் சென்றது. அவன் வாங்கிய திட்டை 10x ஆக மாற்றி எங்களுக்கு கொடுத்து கொண்டிருந்தாள். அதை நான் 20x ஆக மாற்றி டீமில் இருக்கும் ஜூனியர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். 

சரியாக பனிரெண்டரை மணிக்கு என் செல்போன் சிணுங்கியது.

“ஹலோ வினோத்?”

“யெஸ் ஸ்பீக்கிங்”

“நான் மீனா பேசறேன்”

“மீனா? எந்த மீனா”

ஃபோன் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.  அது தமிழ்நாடு நம்பர். இன்னும் பெங்களூர் நம்பர் வாங்கவில்லை போல. 

மறுபடி நான் அழைத்தேன்.

“மீனா, ஐ அம் டெரிபலி சாரி. காலைல அம்மா சொன்னாங்க. டென்ஷன்ல மறந்துட்டேன்”

“பரவாயில்லை. எனக்கும் என்ன ரிலேஷன்னு சொல்லனும்னு தெரியலை. அதான் வெச்சிட்டேன்”

“ஹா ஹா ஹா. தட்ஸ் ஃபைன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் வரேன்”

பில்டிங் நம்பரை சொன்னாள். ட்ரைனிங் பில்டிங் தான். 

வேகமாக ட்ரெயினிங் பில்டிங்கை நோக்கி நடந்தேன். அங்கே இருந்த கூட்டத்தில் யார் மீனா என்று தெரியவில்லை. அவள் எண்ணுக்கு அழைத்தேன். லைட் மஞ்சள் நிற சுடிதார் போட்டு சோபாவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணுடைய செல்ஃபோன் சிணுங்கியது. அது தான் மீனாவாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன். ஆனால் அந்த பெண் வடநாட்டுக்காரி போல் இருந்தாள். 

”ஹலோ கிருஷ்ணா”

என் பின்னாலிருந்த படியிலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். வெள்ளை நிற சுடிதாரில் தேவதை மாதிரி தெரிந்தாள் மீனா என்று சொல்லுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் இன்னும் பாரதிராஜா படத்திலிருந்து வெளி வரவில்லை என்று அர்த்தம். 

“மீனா?”

”யெஸ்”

“வெஜ்ஜா நான் வெஜ்ஜா?”

“என்னது?”

“வெஜ் சாப்பாடு வேண்டுமா நான் வெஜ் சாப்பாடு வேணுமானு கேட்டேன். அதுக்கேத்த ஃபுட் கோர்ட்க்கு போகலாம்”

“வெஜ்”

“அப்ப பக்கத்துல இருக்கற ஃபுட் கோர்ட்டேக்கே போகலாம்”

வழியில் எதுவும் பேசாமல் ஏதோ சிந்தனையிலே வந்தாள்.

சாப்பாடு வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தோம்.

“சொல்லுங்க மீனா. ட்ரெயினிங் எல்லாம் எப்படி போகுது?”

“சொல்லுங்கவா? நான் உங்கள விட சின்ன பொண்ணு. மோர் ஓவர் நீங்க எனக்கு அத்தைப் பையன். அந்த ஞாபகம் இருக்கா?”

“அத்தைப் பையனா? இது என்ன காமெடியா இருக்கு. பானுக்கு தான் நான் அத்தைப் பையன். என்ன ஞாபகம் இல்லையா?”

முறைத்தாள்.

“சரி சரி. சாப்பிடு”

“சாப்பிட்டு தான் இருக்கேன். அப்பறம் உங்களால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியல தானே? நான் எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?”

“என்ன பண்றது நான் அப்ப மாதிரியே இருக்கேன். நீ தான் ஆளே மாறிட்ட?”

“நிஜமாவா?”

“ஆமாம். சின்ன வயசுல அழகா சின்னதா குட்டி குரங்கு மாதிரி இருந்த”

“ஏய்ய்ய்”

“இரு சொல்லி முடிக்க விடு”

“சொல்லுங்க”

“இப்ப பெரிய குரங்கா மாறிட்ட”

கைல வெச்சிருந்த ஸ்பூனால அடிச்சிட்டா. 

”அப்பறம் உனக்கு எல்லாம் எந்த அறிவாளி இந்த கம்பெனில வேலை போட்டு கொடுத்தான்?”

”ஹான்...உங்களுக்கே ஒரு அறிவாளி வேலை கொடுக்கும் போது எனக்கு கொடுக்காமலா போயிடுவான். அது மட்டுமில்லாமல் இந்த கம்பெனிக்குனே நான் தனியா ப்ரிப்பேர் பண்ணேன்”

“ஏன்?”

“சும்மா தான்”

“நம்பிட்டேன்”

“நல்லது”

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து அவளை ட்ரைனிங் பில்டிங்கில் விட்டு வந்தேன். அவள் நினைவாகவே இருந்தது. சின்ன வயசுல எல்லாம் இவ்வளவு துடுக்குத்தனமா பேசின மாதிரி நியாபகமில்லை. ஒரு வேளை சின்ன வயசுல பயமா கூட இருந்திருக்கலாம்.

சரியாக ஐந்து மணிக்கு செல் ஃபோன் சிணுங்கியது. மீனா தான்.

“எனக்கு அஞ்சே காலுக்கு பஸ் இருக்கு”

“சரி”

“நான் அதுல போகவா?”

“ஒரு வாரம் கெஸ்ட் அவுஸ் தானே?”

“ஆமாம்”

“அடுத்து?”

“PG தேடணும். நீங்க ஹெல்ப் பண்றீங்களா?”

“நான் வேணா வீடு எடுக்கறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தங்கிக்கலாம்”

“”

“ஏய் சும்மா சொன்னேன். டென்ஷன் ஆகாத. வெயிட் பண்ணு. ஒரு சிக்ஸ் தேர்ட்டிக்கா கிளம்பலாம். நான் வண்டிலயே உன்னை கொண்டு போய் விடறேன். ஓகேவா?”

“ஹ்ம்ம்ம். அதுவரைக்கும் நான் எங்க வெயிட் பண்றது?”

“என் பில்டிங்கு வா. ஆனா எதுவும் தொந்தரவு பண்ணக்கூடாது. சரியா?”

“நான் எதுவும் தொந்தரவு பண்ணமாட்டேன். சமத்தா இருப்பேன்”

“சரி கீழ வந்து ரிசப்ஷன்ல இருந்து கூப்பிடு. நான் வந்து கூப்பிட்டு போறேன்”

அவளை என் க்யூபிக்களுக்கு அழைத்து வந்து அருகில் உட்கார சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியவில்லை. வேலை முடிந்த வரை ஆன்சைட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு புறப்பட்டோம்.

”அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா மாமா?”

“ஓய்... என்னது மாமாவா? ஒதை வேணுமா?”

“அப்பறம் வேற எப்படி கூப்பிடறது?”

“அத்தான்னு கூப்பிடு”

“நிஜமாவா? பக்கத்துல யாராவது கேட்டா சிரிக்க மாட்டாங்க?”

“ஏய்... சும்மா சொன்னேன். வினோத்னு கூப்பிடு”

“எப்பவுமேவா?”

“ஆபிஸ்குள்ள மாமானு கூப்பிடாத. புரியுதா?”

“அப்ப வெளிய கூப்பிடலாமா?”

“உன் ட்ரெயினர் கிருஷ்ணா எனக்கு ஃபிரெண்ட் தான். ட்ரெயினிங்ல பாஸ் ஆகணும்னு ஆசையில்லையா? ”

”சரி சரி இனிமே கூப்பிடல”.

அவளை என்னுடைய டூ-வீலரில் அழைத்து கொண்டு
 சில PGக்கு அழைத்து சென்று காண்பித்தேன். மாதம் இரண்டாயிரத்தி ஐநூறிலிருந்து நான்காயிரம் வரை இருந்தது. பொதுவாக ரூமிற்கு இரண்டு அல்லது நான்கு பெட். வீக் டேல பிரேக் ஃபாஸ்ட், டின்னர். வீக் எண்ட்ல லஞ்ச். எல்லாமே கேவலமா இருக்கும்னு தங்கியிருந்தவங்கல தனியா விசாரிச்சதல சொன்னாங்க. எப்படியும் ரெண்டு நாள்ல முடிவு பண்ணிடலாம்னு விட்டுட்டோம். 

மணி எட்டாகியிருந்தது. அப்படியே சுக் சாகரில் ஆளுக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு அவளை கெஸ்ட் அவுஸில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வந்ததிலிருந்து அவள் நினைவாகவே இருந்தது. அவள் காலையிலிருந்து பேசியதெல்லாம் மீண்டும் ஒரு முறை மனதில் ஓடியது. எனக்கு இத்தனை வருடத்தில் அவளை பற்றிய நினைவு பெரிதாக வந்ததில்லை. 

எங்க அக்கா மட்டும் ஒன்றிரண்டு முறை அம்மாவிடம், மீனாவை நம்ம வீட்டுக்கு மருமகளா கூப்பிட்டு வந்திடலாம். நல்ல பொண்ணுனு சொல்லிட்டு இருப்பாங்க. அதுக்கு அம்மா, யாருக்கு யார்னு நம்ம கைல என்னமா இருக்கு. அதெல்லாம் நடக்கற அப்ப பார்த்துக்கலாம்னு சொல்லுவாங்க. அப்பவெல்லாம் என் மனசுல பெருசா எதுவும் தோன்றியது இல்லை. இன்னைக்கு ஒரே நாள்ல நானே மாறிட்டேன். எப்படியும் அக்காவை வெச்சி வழிக்கு கொண்டு வந்திடலாம். இல்லைனா பாவாக்கிட்ட சொல்லிக்கூட சொல்ல சொல்லலாம். மருமகன் பேச்சுக்கு வீட்ல எதிரா யாரும் பேசமாட்டாங்க.

அதுக்கு எல்லாம் முன்னாடி அவள் மனசுல என்ன இருக்குதுனு தெரிஞ்சிக்கனும். இது வரைக்கும் அவள் பேசினது தான் என்னை இப்படியே யோசிக்க வெச்சிருக்கு. இருந்தாலும் கடைசியா நான் உங்களை ரிலேட்டிவாதான் நினைச்சேனு சொல்லிட்டா, அலைபாயுதேல வர கார்த்திக் மாதிரி பல்பு வாங்க முடியாது. அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்குவோம். அதுக்கு அப்பறம் வீட்ல பேசலாம். 

இதுக்கெல்லாம் இப்ப அவசரம் இல்லை தான். ஆனா இப்படி ஒரு குழப்பத்துல என்னால இருக்க முடியாது, அவக்கிட்ட இப்படி ரெண்டுங்கெட்டான் தனமாவும் பேச முடியாது . இந்த வீக் எண்ட் எப்படியும் மீனாவோட தான் ஸ்பெண்ட் பண்ற மாதிரி இருக்கும். எப்படியும் அப்ப பேசிடலாம். இந்த வீக் எண்ட்ல எல்லாம் தெளிவாகிடலாம். அப்படி எதுவும் எண்ணம் அவளுக்கு இல்லைனாலும் ஓகே தான். இப்பவே எஸ்ஸாகிடலாம். மனசுல ஆசையை வளர்த்துக்கறது நியாயம் இல்லை. அவ ஆமாம்னு சொன்னா எப்படி இருக்கும். ஹார்ட்ல ஆக்சிஜன் சப்ளை குறைந்த மாதிரி இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டேன். வார இறுதிக்காக ஆர்வமாக காத்திருந்தேன்.

