தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label Short Story. Show all posts
Showing posts with label Short Story. Show all posts

Sunday, June 27, 2010

காதலெந்திரம்

”டேய் மச்சான், இண்டர்வியூ எப்படி அட்டண்ட் பண்ண?” வீட்டிற்குள் நுழையும் பொழுதே ராஜாவின் விசாரிப்பு.

“நல்லா பண்ணிருக்கேன்டா. அடுத்த வாரத்துல HR கால் இருக்கும்னு சொல்லிருக்காங்க”

“சூப்பர்டா. அப்ப இன்னைக்கு ட்ரீட் தாந்னு சொல்லு” இது ஹரி.

“எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டும். பெரிய ட்ரீட்டே வெச்சிடலாம்” சொல்லிவிட்டு ஷீ ஷாக்ஸை கழட்டிவிட்டு உள்ளே சென்றேன்.

வெளியே கதவை யாரோ வேகமாகத் திறந்து உள்ளே வரும் சத்தம் கேட்டது.

பக்கத்து அறையில் தங்கியிருக்கும் கார்த்திக் அண்ணா. வேகமாக என்னிடம் வந்தவர், “வாட்ச் எங்க?”

நான் கழட்டிக் கொண்டே, “நீங்க காலை-ல்ல தூங்கிட்டு இருந்தீங்க. நான் கோயான் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு.....” சொல்லிக் கொண்டே அவர் கையில் வாட்சைக் கொடுத்தேன். அதை வாங்கிப் பாக்கட்டில் வைத்துக் கொண்டார். திடீரென்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

”தா$ளிங்களா........இனிமே அண்ணே நொண்ணேனு எவனாவது ரூம் பக்கம் வந்தீங்க அவ்வளவு தான்” சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டான்.

ராஜாவும், ஹரியும் வேகமாக என்னை நோக்கி எழுந்து வந்தனர். நான் கன்னத்தில் கை வைத்து நின்று கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. என்னை அறியாமல் என் கண்ணீல் இருந்து நீர் வந்து கொண்டிருந்தது.

“டேய்....என்னடா நடந்தது? அவருடைய வாட்சை நீ ஏன்டா எடுத்துட்டு போன? என்னோடது எடுத்துட்டு போயிருக்கலாமே” ஹரி.

“டேய் காலை-ல்ல டை வாங்கலாம்னு போனேன்டா. டை பக்கத்துல வாட்ச் இருந்தது. கோயன் அண்ணா-துனு நினைச்சி எடுத்துட்டு போயிட்டேன். அவர்ட சொல்லிட்டு தாண்டா எடுத்துட்டு போனேன். அதுக்காக இப்படியா அறையுவாங்க? எல்லாம் MNCல மாசம் அறுபதாயிரம் வேலை வாங்கற திமிர் அவனுக்கு. எனக்கு வேலை இல்ல-ல்ல? அதான்”

என்னை மீறி சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தேன். அழக்கூடாது என்று நினைக்க நினைக்க விம்மல் அதிகமானதே தவிர குறையவில்லை. வேகமாக ரூமிற்குள் நுழைந்து கதவை மூடி, தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்.

கொஞ்சம் என்னைத் தனியா விடுங்க-ன்னு நான் சொன்னவுடன் கதவைத் தட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மறுபடியும் கதவு தட்டும் சத்தம். எழுந்து கதவைத் திறந்தேன். கார்த்திக் தான்.

“கொஞ்சம் என் கூட வா”

“உங்க வாட்ச் எடுத்ததுக்கு சாரி. இப்ப நீங்க கொஞ்சம் வெளிய போறீங்களா?”

“டேய் தெரியாம அடிச்சிட்டேன். சாரி. இப்ப என்ன உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணுமா?”

”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க கிளம்புங்க”

“முதல்ல நீ வா” என் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தார். நானும் அவருடன் சென்றேன்.

வெளியே சென்று அவர் வண்டியை எடுத்தார்.

“வா. வந்து உட்காரு” எங்கே என்று கேட்காமல் ஏறி உட்கார்ந்தேன்.

நேராக மஞ்சுநாதா பாரில் வண்டியை நிறுத்தினார்.

உள்ளே ஏசி ஹாலிற்கு சென்று அமர்ந்தோம். நல்ல கூட்டமாக இருந்தது.

