தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, May 31, 2009

உரையாடல் போட்டிக்கான எனது சிறுகதை

சிறுகதைப் போட்டி என்றால் முடிந்த வரை கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். வெற்றி தோல்வி பற்றி பயம் இருந்தாலும் அதை விட கலந்து கொள்வதே மகிழ்வாக உள்ளது. பெரும்பாலும் என் கதைகள் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களம் கொண்டதாக இருப்பதாக ஒரு புகார் :). புதிதாக முயலும் பட்சத்தில், நன்றாக வருவதை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டும் என்பது எனது ஆசை.

போட்டி என்று வரும் பொழுது நான் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களமாக கொள்வது இல்லை. இந்த முறை அதையும் பொருட்படுத்தாது உரையாடல் போட்டிக்கு சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியையே களமாக வைத்து எழுதியிருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம், முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதை நான் உணர்ந்ததன் விளைவே.

Ethics, Values எல்லாம் வேலை செய்பவர்களுக்கே தவிர, நிறுவனங்களுக்கு இல்லை. அதைப் பதிவு செய்து வைப்பது என் கடமையாக நான் உணர்கிறேன். நாளை உலக பொருளாதாரம் சரியாகும் பட்சத்தில், புதிதாக வேலையில் வருபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்து பிறகு ஆப்பை அசைத்த குரங்கு போல மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.

ரொம்ப பேசாதடா வெண்ட்ரு. கதை எங்கனு கேட்டீங்கனா... கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Monday, May 25, 2009

சாப்ட்வேர் சக்கரம்!!!

காலங்காத்தால ஃபோன் பண்றதே இந்த அம்மாவுக்கு வேலையாப் போயிடுச்சி.

”என்னய்யா தூங்கிட்டு இருக்கியா?”

”இல்லை கபடி ஆடிட்டு இருக்கேன். ஏம்மா. எத்தனை தடவை சொல்லிருக்கேன். காலைல ஏழு மணிக்கு முன்னாடி ஃபோன் பண்ணாதீங்கனு. என்ன விஷயம்”

“இல்லய்யா, அந்த ரவி மாமா இருக்காரு இல்லை”

“ரவி மாமாவா? யார் அது?”

“என் அண்ணனோட சகலடா”

“சரி அவருக்கு என்னம்மா? சீக்கிரம் சொல்லுங்க. நான் இன்னும் ஒரு அரை மணி நேரம் தான் தூங்க முடியும்”

“உன் அத்தையோட தங்கச்சிப் பொண்ணு மீனாக்கு உங்க கம்பெனில வேலைக் கிடைச்சிருக்காம்”

“சரி. அதுக்கு?

“இப்ப தான் முதல் முறையா பெங்களூர் வருதாம். நேத்து தான் ரவி மாமா ஃபோன் பண்ணி விசாரிச்சாரு. நான் உன் நம்பரைக் கொடுத்திருக்கேன். ஏதாவது உதவி கேட்டா பண்ணுப்பா. சரியா?”

”ஏம்மா இப்படி எல்லாருக்கும் நம்பர் கொடுக்கற? எனக்கு இருக்குற வேலைக்கு அதெல்லாம் பண்ண முடியுமானு தெரியலை. காலைல எட்டரைக்கு போனா ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு தான் வரேன்”

“பாவம்யா. தனியா ஊரை விட்டு வருது. முடிஞ்ச வரைக்கும் உதவி பண்ணுயா. சரியா?”

“சரி சரி. இனிமே ஊருல இருந்து யாராவது வராங்கனு நம்பர் கொடுக்காதீங்க. நான் ராத்திரி பண்ணறேன்”

பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். கண்ணை மூடியவுடன் டார்டாய்ஸ் சுத்த துவங்கியது, திருக்கோவிலூர் தனலட்சுமி கல்யாண மண்டபத்தில் கொண்டு போய் என்னை நிறுத்தியது. நான் புது சட்டை, டிராயர் போட்டிருந்தேன். எனக்கு ஒம்பது வயதிருக்கலாம். அந்த அறை முழுக்க பெண்கள்.அந்த சிகப்பு, நீலம், வெள்ளை கலர் நிறைந்த ஜமக்கலத்தில் என் அக்காவுடன் அமர்ந்து  புளியங்கொட்டைகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தேன். 

“ஏய் என் அத்தை மடியில நீ ஏண்டி படுத்திருக்க. எழுந்திரிடி” பானுவின் குரல்.

“ஏய் இது ஏன் அத்தை. நான் எழுந்திரிக்க மாட்டேன்” மீனாவின் குரல்

“அத்தை! நீங்க எனக்கு தானே அத்தை. அவளுக்கு நீங்களே சொல்லுங்க அத்த” பானு என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நான் ரெண்டு பேருக்கும் அத்தை தான்மா. நீ வேணா இந்த மடில தலை வெச்சி படுத்துக்கோ” சொல்லிவிட்டு பானுவை படுக்க வைத்தார்கள்.

“என்னடி இப்பவே ரெண்டு பேரும் அத்தைக்கு சண்டை போடறீங்க. நாளைக்கு யாரு வினோத்தை கல்யாணம் பண்ணிக்க போறாங்களோ அவுங்களுக்கு தான் அவுங்க அத்தை. யாரு கட்டிக்கறீங்க சொல்லுங்க” பக்கத்திலிருந்த காந்தா பாட்டி சொல்லிவிட்டு சிரித்தாள். இதை கேட்டதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வேகமாக எழுந்து என் அம்மா அருகே சென்றேன்.

“ஏய் ரெண்டு பேரும் எழுந்திரிங்க. இது எங்க அம்மா. நான் தான் எங்கம்மா மடில தலை வெச்சி படுப்பேன். வேணும்னா நீங்க ரெண்டு பேரும் உங்க அம்மா மடில தலை வெச்சி படுத்துக்கோங்க. எழுந்திரிங்க” சொல்லிவிட்டு எட்டி உதைக்க ஆரம்பித்தேன். பானு எழுந்துவிட்டாள். அதற்குள் காந்தா பாட்டி என்னை கையை பிடித்து இழுத்துவிட்டார்கள்.