நான்கு நாள் ஓடிய வேகமே தெரியவில்லை. யாரோ கடிகார முள்ளை கையால வேகமா சுத்திவிட்ட மாதிரி இருந்தது. வெள்ளிக்கிழமை சரியாக நான்கு முப்பது ஆகியிருந்தது. திடிரென்று ராமகிருஷ்ணா ஹெக்டேவிடமிருந்து மெயில். அவர் க்யூபிக்கலிளிருந்த பக்கத்து கான்ஃபரன்ஸ் அறைக்கு வர சொல்லியிருந்தார்.
சரியாக ஐந்து நிமிடத்தில் அங்கு இருந்தேன். அவர் அங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த அறைக்கு அவர் இது வரை வர சொல்லியிருந்த நேரங்களில் அங்கு கொண்டாட்டங்கள் தான் இருக்கும். இன்று என்ன கொண்டாட்டமென்று தெரியவில்லை. இன்று மீனாவுடன் ஏதாவது படத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். எங்கே நேரமாகிவிடுமோ என்று பயம்.

சரியாக நான்கு நாற்பத்தைந்திற்கு அவர் வந்து சேர்ந்தார். பொறுமையாக பேச ஆரம்பித்தார். குலோபல் எக்கனாமிக் கண்டிஷன்களினால் கம்பெனி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சில நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டிய நிலை கம்பெனிக்கு வந்துள்ளதாகவும், அதை ஒவ்வொரு கட்டமாக செய்ய வேண்டிய நிலையில் இன்று எங்களை நீக்குவதாகவும் தெரிவித்தார். அங்கே திடீரென்று சலசலப்பு  எழுந்தது. ஒவ்வொருவரும் எப்படி எங்களை அதில் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார்கள். இது ஒவ்வொரு ப்ராஜக்டிலும் சீனியர் மேனஜர்கள் மேனஜர்களுடன் பேசி எடுத்த லிஸ்ட். இதை எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார். எங்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் இருப்பதாக தெரிவித்தார்.

ஒன்று தற்கொலை. மற்றொன்று கொலை.

அங்கே யாருக்கும் சிந்திக்க நேரமில்லை. அனைவரும் மேனஜரை ஃபோனில் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். யாரும் எடுக்கவில்லை போல. அனைவரையும் அங்கே ஒரு ஃபார்ம் கொடுத்து அதை நிரப்பிவிட்டு கிளம்ப சொன்னார்கள். யாரும் அவர் இடங்களுக்கு செல்ல கூடாது. அரை மணி நேரத்தில் கம்பெனியை விட்டு வெளியேறிவிட வேண்டும். அவர்களின் 
பொருட்கள் அவர்கள் கொடுத்துள்ள விலாசத்திற்கு வந்து சேரும். அனைவரும் அவர்களுடைய டேக் (ஐடி கார்ட்)ஐ கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. இப்படி ஒரு நிலை வரும் என்பதை யாரும் யூகிக்கவில்லை. என்னையும் சேர்த்து தான். இந்த டைட்டானிக் கப்பல் மூழ்குமா என்று இறுமாந்திருந்த கேப்டன் எட்வர்ட் ஸ்மித் நிலைக்கு நாங்களும் ஆளாகியிருந்தோம்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தவிர்த்தோம். தரையைப் பார்த்து கொண்டே பில்டிங்கை விட்டு வெளியே வந்தேன். கடைசி ஒரு முறையாக கம்பெனியை சுற்றி நடந்தேன். ஒவ்வொரு இடமும் ஒரு நிகழ்ச்சியை நினைவுப்படுத்தியது. ஃபுட் கோர்டில் இருந்த காபி டே, பல ட்ரீட்களை நியாபகப்படுத்தியது. பல சிரித்த முகங்கள் நினைவில் வந்து மறைந்தன.

 என் பிறந்த நாள் கொண்டாட்டத்தன்று அங்கு அனைவரும் என் முகத்தில் தடவிய கேக் சுவை நாவில் தோன்றி மறைந்தது. கால் செண்டர் பில்டிங் அருகே நடந்து கொண்டிருந்தேன். எத்தனை நாட்கள் இரவு ஒன்று இரண்டு மணி வரை வேலை பார்த்து இவர்களுடன் சேர்ந்து இரவு பணிரெண்டு மணிக்கு சுட சுட சாப்பிட்டது நினைவிற்கு வந்தது. மீண்டும் நான் வேலை செய்யும் பில்டிங் அருகே வந்து நின்றேன். ஐடி கார்ட் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இங்கு கோடிங் செய்து கொண்டிருந்தேன். 

மீனாவிடமிருந்து அழைப்பு வந்தது. அதை தவிர்த்து வீட்டிற்கு சென்றேன்.

இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. மீனாவிடமிருந்து நான்கைந்து SMSகள் மற்றும் மிஸ்ஸிடு கால்கள். அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் எனக்கு வேலை போய் விட்டதை என்னால் ஜீரணிக்கவும் முடியவில்லை. அன்று வந்திருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்து பார்வையை ஓட்டினேன்.

அங்கே கொட்டை எழுத்தில் இருந்தது என் கவனத்தை ஈர்த்தது. 

”****** நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பத்தாயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது” 

Thursday, February 26, 2009

எதிர்பார்ப்பு!

பெங்களூர்வாசிகளை இன்னும் என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. காலையில் எப்படி கேசரியையும், உப்புமாவையும் ஒரே சமயத்தில் சாப்பிடுகிறார்கள் என இன்று வரை புரியவில்லை. பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று ஏமாந்து நானும் ஒரு முறை சவ் சவ் பாத் வாங்கியிருக்கிறேன். அதிலிருந்து இந்த மாதிரி பெயருக்காக வாங்குவதை நிறுத்திவிட்டேன். இன்றும் எனக்கு முன்னால் டோக்கன் வாங்கியவன் ஏமாந்து வாங்கினானா என்று தெரியவில்லை. சொல்லிவிடலாமா என்று பார்த்தேன். ஆனால் வழக்கம் போல வாய் வரை வந்த வார்த்தை நின்றுவிட்டது.

இந்த ரெசஷன் சமயத்தில் அவசரப்பட்டு மேனஜரிடம் சண்டை போட்டு கம்பெனி மாறியது தவறு என்று மனதிற்குள் உறுத்தி கொண்டிருக்கிறது. பெரும்பாலும் கம்பெனி மாறுபவர்கள் காசுக்காகவோ, பதவி உயர்விற்காகவோ மட்டும் மாறுவதில்லை. அவர்கள் மேனஜரிடம் அவர்களுக்கு ஏற்படும் மனக்கசப்பு தான் முக்கியமான காரணமாக இருக்கும். நான் இந்த கம்பெனிக்கு வந்து சரியாக இன்றோடு பத்து நாள் ஆகிறது. இன்னும் பிராஜெக்டில் போடவில்லை. பிராஜெக்டில் இருந்தால் யாராவது நண்பர்களாவது கிடைத்திருப்பார்கள். இப்பொழுது தனியாகவே சாப்பிட வருகிறேன். புது நிறுவனத்தில் சேருவதற்கும் புது பள்ளியில் சேர்வதற்கும் பெரிதாக வித்தியாசமில்லை. உடனே நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். 

தோசை வாங்கிவிட்டு சட்னி சாம்பார் வைத்திருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு தான் அந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்தது. விபத்து என்ற பிறகு எதிர்பாராததாகத்தானே இருக்க முடியும். அருகிலிருக்கும் தோழியுடன் பேசிக்கொண்டே அந்த பெண் வேகமாக திரும்ப அவள் கையில் வைத்திருந்த தட்டு என் மேல் பட்டு அதிலிருந்த சாம்பார் எல்லாம் என் மேல் கொட்டியது. 

சரியாக இன்று பார்த்து கருப்பு கலர் பேண்ட் போட்டு வந்திருந்தேன். அதில் மஞ்சள் நிற சாம்பார் அழகாக நிறத்தை பிரித்து காட்டியது. அந்த பெண் முகம் பயத்திலும், குற்றவுணர்ச்சியிலும் சிவந்தது. அங்கே இருந்த அனைவரது கண்களும் எங்கள் மேல் விழுந்தது.


நான் உடனடியாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து நேராக கை அலம்பும் இடத்திற்கு சென்று முடிந்த வரை சாம்பாரை பேண்டிலிருந்து துடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு பெண் குரல் கேட்டது.

“I am terribly sorry. Can you please wait here for 2-3 mins? I will be back soon” சொல்லிவிட்டு வேகமாக சென்றாள். அவளுடன் அவள் தோழியும் வேகமாக சென்றாள். கடைசியாக ஒரு முறை என்னை திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்.

பொறுமையாக சட்டை, பேண்டை கைக்குட்டையை வைத்து தண்ணியால் துடைத்து முடித்திருந்தேன். சாம்பார் கறை ஒட்டி கொண்டிருந்தது. தண்ணிர் பட்டு கருப்பு நிறம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது. ஐந்து நிமிடத்தில் வேகமாக நடையும், ஓட்டமுமாக வந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு ப்ளாஸ்டிக் பை. அதிலிருந்த வட்டத்தை துளைத்திருந்த கோடு அது Indigo Nation பை என்று காட்டி கொடுத்தது. 

"I am very very sorry. Please take this" சொல்லிவிட்டு அந்த பையை நீட்டினாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் அந்த பையை அவள் கையிலிருந்து வாங்கினேன். உடனே வேகமாக சென்றுவிட்டாள். சரியாக அவளுடையை ஐடி கார்டில் அவள் பெயரை பார்த்துவிட்டேன். மீனாட்சி கோவிந்தராஜன். தமிழ் பெண் தான் என்பது தெளிவாக அவள் முகத்திலும் அவள் பேசிய ஆங்கிலத்திலும் தெரிந்தாலும், அவள் பெயரை வைத்து உறுதிபடுத்தி கொண்டேன்.

முதல் வேலையாக பாத் ரூம் சென்று அவள் வாங்கி வந்த துணியை எடுத்து பார்த்தேன். எனக்காகவே அளவெடுத்து தைத்தது போலிருந்தது. பேண்ட் சர்ட் நிறமும் நன்றாக இருந்தது. அடர் பச்சை நிறத்தில் சட்டையும், க்ரீம் கலர் பேண்டும் இருந்தது. க்ரீம் கலரீல் இது மூணாவது பேண்ட். நல்ல வேளை அந்த நிறத்தில் சட்டையில்லை. முதல் வேலையாக அவளுடைய எக்ஸ்டென்ஷன் நம்பரை கம்பெனி சைட்டில் தேடினேன். எங்கள் நிறுவனத்தில் ஒரே மீனாட்சி கோவிந்தராஜன் அவள் தான். அதனால் எளிதாக அவள் எண் கிடைத்தது. ஆனால் அவளை அழைக்கலாமா வேண்டாமா என்ற ஒரு தயக்கம் இருந்தது. 

மதியம் சாப்பிடுமிடத்தில் அவளை என் கண்கள் தேடியது. இவ்வளவு கூட்டத்தில் அவளை சந்திப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது. ஒரு வேளை தமிழ் சினிமாவாக இருந்தால் இது சாத்தியப்படலாம். அடுத்த நாள் காலையிலும் அதே நேரத்திற்கு வந்து தேடி பார்த்தேன். ஒரு ஐந்து நிமிடம் சாம்பார் வைக்குமிடத்தில் காத்திருந்தும் அவளை காண முடியவில்லை. மதியமும் அப்படியே ஓடியது.

சாயந்திரம் 4 மணி வாக்கில் அவளுக்கு நானே அழைத்தேன்.

“ஹலோ மீனாட்சி ஹியர்”

“ஹலோ. நான் கிருஷ்ணா பேசறேன். நேத்து காலைல சாம்பார் கொட்டினீங்களே. அவர் தான்”

ஒரு சில நோடிகள் தயக்கத்திற்கு பின் பேச்சு வந்தது.