உடனே கையில் ஒரு பேப்பருடன் ஆர்டர் எடுக்க ஒருவர் வந்துவிட்டார்.

“என்ன சாப்பிடற? பீரா, ஹாட்டா?”

“எனக்கு எதுவும் வேண்டாம்.”

“சும்மா சொல்லுடா. நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்-ல்ல? சொல்லு”

“கிங் ஃபிஷர்”

“ஒரு கிங் ஃபிஷர், RC லார்ஜ்”

”சைட் டிஷ் சார்” ஆர்டர் எடுப்பவர்.

“சிக்கன் லாலி பாப், அப்பறம் சிக்கன் கபாப்”

“ஓக்கே சார்”

நான் இரண்டு பீர் அடிப்பதற்குள் அவர் நான்கு லார்ஜ் முடித்திருந்தார். போகும் பொழுது எப்படியும் நான் தான் வண்டியை ஓட்ட வேண்டி இருக்கும் போல.

திடீரென்று எழுந்து பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்து டேபிள் மேல் வைத்தார்.
அவருடைய வாட்ச்.

“நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டி பார்த்திருக்கியா? உன் பேர் என்ன? மறந்துட்டேன். சாரி”

“வினோத்”

“ஹ்ம்ம். வினோத். நான் எப்பவாது இந்த வாட்ச் கட்டிப் பார்த்திருக்கியா?”

“தெரியல. நான் கவனிச்சது இல்லை. சாரி.”

“இதை யார் கொடுத்தா தெரியுமா வினோத்?”

எப்படியும் ஏதாவது ஒரு பொண்ணு தான்.

“தமிழ். என் தமிழரசி. யூ நோ ஷி இஸ் குயின் ஆஃப் தமிழ். Do you know that?"

இன்னைக்கு நான் மாட்டினேனா? என் நேரமே சரியில்லை. என்ன கதை சொல்லப் போறானோ?

“நான் இதை ஏன் கைல கட்ட மாட்றேன் தெரியுமா? This is a damn leather watch man. இதை தினமும் கைல கட்டினா பிஞ்சு போயிடும். I should have taken a metal strap. I made a very big mistake. அப்ப தெரிஞ்சிருந்தா லெதர் எடுத்திருக்க மாட்டேன். இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் அவள்ட பேசியே இருந்திருக்க மாட்டேனே. இல்லையில்லை. இப்ப நான் படற கஷ்டத்தை விட அப்ப அதிகமா சந்தோஷமா இருந்தேன். So I was right”

இந்த மாதிரி லவ் ஃபெயிலியர் கேஸுங்க கூட மட்டும் தப்பித் தவறி தண்ணி அடிக்க உட்காரக் கூடாது. அதுவும் தண்ணி அடிச்சா எப்படி தான் இங்கிலிஷ் வருதோ தெரியலை.

"இந்த வாட்ச் அவளோட முதல் மாச சம்பளத்துல எனக்கு வாங்கி கொடுத்தது.
you know what, we were just friends at that time. We believed so. You never know when you start loving someone. Love at first sight எல்லாம் கௌதம் மேனன் படத்துல தான்.

நான் செல் ஃபோன் வாங்கனத்துக்கு அப்பறம் வாட்ச் கட்டறதை நிறுத்திட்டேன். ஒரே விஷயத்துக்கு எதுக்கு ரெண்டு பொருள்-ன்னு. இதை அவள்ட சொன்னேன். அவ ஒத்துக்கல. நான் ஆசையா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியானு கேட்டா? எனக்கு என்ன சொல்றதுனு தெரியல. வாங்கிட்டேன்.

You know one thing, பொண்ணுங்க எதை நினைச்சாலும் சாதிச்சிடுவாங்க. They have that power. You cant stop them. Are you in Love?”

"இல்லை. எனக்கு பொண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கூட கிடையாது. நான் காலேஜ்ல கூட பொண்ணுங்ககிட்ட பேச மாட்டேன்”

“நானும் அப்படி தான் விஜய். விஜய் தானே?

“வினோத்”

“சாரி. வினோத். நானும் காலேஜ்ல எந்த பொண்ணுக்கிட்டயும் பேசனது இல்லை. தமிழ் தான் ஃபர்ஸ்ட். ஆல்சோ லாஸ்ட். அவள் என் ஃபிரெண்ட் பாஸ்கீயோட கஸினோட ஃபிரெண்ட். அவன் கஸின் கிருத்திகாவும், தமிழும் உங்களை மாதிரி தான் இங்க வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருந்தாங்க.

