தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, January 25, 2007

பகுத்தறிவு என்றால் என்ன???

சர்வேசன் அவர்களின் சர்வே தலைப்பை பார்த்து கொஞ்சம் குழம்பிய நிலையிலே இந்த பதிவை இடுகிறேன்...

பகுத்தறிவு என்றால் என்ன???
எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு. ஒருவனுக்கு இறை நம்பிக்கையே நல்ல வழியில் அவன் வாழ்க்கையை நடத்த உதவுமெனில் அது அறிவின்மையா???

எவ்வளவு துன்பம் வாழ்வில் ஏற்பட்டாலும் நல்ல வழியில் வாழ்ந்தால் இறைவன் எப்படியும் உதவுவான் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையில் போராடும் ஒருவன் அந்த நம்பிக்கையின் காரணமாகவே வெற்றியடைகிறான் என்றால் அவனுக்கு பகுத்தறியும் ஞானமில்லை என்று அர்த்தமா???

இறை நம்பிக்கையின்மையா பகுத்தறிவு??? அது நாத்திகம் தானே?

கொஞ்சம் யாராவது உதவுங்களேன்!!!

Thursday, January 18, 2007

ஏன்???

அப்பாடா இன்னைக்கு ஞாயித்திக்கிழமை. அம்மா, அப்பா, அக்கா எல்லாரோடையும் சேர்ந்து வெளிய போகலாம்.

இன்னைக்கு எப்படியும் பீச்க்கு கூப்பிட்டு போகனும்னு சின்ன அக்கா போன வாரமே அழுது அப்பாவை ஒத்துக்க வெச்சிட்டா. அதனால கண்டிப்பா இன்னைக்கு அப்பா பீச்சுக்கு கூப்பிட்டு போவாரு. அங்க போயி ஜாலியா விளையாடிட்டு வரலாம்.

சரியாக 4 மணிக்கு காரில் கிளம்பினோம். சின்ன அக்கா அப்பாவோட முன்னாடி உக்கார்ந்துக்கிட்டா. பெரிய அக்காவும் அம்மாவும் பின்னாடி ஜன்னல் பக்கத்துல உக்கார்ந்துக்கிட்டாங்க. நான் ரெண்டு பேருக்கும் நடுவுல அம்மா மடில தலை வெச்சி படுத்துட்டு வந்தேன். எப்பவுமே எனக்கு மட்டும் ஜன்னல் சீட் தர மாட்றாங்க. எல்லாம் இந்த பெரிய அக்கா பண்ற வேலை.

பீச் போய் சேரும் போது மணி 5:30. இப்பவே நல்லா குளிர் காத்து வீசிட்டு இருக்கு. அக்காங்க ரெண்டு பேரும் ஐஸ் கிரிம் கேட்டாங்க. இந்த குளிர்ல எனக்கு ஐஸ் கிரிம் வேணாம்னு நான் சொல்லிட்டேன். அவுங்க ரெண்டு பேருக்கு மட்டும் அப்பா கோன் ஐஸ் கிரிம் வாங்கி கொடுத்தாரு.

அதுக்கு அப்பறம் பீச்ல விளையாட ஆரம்பிச்சோம். நாங்க மூணு பேரும் சேர்ந்து வீடு கட்டி விளையாடினோம். பெரிய அக்கா தான் நிறைய மண்ணு போட்டு கோபுரம் அழகாக்குச்சு. அப்பறம் தண்ணில போய் காலை வெச்சி விளையாடிட்டு இருந்தோம். சின்ன அக்கா கொஞ்சம் நல்லா தண்ணிக்குள்ள போக ஆரம்பிச்சா. அப்பறம் நான் போட்ட சத்தத்துல அப்பா வந்து அவள தண்ணில இருந்து இழுத்துட்டு வந்து நல்லா அடிச்சாரு. அக்கா அழுதுச்சி. நாந்தான் அவ கண்ணை துடைச்சேன். இருந்தாலும் அவளுக்கு என் மேல கோபம் போகல. எங்கிட்ட எதுவுமே பேசல. போய் அம்மா மடில படுத்துக்குச்சு.