“ஐ அம் சாரி. தெரியாம பண்ணிட்டேன். அங்க நிக்கறதுக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. அதான் வேகமா பையை கொடுத்துட்டு வந்துட்டேன்”

“நீங்க கொஞ்சம் ஃபிரியா இருந்தா ஃபுட் கோர்ட்டுக்கு வர முடியுமா?”

எதுவும் பதில் வரவில்லை.

“கவலைப்படாதீங்க. ஆள் எல்லாம் வெச்சி தூக்க சொல்ல மாட்டேன்”

“ஐயோ அதெல்லாம் இல்லை. இப்ப ஒரு மீட்டிங் இருக்கு. ஒரு அரை மணி நேரமாகும்”

“பரவாயில்லை. அரை மணி நேரத்துல வாங்க போதும்” சொல்லிவிட்டு வைத்து விட்டேன். சரியாக இருபத்தி ஐந்தாவது நிமிடத்தில் அங்கு இருந்தேன். அவள் எனக்கு முன்பே வந்துவிட்டாள் போலிருக்கிறது. அவளுடன் அவள் தோழியும் இருந்தாள். டீ வாங்கி கொண்டு அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்றேன். 

மெலிதாக புன்னகைத்தவாரே பேச ஆரம்பித்தாள்.

“தெரியாம பண்ணிட்டேன். சாரிங்க”

“சாமி. எத்தனை தடவை தான் இதையே சொல்வீங்க. நீங்க இத்தனை தடவை சொல்றதை பார்த்தா உங்க ஃபிரெண்ட்கிட்ட பெட் கட்டிட்டு கொட்டின மாதிரி இருக்கு”

“ஐயய்யோ. அப்படியெல்லாம் எதுவுமில்லை” இருவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

“சும்மா சொன்னேங்க. நீங்க கொட்டினது தெரியாம நடந்ததுனாலும், உடனே அதுக்கு பொறுப்பேத்து எனக்கு புது துணியை வாங்கிட்டு வந்து கொடுத்த பண்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்கு நன்றி சொல்லிட்டு, அந்த துணிக்கு காசு கொடுத்துட்டு போகலாம்னு தான் கூப்பிட்டேன்” பையிலிருந்து ஆயிரத்தி அறுநூறு ரூபாயை எடுத்தேன்.

“வேண்டாங்க. அதெல்லாம் எதுக்கு. நான் செஞ்ச தப்புக்கு தான் அதை வாங்கி கொடுத்தேன்”

“சாம்பார் தானங்க கொட்டினீங்க. என்னுமோ ஆசிடா கொட்டினீங்க. அந்த பேண்டை துவைச்சா அந்த கறை போயிட போகுது. துணியே வீணா போகுற மாதிரி ஏதாவது பண்ணிருந்தா நீங்க சொல்றது சரி. நான் அதை மறுபடியும் பயன்படுத்த தானே போறேன். அதனால உங்களுக்கு குற்றவுணர்ச்சி வேண்டாம். வாங்கிக்கோங்க”

தயங்கியவாரே என் கையிலிருந்த காசை வாங்கி கொண்டாள். 

”சரிங்க நான் வரேன்” சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன்.

இரண்டு நாட்கள் சென்ற நிலையில் திடீரென்று ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள சொல்லி மேனஜரிடமிருந்து மின்மடல் வந்திருந்தது. அதை முடித்துவிட்டு 7:15 பேருந்தில் கிளம்பினேன். ஜன்னலருகில் அமர்ந்திருந்தேன். திடீரென்று என்னை கடந்து சென்ற ஒரு உருவம், மீண்டும் முன்னால் வந்து என் அருகில் அமர்ந்தது. அது நீங்கள் எதிர்பார்த்தது போல் மீனாட்சி தான். தேடிய பொழுது எல்லாம் கண்ணில் படாமல், நினைக்காத பொழுது வந்து என் அருகில் அமர்கிறாள். இதை தான் விதி என்பார்கள்.

விதி பேச ஆரம்பித்தது.

“எப்படி இருக்கீங்க?”

“நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”

சத்தம் போட்டு சிரித்தாள். குழந்தைகளும், பெண்களும் சிரிக்கும் போது நம் பார்வையை அதிலிருந்து விலக்குவது அரிது என்று தோன்றியது.

பிறகு ஒரு மணி நேரம் எங்களுடைய வரலாற்றை பேசிக்கொண்டு சென்றோம். முதன் முதலாக பெங்களூர் டிராஃபிக் ஜாமிற்கு நன்றி சென்னேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில்தான் அவள் தன் தோழியுடன் PGயில் தங்கியிருக்கிறாள். அவள் தினமும் காலை அவள் 7:55 பேருந்தில் வருவதாக சொன்னாள். நான் வேலை இல்லாததால் 9 மணிக்கு வந்து கொண்டிருந்தேன். என்னால் 7:55க்கு வர முடியுமா என்று கேட்டாள். பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். 

சரியாக அலாரம் 7 மணிக்கு அடிக்க, 7:45க்கு பேருந்து நிலையத்திலிருந்தேன். 8 மணி பேருந்தில் ஏறினேன். இரண்டு பேர் இருக்கையில் மீனாவும் அவள் தோழியும் அமர்ந்திருந்தனர். நேத்து பேசியதில் மீனாட்சி ”மீனா”வாகியிருந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் பின்னாலிருந்த இரண்டு பேர் இருக்கையில் ஜன்னலோரத்தில் அமர்ந்தேன். தோழியின் காதில் ஏதோ பேசி கொண்டிருந்தவள் எழுந்து மூன்று பேர் இருக்கையை நோக்கி சென்றாள். ஜன்னலருகில் அவள் தோழியை அமர செய்து, அவளருகில் மீனா உட்கார்ந்தாள். பக்கத்து இருக்கையை காட்டி அங்கே என்னை அமர சொன்னாள். சில நொடிகள் தயங்கிவிட்டு நான் அங்கே சென்று அமர்ந்தேன்.

“நேத்து ஏதோ பாக்கலாம்னு சொன்னீங்க. இன்னைக்கு சரியா 8 மணிக்கு வந்துட்டீங்க?” அவள் கேள்வியில் நக்கல் இருந்தது.

“8 மணிக்கு பாக்கலாம்னு சொன்னேன். நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட போல” சொல்லிவிட்டு அதே சிரிப்பை பதிலுக்கு நானும் கொடுத்தேன்.

”இப்படியே பேசிட்டு இருந்தீங்கனா இன்னைக்கு காப்பி அபிஷேகம் தான்”

“அது பிரச்சனையில்லை. இந்த தடவை ஆயிரத்தி அறுநூறு ரூபாய் காந்தி கணக்கு தான்”

“ஹான்ன்ன்... போன தடவை மாதிரி ஓடி போய் வாங்கிட்டு வருவேனு நினைச்சீங்களா? இந்த தடவை ஒரு கர்ச்சிப் கொடுத்துட்டு தொடைச்சிக்கோங்கனு சொல்லிட்டு போயிட்டே இருந்துடுவேன்”

“இதை ஒரு ஹாபியாவே வெச்சிருக்க போல. குட் கேர்ள்”

மறுபடியும் சத்தம் போட்டு சிரித்தாள்.

மூன்று பேரும் சேர்ந்து சாப்பிட்டோம். சாம்பார் எடுக்கும் போது நான் கொஞ்சம் நகர்வதை போல பாவனை பண்ண, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டது வேறு யாருக்கும் புரிந்திருக்காது. அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்தே சுத்தி கொண்டிருந்தோம். சில நேரங்களில் மதியம் மூன்று, நான்கு மணிக்கு ஜூஸ் குடிக்க எனக்கு ஃபோன் செய்வாள். அது தவிர, டேக்ஸ் ரிட்டர்ன் பண்ண, ஏதாவது கொரியர் அனுப்ப\வாங்க செல்லும் போழுது ஃபோன் செய்து வர சொல்வாள். சில சமயம் நான் ஏதாவது வேலை பார்த்து கொண்டிக்கும் போது கூப்பிடுவாள். 

வேலை இருக்கு என்று சொன்னால், “ஐயோ இருக்கறது பெஞ்ச். இதுல இவர் வேலை பார்த்து கிழிக்கறாராம். இந்த பெஞ்சை தொடைக்கற வேலையை அரை மணி நேரம் கழிச்சி செஞ்சா தப்பில்லை. இப்ப ஒழுங்கு மரியாதையா வா” என்று மரியாதையோடு சொல்வாள். வேறு வழியில்லாமல் நானும் அவளுடன் செல்வேன்.

இரண்டு மாதம் பெஞ்சில் இருந்ததில் எனக்கு எந்த வருத்தமுமில்லாமல் பார்த்து கொண்டாள். ஒரு நாளைக்கு மூன்று, நான்கு மணி நேரம் நேரில் பேசி கொண்டது போக, மூன்று நான்கு மணி நேரம் அலைபேசியில் பேசி கொண்டோம். 

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. வழக்கம் ஒரு நாள் ஃபோன் செய்து என்னை காபி டேக்கு வர சொன்னாள். என்னவென்று புரியாமல் நானும் சென்றேன். பார்த்தால் அங்கே ஒரு பெரிய பட்டாளமே நின்று கொண்டிருந்தது. அன்று அவள் பிறந்த நாள். அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. எவ்வளவோ பேசினேன். பிறந்த நாளை கேட்டு ஞாபகப்படுத்தி கொள்ள தவற விட்டுவிட்டேன். 

”நீ இல்லாம செலிபிரேட் பண்றதுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் ஃபோன் பண்ணேன். நாளைக்கு சொல்லலாம்னு தான் பார்த்தேன். ஆனா நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ. பாவம்னு தான் கூப்பிட்டுட்டேன்”

என்ன சொல்வதென்று புரியாமல் மெலிதாக சிரித்தேன். “பிறந்த நாள் வாழ்த்துகள்”

“கிப்ட் எல்லாம் எதுவுமில்லையா? அதுக்கு தான் முக்கியமா கூப்பிட்டதே. பசங்க வாங்கி வெச்சிருக்குற கேக்கை கொடுத்துட்டு ஒரு கிப்ட் வாங்கிக்கலாம்னு பார்த்தா இப்படி வாயாலயே வாழ்த்து சொல்லிட்டு எஸ் ஆகிடலாம்னு பாக்கறியா?”

இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்வதென்று எனக்கு தெரியவில்லை. அதுவும் இத்தனை பேர் இருக்கும் கூட்டத்தில். இரவு அலைபேசியில் பேசும் போது தான் என்னால் நானாக பேச முடிந்தது.

“மீனா, ஒரு வார்த்தை நேத்தே சொல்லியிருக்கலாம் இல்லை”

“சொல்லியிருந்தா என்ன பண்ணிருப்ப?”

“என்ன பண்றன்னு முக்கியமில்லை. இப்படி கூட்டத்துல தனி ஆளா வந்து அசிங்கமா நின்னுருக்க மாட்டேனில்லை”

“இப்ப அது தான் வருத்தமா?”

“இல்லை இல்லை. நேத்து அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்படியே பன்னெண்டு மணிக்கு உனக்கு வாழ்த்து சொல்லிருப்பேன் இல்லை. அதான்”

“அதுக்கெதுக்கு கவலைப்படற. ஃபிரியா விடு”

“ஹ்ம்ம்ம்”

அப்படியே ஒரு மாதம் ஓடியது. காலையில் எட்டு மணி பேருந்தில் இருவரும் காணவில்லை. அவளுடைய அலைப்பேசிக்கு அழைத்தேன். ஒன்பது மணி வண்டியில் வருவதாக சொன்னாள். அவளுக்காக சாப்பிடாமல் காத்திருந்தேன். அவள் சாப்பிட வரவில்லை. பத்தரைக்கு எக்ஸ்டென்ஷனிற்கு அழைத்தாள். காபி டேக்கு வர சொன்னாள். சென்றேன்.