பாஸ்கியும் நானும் அவுங்களுக்கு வேலை தேட ஹெல்ப் பண்ணோம். அப்ப தான் தமிழ் எனக்கு பழக்கமானா. அவளுக்கு Data Structuresல ஏதாவது சந்தேகம்னா என்னைக் கூப்பிடுவா. DSல ஆரம்பிச்சி, கல்கி, சுஜாதா, இளையராஜா, சச்சின் அப்படி நிறைய பேசனோம். ரொம்ப போர் அடிக்கறேனா?”

“இல்லை. இல்லை. சொல்லுங்க”

“காலைல ஆபிஸ் போனவுடனே. வேக வேகமா வேலையை முடிச்சிடுவேன். அவளுக்கு ஃபோன் பண்ணனும்னு ஆசையா இருக்கும். ஆனா எதுக்காக ஃபோன் பண்ணனு சொல்றதுக்கு ஒரு காரணம் வேணுமேனு தயக்கமா இருக்கும். அப்படியே யாஹீ, கூகுள் ஃபிரெஷர்ஸ் குரூப்ல தேடி ஏதாவது ஓப்பனிங்க் இருக்கானு பார்ப்பேன். அதையே காரணமா வெச்சி ஃபோன் பண்ணுவேன். அது அப்படியே ரெண்டு, மூணு மணி நேரம் போகும்.

கொஞ்ச நாள்ல கிருத்திகாக்கு வேலை கிடைச்சி சென்னைப் போயிட்டா. தமிழ்க்கு என்ன பண்றதுனு தெரியல. சென்னைப் போகலாம்னு யோசிச்சா. அப்பறம் பொண்ணுங்க தங்கற PGல தங்கலாம்னு முடிவு பண்ணிட்டா. அவள் PG போறதுக்கு நான் போய் கொஞ்சம் உதவி செஞ்சேன்.

அதுக்கு அப்பறம் வீக் எண்ட் ஆனா ரெண்டு பேரும் மீட் பண்ண ஆரம்பிச்சோம். Forum, Garuda Mall அப்பறம் கோரமங்களால ஒரு பார்க். அங்க உட்கார்ந்து கொஞ்ச நேரம் அவளுக்கு DS, Quants எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். அப்பறம் அங்க இருந்து Forum போவோம். இன்னொரு பீர் சாப்பிடறயா? பேரர்...........”

“இல்லை வேண்டாம்”

“சும்மா சாப்பிடு. இல்லை கிளம்பலாமா?”

“இல்லை நீங்க சொல்லுங்க”

“வீக் எண்ட்னு இல்லாம சில சமயம் அவள் போர் அடிக்குதுனு சொன்னா, வீக் டேஸ் ஈவனிங் கூட கிளம்பி போவேன். அதுக்காக அவ பசங்க கூட சுத்தறவனு நினைச்சிக்காத. அவ என்னைத் தவிர வேற எந்த பையன்கிட்டயும் பேசி நான் பார்த்தது இல்லை. அவளுக்கும் அந்த ஆச்சரியம். எப்படி என் கூட மட்டும் இவ்வளவு க்ளோஸ் ஆனானு.

ஒரு வீக் எண்ட் ரெண்டு பேரும் வழக்கம் போல பார்க்ல உட்கார்ந்திருதோம். அந்த திங்கக்கிழமை அவளுக்கு ஒரு இண்டர்வியூ இருந்தது. அதுக்காக சொல்லிக் கொடுத்திட்டு இருந்தேன். திடீர்னு ஒரு கூட்டம்.

நெத்தில சிவப்புக் கலர்ல திலகம் மாதிரி வெச்சிட்டு. அங்க நாலஞ்சி couples இருந்தோம். மொத்தமா சுத்தி வளைச்சிட்டாங்க. மொத்தமா எல்லா கப்பில்ஸையும் ஒண்ணா சேர்த்துட்டாங்க.