அப்பறம் எல்லாரும் கோவிலுக்கு போனோம். அங்க எல்லாம் நல்லா சாமி கும்பிட்டோம். அந்த கோவில் ஐயர் எனக்கு மட்டும் கைல குங்குமம் கொடுக்காம அம்மாக்கிட்டே சேர்த்து கொடுத்துட்டாரு. அவர் எப்பவுமே அப்படித்தான். எந்த குழந்தைக்கும் அவர் கொடுக்க மாட்டாரு. கேட்டா நாங்க எல்லாம் கீழ போட்டுடுவோமாம். எல்லாரும் தூண்ல மட்டும் போடறாங்க.அது மட்டும் தப்பில்லை.

அப்பறம் ஹோட்டலுக்கு போய் எல்லாரும் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 11:00. நல்ல வேளை எனக்கு இன்னும் ஸ்கூல் ஆரம்பிக்கல. அக்காங்கதான் நாளைக்கு சீக்கிரம் எழுந்திரிச்சி அழுதுட்டே கிளம்புவாங்க. அம்மா தான் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் கிளப்பிவிடுவாங்க.

மணி 11:30. எல்லோரும் படுக்க போனோம். அக்காங்க ரெண்டு பேரும் அப்பா, அம்மாவுக்கு நடுவுல படுத்துக்கிட்டாங்க. பெரிய அக்கா அப்பா பக்கத்துல படுத்துக்கிட்டா. சின்ன அக்காக்கு அம்மா மேல காலை போட்டுட்டு தூங்கினா தான் தூக்கம் வரும்னு சொல்லுவா. நான் இப்ப எங்க படுக்கறது. நான் கேட்டாலும் அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் அவுங்களுக்கு இந்த பக்கம் படுத்துக்கறேன்.

எல்லாரும் தூங்கிட்டாங்க. வீடே அமைதியா இருட்டா இருக்கு. எனக்கு பயமா இருக்கு. இந்த மாதிரி இருட்டான இடத்துல நான் இருக்கும் போது தான் எனக்கு அந்த வலி வந்துச்சு. அத நினைச்சா இப்பவும் பயமா இருக்கு. என் கை, கால், தலை எல்லாம் பிச்சாங்க...அப்பறம் தான் நான் வெளியவே வந்தேன்....

அம்மா... இப்பவாவது என் குரல் உனக்கு கேக்குதாம்மா. மூணாவது பெண் குழந்தையா உருவானது என் தப்பாமா? சொத்த பார்த்துக்க பையன் தான் வேணுமா? நாங்க உங்களை பார்த்துக்க மாட்டோமா? ஏன் இப்படி பண்ணீங்க... இந்த மூணு வருஷமா நான் தினமும் உங்கக்கிட்ட பேசறனே உங்களுக்கு கேக்கவே இல்லையா? என் அழுகைக் கூட உங்களுக்கு கேக்கலையா? நான் உங்களை எல்லாம் பாசமா பார்த்துக்குவேணே!!! ஏன் இப்படி பண்ணீங்க? ஏன்???

Sunday, January 14, 2007

Desamuduru - From the Director of Pokiri

தேசமுதுரு - மாபெரும் வெற்றிப்படம் போக்கிரியை இயக்கிய பூரி ஜகந்நாத்தின் மற்றோரு படம்.



அல்லு அர்ஜுனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய படம். படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். அவரை அத்தனை விதத்திலும் சரியாக உபயோகப்படுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் துவக்க காட்சியிலேயே அவரின் உழைப்பு தெரியும் விதத்தில் அமைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு.