“என்னாச்சு. ஏன் லேட்? சாப்பிட கூட வரலை”

“ஒரு சின்ன பிரச்சனை. அதான்.”

“சொல்லு”

“லதா இருக்கா இல்லை”

“ஆமா. அவளுக்கு என்ன?”

“அவளுக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்கறாங்க. இந்த வாரம் பொண்ணு பாக்க வராங்களாம்”

“அதுக்கு என்ன? உன்னையும் மணப்பெண் தோழியா வர சொல்றாளா?”

“இல்லை”

“சரி அப்பறம் என்ன?”

“உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியல. ரொம்ப நாளா சொல்லனும்னு முயற்சி செய்யறேன். என்னால சொல்ல முடியலை. இன்னைக்கு சொல்லியே ஆகனும். லதா உன்னை லவ் பண்றா. உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறா”

“வாட்?”

“நிஜமாத்தான் சொல்றேன்”

“என்ன இப்படி லூசு மாதிரி பேசற? என்னை பொறுத்த வரைக்கும் லதாங்கற கேரக்டரையே இது வரைக்கும் நான் உன்னோட ஃபிரண்டாதான் ரிலேட் பண்ணிட்டு இருக்கேன். அவள்ட நான் பேசன வார்த்தைகளை விரல் விட்டு எண்ணிடலாம்”

“உன்கிட்ட அதிகமா பேசினா தான் உனக்கு பிடிக்குமா? நீ தான் லூசு மாதிரி பேசற”

“ப்ளீஸ் டோண்ட் இரிடேட் மீ மீனா. ஐ நெவர் ஹேட் எனி ஃபீலிங்ஸ் ஃபார் ஹெர். ஷீ இஸ் நாட் மை டைப். புரிஞ்சிக்கோ. நீயே இப்படி என்கிட்ட இந்த மாதிரி கேக்கலாமா?”

“நான் அவ ஃபிரெண்ட். நான் கேக்கறதுல என்ன தப்பு?”

“பிகாஸ் ஐ அம் இன் லவ் வித் யூ”

அவள் முகத்தில் பெரும் குழப்பத்திற்கான ரேகைகள் தெரிந்தன. இரண்டு நிமிடம் அந்த இடத்தில் மௌனம் அதன் ஆட்சியை செலுத்தியது. 

நான் பேச ஆரம்பித்தேன். ”இங்க பாரு மீனா. நான் ரொம்ப ஃபிராங்காவே சொல்றனே. எனக்கு அந்த பொண்ணு மேல அப்படி ஒரு ஐடியாவே இல்லை. என் மனசுல இத்தனை நாள் லதாங்கற கேரக்டரே மீனாவின் தோழி அப்படி தான் பதிவாகியிருந்தது. இப்ப திடீர்னு நீ வந்து இப்படி சொன்னா? ஐ காண்ட் இமேஜின் இட்”

“இங்க பாரு கிருஷ்ணா. எனக்கும் இத்தனை நாள் நீ லதாவோட ஆளாதான் தெரிஞ்ச. முதல் நாள் நான் உன் மேல சாம்பார் கொட்டின உடனே என்னை வேகமா கடைக்கு கூப்பிட்டு போனது லதா தான். அப்பறம் அன்னைக்கு நீ பஸ்ல வந்தப்ப, மூணு பேர் சீட்டுக்கு மாறனது அவ சொல்லி தான். உன்னை என் பர்த் டே பார்ட்டிக்கு கூட அவ தான் கூப்பிட சொன்னா. சோ தட் ஷீ கேன் ஷோ யூ டூ ஆல் அவர் ஃபிரெண்ட்ஸ்”

“அப்ப நீ தினமும் என் கூட பேசினது பழகினது எல்லாம் அவளுக்காக தானா?”

“அவளுக்காகவும் தான். உன்கிட்ட அவ காதலை சொல்றதுக்கு பயம். என்னை சொல்ல சொன்னா. நானும் தினமும் உன்கிட்ட பேசி எப்படியாவது சொல்லனும்னு பார்த்தேன். சொல்ல முடியலை”

“மீனா, என்னால லதாவை உன் தோழியா தான் பார்க்க முடியும். வேற எப்படியும் பார்க்க முடியாது. ஐ அம் லீவிங்”

“கிருஷ்ணா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ”

சரியாக இரண்டாவது மாதம் கம்பெனி மாறி இருந்தேன். கம்பெனி மாறுவது மேனஜர்களால் மட்டுமில்லை. இதை போல வேறு சில காரணங்களும் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.

என்றாவது மீனாவிடமிருந்து “லதாவிற்கு நல்லபடியாக திருமணம் முடிந்துவிட்டது. நான் உன் காதலை ஏற்று கொள்கிறேன்” என்று மின்மடலோ, அலைபேசியில் அழைப்போ வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன். இப்ப கூட மின்மடல் வந்திருக்கிறதா என்று பார்க்க தான் வேகமாக கடவு சொல்லை அடித்து கொண்டிருக்கிறேன்.

Thursday, February 19, 2009

H-4

"ஆன் சைட்ல இருந்தா என்னுமோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி நினைச்சிக்கிறானுங்க. இவனுங்க மட்டும் தப்பே செய்யாத மாதிரி" பொருமி கொண்டிருந்தாள் சங்கீதா.

"ஏன் சங்கி, என்னாச்சி?"

"நேத்து அனுப்பன டிஃபக்ட் லிஸ்ட்ல ஒண்ணு மிஸ் பண்ணிட்டேன். அதுக்கு என்னனா போன் பண்ணி கத்தறான் அந்த கார்த்தி. அவன் இதுவரைக்கும் எதுவுமே மிஸ் பண்ணாத மாதிரி. போன வாரம் கூட அவன் அனுப்பன மெயில்ல ஒரு டிஃபக்ட் ஸ்டேடஸ் சொல்லாம விட்டுட்டான். நான் தான் அது மறுபடியும் டெஸ்ட் பண்ணி ஸ்டேடஸ் தெரிஞ்சிக்கிட்டேன். நான் என்ன இப்படியா சத்தம் போட்டேன்" படபடப்பாக சொல்லிக்கொண்டிருந்தாள் சங்கீதா.

"கூல் சங்கி. அவன் அங்க க்ளைண்ட்கிட்ட ஏதாவது திட்டு வாங்கியிருப்பான். அதான் கொஞ்சம் டென்ஷனாகியிருப்பான். நீ ஃபீல் பண்ணாத. அவன்கிட்ட நான் பேசிக்கிறேன்" அவளை சமாதானப்படுத்தினான் ஆனந்த்.

ஆனந்த் ஆன்சைட்டிலிருந்து வந்து ஒரு மாதமாகிறது. சங்கீதா இரண்டு வருடமாக ஆறு ப்ராஜக்ட்கள் மாறி இந்த ப்ராஜக்ட்டுக்கு வந்து மூன்று மாதங்களாகிறது. அவளுக்கு போன மாதம் தான் H1 விசா கிடைத்தது. எந்த ப்ராஜக்டிற்கு பறக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்.

"ஏன் ஆனந்த். அவன் போய் ஒன்றரை வருஷமாச்சி. நீ போய் ஆறு மாசம்தான் ஆச்சு. அவன் தானே நியாயமா வந்திருக்கனும். அப்பறம் ஏன் நீ வந்த? அவன்கிட்ட சண்டை போட்டிருக்கலாமே"

"அவன் ரிசோர்ஸ் குறைக்க போறாங்கனு தெரிஞ்சவுடனே, மேனஜருக்கு போன் பண்ணி, இந்தியா அனுப்பறதா இருந்தா நான் இங்கயே வேற கம்பெனி மாறிடுவேனு சொன்னான். அவரும் அதுக்கு பயந்து என்னை அனுப்பிட்டாரு"

"சீப் ஃபெலோ. நீயும் அதையே சொல்ல வேண்டியது தானே?"

"அவனுக்கு க்ளைண்ட் கிட்டயும் நல்ல பேர் இருக்கு. அதான் நான் எதுவும் பண்ண முடியல. மோர் ஓவர் என்னை 3 மாசத்துல வேற ப்ராஜக்ட்க்கு அனுப்பறனு சொல்லிதான் அனுப்பனாரு. எப்படியும் அடுத்த மாசம் ட்ரேவல் பண்ணுவேன்"

அவளுக்கு ஏனோ கார்த்திக் மேல் வெறுப்பு அதிகமாகி கொண்டே போனது.

திடீரென்று ஆனந்திற்கு டைபாய்ட் வந்து அவன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டான். சரியாக அந்த சமயத்தில் மேனஜர் சங்கீதாவை அழைத்தார்.

"சங்கீதா, நம்ம ப்ராஜக்ட்லயே புது மாட்யூலை கவனிக்க இன்னோரு ஆள் ஆன்சைட்ல இருந்தா நல்லா இருக்கும்னு க்ளைண்ட் ஃபீல் பண்றாங்க. இந்த வீக் எண்ட் நீ ட்ரேவல் பண்ண வேண்டியிருக்கும். ரெடியாயிக்கோ" தீர்க்கமாக சொல்லி முடித்தார்

"இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதுக்குள்ள எப்படி ரெடியாக முடியும்? அடுத்த வாரம் போகவா?" கவலையாக கேட்டாள் சங்கீதா.

"அடுத்த வாரம் போற மாதிரி இருந்தா ஆனந்த்தான் ட்ராவல் பண்ணியிருப்பான். அர்ஜெண்ட்னு தான் உன்னை கிளம்ப சொல்றேன். ஈவனிங் சீக்கிரம் கிளம்பி போயிக்கோ. வெள்ளிக்கிழமை லீப் போட்டுக்கோ. திங்கள் இல்லைனா செவ்வாய்க்கிழமை நீ அங்க ரிப்போர்ட் பண்ணனும். புரியுதா?" கண்டிப்புடன் சொன்னார் மேனஜர்.

தயங்கியவாறே அங்கிருந்து சென்றாள் சங்கீதா. அந்த நான்கு நாட்களிலும் வேகமாக தயாரானாள் சங்கீதா. அவளுக்கு Air Franceல் டிக்கட் புக் செய்திருந்தார்கள். சென்னையிலிருந்து பாரிஸ் அங்கிருந்து நியூ ஜெர்ஸி அங்கிருந்து மேன்சிஸ்டர். முதல் முறையாக ஏரோப்ளேனில் செல்வதில் ஒரு வித மகிழ்ச்சி இருந்தாலும் இத்தனை இடங்களில் மாறி செல்வதாலும், தனி ஆளாக செல்வதாலும் ஒரு வித பயமே இருந்தது.

ஒரு வித பயத்துடன் கார்த்திக்கிற்கு போன் செய்தாள்.

"ஹலோ, கார்த்திக் ஹியர்"

"கார்த்திக், நான் சங்கீதா"

"சொல்லுங்க. எப்ப வறீங்க?"

"நான் சண்டே ராத்திரி ஏழு மணிக்கு வறேன்"

"ஹோட்டல் புக் பண்ணியாச்சா?"

"ஹிம்... ரெண்டு நாளைக்கு பண்ணிருக்கேன்"

"குட். அதுக்குள்ள இங்க அப்பார்ட்மெண்ட் பார்த்துடலாம்."

"ஹிம்... ஏர்போர்ட்ல இருந்து ஹோட்டலுக்கு எப்படி வறதுனுதான் புரியல"

"ஏர்போர்ட்ல டேக்ஸி இருக்கும். எதுக்கும் கைல டைரக்ஷன்ஸ் கொண்டு வாங்க. யாஹூ மேப்ல டைரக்ஷன்ஸ் பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க. அப்படியே திங்கக்கிழமை காலைல டேக்ஸி பிடிச்சி ஆபிஸ் வந்து எனக்கு போன் பண்ணுங்க. சரியா?"