ஒவ்வொருத்தவங்களையாக் கூப்பிட்டு ராக்கி இல்லை தாலி - ரெண்டுல ஒண்ணு எடுத்து கட்டுங்கனு மிரட்டினாங்க. எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியல. நாங்க மூணாவதா நின்னுட்டு இருந்தோம். எல்லாம் கன்னடால கெட்ட வார்த்தைல திட்டிட்டு இருந்தானுங்க. எங்களுக்கு முன்னாடி இருந்த ரெண்டு பேரும் வேகமா ராக்கி கட்டிட்டு போயிட்டாங்க. இப்ப நாங்க.

என்ன செய்யறதுனு தெரியல.தமிழ் ரொம்ப பயந்து போய் இருந்தா. புலியைப் பார்த்தா மான் கண்ணு மிரட்சில எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா? அவ கண்ணும் அப்படி தான் இருந்தது. அவ பயப்படறது கூட அழகு தான். அந்த இடத்திலயும் என்னை மீறி நான் அதை ரசிச்சிட்டு இருந்தேன்.”

ஒரு நிமிடம் நிறுத்தினார்.

“அவ ராக்கி எடுக்கல. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியல”

“என்ன பண்ணீங்க?”

“We are friends. We are studying here. அப்படினு கைல வெச்சிருக்க புக்கை காட்டினேன். புக்கை மூடாம, கைல பேனா திறந்து இருந்ததைப் பார்த்து நம்பி விட்டுட்டாங்க. ஆனா ஏதோ கன்னடத்துல திட்டினாங்க. வேகவேகமா அந்த இடத்துல இருந்து பைக்கை எடுத்துட்டு போய் அவளை PG ல விட்டேன்.

வீட்டுக்கு போனதும் பார்த்தா அவள்ட இருந்து மெசேஜ், Thanks னு ஒரே வார்த்தைல. எதுக்கு சொன்னானு புரியலை. அதை நான் தான் சொல்லிருக்கணும். அவ ராக்கி கட்டாததுக்கு. அது ஒரு சாதாரண கயிறு தான்.

அப்படிப் பார்த்தா தாலி கூட சாதாரண கயிறு தான். அந்த கயிறுல நாம வைக்கிற நம்பிக்கை தான் மேட்டர். இல்லையா?”

“ஆமாம்”

“சரி. நேரமாச்சு. கிளம்பலாமா?”

“இன்னும் கதை முடியலையே.”

“கதையா? இது கதை இல்லை வினோத். This is my life. I think you are not getting it”

“சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. நான் அப்படி mean பண்ணல. அப்பறம் என்ன ஆச்சு?”

“ஒரு வழியா அந்த இண்டர்வியூ அவ க்ளீயர் பண்ணிட்டா. ஒரு மாசத்துல வேலைல சேர்ந்தா. அப்பறம் ஃபோன் பேசறது ஓரளவு குறைஞ்சது. இருந்தாலும் வீக் எண்ட்ல மீட் பண்ணிக்குவோம். ஷாப்பிங் எல்லாம் சேர்ந்து தான் பண்ணுவோம். முதல் மாச சம்பளத்துல வீட்ல எல்லாருக்கும் துணி வாங்கி கொடுத்தா.

எனக்கு மட்டும் வாட்ச். இந்த வாட்ச் தான். நான் வேண்டாம்னு சொன்னாலும் வாங்கி கொடுத்தா. பின்னாடி அதுக்கு அவளே ஒரு காரணம் சொன்னா. துணி வாங்கி கொடுத்தா எப்பவாது தான் போடுவோம். அதே வாட்ச்னா தினமும் கட்டறது. ஒரு நாளைக்கு பல தடவை அதைப் பார்ப்போம். அப்ப எல்லாம் எனக்கு அவ ஞாபகம் வரணும்னு யோசிச்சி வாங்கிக் கொடுத்தாளாம்.

அப்ப எனக்கு அது புரியல. ஏதோ நன்றி கடனுக்கு வாங்கித் தரானு நினைச்சிட்டேன். அவ ஞாபகமா இப்ப என்கிட்ட இருக்கறதும் அந்த வாட்ச் தான். லெதர் ஸ்டராப்னு நான் கைல கட்டறது இல்லை. அதுவும் அந்த வாட்ச்
என்னைப் பொருத்த வரைக்கும் என்னுடைய தமிழ் தான்.

I can't even imagine someone wearing this watch.