“பொம்பளை புள்ளைங்களை இப்படி எட்டி உதைக்கலாமா? மகாலஷ்மிங்கப்பா. இப்படி எல்லாம் பொம்பளை புள்ளைங்களை எட்டி உதைச்சா தரித்தரம் வந்துடும்பா. இனிமே என்னைக்கும் இப்படிப் பண்ணாத. புரியுதா” அதட்டினார்கள்.

“அப்பறம் நான் சொன்னா எழுந்திரிக்க வேண்டியது தானே. எங்கம்மா மடில எதுக்கு அதுங்க தலை வெச்சி படுக்கணும்?”

“அவுங்க அத்தை மடில தலை வெச்சி படுத்திருக்காங்க. அத்தை மடி மெத்தையடினு பாட்டு கூட இருக்கே. நீ வேணும்னா போய் உங்க அத்தை மடில படுத்துக்கோ. இல்லைனா வெளிய போய் விளையாடு. போ” துரத்திவிட்டார்கள். நானும் கோபத்தில் மீண்டும் ஒரு முறை படுத்திருந்த மீனாவை எட்டி உதைத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். 

அதற்கு பிறகு அவளை பார்த்த நியாபகம் இல்லை. அவளைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுவதோடு சரி. என் அக்கா கல்யாணத்திற்கு கூட ரவி மாமா தான் வந்தாரே தவிர மீனா வரவில்லை.

குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பினேன். சரியாக எட்டரை மணிக்கு என் சீட்டில் இருந்தேன். ஆன்சைட் கால் ஆரம்பித்து ஒரு மணி நேரம் சென்றது. அவன் வாங்கிய திட்டை 10x ஆக மாற்றி எங்களுக்கு கொடுத்து கொண்டிருந்தாள். அதை நான் 20x ஆக மாற்றி டீமில் இருக்கும் ஜூனியர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். 

சரியாக பனிரெண்டரை மணிக்கு என் செல்போன் சிணுங்கியது.

“ஹலோ வினோத்?”

“யெஸ் ஸ்பீக்கிங்”

“நான் மீனா பேசறேன்”

“மீனா? எந்த மீனா”

ஃபோன் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.  அது தமிழ்நாடு நம்பர். இன்னும் பெங்களூர் நம்பர் வாங்கவில்லை போல. 

மறுபடி நான் அழைத்தேன்.

“மீனா, ஐ அம் டெரிபலி சாரி. காலைல அம்மா சொன்னாங்க. டென்ஷன்ல மறந்துட்டேன்”

“பரவாயில்லை. எனக்கும் என்ன ரிலேஷன்னு சொல்லனும்னு தெரியலை. அதான் வெச்சிட்டேன்”

“ஹா ஹா ஹா. தட்ஸ் ஃபைன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் வரேன்”

பில்டிங் நம்பரை சொன்னாள். ட்ரைனிங் பில்டிங் தான். 

வேகமாக ட்ரெயினிங் பில்டிங்கை நோக்கி நடந்தேன். அங்கே இருந்த கூட்டத்தில் யார் மீனா என்று தெரியவில்லை. அவள் எண்ணுக்கு அழைத்தேன். லைட் மஞ்சள் நிற சுடிதார் போட்டு சோபாவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணுடைய செல்ஃபோன் சிணுங்கியது. அது தான் மீனாவாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன். ஆனால் அந்த பெண் வடநாட்டுக்காரி போல் இருந்தாள். 

”ஹலோ கிருஷ்ணா”

என் பின்னாலிருந்த படியிலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். வெள்ளை நிற சுடிதாரில் தேவதை மாதிரி தெரிந்தாள் மீனா என்று சொல்லுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் இன்னும் பாரதிராஜா படத்திலிருந்து வெளி வரவில்லை என்று அர்த்தம். 

“மீனா?”

”யெஸ்”

“வெஜ்ஜா நான் வெஜ்ஜா?”

“என்னது?”

“வெஜ் சாப்பாடு வேண்டுமா நான் வெஜ் சாப்பாடு வேணுமானு கேட்டேன். அதுக்கேத்த ஃபுட் கோர்ட்க்கு போகலாம்”

“வெஜ்”

“அப்ப பக்கத்துல இருக்கற ஃபுட் கோர்ட்டேக்கே போகலாம்”

வழியில் எதுவும் பேசாமல் ஏதோ சிந்தனையிலே வந்தாள்.

சாப்பாடு வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தோம்.

“சொல்லுங்க மீனா. ட்ரெயினிங் எல்லாம் எப்படி போகுது?”

“சொல்லுங்கவா? நான் உங்கள விட சின்ன பொண்ணு. மோர் ஓவர் நீங்க எனக்கு அத்தைப் பையன். அந்த ஞாபகம் இருக்கா?”

“அத்தைப் பையனா? இது என்ன காமெடியா இருக்கு. பானுக்கு தான் நான் அத்தைப் பையன். என்ன ஞாபகம் இல்லையா?”

முறைத்தாள்.

“சரி சரி. சாப்பிடு”

“சாப்பிட்டு தான் இருக்கேன். அப்பறம் உங்களால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியல தானே? நான் எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?”

“என்ன பண்றது நான் அப்ப மாதிரியே இருக்கேன். நீ தான் ஆளே மாறிட்ட?”

“நிஜமாவா?”

“ஆமாம். சின்ன வயசுல அழகா சின்னதா குட்டி குரங்கு மாதிரி இருந்த”

“ஏய்ய்ய்”

“இரு சொல்லி முடிக்க விடு”

“சொல்லுங்க”

“இப்ப பெரிய குரங்கா மாறிட்ட”

கைல வெச்சிருந்த ஸ்பூனால அடிச்சிட்டா. 