அவனை ஏற்போர்ட்டிற்கு வர சொல்லலாம் என்று அவள் நினைத்திருந்தாள். அவனுடைய இந்த பேச்சால் அவன் மேலிருந்த வெறுப்பு இன்னும் கூடியது.

"சரிங்க. திங்கக்கிழமை பார்க்கலாம்" சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.

பெற்றோர்கள் வழியனுப்ப ஒரு வழியாக ஃபிளைட் ஏறினாள். மனதிற்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. நல்ல படியாக நியூ ஜெர்ஸி வந்து சேர்ந்தாள். இமிக்ரேஷன் செக் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் மென்சிஸ்டர் செல்லும் விமானம் தாமதமாகிக்கொண்டே போனது. 5 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் பதினோரு மணிக்குத்தான் கிளம்பும் என்று அறிவிப்பு பலகையில் எழுதியிருந்ததை பார்த்ததும் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது...

கார்த்திக்கிற்கு போன் செய்யலாமா என்று யோசித்தாள். அவனுக்கு போன் செய்வதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று அமைதியாக இருந்துவிட்டாள். ஆனால் உள்ளக்குள் ஒரு வித பயம் இருந்து கொண்டேயிருந்தது. அவனை நன்றாக சபித்தாள். அவன் நிச்சயம் ஒரு சைக்கோவாத்தான் இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தாள். அங்கே அவள் அமர்ந்திருந்த 6 மணி நேரமும் அவனை திட்டிக்கொண்டேயிருந்தாள்.

மேன்சிஸ்டரில் அவள் இறங்கும் போது இரவு ஒரு மணி ஆகியிருந்தது. பேக்கேஜிக்காக காத்திருந்தாள். அவள் பின்னாலிருந்து யாரோ அவளை அழைப்பதை போலிருந்தது.

"மிஸ்.சங்கீதா?"

திரும்பி பார்த்தாள்.

"யெஸ்"

"ஐ அம் கார்த்திக்"

அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்ததை பார்த்தான். அவள் முகத்திலிருந்தே அவள் மனத்தில் நினைப்பதை புரிந்து கொள்ள முடியும் என்று அவனுக்கு தோன்றியது.

"நீங்க எப்படி இங்க வந்தீங்க?"

"உங்க ஐட்டினரி என்கிட்ட இருந்துச்சி. சரி தனியா வரிங்களேனு செக் பண்ணீட்டே இருந்தேன். ப்ளைட் டிலேனு தெரிஞ்சிது. இராத்திரியாச்சே கஷ்டப்படுவீங்களேனு வந்துட்டேன்"

"ரொம்ப தேங்க்ஸ்"

"நோ ப்ராப்ளம்"

அவள் பேக்கேஜ் சரியாக வந்து சேர்ந்தது. அதை எடுக்க அவளுக்கு உதவினான். ஒரு வழியாக அவள் பேக்கேஜை காரில் போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

"ட்ரெவல் எல்லாம் எப்படி இருந்துச்சி?"

"நல்லா இருந்துச்சு. ஆனா 6 மணி நேர டிலே தான் கொடுமை"

"நீங்க அழகா பாஸ்டனே வந்திருக்கலாம். ஒரு முப்பது நிமிஷம் ட்ரேவல் தான் அதிகமாயிருக்கும்"

"ஆனந்த் தான் எனக்கு இந்த ஏர்போர்ட் சொன்னான்"

"ஒரே ஸ்டேட்னு சொல்லியிருக்கலாம். சரி ஃபீல் பண்ணாதீங்க. நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு செவ்வாய்க்கிழமை வந்தா போதும்"

"இல்லைங்க. செவ்வாய்க்கிழமை வேண்டாம். நாளைக்கே வந்துடறேன். அப்பறம் நான் தான் சங்கீதானு எப்படி கண்டுபிடிச்சீங்க?"

"ப்ராஜக்ட் பார்ட்டி டீம் போட்டோவை ஆனந்த் அனுப்பி வைச்சான். அதுல இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்."

"பரவாயில்லை. நானும் உங்க போட்டோவை பார்த்திருக்கேன். நீங்க டூர் போன போட்டோவெல்லாம் ஆனந்த் காண்பிச்சிருக்காரு"

30 நிமிட பயணத்தில் அவள் ஹோட்டல் வந்தது. பேட்டியை கொண்டு போய் ரூமில் வைத்துவிட்டு வந்தான்.

"நாளைக்கு காலைல கண்டிப்பா ஆபிஸ் வரீங்களா?"

"ஆமாங்க. செவ்வாய்க்கிழமைல எதுவும் ஆரம்பிக்க கூடாதுனு எங்க அம்மா சொல்லுவாங்க. நான் நாளைக்கே வரேன்".

அவள் சொல்லியதை கேட்டு அவன் கண்கள் கலங்கியது.

"சரி நாளைக்கு எட்டு மணிக்கு ரெடியாகிடுங்க. நான் வரேன்" சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அவளுக்கு அவன் நடத்தை விநோதமாக இருந்தது. அடுத்த நாள் சரியாக எட்டு மணிக்கெல்லாம் வந்து அவளை ஆலுவலகத்திற்கு அழைத்து சென்றான். இரண்டு நாட்களில் அவளுக்கு தங்குவதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்து அவளுக்கு தேவையானதை வாங்க உதவினான். அதை போலவே வேலையிலும் அவளுக்கு தேவையான உதவிகளை செய்தான்.

இந்தியாவிலிருந்த போது அவளுக்கு அவன் மேலிருந்த எண்ணம் லேசாக மாற துவங்கியது. ஒரு வாரம் சென்ற நிலையில்

"ஹேய் என்னாச்சி ஏன் அழுவற?"

"ஒண்ணுமில்லை" சொல்லிக்கொண்டே கண்களை துடைத்து கொண்டிருந்தாள்.

"என்கிட்ட சொல்லனும்னு தோனிச்சினா சொல்லு. இல்லை லீவ் போட்டு வீட்ல போய் இரு. ஆபிஸ்ல உக்கார்ந்து அழுதா எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க"

"சரி. நான் வீட்டுக்கு கிளம்பறேன். என்னால இங்க உட்கார்ந்திருக்க முடியாது"

"நான் வேணா வந்துவிடட்டுமா?"

"இல்லை நான் டேக்ஸி பிடிச்சி போயிடறேன்"

"இல்லை.. நான் வந்து விட்டுட்டு வறேன். வா"

அவளிடம் சொல்லிவிட்டு க்ளைண்ட் மேனஜரிடம் சென்று சங்கீதாவிற்கு உடல் நிலை சரியில்லை அதனால் வீட்டில் விட போகிறேன் என்று சொல்லிவிட்டு அவளை அழைத்து சென்றான்.

காரில் அழுது கொண்டே வந்தாள்.

"சங்கீதா. இங்க பாரு. இப்படி நீ அழுதுக்கிட்டே வந்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் என்னனு எனக்கு சொல்லு"

"எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லையாம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. நான் இந்தியா போகனும்"

"என்ன இந்தியா போகனுமா? உடம்புக்கு என்னனு சொல்லு. பார்த்துட்டு அப்பறம் போகலாம்"

"ஹார்ட்ல ஏதோ பிரச்சனையாம். உடனே ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. அதனால நான் உடனே ஊருக்கு போகனும் கார்த்திக். நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு"

"சங்கீதா. உங்க அப்ப இப்ப எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"

"கொயம்பத்தூர் ராமகிருஷ்ணா ஹாஸ்பிட்டல்"

"அட்மிட் பண்ணிட்டாங்களா?"

"பண்ணியாச்சி. எங்க சித்தப்பாதான் கூட இருந்து எல்லாம் பார்த்துக்கறாரு. எப்படியும் செலவு 3-4 லட்சமாவது ஆகுமாம். நான் போய் எங்க காட்ட விக்க கையெழுத்து போடனும். நான் அங்க இருந்தாதான் அம்மாக்கும் சரியா இருக்கும். நான் இன்னைக்கே புறப்பட முடியுமா?"

"ஒரு நிமிஷம் இரு சங்கீதா"

அவள் அப்பார்ட்மெண்டில் காரை பார்க் செய்தான் கார்த்திக்.

அவன் செல்போனை எடுத்து இந்தியாவிலிருக்கும் அவன் மாமாவிற்கு போன் செய்தான்

"ஹலோ மாமா, நான் கார்த்தி பேசறேன்"

மறுமுனையிலிருந்து பேசியவரின் குரலும் அவள் காதில் விழுந்தது

"கார்த்திக், என்ன இந்நேரத்தில போன் "

"மாமா, நீ எங்க எங்க இருக்கீங்க?"

"நான் இப்ப தான் வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன்"

"மாமா ராமகிருஷ்ணால டாக்டர்ஸ் யாராவது தெரியுமா?"

"ஏன் என்னாச்சி? நானே அங்க பீடியாட்ரிக்ஸ்க்கு சர்வீஸ் பண்ணிட்டு தான் இருக்கேன்"

"இங்க என் ஃபிரெண்டோட அப்பாவுக்கு ஹார்ட்ல ப்ராப்ளம்னு அங்க சேர்த்திருக்காங்க. நீங்க உடனே பார்த்து ஸ்டேடஸ் சொல்ல முடியுமா?"

"ரொம்ப அர்ஜெண்டாப்பா? நான் வீட்டுக்கு பக்கத்துல போயிட்டேன்"

"மாமா, ரொம்ப அர்ஜெண்ட். அதுக்கேத்தா மாதிரி தான் அவுங்களுக்கு இங்க டிக்கெட் புக் பண்ணனும். நீங்க நேர்ல போய் பார்த்து சொன்னா நல்லா இருக்கும்"

"சரி டீட்டய்ல்ஸ் சொல்லுப்பா. நான் பார்த்து சொல்றேன்"

அவன் அவரை பற்றி எல்லாவற்றையும் சொல்ல அவர் குறித்து கொண்டார்.

"இன்னும் 30 நிமிஷம் கழிச்சி பண்ணுப்பா. நான் சொல்றேன். "

"சரி மாமா"

போனை வைத்தான்.

"சங்கீதா டோண்ட் வொரி. அந்த மாமா ரொம்ப நல்ல டைப். சீக்கிரமா பார்த்து எல்லாத்தையும் சொல்லுவாரு. இன்னைக்கு நீ கிளம்பனும்னா கஷ்டம். என்ன ஏதுனு விசாரிச்சி அதுக்கேத்த மாதிரி ப்ளான் பண்ணலாம். நீ அழாம இரு. அதுக்குள்ள ஒரு காபி குடிச்சிட்டு வந்துடலாம்" சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்பக்ஸிற்கு விட்டான்.

அவள் எதுவும் பேசாமல் அழுது கொண்டே வந்தாள். சரியாக அரை மணி நேரத்திற்கு பிறகு அவளை காரில் அமர வைத்துவிட்டு வெளியே வந்து மாமாவிற்கு போன் செய்தான்.

"மாமா, கார்த்தி பேசறேன். என்ன ஸ்டேடஸ்"

" என் ஃபிரெண்ட் ராமமூர்த்தி தான் இந்த கேஸ் பார்த்துக்கறான். பெரிய ப்ராப்ளம் இல்லை. அப்பரேஷன் பண்ணா சரியாகிடும். எனக்கு தெரிஞ்சி லாஸ்ட் ஒன் இயர்ல எதுவுமே ஃபெயிலரானதே இல்லை. சோ அவுங்களை வருத்தப்பட வேண்டாம்னு சொல்லு. ஆப்பரேஷன் நாளைக்கு காலைல வெச்சிருக்காங்க. நான் பார்த்துக்கறேன். எனி திங் எல்ஸ்"

"மாமா, அவுங்க கைல காசு எவ்வளவு இருக்குனு தெரியல. சோ நான் உங்ககிட்ட இடம் வாங்க கொடுத்த காசை எடுத்து ஆப்பரேஷனுக்கு கொடுங்க. நான் மிச்சத்தை உங்களுக்கு காலைல பேசறேன்" சொல்லிவிட்டு போனை வைத்தான்.