அப்படி நான் பார்த்துப் பார்த்து வெச்சிருக்கற வாட்சை நீ கைல கட்டிட்டுப் போன-ன்னு தான் எனக்கு அவ்வளவு கோபம் வந்துடுச்சி. கோபத்துல உன்னை அடிச்சிட்டேன். ஐ ஆம் சாரி”

“இல்லை நான் தான் சொல்லணும். எனக்குத் தெரியாது. ஐ ஆம் சாரி. நீங்க அவுங்களுக்கு ப்ரபோஸ் பண்ணலீயா?”

”ப்ரப்போஸ்? ஐ லவ் யூனு நாங்க வார்த்தைல சொல்லணுமா? ஐ லவ் யூங்கறது ஜஸ்ட் வார்த்தை கிடையாது. உங்க அம்மாட்ட என்னைக்காவது நான் கோபமா இருக்கேன், சோகமா இருக்கேனு சொல்லிருக்கியா வினோத்?”

“இல்லை. என்னுடைய முகத்தையும் ரியாக்‌ஷனையும் பார்த்து அவுங்களா புரிஞ்சிக்குவாங்க”

“காதலும் அப்படித்தானே? நான் உன்னை காதலிக்கிறேனு சொல்லணுமா? அது தானா புரிஞ்சிக்கறது தானே. பொண்ணுங்க மனசைப் புரிஞ்சிக்க முடியாது, கஷ்டம். கடலை விட ஆழம்னு சொல்றது எல்லாம் சுத்த ஹம்பக்.

அவுங்கக் கண்ணைப் பார்த்து பேசினாலே போதும். தானாப் புரிஞ்சிடும். அவளுடைய வார்த்தையைகள் மட்டும் இல்லை, அவ மௌனம் பேசற மொழியும் எனக்குப் புரியும். அவளுக்கும் தான்.

We were simply made for each other. But we were not gifted enough to share our lives.

தமிழோட அப்பாக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுச்சி. என்ன-ன்னு பார்த்தா லிவர்ல கான்சராம். ரொம்ப நாள் தாங்க மாட்டார்னு சொல்லிட்டாங்க. அவளுக்கு உடனே கல்யாணம் பண்ணனும்னு முடிவு எடுத்துட்டாங்க. அப்பா இந்த நிலைமைல இருக்கும் போது எப்படி என்னைப் பத்தி சொல்றதுனு அவளுக்குப் புரியலை.

இருந்தாலும் அப்பா எப்படியும் அவளைப் புரிஞ்சிப்பாருனு தைரியமா சொல்லிருக்கா. அந்த மாதிரி ஒரு நிலைமை எந்த அப்பாவுக்கும் வரக் கூடாது. எந்த அப்பாவும் தன் பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு தான் பார்ப்பாங்க. தமிழ் எடுத்த முடிவு சரியா, தப்பானு சிந்திக்கக் கூட அவருக்கு நேரமில்லை. இருந்தாலும் அவர் சொன்னதைத் தமிழ் என்கிட்ட சொன்னதும் எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல”

ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.

“தமிழ், இன்னும் நான் எத்தனை நாள் இருப்பேனு தெரியலை. ஒரு வாரம் தாங்குவனானு கூட நிச்சயம் இல்லை. நான் இருக்கும் பொழுது நீ காதல் கல்யாணம் பண்ணிட்டா எல்லாரும் என்னைக் கேலி பேசுவாங்க. குறை சொல்லுவாங்க. அதை நான் நிச்சயம் தாங்கிக்குவேன்.

நான் போனதுக்கு அப்பறம்னா எல்லாரும் உன் அம்மாவைத் தானம்மா சொல்லுவாங்க. நாம இன்னும் டவுன்ல தானே இருக்கோம்? நான் போனதுக்கு அப்பறம் நம்ம சொந்தக்காரவங்களோட உதவி நம்ம குடும்பத்துக்கு நிச்சயம் தேவை. நம்ம சொந்தத்துல யாரையாவது நீ கல்யாணம் பண்ணிட்டா நம்ம குடும்பத்துக்கு நான் போனதுக்கு அப்பறமும் சப்போர்ட் கிடைக்கும். அது நிச்சயம் நமக்கு வேணும்னு நான் ஆசைப்படறேன்.