”அப்பறம் உனக்கு எல்லாம் எந்த அறிவாளி இந்த கம்பெனில வேலை போட்டு கொடுத்தான்?”

”ஹான்...உங்களுக்கே ஒரு அறிவாளி வேலை கொடுக்கும் போது எனக்கு கொடுக்காமலா போயிடுவான். அது மட்டுமில்லாமல் இந்த கம்பெனிக்குனே நான் தனியா ப்ரிப்பேர் பண்ணேன்”

“ஏன்?”

“சும்மா தான்”

“நம்பிட்டேன்”

“நல்லது”

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து அவளை ட்ரைனிங் பில்டிங்கில் விட்டு வந்தேன். அவள் நினைவாகவே இருந்தது. சின்ன வயசுல எல்லாம் இவ்வளவு துடுக்குத்தனமா பேசின மாதிரி நியாபகமில்லை. ஒரு வேளை சின்ன வயசுல பயமா கூட இருந்திருக்கலாம்.

சரியாக ஐந்து மணிக்கு செல் ஃபோன் சிணுங்கியது. மீனா தான்.

“எனக்கு அஞ்சே காலுக்கு பஸ் இருக்கு”

“சரி”

“நான் அதுல போகவா?”

“ஒரு வாரம் கெஸ்ட் அவுஸ் தானே?”

“ஆமாம்”

“அடுத்து?”

“PG தேடணும். நீங்க ஹெல்ப் பண்றீங்களா?”

“நான் வேணா வீடு எடுக்கறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தங்கிக்கலாம்”

“”

“ஏய் சும்மா சொன்னேன். டென்ஷன் ஆகாத. வெயிட் பண்ணு. ஒரு சிக்ஸ் தேர்ட்டிக்கா கிளம்பலாம். நான் வண்டிலயே உன்னை கொண்டு போய் விடறேன். ஓகேவா?”

“ஹ்ம்ம்ம். அதுவரைக்கும் நான் எங்க வெயிட் பண்றது?”

“என் பில்டிங்கு வா. ஆனா எதுவும் தொந்தரவு பண்ணக்கூடாது. சரியா?”

“நான் எதுவும் தொந்தரவு பண்ணமாட்டேன். சமத்தா இருப்பேன்”

“சரி கீழ வந்து ரிசப்ஷன்ல இருந்து கூப்பிடு. நான் வந்து கூப்பிட்டு போறேன்”

அவளை என் க்யூபிக்களுக்கு அழைத்து வந்து அருகில் உட்கார சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியவில்லை. வேலை முடிந்த வரை ஆன்சைட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு புறப்பட்டோம்.

”அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா மாமா?”

“ஓய்... என்னது மாமாவா? ஒதை வேணுமா?”

“அப்பறம் வேற எப்படி கூப்பிடறது?”

“அத்தான்னு கூப்பிடு”

“நிஜமாவா? பக்கத்துல யாராவது கேட்டா சிரிக்க மாட்டாங்க?”

“ஏய்... சும்மா சொன்னேன். வினோத்னு கூப்பிடு”

“எப்பவுமேவா?”

“ஆபிஸ்குள்ள மாமானு கூப்பிடாத. புரியுதா?”

“அப்ப வெளிய கூப்பிடலாமா?”

“உன் ட்ரெயினர் கிருஷ்ணா எனக்கு ஃபிரெண்ட் தான். ட்ரெயினிங்ல பாஸ் ஆகணும்னு ஆசையில்லையா? ”

”சரி சரி இனிமே கூப்பிடல”.

அவளை என்னுடைய டூ-வீலரில் அழைத்து கொண்டு
 சில PGக்கு அழைத்து சென்று காண்பித்தேன். மாதம் இரண்டாயிரத்தி ஐநூறிலிருந்து நான்காயிரம் வரை இருந்தது. பொதுவாக ரூமிற்கு இரண்டு அல்லது நான்கு பெட். வீக் டேல பிரேக் ஃபாஸ்ட், டின்னர். வீக் எண்ட்ல லஞ்ச். எல்லாமே கேவலமா இருக்கும்னு தங்கியிருந்தவங்கல தனியா விசாரிச்சதல சொன்னாங்க. எப்படியும் ரெண்டு நாள்ல முடிவு பண்ணிடலாம்னு விட்டுட்டோம். 

மணி எட்டாகியிருந்தது. அப்படியே சுக் சாகரில் ஆளுக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு அவளை கெஸ்ட் அவுஸில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வந்ததிலிருந்து அவள் நினைவாகவே இருந்தது. அவள் காலையிலிருந்து பேசியதெல்லாம் மீண்டும் ஒரு முறை மனதில் ஓடியது. எனக்கு இத்தனை வருடத்தில் அவளை பற்றிய நினைவு பெரிதாக வந்ததில்லை. 

எங்க அக்கா மட்டும் ஒன்றிரண்டு முறை அம்மாவிடம், மீனாவை நம்ம வீட்டுக்கு மருமகளா கூப்பிட்டு வந்திடலாம். நல்ல பொண்ணுனு சொல்லிட்டு இருப்பாங்க. அதுக்கு அம்மா, யாருக்கு யார்னு நம்ம கைல என்னமா இருக்கு. அதெல்லாம் நடக்கற அப்ப பார்த்துக்கலாம்னு சொல்லுவாங்க. அப்பவெல்லாம் என் மனசுல பெருசா எதுவும் தோன்றியது இல்லை. இன்னைக்கு ஒரே நாள்ல நானே மாறிட்டேன். எப்படியும் அக்காவை வெச்சி வழிக்கு கொண்டு வந்திடலாம். இல்லைனா பாவாக்கிட்ட சொல்லிக்கூட சொல்ல சொல்லலாம். மருமகன் பேச்சுக்கு வீட்ல எதிரா யாரும் பேசமாட்டாங்க.