காருக்குள் வந்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சங்கீதா, உங்க அப்பாக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. நாளைக்கு காலைல ஆப்பரேஷனாம். லாஸ்ட் ஒன் இயர்ல அந்த ஆப்பரேஷன் சக்ஸஸ் ரேட் 100%. சோ யூ டோண்ட் நீட் டு வொரி. எங்க மாமா எல்லாத்தையும் பார்த்துக்கறனு சொல்லிட்டாரு. ஆப்பரேஷன் பண்ண போறது கூட அவர் ஃபிரெண்ட் தான்"

"ஹிம்ம்ம். இருந்தாலும் நான் ஊருக்கு போகனும்னு பார்க்கிறேன். எங்க அப்பாக்கு உடம்பு சரியில்லாதப்ப நான் அவர் கூட இருக்கறது தான் சரி"

"சங்கீதா, நீ இப்ப ஊருக்கு போனா திரும்ப இங்க வர சான்ஸ் கிடைக்குமானு சொல்ல முடியாது. மோர் ஓவர் பணம் பத்தியும் நீ பயப்பட வேண்டாம். எங்க மாமா கொடுத்துடறேனு சொல்லிட்டாரு. என் காசு அவர்ட நிறைய இருக்கு. நீ எனக்கு பொறுமையா கொடுத்தா போதும். இப்ப வீட்ல இருந்தா நீ கண்டதையும் நினைப்ப. ஆபிஸ் போகலாம். நாளைக்கு ஆப்பரேஷன் முடிஞ்சதுக்கப்பறம் அம்மாட்ட பேசி முடிவெடு. இப்ப வா போகலாம்" சொல்லிவிட்டு அவளை ஆபிஸிற்கு கூட்டி சென்றான்.

அவளுக்கு அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. அவனும் அவளுக்கு நிறைய வேலைகளை கொடுத்து அவளை மறக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலை அவள் அம்மாவிற்கு போன் செய்து அப்பாவின் நிலையை அறிந்து கொண்டாள் சங்கீதா. இன்னும் ஒரு வாரம் ஆஸ்பிட்டலில் இருக்க வேண்டுமென்றும், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவள் வர தேவையில்லை என்று அவள் அம்மா தெரிவித்தார். கார்த்தியின் மாமாவால் மருத்துவமனையில் அவர்களுக்கு எல்லா வேலைகளும் சுலபத்தில் முடிகிறது என்று கூறினாள். சங்கீதா இதனால் ஓரளவு திருப்தியடைந்தாள்.

கார்த்தியும் அவன் மாமாவிடம் பேசி அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர சொல்லியிருந்தான். மேலும் அவளுடைய தந்தையின் உடல் நிலையை பற்றியும் தெரிந்து வைத்திருந்தான். அவளுக்கு தினமும் ஆறுதல் சொல்லி அவள் மகிழ்ச்சியாக இருக்க உதவியாக இருந்தான்.
மூன்று மாதம் ஓடியதே இருவருக்கும் தெரியவில்லை. தினமும் அவளை அலுவலகத்திற்கு அழைத்து வருவது, வீட்டுக்கு அழைத்து செல்வது, ஷாப்பிங் செல்வது என்று அனைத்திற்கும் உதவியாக இருந்தான்.

"கார்த்தி, இன்னைக்கு உனக்கு கடைசியா கொடுக்க வேண்டிய ரெண்டாயிரம் டாலரும் அனுப்பிட்டேன். நீ மட்டும் அப்ப எனக்கு ஹெல்ப் பண்ணலைனா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னே சொல்ல முடியாது"

"இதுல என்ன இருக்கு. ஊர்ல இருந்து ரொம்ப தூரம் வந்திருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவலனா நல்லா இருக்காதில்லை"

"எனக்கு என்ன சொல்றதுனே தெரியல கார்த்தி. உன்னை பத்தி ஆஃப்-ஷோர்ல எல்லாரும் எவ்வளவு தப்பா நினைச்சிட்டு இருக்காங்க தெரியுமா? ஆனா நீ அதுக்கெல்லாம் அப்படியே ஆப்போசிட்டா இருக்க"

"தெரியும். ஆனந்த் இந்தியா போக நான் தான் காரணம். நாளைக்கே இங்க ஒரு ரிசோர்ஸ்தான் இருக்கனும்னு சொன்னா, ஒண்ணு நான் கம்பெனி மாறிடுவேன், இல்லை உன்னை அனுப்ப சொல்லி மேனஜருக்கு போன் பண்ணி சொல்லிடுவேன்"

"ஏன் இந்தியா உனக்கு பிடிக்காதா? ஏன் இப்படி இருக்க?"

"ஏனோ இந்தியால ஒர்க் பண்றது பிடிக்கல. அங்க ஒர்க் கல்ச்சரும் சரியில்லை. ரொம்ப வேலை அதிகம். அதான்"

"நீ என்னுமோ பொய் சொல்ற மாதிரி இருக்கு கார்த்தி. என்கிட்ட நீ எதையோ மறைக்கிற. விருப்பம் இல்லைனா விட்டுடு"

"அப்படியெல்லாம் இல்லை"

"நீ என்னை உன் ஃபிரெண்டா நினைச்சா சொல்லு. இல்லைனா வேணாம்"

"அப்பறமா சொல்றேன். இப்ப வேண்டாம்"

"சரிவிடு. உனக்கு எப்ப தோணுதோ சொல்லு"

"ஓகே"

இரண்டு மாதங்கள் ஓடிய நிலையில் கார்த்திக்கிற்கு திடிரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. சங்கீதா அவனுடனிருந்து அவனுக்கு தேவையானதையெல்லாம் செய்துவிட்டு ஆபிஸ் சென்றாள். அடுத்த நாள் அவன் அலுலகலம் சென்ற போது அங்கே அவனுக்கு ஒரு இடி காத்திருந்தது.

கார்த்தியை அவன் கம்பெனி மேனஜர் அழைத்து தனியாக பேசினார்.

"கார்த்திக் மறுபடியும் டீம் சைஸ் குறைக்க சொல்லி சொல்லிட்டாங்க. ஆக்சுவலா உன் மாட்யூல் தான் முடியுது. ஆனா நேத்து சங்கீதா எனக்கு போன் பண்ணி அவளுக்கு இங்க இருக்க பிடிக்கல. அதனால இந்தியா போகறேனு சொல்லிட்டா. சோ பிரச்சனையில்லை. நீ அவக்கிட்ட எல்லாத்தையும் கத்துக்கோ"

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"சரி... எப்ப கிளம்பனும்?"

"இந்த வீக் எண்ட்... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு"

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மாலையில் வேலை முடிந்ததும் அவளை அழைத்து செல்லும் போது அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"சங்கீதா, ஏன் எங்கிட்ட இதை சொல்லல?"

"எதை?"

"நேத்து ஆபிஸ்ல நடந்ததை"

"என்ன நடந்தது?"

"இங்க இருக்க பிடிக்கல. அதனால இந்தியா போறனு மேனஜருக்கு போன் பண்ணி சொன்னியா?"

"ஆமாம்"

"ஏன்?"

"இந்த ப்ராஜக்ட்ல ஒருத்தர் தான் இருக்க முடியும்னு தெரிஞ்சிது. நீ போறதுக்கு கஷ்டப்படுவ. சரி உன்னை கஷ்டப்படுத்த வேண்டாமேனு தான் நான் கிளம்பறேன்"

"நான் இந்தியாக்கு ஏன் போக மறுக்கறனு உனக்கு தெரியுமா?"

"தெரியாது. ஆனா அதுல நியாயமான காரணம் ஏதாவது இருக்கனும். உனக்கு யார்கிட்டயும் சொல்ல விருப்பமில்லை. எனக்கு உன்னை கஷ்டப்படுத்த மனசில்லை"

"ஹிம்ம்ம்.. ஒரு காபி குடிக்கலாமா?"

"சரி"

காரை ஸ்டார்பக்ஸிற்கு விட்டான். இருவரும் ஆளுக்கு ஒரு லேட்டே வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தனர்.

"எங்க அப்பா போலிஸ்ல வேலை பார்த்தாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க அம்மாதான் எனக்கு எல்லாமே. எங்க அண்ணனைவிட எங்க அம்மாக்கு என் மேல தான் பாசம் அதிகம். எங்க அண்ணன் எல்லார்டையும் போவான். நான் சின்ன வயசுல இருந்து யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டேன். அதனாலயே என் மேல அம்மா அதிகமா அக்கறை எடுத்துக்க வேண்டியதா இருந்துச்சு.

சின்ன வயசுல இருந்தே நான் வீட்ல இருந்தே படிச்சிட்டேன். காலேஜ்ல கூட எனக்கு அதிக ஃபிரெண்ட்ஸ் இல்லை. நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷத்துலயே ஆன்சைட் வந்துச்சி. நான் எங்க அம்மாவைவிட்டுட்டு வர மாட்டேனு சொல்லிட்டேன். ஆனா அடுத்த ஒரு மாசத்துல எங்க அம்மா மாடில துணி காய வெச்சி எழுத்து வரும் போது கால் தடுக்கி கீழ விழுந்து தலைல அடி பட்டுடுச்சி. எவ்வளவோ முயற்சி செஞ்சும் காப்பாத்த முடியல.

அதுக்கப்பறம் எனக்கு அந்த வீட்ல எங்க பார்த்தாலும் எங்க அம்மாவாதான் தெரிஞ்சாங்க. சாப்பிடும் போது முன்னாடி உக்கார்ந்து "போதுமா கார்த்தி"னு கேக்கற மாதிரி இருக்கு. இராத்திரி கரெண்ட் ஆஃப் ஆன பக்கத்துல உக்கார்ந்து விசிறி விடற மாதிரி இருக்கு. என்னை சுத்தி எப்பவுமே அம்மா இருக்கற மாதிரியே இருக்கு. நானே தனியா பாதி நேரம் பேசிக்கிட்டேன். எனக்கு பைத்தியம்னு எங்க அண்ணி பயந்துட்டாங்க. அப்பதான் மறுபடியும் ஆன்சைட் வந்துச்சி"

ஒரு நிமிடம் நிறுத்தி ஆஸ்வாசப்படுத்தி கொண்டான்.

"உடனே புறப்பட்டு வந்துட்டேன். என்னால திரும்பி அங்க போயி எங்க அம்மா இல்லாத வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. எங்க அப்பா இப்ப என் அண்ணன் பசங்களை பார்த்துட்டு அங்கயே இருக்காரு. ஆனா என்னால இருக்க முடியாது. என்னை எல்லாரும் திட்டியும் நான் இந்தியா போகாததுக்கு காரணம் இதுதான். இங்க நீ வந்ததுக்கப்பறம் தான் நான் ஓரளவு பழசை எல்லாம் மறக்க ஆரம்பிச்சேன். இப்ப நீயும் என்னை விட்டுட்டு போற"

"கார்த்தி எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. வேற வழியில்லை. நான் போயிதான் ஆகணும்."

"ஹிம்ம்ம்"

நான்கு கண்களும் கலங்கியிருந்தன...

ஒரு வழியாக சங்கீதா இந்தியா செல்ல தயாரானாள். சாக்லேட், அப்பா/அம்மாவிற்கு வாட்ச், மசாஜர், கேமரா, லேப்டாப் என கிடைத்ததை வாங்கினாள். கார்த்தி அவளை ஏற்போர்ட்டிற்கு வந்து அனுப்பி வைத்தான்.