உங்க அம்மாவைத் தனியா நிக்க வெச்சிடாதம்மானு சொல்லிட்டாரு. அவளுடைய மாமா பசங்கள்ல ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவுங்க அப்பா ஆசைப்பட்டாறாம். நானும் அது தான் சரினு சொல்லிட்டேன்”

“நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாம்ணே”

“நான் காத்திருந்து என்ன பிரயோஜனம்? அவுங்க அப்பா உயிரோட இருக்கும் போழுதே கல்யாணம் பண்ணனும்னு ஒரே வாரத்துல அவளுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்க. அவ கடைசியா என்கிட்ட ஃபோன்ல பேசினது இது தான்...................அன்னைக்கு பார்க்ல நான் ராக்கி கட்டாததைப் புரிஞ்சிட்டு நீங்க தாலி கட்டிருக்கலாமே கார்த்திக்-ன்னு கேட்டா.

இப்படி எல்லாம் நடக்கும்னு அன்னைக்கு எனக்கு தெரியாம போச்சே!”

”சார், டைம் ஆச்சு. பார் க்ளோஸ் பண்ண போறோம். பார்சல் எதாவது வேணுமா?”

“இல்லைங்க நாங்க கிளம்பறோம்” நான் தான் சொன்னேன்.

ஒரு வழியாக அவரை உட்கார வைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அவரை ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து கதவை மூடி விட்டு வந்தேன்.

வாட்சைப் பாக்கெட்லயே வெச்சிருக்காரே. திரும்பிப் படுக்கும் போது உடைஞ்சிடப் போகுதுனு மறுபடியும் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். அவர் ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் தலையணைக்கு பக்கத்தில் இன்னொரு தலையணை மேல் வாட்ச் இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டிருப்பதாக ஏனோ என் மனதில் பட்டது.


Sunday, March 28, 2010

குட்டிப் பாப்பா

அலாரம் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தோம். மணி ஐந்து நாற்பது. நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்து விட வேண்டுமென்பது எனது எண்ணம். அறையில் நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. ஏற்கனவே கவரிலிருந்து பிரித்து வைத்திருந்த அந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் குச்சியை தீபாவிடம் கொடுத்தேன். எதுவும் பேசாமல் ஒருவித கலக்கத்துடன் பாத்ரூமிற்கு சென்றாள்.

இரண்டு நிமிடத்திற்கு பின் வெளியே வந்தாள். கையில் எதுவும் இல்லை. என் பார்வையாலே அது எங்கே என்று நான் கேட்டதை புரிந்து கொண்டாள்.

“உள்ள இருக்கு. நீங்களே போய் பாருங்களேன். ப்ளீஸ்”

உள்ளே சென்று பார்த்தேன். வாஷ் பேசின் மேல் இருந்தது. அதை பத்திரமாக எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்தேன். என் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள். நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக ஒரு கோடு தெரிந்தது. இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இருவருக்கும் இதயத்துடிப்பு அதிகமாகி இருந்தது. இரண்டு நிமிடங்களுக்குப் பின் லேசாக இரண்டாவது கோடு தெரிய ஆரம்பித்தது. நன்றாக உத்துப்பார்த்தேன். அடுத்த இரு நிமிடங்களில் தெளிவாகவே தெரிந்தது.

தீபாவை என் மடியிலிருந்து தூக்கினேன். என்ன ரிசல்ட்? அவள் கண்களில் அந்த கேள்வி தெரிந்தது. இறுக்கமாக அணைத்து நெத்தியில் முத்தமிட்டேன். புரிந்து கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. ரொம்ப சந்தோஷப்பட்டா தீபா உடனே அழுதுவிடுவாள்.

“லூசு. அழாத” சொல்லிவிட்டு கண்ணை துடைத்தேன். மீண்டும் மடியில் சாய்ந்து கொண்டாள்.

அறை முழுக்க மௌனமே நிரம்பி வழிந்தது.

“என்னடா குட்டி உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லலாமா?”

“வேணாம். அவுங்க பேச மாட்டாங்க” லேசாக விசும்ப துவங்கினாள்.

அவளை தூக்கி நேராக என் முகத்தைப் பார்க்க வைத்தேன். விசும்பல் சத்தம் குறைந்தது.

”அழாதடா குட்டிப்பையா. இனிமே எல்லாம் சரி ஆகிடும். பாப்பா வர நேரத்துக்குள்ள எனக்கு மறுபடியும் வேலை கிடைச்சிடும். நம்ம ரெண்டு பேர் வீட்லயும் சரி ஆகிடுவாங்க. சரியா?”