அதுக்கு எல்லாம் முன்னாடி அவள் மனசுல என்ன இருக்குதுனு தெரிஞ்சிக்கனும். இது வரைக்கும் அவள் பேசினது தான் என்னை இப்படியே யோசிக்க வெச்சிருக்கு. இருந்தாலும் கடைசியா நான் உங்களை ரிலேட்டிவாதான் நினைச்சேனு சொல்லிட்டா, அலைபாயுதேல வர கார்த்திக் மாதிரி பல்பு வாங்க முடியாது. அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்குவோம். அதுக்கு அப்பறம் வீட்ல பேசலாம். 

இதுக்கெல்லாம் இப்ப அவசரம் இல்லை தான். ஆனா இப்படி ஒரு குழப்பத்துல என்னால இருக்க முடியாது, அவக்கிட்ட இப்படி ரெண்டுங்கெட்டான் தனமாவும் பேச முடியாது . இந்த வீக் எண்ட் எப்படியும் மீனாவோட தான் ஸ்பெண்ட் பண்ற மாதிரி இருக்கும். எப்படியும் அப்ப பேசிடலாம். இந்த வீக் எண்ட்ல எல்லாம் தெளிவாகிடலாம். அப்படி எதுவும் எண்ணம் அவளுக்கு இல்லைனாலும் ஓகே தான். இப்பவே எஸ்ஸாகிடலாம். மனசுல ஆசையை வளர்த்துக்கறது நியாயம் இல்லை. அவ ஆமாம்னு சொன்னா எப்படி இருக்கும். ஹார்ட்ல ஆக்சிஜன் சப்ளை குறைந்த மாதிரி இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டேன். வார இறுதிக்காக ஆர்வமாக காத்திருந்தேன்.

நான்கு நாள் ஓடிய வேகமே தெரியவில்லை. யாரோ கடிகார முள்ளை கையால வேகமா சுத்திவிட்ட மாதிரி இருந்தது. வெள்ளிக்கிழமை சரியாக நான்கு முப்பது ஆகியிருந்தது. திடிரென்று ராமகிருஷ்ணா ஹெக்டேவிடமிருந்து மெயில். அவர் க்யூபிக்கலிளிருந்த பக்கத்து கான்ஃபரன்ஸ் அறைக்கு வர சொல்லியிருந்தார்.
சரியாக ஐந்து நிமிடத்தில் அங்கு இருந்தேன். அவர் அங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த அறைக்கு அவர் இது வரை வர சொல்லியிருந்த நேரங்களில் அங்கு கொண்டாட்டங்கள் தான் இருக்கும். இன்று என்ன கொண்டாட்டமென்று தெரியவில்லை. இன்று மீனாவுடன் ஏதாவது படத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். எங்கே நேரமாகிவிடுமோ என்று பயம்.

சரியாக நான்கு நாற்பத்தைந்திற்கு அவர் வந்து சேர்ந்தார். பொறுமையாக பேச ஆரம்பித்தார். குலோபல் எக்கனாமிக் கண்டிஷன்களினால் கம்பெனி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சில நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டிய நிலை கம்பெனிக்கு வந்துள்ளதாகவும், அதை ஒவ்வொரு கட்டமாக செய்ய வேண்டிய நிலையில் இன்று எங்களை நீக்குவதாகவும் தெரிவித்தார். அங்கே திடீரென்று சலசலப்பு  எழுந்தது. ஒவ்வொருவரும் எப்படி எங்களை அதில் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார்கள். இது ஒவ்வொரு ப்ராஜக்டிலும் சீனியர் மேனஜர்கள் மேனஜர்களுடன் பேசி எடுத்த லிஸ்ட். இதை எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார். எங்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் இருப்பதாக தெரிவித்தார்.

ஒன்று தற்கொலை. மற்றொன்று கொலை.

அங்கே யாருக்கும் சிந்திக்க நேரமில்லை. அனைவரும் மேனஜரை ஃபோனில் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். யாரும் எடுக்கவில்லை போல. அனைவரையும் அங்கே ஒரு ஃபார்ம் கொடுத்து அதை நிரப்பிவிட்டு கிளம்ப சொன்னார்கள். யாரும் அவர் இடங்களுக்கு செல்ல கூடாது. அரை மணி நேரத்தில் கம்பெனியை விட்டு வெளியேறிவிட வேண்டும். அவர்களின் 
பொருட்கள் அவர்கள் கொடுத்துள்ள விலாசத்திற்கு வந்து சேரும். அனைவரும் அவர்களுடைய டேக் (ஐடி கார்ட்)ஐ கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. இப்படி ஒரு நிலை வரும் என்பதை யாரும் யூகிக்கவில்லை. என்னையும் சேர்த்து தான். இந்த டைட்டானிக் கப்பல் மூழ்குமா என்று இறுமாந்திருந்த கேப்டன் எட்வர்ட் ஸ்மித் நிலைக்கு நாங்களும் ஆளாகியிருந்தோம்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தவிர்த்தோம். தரையைப் பார்த்து கொண்டே பில்டிங்கை விட்டு வெளியே வந்தேன். கடைசி ஒரு முறையாக கம்பெனியை சுற்றி நடந்தேன். ஒவ்வொரு இடமும் ஒரு நிகழ்ச்சியை நினைவுப்படுத்தியது. ஃபுட் கோர்டில் இருந்த காபி டே, பல ட்ரீட்களை நியாபகப்படுத்தியது. பல சிரித்த முகங்கள் நினைவில் வந்து மறைந்தன.

 என் பிறந்த நாள் கொண்டாட்டத்தன்று அங்கு அனைவரும் என் முகத்தில் தடவிய கேக் சுவை நாவில் தோன்றி மறைந்தது. கால் செண்டர் பில்டிங் அருகே நடந்து கொண்டிருந்தேன். எத்தனை நாட்கள் இரவு ஒன்று இரண்டு மணி வரை வேலை பார்த்து இவர்களுடன் சேர்ந்து இரவு பணிரெண்டு மணிக்கு சுட சுட சாப்பிட்டது நினைவிற்கு வந்தது. மீண்டும் நான் வேலை செய்யும் பில்டிங் அருகே வந்து நின்றேன். ஐடி கார்ட் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இங்கு கோடிங் செய்து கொண்டிருந்தேன். 