கதை என்று பார்த்தால் பெரிதும் கவரும் விதத்தில் எதுவுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகன். தூள் பேட் ஏரியாவில் நடக்கும் தவறுகளை யாருக்கும் தெரியாமல் படம் பிடிக்க செல்கிறார். அங்கே நடக்கவிருக்கும் ஒரு கொலையை தடுக்க வில்லன்களுடன் சண்டை. அங்கே வில்லனின் மகனை அவர் அடிக்க அவர் கோமாவிற்கு செல்கிறார் (போக்கிரியில் மகேஷ் பாபுவிடம் முதல் சண்டையில் அடி வாங்கும் அதே நபர்)

வில்லன்களிடமிருந்து அவரை காப்பாற்ற அவரை குலுமானியில் நடக்கவிருக்கும் ஒரு படப்பிடிப்பு குழுவுடன் அனுப்புகிறார்கள். அங்கே ஒரு சந்நியாசிகளின் கூட்டத்தை சந்திக்கிறார். அங்கே கதாநாயகி சந்நியாசியாக இருக்கிறார். பார்த்தவுடனே நாயகியின் மேல் காதல் வயப்படுகிறார் அல்லு அர்ஜுன். பிறகு அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது,சந்நியாசினி எப்படி சம்சாரியாகிறார், கதாநாயகியின் பின்புலம் என்ன மற்றும் வில்லன்களை நாயகன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.


சராசரியான இந்த கதையில் மிளிர்கிறார் அல்லு அர்ஜுன். அவருடைய எதார்த்தமான நடிப்பும் வசனமும் எப்போழுதும் போல் அருமை. சந்நியாசினியாக இருக்கும் நாயகியிடம் அவர் பேசுமிடங்களும் நன்றாக அமைந்திருக்கிறது.கதாநாயகி ஹன்சிகா - மெழுகு பொம்மை போல் இருக்கிறார். இதுவே சந்நியாசினி வேடத்திற்கு பொருந்துகிறது. ஒரு ஜாடையில் பூமிகாவை நினைவுப்படுத்துகிறார். பின்பாதியிலும், பாடல் காட்சிகளிலும் அவருடைய பணியை(?) செவ்வனே செய்துள்ளார்.

வில்லன் (கஜினி, தொட்டி ஜெயாவில் வருபவர்) தமிழ் நாட்டுக்காராக காண்பித்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் பேசம் தமிழ் கொடுரம். வேண்டுமென்றால் அதை தமிலுகு (தமிழ் + தெலுகு) என்று சொல்லி திருப்திப்பட்டுக்கொள்ளலாம். அவருடைய சத்தத்தையே தாங்க முடியாதென்றால் அதற்கு போட்டியாக சகுந்தலா (சொர்ணா அக்கா) வேறு சத்தம் போடுகிறார்.ஆனால் தெலுகு படத்திற்கு இது சாதாரணம்.



பாடல்கள் போக்கிரி அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே அமைந்திருக்கிறது. சண்டை காட்சிகள் போக்கிரியை விட அருமையாக அமைந்திருக்கிறது. அல்லு அர்ஜுனினை பிழிந்து எடுத்திருக்கிறார்கள். அவரும் சந்தோஷமாக உழைத்திருக்கிறார். நடனத்திலும் படம் கிளப்புகிறார்.

கண்டிப்பாக இது மற்றொரு போக்கிரி கிடையாது. ஆனால் ஆக்ஷன் பிரியர்கள் சந்தோஷமாக பார்க்கலாம். தமிழில் ஆர்யாவை வைத்து ரீ-மேக் செய்யலாம்.

Thursday, January 11, 2007

தாயாக நீயும் தலை கோத வந்தால்...

டேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு,

"ஆச்சர்யம் தான்!
நட்பு கடலில்
முத்து குளித்து
வைரத்தை அல்லவா
எடுத்திருக்கிறேன்!!"

பெருமை பொங்க கேட்டாள் சுஜா...