“பாப்பானு எப்படி சொல்றீங்க?”

“எனக்கு ஜோசியம் தெரியும்”

“சொல்லுங்க. எப்படி சொல்றீங்க?”

“பெண் குழந்தை பிறந்தா தான் அம்மா அழகா மாறுவாங்களாம். பையன்னா குரங்கு மூஞ்சி மாதிரி மாறிடுமாம். நீ தான் இன்னும் அழகாயிட்டயே. அதான்”

“கதை விடாதிங்க. அதெல்லாம் ஏழு மாசத்துக்கு அப்பறம் தான் தெரியுமாம்”

“நீ வேணா பாரு. நிச்சயம் பாப்பா தான் பொறக்கும்”

”ஏன் உங்க அக்கா பையனுக்கு கொடுக்கணும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன்”

“அதெல்லாம் அப்ப பாத்துக்கலாம்டா. நான் போய் இப்பவே இண்டர்நெட்ல பேர் பாக்கறேன். R இல்லைனா Sல தன் வைக்கணும்”

“நீங்க முதல்ல நௌக்ரில இருந்தோ மான்ஸ்டர்ல இருந்தோ ஏதாவது மெயில் வந்திருக்கானு பாருங்க”

“ஒரு வாரத்துல என்ன பெருசா மாறிடும்னு நினைக்கிற. எங்கயும் மேனஜர் போஸ்டிங்கு ஆள் எடுக்குற மாதிரி தெரியலை. ஃப்ரெஷர்னா கொஞ்சம் கஷ்டப்பட்டாவாது கிடைக்கும் போல. எலக்‌ஷன் வரைக்கும் அமைதியா இருந்துட்டு இப்ப கொத்து கொத்தா தூக்கறானுங்க.”

“அதுக்கு என்னங்க பண்ண? இப்ப பாப்பா வேற வர போகுதே சமாளிக்க முடியுமா?”

“ஏய்… ஏன் இப்படி ஃபீல் பண்ணற? வீட்டு லோன் இருபத்தி ரெண்டாயிரம் போக மீதி எட்டாயிரத்துல குடும்பத்தை நடத்திக்கலாம். ஆடம்பர சொலவெல்லாம் குறைச்சிட்டு அத்தியாவசிய தேவைகளை மட்டும் கவனிச்சிக்கலாம்”

“நம்ம ஆடம்பர செலவு எதுவுமே செய்யறதில்லையே”

“நம்ம ரெண்டு பேர் செல்ஃபோன் பில் நாலாயிரம் வருது. நான் என்னோடதை தூக்கப் போறேன். ஏதாவது இண்டர்வியூ கால்னாலும் லேண்ட்லைன்லயே பேசிக்கலாம். நீயும் அதை குறைக்க பாரு. இனிமே நோ சினிமா, ஹோட்டல். அப்பறம் கரெண்ட் பில் ரெண்டாயிரம் வருது. எங்கம்மா நூறு ரூபாய்க்கு மேல கட்டணதே இல்லை. அதையும் குறைக்கணும். இப்படி நிறைய குறைக்க வேண்டியது இருக்கு”

“சமாளிச்சிக்கலாம்னு சொல்றீங்களா? நான் வேணா ஏதாவது பர்சனல் லோன் எடுக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம்டா. வீட்டு லோனே நிறைய இருக்கு. எப்படியும் மூணு நாலு மாசத்துல சரி ஆகிடும். அப்ப நீயும் லீவு போட வசதியா இருக்கும். எப்படியும் வாங்கிடலாம்டா”

“உங்களை வேலையை விட்டு தூக்கினதுக்கு பதிலா என்னைய தூக்கிருந்தா கூட ஓரளவு சுலபமா சமாளிச்சிருக்கலாம். இன்னும் ஒரு பத்தாயிரம் அதிகமா வரும்”

“ஆமாம். நீயும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருந்திருக்கும். உன்னை இப்ப வேலைக்கு அனுப்பவே எனக்கு கஷ்டமா இருக்கு”

“ஏன் அப்படி சொல்றீங்க? எல்லாம் நம்ம தேவைக்குத் தானே.”