மீனாவிடமிருந்து அழைப்பு வந்தது. அதை தவிர்த்து வீட்டிற்கு சென்றேன்.

இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. மீனாவிடமிருந்து நான்கைந்து SMSகள் மற்றும் மிஸ்ஸிடு கால்கள். அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் எனக்கு வேலை போய் விட்டதை என்னால் ஜீரணிக்கவும் முடியவில்லை. அன்று வந்திருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்து பார்வையை ஓட்டினேன்.

அங்கே கொட்டை எழுத்தில் இருந்தது என் கவனத்தை ஈர்த்தது. 

”****** நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பத்தாயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது” 

Friday, May 08, 2009

பாலம் - சங்கமம் போட்டிக்கு

கூரையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்த சத்தம் இரவு முழுக்க கேட்டு கொண்டிருந்தது. வானம் இன்னும் இருட்டாகவே இருந்தது. கோழிக் கூவும் சத்தமோ, பால் கறக்க கறவை மாடுகளை சொசைட்டிக்கு கூப்பிட்டு செல்லும் சத்தமோ கேட்கவில்லை. இருந்தாலும் எனக்கு தூக்கம் கலைந்துவிட்டது. இரவு முழுவதும் ஏதோ கெட்ட கனவாகவே வந்து கொண்டிருந்தது.

பாயிலிருந்து எழுந்து தாழ்வாரத்திற்கு சென்றேன். கிழவி அடுப்பங்கறையில் எருமுட்டையையும், விறகையும் வைத்து போராடிக் கொண்டிருந்தாள். அவள் ஊதாங்குழலை வைத்து ஊதியும் பெரிதாக பயனில்லாமல் இருந்தது. சீமெண்ணையை ஊத்தி முயற்சி செய்து கொண்டிருந்தாள். விட்டு விட்டு பொய்யும் மழையில் எல்லாம் ஈரமாகி இருக்கும்.

“என்னடா குமாரு, அதுக்குள்ள எழுந்திரிச்சிட்ட?”

“ஒண்ணுமில்ல. இந்த மழை சத்தத்துல சரியா தூங்க முடியல. அதான் சத்தத்துல எழுந்திரிச்சிட்டேன்”

“சரி சரி. இன்னைக்கு ஒங்க பள்ளியூடம் இருக்கா?”

“தெரியல. தொடர்ந்து மழை பெஞ்சிட்டே இருக்கு. எல்லா பள்ளிக்கூடமும் லீவு விட்டுட்டாங்க. இவுங்க புது பள்ளிக்கூடம், ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுனு பேர் வாங்கணும்னு லீவே விட மாட்றாங்க”

”ஏன்யா, அந்த பாலம் வேற விரிசல் விட்டுருக்குனு எல்லாம் பேசிக்கறாங்க. அதைத் தாண்டி பள்ளீயூடம் வெச்சிட்டு லீவு விடமாட்றானுங்களே. புள்ளைங்களுக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடுச்சினா?”

எனக்கும் அந்த சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது. நேற்றே அந்த விரிசலைப் பார்த்தேன். எப்படியும் மழை நின்றால் தான் அதை சரி செய்வார்கள். அந்த பக்கமாக நிறைய பேருந்துகளும், லாரிகளும் செல்வதில்லை. அதை கடந்து செல்லும் முப்பது, நாப்பது பெரிய வண்டிகளுள் நான் ஓட்டி செல்லும் பேருந்தும் ஒன்று. என்னுடைய வண்டி முழுதும் குழந்தைகள். ஊரிலிருக்கும் பணக்காரப் பிள்ளைகள் பெரும்பாலும் அந்த பள்ளியில் தான் படிக்கின்றனர். அனைவரும் என் பேருந்தில் தான்.

”அதெல்லாம் ஒண்ணுமில்ல. யாரோ சும்மா கதை கட்டி விட்டுருக்காங்க. அப்படி ஏதாவது இருந்தா நிச்சயம் லீவு விட்ருவாங்க”

சொல்லிவிட்டு போய் மீண்டும் படுத்துக் கொண்டேன். இன்னும் ஒரு மணி நேரம் தூங்கலாம். தூக்கம் வரவில்லை. ராத்திரி முழுக்க மழை பெய்து கொண்டிருந்திருக்கிறது. பள்ளி லீவு விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன்.  மெதுவாக கண்விழித்து பார்த்தேன். சுவற்றில் சிவப்பாக மரவட்டை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. சுவற்றின் சுண்ணாம்பு விழுந்து லேசான பள்ளமானப் பகுதி வந்ததும் அது அப்படியே நின்றுவிட்டது. பிறகு அப்படியே பின்னால் சென்று அதை சுற்றிக் கொண்டு சென்றது. 

எழுந்து போர்வையை மடித்து வைத்து பாயை ஓரமாக எடுத்து வைத்துவிட்டு, சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினேன். நேராக லஷ்மி ஒயின்ஸிற்கு நடந்தேன். அது இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் என்பது எனக்கு தெரியும். காலை நேரத்தில் அண்ணாச்சி இருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். நான் எதிர்பார்த்த படி அண்ணாச்சி அங்கே இருந்தார்.