ஒரு வாரம் லீவ் முடித்து திங்களன்று கார்த்திக்கிற்கு போன் செய்தாள் சங்கீதா.

"கார்த்தி ஹியர்"

"ஹே நான் சங்கீதா பேசறேன்"

"சொல்லு. ஊருக்கு போய் போன் பண்ண உனக்கு ஒரு வாரம் தான் எடுத்துச்சா?"

"இல்லை. நான் இப்ப தான் ஆபிஸ் வந்தேன். ஏன் நீ எனக்கு போன் பண்ண வேண்டியதுதானே?"

"உங்க வீட்டுக்கு போன் பண்ணா எப்படி ஃபீல் பண்ணுவாங்கனு தெரியல. அதான்.." இழுத்தான்

"அதெல்லாம் எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்க. அப்பறம் ஒரு குட் நியுஸ்."

"என்ன?"

"நான் திரும்ப அங்க வரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"

"வாவ். கிரேட். எந்த பிராஜக்ட்"

"புது பிராஜக்ட். ஆனா நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்"

"என்ன ஹெல்ப். சொல்லு கண்டிப்பா பண்ணறேன்"

"எனக்கு H1ல வர முடியாதுனு சொல்லிட்டாங்க. நீதான் H4ல கூப்பிட்டு போகனும். கூப்பிட்டுபோவியா?"

சரியாக இரண்டாவது மாதத்தில் H-4ல் பறந்தாள் சங்கீதா...

SW இஞ்சினியர்கள் மேனஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க. ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு வெள்ளிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சபடாம சொல்லிட்டு போக முடியுது?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகஷேன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க. அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது?

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க?

Monday, February 16, 2009

Tester

சின்ன வயசுல இருந்து எனக்கு பிடிக்காத விஷயம் நாம செய்யற காரியத்துல ஒருத்தவங்க தப்பு கண்டுபிடிச்சி குறை சொல்றது. இது எப்பொழுதிலிருந்து எனக்கு பிடிக்காம போச்சுனு ஞாபகமில்லை. ஒரு வேளை எங்க அம்மாவை எப்பவுமே குறை சொல்லிட்டே இருக்குற எங்க அத்தை தான் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். காலேஜ்ல எங்க கூட படிச்ச கார்த்தி அப்படி தான், யார் எது பண்ணாலும் ஏதாவது தப்பு கண்டுபிடிச்சி சொல்லிட்டே இருப்பான். அந்த காரணத்துக்காகவே என் எதிரி லிஸ்ட்ல அவன் நம்பர் ஒன். நான் டாவடிச்ச ஃபிகரை உஷார் பண்ண சுரேஷ் கூட நம்பர் டூல தான் இருந்தான்னா பார்த்துக்கோங்க.

எதுக்குடா இப்படி இவன் வரலாறு எல்லாம் சொல்லிட்டு இருக்கானேனு யோசிக்கறீங்களா? இப்படி எனக்கு சுத்தமா பிடிக்காத ஒரு விஷயமே என் வாழ்க்கையாகி போகும்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கலை. என்ன சொல்றனு புரியலையா? படிக்க ஒரு பிரிவு, வேலைக்கு ஒரு பிரிவுனு கஷ்டப்படும் இஞ்சினியர்களில் நானும் ஒருவன். படிச்சது எலக்ட்ரானிக்ஸ், வேலை கிடைச்சது சாப்ட்வேர் ஃபீல்ட். அதுவும் ஒரு பெரிய இந்தியன் கம்பெனி. மூணு மாசம் ட்ரெயினிங். அட்டகாசமா இருந்துச்சு. 

ட்ரெயினிங் முடிச்சி ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு டொமைன்ல போட்டாங்க. எனக்கு மட்டும் என் வாழ்க்கைலயே வெறுக்கற ஒரு வேலைல போட்டாங்க. அது தான் டெஸ்டிங். எவனோ டெவலப் பண்ற ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதானு பார்த்துட்டு அதுல இருக்குற தவறை (பக்) எல்லாம் கண்டுபிடிக்கனும். அப்படி கண்டுபிடிக்கிற தவறு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு பார்த்து எதுக்கு ஏத்த மாதிரி Severity, Priority எல்லாம் போட்டு டெவலப்பர்ஸ்க்கு அனுப்பனும். 

அவுங்களும் எடுத்தவுடனே அதை ஒத்துக்க மாட்டாங்க. அதுக்கு அப்பறம் அவனோட பங்காளி சண்டை போடணும். ஏதோ மாமியார், மருமக சண்டை மாதிரி இருக்கும். எனக்கு வேலை செய்யுது. நீ சரியா பண்ணலனு அவன் சொல்லுவான். அப்பறம் நாம அவனுக்கு அதை விளக்கனும். நீ டெவலப் பண்ண அப்ளிக்கஷன்ல தப்பு இருக்குடானு சொல்றது ஏதோ திருவிளையாடல் படத்துல நக்கீரன் சொல்ற மாதிரி இருக்கும். அவன் நம்மல பார்க்கும் போது, குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் ரேஞ்சுக்கு பார்ப்பான். சில சமயம் நம்மல பத்தி சொல்லும் போது பூச்சி பிடிக்கறவனு சொல்லுவாங்க. 

சில சமயம் கம்பெனி மாறி டெக்னாலஜி மாறிடலாம்னு தோணும். ஆனா இன்னைக்கு இந்தியாவுல அதிக பிராஜக்ட்ஸ் டெஸ்டிங்ல தான் இருக்குது, அப்பறம் இதுல இருந்தா சீக்கிரம் ப்ரோமோஷன் கிடைக்கும், டொமைன்ல எக்ஸ்பர்ட் ஆகலாம்னு என் மேனஜர் திரும்ப திரும்ப சொல்லி என்னை இதுலயே இருக்க வெச்சிட்டார். சில சமயம் வியாழக்கிழமை High Priority டிஃபக்ட் கண்டுபிடிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதை சரி செய்ய எவன் வீக் எண்ட் உக்கார போறானோனு இருக்கும்.
 
இப்படி தான் சிவாஜிக்கு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் புக் பண்ணிட்டு கிளம்பற நேரம் பார்த்து ஒருத்தவன் வர முடியலைனு சொல்லிட்டான். வெள்ளிக்கிழமை அதுவுமா அவன் டெஸ்டிங் டீம்ல நிறைய பக் ரைஸ் பண்ணிட்டாங்க அதனால மொத்த டீமும் சனிக்கிழமை வர வேண்டியதா போச்சுனு சொல்லி, அந்த பக் ரைஸ் பண்ணவன் ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு, அவனுக்கு வேற வேலை வந்து ஃபர்ஸ்ட் நைட்டே கேன்சலாகனும்னு திட்டினான். இந்த மாதிரி எவன் எவன் நமக்கு என்ன சாபம் விடப்போறானோனு இருந்தது. அவன்கிட்ட ஏன்டா மச்சான் இப்படி பர்சனலா திட்றனு கேட்க முடியாது. தப்பு உன் மேல தானனு சொல்லவும் முடியாது. சொன்னா, பார்டா டெஸ்டர் வந்துட்டாருனு நம்மலயே கலாய்ப்பானுங்க.

இந்த வேலைல பொண்ணுங்க சந்தோஷமா செய்யறதை பார்த்திருக்கேன். ஒரு வேளை அது அவுங்க ரத்தத்திலே ஊறனதுங்கறதால இருக்கலாம். ஆனா எனக்கு இது சுத்தமா பிடிக்கலை. 

வெளிய சொல்லும் போதும் டெஸ்டர்னு சொல்றதுக்கு எனக்கு கூச்சமா தான் இருக்கும். வெறும் சாப்ட்வேர் இஞ்சினியர்னு தான் சொல்லுவேன். அப்பறமும் ஜாவாவா, டாட் நெட்டானு யாராவது கேட்டா, வேற வழியில்லாம டெஸ்டிங்ல இருக்கேனு சொல்லும் போது ஏதோ செய்யக்கூடாத வேலை செய்யற மாதிரி இருக்கும். 

சாப்ட்வேர் லைஃப் சைக்கிள், water flow model, V Modelனு எல்லாம் டெஸ்டிங்ல சேர்ந்த புதுசுலயே சொல்லி கொடுத்து என் குற்றவுணர்ச்சியை போக்க பார்த்தாங்க. ஒரு Bugயை ஒரு பிராஜக்ட் ஆரம்ப கட்டத்துல கண்டுபிடிக்கறதுக்கும், அதை நடைமுறை படுத்துன பிறகு கண்டுபிடிக்கறதுக்கு ஆகுற செலவுக்கு எனக்கு வித்தியாசம் தெரியாம இல்ல. இருந்தாலும் இவ்வளவு பெரிய சாஃப்ட்வேர் லைஃப் சைக்கிள்ல நான் ஏன் இப்படி டெஸ்டிங்ல வந்து மாட்டனும்னு ஒரு கஷ்டம். அந்த கஷ்டத்தைவிட பெரிய கஷ்டம் இந்த டெவலப்பர்ஸ் கூட சண்டை போடறது தான். என்னுமோ எல்லாத்தையும் சரியா பண்ண மாதிரி பேசுவானுங்க. ஒரு மண்ணும் ஒர்க் ஆகாது. ஆனா பேசும் போது மட்டும் என்னுமோ பெரிய லார்டு லபக்கு தாஸ் மாதிரி பேசுவானுங்க. ஒரு அப்ளிகேஷன் டெவலப் பண்ணவுடனே அது கொஞ்சமாவது வேலை செய்யுதானு பார்க்கனும். அதை கூட பண்ண மாட்டானுங்க. 

போன வாரம் இப்படி தான் ஒரு அப்ளிகேஷன்ல பிறந்த நாள் தேதி இருந்தது. அதுல நான் பாலாஜினு டைப் பண்ணா, அதையும் எந்த தப்பும் சொல்லாம ஏத்துக்குது. கேட்டா பிறந்த நாள் இடத்துல தேதியை கொடுக்காம நீ உன் பேரை போட்டா அது யார் தப்பு? உன்னை மாதிரி ஆளுங்களா இதை பயன்படுத்த போறாங்க. இதை பயன்படுத்தறவங்களுக்கு எல்லாம் புத்தி இருக்கும்னு சொல்லி சிரிக்கறானுங்க. அந்த கடுப்புல போன வாரம் மட்டும் எங்க டீம் 200 டிஃபக்ட் ரைஸ் பண்ணிருக்கோம். இந்த வாரம் எப்படியும் 100ஆவது ரைஸ் பண்ணனும் டார்கெட் வெச்சிருக்கோம். அவனுங்களை எப்படியும் ஒரு மாசம் தூங்கவிட கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்.

இருங்க இருங்க இதோ வந்திடறேன், என் மனைவி சாப்பாட்டுல உப்பு, காரமெல்லாம் சரியா இருக்கானு பார்க்க கூப்பிடறா. எப்படியும் கொஞ்சம் கூட குறைய இருந்தாலும், நல்லா இருக்குடா செல்லம்னு சொல்லனும். அப்ப தான் கொஞ்சம் குற்றவுணர்ச்சி குறையும்.

Thursday, February 12, 2009

கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!!

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II

நம்ம டவுசர் புகழ் கி"ராமராஜன்" ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார்.
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர்.
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.

காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள். மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள்.

ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க!!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க!!!

கவுண்ட்ஸ்: என்ன தம்பி அப்படி சொல்லிட்ட. இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை.

ரா.ரா: யார் யாரு???

கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க! அப்பறம் டி.சி.எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ-கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு!!!

செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார்.

கவுண்ட்ஸ்: யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட...

ரா.ரா: ஏன்ன அடிச்சிங்க???