"லூசா நீ? கடல்ல போய் வைரம் கிடைக்குமா? சும்மா எதையாவது அடிச்சு விட்டு கவிதைனு சொன்னா நாங்க நம்பிடுவோமா?" பாலா சொல்லி கொண்டிருக்கும் போதே சுஜாவின் முகம் துவண்டு போனது.

"உங்கிட்ட போயி இதை காட்னேன் பாரு. என் புத்திய செருப்பாலத்தான் அடிச்சுக்கனும்" அவள் சொல்லி முடிக்கவும் பாலா அவள் காலை பார்த்தான்.

"கட் ஷு போட்டிருக்கங்கற தைரியத்துல சொல்லிட்ட. சரி வீட்டுக்கு போன உடனே உனக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தறேன்"

"சரிங்க சார். முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க. இது எங்க ப்ராஜக்ட் ஏரியா. நீங்க இங்க வரதே தப்பு" கொஞ்சம் சூடாக சொன்னாள்.

"ஐயோ உன்னைய பார்க்க யார் வந்தா? நான் இங்க என் பிரெண்ட் அனிதாவை பார்க்க வந்தேன். என்ன அனிதா நான் உன்னை பார்க்க வரக்கூடாதா?"

"நீ தாராளமா வரலாம் கிருஷ்ணா. உன்னை யார் வர வேணாம்னு சொல்றது?" பாலாவிற்கு சப்போர்டாக பேசினாள் அனிதா.

"அது" சுஜாவை வென்ற சந்தோஷத்தில் சொன்னான் பாலா.

பாலா (எ) பாலகிருஷ்ணா, அனிதா, சுஜா மூவரும் ஒரே கல்லூரியில் படித்து கேம்பஸ் இண்டர்வியுவில் அந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தனர். பாலாவும் சுஜாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது கல்லூரியிலிருக்கும் போதே அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டையும் பிரபலமானதே.

சுஜாவிற்கு எப்போழுதுமே பாலா அவள் மேல் எந்த அளவிற்கு நட்பாயிருக்கிறான் என்பதே கேள்வியாக இருக்கும். நண்பர்களுக்கு மத்தியிலிருக்கும் பொஸ்ஸசிவ்னஸ் அவளுக்கு எப்போழுதுமே அதிகமாக இருந்தது. ஆனால் பாலாவிற்கு அது இல்லாததால் அவன் அவளளவுக்கு நட்பாயில்லையோ என்ற சந்தேகம் எப்போழுதுமிருந்து கொண்டிருந்தது. இதை அவனிடமும் அடிக்கடி கேட்டு கொண்டிருப்பாள்.அதற்கு பெரும்பாலும் அவன் பதில் நக்கல் தோனியிலே இருக்கும்.

சரியாக 10 மணிக்கு சுஜாவின் செல்போன் சிணுங்கியது. Bala calling...

"சொல்லு... என்ன விஷயம்"

"வீட்டுக்கு போனவுடனே ஞாபகப்படுத்துறேனு சொன்னேனே... அதுக்கு தான் கூப்பிட்டேன்"

"என்னது?"

"இல்லை உன் புத்திய எதாலயோ அடிச்சிக்கனும்னு சொன்னியே அதை சொன்னேன்"

"இப்ப இதுக்கு தான் கூப்பிட்டியா?"

"இல்லை. தூக்கம் வரலை அதுக்கு தான் நீ என்ன பண்றனு கேக்கலாம்னு கூப்பிட்டேன்"

இருவரும் வழக்கம் போல் பல மணி நேரம் பேசிக்கொண்டு தூங்க சென்றனர்...
அடுத்த நாள் காலை...

பாலாவின் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.

"பாலா ஹியர்"

"ஏய் நான் தான்"

"நான் தான்னா? எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுல நீங்க யாரு?"