“என்னடா குமாரு. இந்த நேரத்துல இங்க வந்திருக்க? சரக்கு போட்டுட்டு வண்டில ஏறுன, அப்படியே அறுத்துபுடுவேன். கால”

“இல்லைங்க அண்ணாச்சி. இன்னைக்கு பள்ளிக்கூடம் இருக்கானு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்”

“இது என்ன கேள்வி. புதன் கிழமை அதுவுமா எதுக்கு பள்ளிக்கூடம் லீவு விடுவாங்க? இன்னைக்கு காந்தி பொறந்த நாளுக்கூட கிடையாதே”

”தொடர்ந்து மழை பெஞ்சிட்டு இருக்கு அண்ணாச்சி. அதான் கேட்டேன்”

“ஏன்டா புள்ளைங்க எல்லாம் மரத்தடியிலையா படிக்க போதுக? அவ்வளவு பெரிய பில்டிங் கட்டிருக்கறேன். எதுக்கு மழைக்கு லீவு விடணும்? எனக்கு ஒயின்ஸ் ஷாப் மாதிரி தான் பள்ளிக்கூடமும். அதுக்கு அவ்வளவு சீக்கிரம் லீவு எல்லாம் விட முடியாது. புரியுதா?”

“இல்லைங்க அண்ணாச்சி. பாலம் லேசா விரிசல் விட்டிருக்கு. அதான்”

”எவன்டா அவன். புரியாத பையனா இருக்கான். அது என்ன பெரிய பாம்பன் பாலமா? கண்ணை மூடி திறந்தா அதை தாண்டிட போற. அதுக்குள்ளவா அது உடைஞ்சிட போகுது. அதுவுமில்லாம நான் பள்ளிக்கூடம் லீவு விட்டா உடனே மத்த பள்ளீக்கூடக்காரனுங்க எல்லாம் இவன் மழைக்கு பள்ளிக்கூடம் லீவு விடறானே. ஒயின்ஸ் ஷாப்புக்கு லீவு விடுவானு கேட்டுடமாட்டாங்க?”

“அது இல்லைங்க அண்ணாச்சி”

“எவன்டா அவன். சொன்னதையே சொல்லிட்டு இருக்கான். ஒழுங்கா பஸ் எடுத்துட்டு பசங்களைக் கூப்பிட்டு போக முடியுமுனா சொல்லு. இல்லை இன்னையோட நின்னுக்கோ. நான் வேற ஆளைப் பார்த்துக்கறேன்”

அந்த இடத்தை விட்டு கிளம்பினேன். வீட்டிற்கு சென்று திண்ணையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அவர் சொன்ன மாதிரி கண்ணை மூடி திறப்பதற்குள் பாலத்தை தாண்டிவிட முடியாது என்றாலும் பத்து இருபது நொடிக்குள் கடந்துவிடலாம் தான். ஆனால்... மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாதிரி பிசைந்து கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை.

குளித்து விட்டு கிளம்பினேன். ஏழு மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும். பசங்களை விட்டுவிட்டு ஒன்பது முப்பது மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடலாம். சரியாக ஏழரை மணிக்கு ஒயின்ஸ் ஷாப் எதிரில் இருக்கும் பேருந்தில் இருந்தேன். வழியில் மணிகண்டன் ஏறிக் கொள்வான். அவன் தான் கிளினர். கிளினர் என்று சொல்வதை விட பஸ்ஸில் வரும் வாண்டுகளை மேய்ப்பவன் என்று சொல்லலாம். அவன் இல்லை என்றால் ஒவ்வொரு குழந்தையும் என்ன அட்டகாசம் செய்யும் என்றே சொல்ல முடியாது. எப்படியும் அடுத்த மாதத்திற்குள் அனைத்து ஜன்னல்களையும் சின்ன சின்ன கம்பிகளால் அடைத்து விடலாம் என்று அண்ணாச்சி சொல்லியுள்ளார்.

மணிகண்டன், கணக்குபிள்ளைத் தெரு முனையில் நின்றிருந்தான்.

“பள்ளிக்கூடம் லீவா இருக்கும்னு நினைச்சேன். வழக்கம் போல சர்ருனு வந்துட்ட?”

“அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன். அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாரு”

“நல்ல வேளை. லீவு இல்லை. ராத்திரி முழுசா கூரைல இருந்து வீட்டுக்குள்ள தண்ணி சொட்டிக்கிட்டே இருந்துது. தூங்கவே முடியல. தரையெல்லாம் ஜில்லுனு இருந்துது. பள்ளிக்கூடத்துல புதுசா கட்டுன ரூம்ல எதுலயாவது தூங்கலாம்னு தான் சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்”

“சரி சரி. அந்தப் பாலம் எப்படி இருக்குனு யாராவது ஏதாவது சொன்னாங்களா?”

“அதான் நாம நேத்தே பாத்தோமே. விரிசல் விட்டிருக்கு. இப்ப எப்படி இருக்குனு தெரியல. நாம தான் மொதல்ல போறோம்னு நினைக்கிறேன். நீ தான் வந்து சொல்லனும்”


நன்றாக தூறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தெருவிலும் பெற்றோர்கள் ஒரு கையில் குடையும் மற்றொரு கையில் பிள்ளைகளை பிடித்து நின்று கொண்டிருந்தனர். பிள்ளைகளும் அவர்கள் தூக்கி கொண்டிருக்கும் அவர்களை விட அதிக எடை இருக்கும் புத்தக பைகளும் நனையாமல் காக்க போராடிக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் நனைந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் பேருந்தில் நுழைந்ததும் அவர்கள் ஷூவில் இருக்கும் சேறை படிகளிலே துடைத்துவிட்டு சென்று கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பெற்றோர்களின் முகத்திலும் இந்த மழையிலும் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறோம் என்ற பெருமிதம் இருந்தது. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் பள்ளி விடுமுறை விடவில்லை என்ற ஏமாற்றமும், விடமாட்டார்களா என்ற ஏக்கமும் இருந்தது. எனக்கு மட்டும் அடி மனதில் ஏதோ ஒன்று உறுத்தி கொண்டிருந்தது. இந்த பெற்றோர்கள் அண்ணாச்சிக்கு போன் செய்து சொல்லியிருந்தால் இன்று விடுமுறை விட்டிருக்கலாம். இப்படி அவுங்களே அனுப்பும் போது நமக்கு என்ன வந்துச்சு? இதுங்கள பள்ளிக்கூடத்துல விட்டுட்டு நிம்மதியா வந்து தூங்கலாம்.