கவுண்ட்ஸ்: ஏன் அடிச்சனா? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட???
....

2 நிமிடம் கழித்து

கவுண்ட்ஸ்:அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா?

1 நிமிடம் கழித்து:

கவுண்ட்ஸ்: ஹும்!!! ஐயோ!!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது.

ரா.ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான்?

கவுண்ட்ஸ்: என்ன கேட்டானா? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம்... ஐ-கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான்.

ஜி.பாலையா: ஹாஹாஹா

கவுண்ட்ஸ்: அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை. இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா. ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன்.

காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...

கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?

புதுசு: இல்ல

கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...சொல்லு

புதுசு: சொல்றங்க!!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!

கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!! (செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?

செந்தில்: ஒரு விளம்பரம்தான்...

கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????

கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...

கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?

கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...

கவுண்ட்ஸ்: ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!

ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

Saturday, February 07, 2009

Software லொள்ளு

டேய் மச்சான், இன்னைக்கு திடீர்னு எங்க க்ளைண்ட் எங்க கம்பெனில எல்லா அக்கௌண்டையும் க்ளோஸ் பண்ணிட்டாண்டா. என்ன பண்றதுனு எல்லாரும் டென்ஷனா இருக்கும் போது எங்க ஹெச்.ஆர் என்னை கூப்பிட்டான். நானும் சரினு போனேன். அப்ப என்னை பார்த்து, 

”என்னங்க சிவா இப்படி ஆகிடுச்சி, படுபாவி பசங்க. எல்லாருமே சேர்ந்து உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே! சீட்டுக்கு போய் என்ன பண்ண போறீங்க சிவா, டெஸ்டிங் பண்ண போறீங்களா? மெயிண்டனன்ஸா இல்லைனா ஏதாவது ஜாவா கோடிங்... இல்லை நான் வேணா ஏதாவது கால் சென்டர்ல சொல்லி வேலை வாங்கி தரதா? 
ஐயய்யோ ஆனா அதுக்கெல்லாம் முன் அனுபவம் வேண்டுமே. உக்கார்ந்த இடத்துலே நோகாம நோம்பு கும்பிடற ஒரு வேலை இருக்கு செய்யறீங்களா? அதான் Naukriல ரெஸ்யூம் போட்டு வேலை தேடறது.” அப்படினு சொல்லிட்டாண்டா...

.......

எனக்கு ரெசஷன் பயத்தை காட்டிட்டானுங்க பரமா. அவுங்களுக்கு ஏதாவது பண்ணனும் பரமா. ஏதாவது பண்ணனும். 

.......
ஏன்டா பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?

கூட வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு கொடுக்கறது இல்லைங்கற மாதிரி, சாப்ட்வேர் இஞ்சினியருங்களுக்கு எல்லாம் பொண்ணு கொடுக்கறதில்லைனு சொல்லிட்டானுங்கடா...

......
மக்கள் உணர்ந்து கொள்ள இது 2000 ரெசஷனல்ல... ரெசஷனல்ல... ரெசஷனல்ல...
அதையும் தாண்டி மோசமானது.

......
உண்மை கம்பெனி க்ளைண்ட்ஸ்க்கு நாங்க ப்ராஜக்ட் பண்ண மாட்டோம்னு எங்க சொன்னோம். க்ளைண்ட்ஸா வந்து எங்ககிட்ட பிராஜக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்னு சொன்னோம்

- விநாயக மூர்த்தி

Tuesday, January 27, 2009

சாப்ட்வேர் இஞ்சினியர் - மாணவர்களுக்கு...

”ஏன்டா ஐடி எடுத்த?”

”மெக்கானிக்கல் கிடைக்கலண்ணே. அதான். ”

“வேற எந்த டிப்பார்ட்மெண்டும் கிடைக்கலயா?”

”இல்லைண்ணே. அதான் வேற வழியில்லாம ஐடி எடுத்தோம்.”

”இந்த அண்ணே, ஆட்டுக்குட்டியெல்லாம் செகண்ட் இயர் பசங்ககிட்ட சொல்லிடாதீங்கடா. பிரிச்சி மேஞ்சிடுவானுங்க. புரியுதா?”

“புரியுது சார்”

என்ன யாருக்கும் புரியலையா? 

இது நான் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் போது மெஸ்ல முதல் வருட மாணவனிடம் நிகழ்ந்த உரையாடல். எங்க செட்ல முதல்ல ஐடியும், கம்ப்யூட்டர் சயின்ஸும் ஒரே சமயத்துல ஃபில் ஆச்சு. எங்களுக்கு அடுத்த வருஷம், முதல்ல ஐடி, அடுத்து கம்ப்யூட்டர் சயன்ஸ். அதுக்கு அடுத்த வருஷம் முதல்ல ECE. 

இதெல்லாம் புரியணும்னா நான் எந்த வருஷம், ஐடி எடுத்தேனு உங்களுக்கு புரியணும். நான் சேர்ந்தது 99ல. 2000த்துலயும் கவுன்சிலிங் நடக்கும் போது ஐடி தான் டாப். அதுக்கு அடுத்த வருஷம் செம்ம அடி. நாங்க படிச்சி முடிச்சிட்டு வரும் போது வேலையில்லை. எங்க காலேஜ்ல எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவே இல்லை. எங்க சீனியர் செட்ல அதை விட மோசம். செலக்ட் ஆன ஒரு சிலருக்கும் ஆஃபர் லெட்டர் வரலை. நாங்க வெளிய வரும் போது எங்க சீனியர்ஸே வேலை தேடிட்டு இருந்தாங்க. 

2003 கடைசில நிலைமை மாற ஆரம்பிச்சுது. போன வருஷம் (2007) வரைக்கும் நல்லா இருந்தது. இப்ப மறுபடியும் ஃபீல்ட் டவுன். அடுத்த வருஷம் கவுன்சிலிங் முடிஞ்சி வரும் போது இதே டயலாக்கை மெஸ்ல 2007ல ஐடி எடுத்தவங்க கேட்கலாம். என்ன பண்ண... உலகம் உருண்டை ;)

சரி, இந்த வருஷம் முடிச்சிட்டு வரவங்க நிலைமை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கும். அதுக்காக பயந்துட்டு இருக்க வேண்டாம். எப்படியும் நிலைமை ஒரு வருஷத்துல சரி ஆகும். மிஞ்சி போன அதுக்கு அடுத்து ஒரு ஆறு மாசம் ஆனாலும் ஆகலாம். அது வரை என்ன செய்யலாம்னு சொல்ல தான் இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் அனுபவத்தை வெச்சி சொல்றது தான். 

ஃபில்ட் சரியாகும் போது 2009ல முடிச்சவங்க மட்டுமிருக்கலாம், இல்லை 2010ல முடிச்சிட்டு வரவங்களும் சேர்ந்து இருக்கலாம். அதனால 2009ல முடிச்சவுங்க முதல்ல வர ஓப்பனிங்ஸை பயன்படுத்தி உள்ளே நுழையற அளவுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளவும். 

இப்ப ஜனவரி முடியப்போகுது. உங்க பிராஜக்டை முடிவு பண்ணிருப்பீங்க. பாதி பேர் காசு கொடுத்து வாங்குற ஐடியால இருக்கலாம். முடிந்த வரை சொந்தமா செய்ய பாருங்க. அது தான் என் சீரியஸ் அட்வைஸ். அப்படி செய்யாம போகும் போது, வாங்கற ப்ராஜக்டை புரிஞ்சிக்கோங்க. அதை அக்குவேற ஆணிவேறயா பிரிச்சி, புரிஞ்சிக்க முயற்சி செய்யவும். அதுல ஏதாவது மாற்றம் செய்ய முயற்சி செய்யவும். அதனால கடைசி நாள்ல காசு கொடுத்து வாங்கற வேலையை செய்யாதீங்க. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வாங்க பாருங்க. மறுபடியும் என்னுடைய சஜஷன் சொந்தமா செய்யறது தான்.

அடுத்து, முடிஞ்ச வரைக்கும் பேப்பர் ப்ரசண்டேஷனெல்லாம் முயற்சி செய்யவும். நீங்க மூன்றாமாண்டு படிக்கும் மாணவராக இருந்தால் இதை நிச்சயம் முயற்சி செய்யவும். இதனால வேலை கிடைக்குமா, ரெஸ்யுமேக்கு வேல்யூ அதிகமாகுமானு எல்லாம் என்னால சொல்ல முடியாது. ஆனா உங்க தன்னம்பிக்கை கூடும். அது தான் முக்கியம். நினைச்சதை தடையில்லாமல் நாலு  பேர் முன்னாடி ஆங்கிலத்துல பேச வாய்ப்பிருக்கும்.

வகுப்புல க்ருப் டிஸ்கஷன் எல்லாம் முயற்சி செய்யலாம். இல்லைனா இரண்டாமாண்டு படிச்ச Data Structures, DBMS, OOPS.... இந்த மாதிரி ஏதாவது ஒரு சப்ஜக்டை க்ளாஸ் முழுக்க பிரிச்சி மறுபடியும் நீங்களே உங்களுக்குள்ள நடத்திக்கலாம். இது உங்களுக்கு ஒரு முறை Refresh பண்ணிக்க உதவும். அதுவுமில்லாமல் உங்க நண்பர்கள் முன்னாடி பேசி பழகறது உங்க கூச்சப்பழக்கத்தை குறைக்கும். 

காலேஜ் லைஃப்ல நிறைய படிக்க முடியும். முடிஞ்ச வரைக்கும் Quantitative Aptitude (RS Agarwal), Shakunthala Devi (Puzzles to Puzzle you, More Puzzles) எல்லாம் காலேஜ்லயே முடிச்சிடுங்க. இந்த லிங்க்ல இருக்கறதை படிச்சா உங்களுக்கு இன்னும் பயன்படும்னு நினைக்கிறேன். நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள காலேஜ் சரியான இடம். வெளிய வந்தா ஒரு கேள்வி புரியலைனா சொல்லி தர ஆள் இருக்காது. அதுக்கு ட்ரெயினிங்னு சொல்லி கொள்ளை அடிப்பாங்க. அதனால படிக்கிற காலத்துல அதை நல்லா படிச்சிட்டா பின்னாடி சுலபமா இருக்கும்.

வெளிய வந்ததும், வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா வீட்ல இருக்கலாம்னு நினைக்காதீங்க. சென்னையோ, பெங்களூரோ வந்து கொஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் வேலை தேடற வெறி வரும். குண்டு சட்டில குதிரை ஓட்ற வேலையெல்லாம் ஆகாது. முடிஞ்ச வரை Communication skillsஐ வளர்த்துக்கோங்க. உங்களோட டெக்னிக்கல் ஸ்கில்ஸை விட இது தான் அதிகமா வேலை செய்ய போகுது. அதனால அதுல கவனத்தை செலுத்தவும்.

தெரியாததை தயக்கமில்லாமல் நல்லா படிக்கிற (சொல்லித்தற) பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அதே மாதிரி தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க. உலகம் ரொம்ப பெருசு, நீங்க சொல்லி தருவதால் உங்ககிட்ட கேட்டவன் உங்க வேலையை தட்டிட்டு போயிடுவானு பொறாமைல சொல்லி தராம விட்டுடாதீங்க. காலேஜ் வந்து அந்த அளவுக்கு சின்ன புள்ளை தனமா இருக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன். 

ஃபீல்ட் டவுன்னு சொல்லி சோகமா உட்கார்ந்துடாதீங்க. வேலை வாய்ப்பு வரும் போது தயார் செய்ய ஆரம்பிச்சா நிச்சயம் அந்த வாய்ப்பை வேற யாராவது தட்டிட்டு போயிடுவாங்க. அதனால எப்பவும் தயாரா இருக்கவும்... All the very best my dear juniors...