"ஹிம்.. கெய்தான் ஃபேன். அடிச்சேன்னு வெச்சிக்கோ அவ்வளவுதான். ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசனும்னு போன் பண்ணேன்"

"என்ன சீக்கிரம் சொல்லு... இந்த பக்கம் அந்த கல்கத்தா ஃபிகர் என்னையே லுக் விட்டுட்டு இருக்குது"

"நீ தேறவே மாட்ட. அப்பறம் நான் எழுதின கவிதையெல்லாம் எனக்கே ஃபார்வேர்டா வந்திருக்கு. இந்த கவிதை ஞாபகமிருக்கா?

பார்த்து கொண்ட நட்பு
பார்க்காத நட்பு
கைகோர்த்து திரிந்த நட்பு
துயரங்களில் தோள் தந்த நட்பு
வெற்றிகளை கொண்டாடும் நட்பு
இமை போல் காத்த நட்பு
இப்படியாய் பலவித நட்புகளை
பாடிய தமிழ் காவியங்கள்
வெட்கி ஓடி ஒளிந்து கொண்டனவாம்!!!
ஒரு தாயை போன்ற
உனது தூய்மையான அன்பில்
மழலையாய் தவழும்
எனது நட்பை பற்றி
இதுவரை பாடாததால்!!!!!!

இது போன வாரம் வந்துச்சு. இப்பக்கூட ஒண்ணு வந்திருக்கு"

"இதுக்கு தான் இப்ப அவசரமா போன் பண்ணியா? நீயே எழுதி உனக்கு அனுப்பிட்டு இப்ப ஃபார்வேர்ட்ல வந்துச்சினு கதை விடறயா? வேணும்னா நீ யாருக்காவது அனுப்பிருப்ப.. அவன் படிச்சிட்டு இதெல்லாம் கவிதையானு சொல்லி உனக்கு ரிவர்ஸ்ல அனுப்பியிருப்பான். இதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா?"

எதுவும் பேசாமல் அவள் ரிஸிவரை வைத்ததில் அவளுடைய கோபம் அவனுக்கு புரிந்தது.

ஐந்து நிமிடத்தில் சுஜாவின் கணினியில் புதிய மின்னணு கடிதம் எட்டி பார்த்தது. அதை அவள் சொடுக்கவும் அது பாலாவிடமிருந்து என்று புரிந்தது.

அன்புள்ள தோழிக்கு,
நீ எனக்காக எழுதிய கவிதைகளை எனக்கு காட்டாமலே வைத்திருந்ததை அன்று எதேச்சயாய் பார்த்தேன். அதில் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது

என் பாசத்தை
நீ புரியாமலிருக்கலாம்
என் அன்பை
நீ அவமதிக்கலாம்
என் கவிதைகளை
நீ நிராகரிக்கலாம்
என்றாலும்
எனது அகராதியில்
நட்பென்ற வார்த்தைக்கு
அர்த்தமாய் இருப்பது
நீதான்.............
நீ மட்டும்தான்...........

எனக்கு உன்னை போல் கவிதைகளை எழுதவோ ரசிக்கவோ தெரியாது... நான் முயற்சிக்கவும் இல்லை...

என் தோழி எனக்காக எழுதிய கவிதைகள் இது என்று பெருமையாக என் நண்பர்களுக்கு (நமக்கு பொதுவான நண்பர்கள் அல்ல) அனுப்பினேன். அதை அவர்கள் வழக்கம் போல் ஃபார்வேர்ட் செய்து அது உனக்கே வந்து சேர்ந்துவிட்டது. நீ எழுதிய கவிதைகளை எத்தனை பேர் ரசித்திருக்கிறார்கள் பார். நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன்.

எனக்கு கவிதை தெரியாதென்றாலும் இந்த வரிகளை முதல்முறையிலிருந்து இன்று வரை கேட்கும் போது உன் முகம் மட்டுமே நினைவுக்கு வருகிறது.



சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்.