திடீரென்று ஒரு எண்ணம் வந்தது. கடைசி தெருவில் இருக்கும் பிள்ளையாருக்கு சூடம் ஏற்றிவிட்டு செல்லலாம் என்று தோன்றியது. அந்தத் தெரு முனையில் நிறுத்திவிட்டு இறங்கினேன். மணிகண்டனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று எந்த குழந்தையும் சத்தம் போடாமல் அமைதியாக இருந்ததால் அவனுக்கு வேலை இல்லை. அவனும் என்னுடன் இறங்கினான்.

பக்கத்திலிருக்கும் நாயக்கர் கடையில் சூடமும் தீப்பெட்டியும் வாங்கி விட்டு அந்த தெரு முனை பிள்ளையாருக்கு ஏற்ற சென்றேன். சூடம் ஏற்றும் மாடமும் ஈரமாக இருந்தது. ஏற்றினால் அணைந்துவிடும் அபாயம் அதிகமா இருந்தது. அப்படி அணைந்தால் சுத்துமாக நொறுங்கிவிடுவேன் என்ற பயம் மனதை கவ்வியது. அதனால் அந்த சூடத்தை அப்படியே வைத்துவிட்டு வந்து வண்டியை எடுத்தேன். மணிகண்டனும் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறினான்.

கடைசித் தெருவில் இருக்கும் குழந்தையையும் ஏற்றி கொண்டு, திரும்பி பார்த்தேன். சில காலி இடங்கள் தெரிந்தாலும், நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். இன்னும் பத்து நிமிடத்தில் பாலத்தை கடந்து விடலாம். மணிகண்டனிடம் ஏதாவது பேசி நேரத்தைப் போக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை. மனம் முழுதும் வெறுமையாக இருந்தது. இப்படி என்றும் எனக்கு தோன்றியதில்லை.

சரியாக பாலத்தின் அருகில் வண்டி நின்றுவிட்டது. நின்று விட்டது என்று சொல்வதைவிட நான் சொல்லிய வேலையை செய்தது என்று சொல்லலாம். வண்டி நின்ற இடத்திலிருந்து பாலத்திலிருந்த விரிசல் சரியாக தெரியவில்லை. மழை பெய்யாமலிருந்தால் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். பாலத்திற்கு அடியில் தொடர் மழையால் ஓடும் ஆற்று நீரின் சத்தம் மட்டும் நன்றாக கேட்டுக் கொண்டிருந்தது.

வண்டி மீண்டும் ஊர் நோக்கி புறப்பட்டது. குழந்தைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. மணிகண்டனுக்கும்.

“ஏன்ன வண்டிய ரிவர்ஸ் எடுத்துட்டு ஊருக்கு திரும்ப போற?”

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு சொன்னேன்...

 “இன்னைக்குப் பள்ளிக்கூடம் லீவு”

Sunday, May 03, 2009

Tenant Commandments - நான் பார்த்த நாடகம்

எனக்கு ரொம்ப நாளா மேடை நாடகம் பார்க்கணும்னு ஆசை. ஒரு வழியா நேத்து அது நிறைவேறியது. நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் நடத்திய சித்திரை திருவிழாவில் ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் (Stage Friends) நடத்திய டெனண்ட் கமெண்ட்மெண்ட் (Tenant Commandment) நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.


இது பல ஆண்டுகளுக்கு முன் எஸ்.வி.சேகர் நாடகக் குழுவில் க்ரேஸி மோகன் இருந்த பொழுது நடத்தப்பட்ட நாடகம். அதை தூசி தட்டி ஒரு சில மாற்றங்களுடன் ஸ்டேஜ் பிரெண்ட்ஸால் நடத்தப்பட்டது. கதை, வசனம் : க்ரேஸி மோகன். இயக்கம் : குரு. எஸ்.வி.சேகர் ஏற்று நடத்திய பாத்திரத்தையும் அவரே செய்தார். 

இது நாடகத்தைப் பற்றிய என் விமர்சனமல்ல. எனது எண்ணங்கள். அவ்வளவே.

நாடகத்தின் கதை இது தான், வீட்டு சொந்தக்காரரால் சிரமத்திற்குள்ளாகும் வாடகைக்கு குடியிருக்கும் குடித்தினக்காரர், சொந்தமாக வீடு கட்டி, அதில் வாடகைக்கு குடியேறுபவர்களை பத்து விதிகள் விதித்து கொடுமைப்படுத்தி வீட்டைவிட்டு துரத்துகிறார். அவருடைய லட்சியம் அதைப் போல் நூறு பேரைத் துரத்துவது தான். அவருடைய இந்த செயலை வெறுக்கும் அவர் மகனும், வீட்டு புரோக்கரும் சேர்ந்து அவருக்கு புத்தி வர வைக்கிறார்கள். இரண்டேகால் மணி நேர நாடகத்தை இரண்டு வரிகளில் சொல்வது கஷ்டம். 



சாது சங்கரனா நடிச்ச மோகன் கொன்னுட்டார். அட்டகாசமான நடிப்பு. செம எக்ஸ்ப்ரஷ்ன்ஸ் அண்ட் டைம்லி டயலாக் டெலிவரி. அவரால அட்டகாசமா காமெடி ரோல் பண்ண முடியும். அதே மாதிரி ரொம்ப ரொம்ப இயல்பா நடிச்சிருக்காரு அய்யாசாமி கேரக்டர்ல நடிச்ச ரமணி. அவர் நிஜமா நடிச்ச மாதிரியே தெரியல. அவ்வளவு இயல்பு. அவர் டயலாக் இல்லாதப்பவும் சரியான முகபாவம் காண்பித்து கொண்டிருந்தார். இவுங்க ரெண்டு பேர் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.


நாடகத்தை இயக்கி, பத்து வேடத்தை (உடனே தசாவதாரம் கமலுக்கு போட்டியானு நினைச்சிடாதீங்க. இது கேரக்டர் பேரு) ஏற்று எந்த குறையும் இல்லாமல் செய்தார் குரு. அவருடைய நடிப்பிலும் எந்த குறையும் இல்லை. நஷ்ட ஈடு நாதமுனி கேரக்டர் இன்னும் பலமாக அமைத்திருக்கலாம். அவர் எந்த குறையும் இல்லாமலே நடித்தார். அதே போல் செல்வராஜ் கேரக்டர் செய்த பாஸ்கர், கே.டி. பெருமாள் பாத்திரத்தில் நடித்த ராம், ஆரோக்கிய சாமி பாத்திரத்தில் நடித்த அரவிந்த், ஆதிகேசவன் கேரக்டரில் நடித்த ஸ்ரீநிவாசன், நவநீதமாக நடித்த சுரேஷ், குழந்தைசாமி பாத்திரத்தில் நடித்த கணேஷ் சந்திரா அனைவரும் நன்றாகவே நடித்திருந்தார்கள். குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா...

இனி என் இரண்டணாக்கள் :

அமெரிக்காவில் நடத்தப்படும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலானோர் வருவது தங்கள் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் பார்க்க வைத்து, அவர்களும் பெருமைப்பட தான். அதனால் இங்கே நடத்தப்படும் நிகழ்ச்சிகள் சில்ட்ரெண் ஃபிரெண்ட்லியாக (Children Friendly) இருக்க வேண்டும். ஆனால் இந்த நாடகத்தில் நிறைய டபுல் மீனிங் டயலாக்ஸ், மேலும் நிறைய so called கெட்ட வார்த்தைகள். அதை இவர்கள் சரி செய்ய வேண்டும்.

அடுத்து டயலாக்ஸ் இன்னும் கொஞ்சம் பிரில்லியண்டாக இருந்திருக்கலாம். என்னடா இவன் க்ரேஸி டயலாக்கையே குறை சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். எடுத்துக்காட்டிற்கு வீட்டு புரோக்கர் பரமசிவத்திடம் ஆதிகேசவன் ”உங்க வீட்டு ஓனர் உங்களை கொடுமைப்படுத்தினத்துக்கு நீங்க அவரை பழிவாங்காம டெனண்ட்ஸை பழி வாங்கறது என்ன நியாயம்?” அப்படினு கேக்கற இடத்துல அவர் சொல்ற டயலாக்ஸ் கச கசனு இருக்கு.

அதுக்கு பதிலா, 

ப்ரோக்கர் : உங்க வீட்டு ஓனர் உங்களை கொடுமைப்படுத்தினத்துக்கு நீங்க அவரை பழிவாங்காம டெனண்ட்ஸை பழி வாங்கறது என்ன நியாயம்?

ஆதிகேசவன் : வீட்டு ஓனரை பழி வாங்கறது எப்படினு உனக்கு தெரியுமா?

ப்ரோக்கர் : தெரியாதே

ஆதிகேசவன் : எனக்கும் தெரியலை. அதனால தான் வீட்டில குடியிருக்க வரவங்களை நான் பழிவாங்கறேன்.

அப்படினு சொல்லியிருக்கலாம்.



அப்பறம் ப்ரோக்கர் பரமசிவமாக நடித்த ராஜகோபால் எதிர்ல இருக்கறவரைப் பார்த்தே பேச மாட்றார். எப்பவுமே ஆடியன்ஸை பார்த்தே பேசறார். செம காமெடியா இருந்தது. எதிர்ல இருக்கறவர் ஏதாவது பேசினா இவர் நேரா நம்மல பார்த்து பேசறார். அடுத்து கண்ணை சிமிட்டி சிமிட்டி பேசினா வெக்கப்படறதுனு நினைச்சிட்டார் போல கமலா கேரக்டர்ல நடிச்ச கிரித்திகா. அப்பறம் அவுங்க ரொம்ப டென்ஷனா நடிச்ச மாதிரி இருந்தது. இயல்பா இல்லை. அதே மாதிரி மகமாயி மங்களமா நடிச்ச ராதிகா மேடமும் ரொம்ப டென்ஷனா நடிச்ச மாதிரி இருந்தது.

அப்பறம் கவுண்டர்னு சொல்ற சாது சங்கரன், ஐயர் ஆத்து பாஷைல பேசறார். ரியலிஸ்டிக்கா இல்லை.

நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள். நாடகம் நடந்த வேகத்தை விட குழந்தைகள் அங்க இங்கனு ஓடிட்டு இருந்த வேகம் தான் அதிகமா இருந்தது. இது நாடகம் பார்க்கறவர்களை பாதிப்பதை விட நாடகத்தில நடிப்பவர்களுக்கு அதிக இடையூறாக இருக்கும். அவர்களுடைய கவனமும் சிதற வாய்ப்பிருக்கிறது. அதனால் பெற்றோர்களுக்கு முன்னெச்செரிக்கையாக இதை அறிவிக்கலாம். அதே போல் சினிமா தியேட்டர் செல்லும் போது செல்ஃபோன்களை அணைப்பதை போல நாடகம் ஆரம்பிப்பதற்கு முன் அனைவரையும் அதை அணைக்க சொல்லிவிடலாம். நடிப்பவர்களுக்கு இடையூறாக இல்லாமல் இருக்கும். அதே போல் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை போலவும் இருக்கும்.

ஒரு நல்ல மாலை பொழுதை எங்களுக்கு அமைத்து கொடுத்த நியூ இங்கிலாந்து தமிழ் சங்கத்துக்கும், ஸ்டேஜ் ஃபிரெண்ட்ஸ் குழுவினருக்கும் என் நன்றிகள் பல. 

Stage Friends, You guys really rock. All the best!!!