“ஹ்ம்ம்ம். எப்படியும் நான் சீக்கிரம் வாங்கிடறேன்”

“சீக்கிரம் வாங்கிடுவீங்கனு எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்க எதுக்கும் கஷ்டப்படாதீங்க” என்னை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டு முகம் கழுவ பாத்ரூம் சென்றாள்.

நான் எழுந்து போய் கம்ப்யூட்டர் முன் அமர்ந்தேன். கடைசியாக எப்பொழுது ஆறு மணிக்கெல்லாம் எழுந்து வேலையை ஆரம்பித்தேன் என்று நினைவில்லை.

நௌக்ரியிலிருந்து சம்பந்தமே இல்லாத சில வேலை வாய்ப்பு மெயில்கள் வந்திருந்தன. எனக்கு வேலை போய் சரியாக இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. பத்து தூக்கம் இல்லாத இரவுகள். வீட்டில் பகைத்து கொண்டு செய்த காதல் திருமணம் என்பதால் இருவர் வீட்டிலும் தள்ளி வைத்து விட்டார்கள். அந்த வீராப்பிலே முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கியிருந்தோம். ஃபர்னிச்சர் மத்த சாமான்கள் எல்லாம் சேர்ந்து முப்பத்தைந்து ஆகியிருந்தது. கையிலிருந்த அனைத்து சேமிப்புகளும் இதில் கரைந்து விட்டது.

இது வரை என்னுடைய நிறுவனம் எப்பொழுதும் லே ஆஃப் செய்யாத தைரியம் இதையெல்லாம் என்னை செய்ய வைத்திருந்தது. எப்படியும் சமாளித்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். இப்பொழுது தான் பயம் வந்துள்ளது. எப்படியும் சிட்டியில் உள்ள சிறந்த மருத்துவமனையில் தான் தீபாவிற்கு காட்ட வேண்டும். அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. அவசரத்திற்கு நண்பர்களிடமிருந்து கடன் வாங்கலாம். வேலை தேடும் போது நண்பர்களுக்கு நான் கணக்குப் பார்க்காமல் செலவு செய்திருக்கிறேன். ஒருத்தராவது உதவாமலா போய்விடுவார்கள். என் மனதில் உள்ள பயம் தீபாவிற்கு தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

காலை டிபனை தீபா தயார் செய்ய, முதன் முதலாக நான் கீழறங்கி குடிநீரை குடத்தில் பிடித்து தூக்கி வந்தேன். இருவரும் சேர்ந்து சாப்பிட்டோம். கடந்த ஒரு வாரமாக அவளை என் வண்டியில் தான் அழைத்து சென்று கொண்டிருந்தேன்.

“குட்டி, இந்த நிலைமைல நீ டூவீலர்ல வரலாமா? பஸ்லயும் தூக்கி தூக்கி போடும் இல்லை? கால் டேக்சி ஏதாவது சொல்லவா?”

“அதெல்லாம் எதுவும் வேண்டாங்க. டூவீலர்லயே போகலாம்”

“ஹ்ம்ம்ம். மதியம் நான் ஏதாவது சமைச்சி கொண்டு வந்து கொடுக்கவா?”

”ஐயா சாமி. அன்னைக்கு நீங்க முட்டையை வேக வெச்சி கொடுத்ததே போதும். ஆஃப் பாயிலா முட்டையை வேக வெச்ச முதல் ஆள் நீங்க தான். எங்களை விட்டுடுங்க” வயிற்றில் கை வைத்து காட்டினாள்.

ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்கிலும் பார்த்து நிதானித்து ஓட்டினேன். வழக்கத்தை விட முப்பது நிமிடம் அதிகமாக எடுத்திருந்தேன். அவளை விட்டுவிட்டு எங்கும் போக மனமில்லாததால் வீட்டிற்கு வந்தேன். ஸ்டாக் மார்க்கெட் பார்க்கவும் மனமில்லை. இரண்டு லட்சம் இன்று முப்பதாயிரமாக மாறி இருப்பதை பார்த்து எரிச்சலடைவதை விட பார்க்காமலிருப்பதே மேல். அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்லலாமா? ஓரளவு கோபம் குறையவும் வாய்ப்பிருக்கிறது. எதற்கும் டாக்டரிடம் ஒரு முறை சோதித்துவிட்டு இருவர் வீட்டிலும் சொல்லிவிடலாம். சனிக்கிழமை செக் அப் செய்துவிட்டு சொல்லிவிடலாம் என்று திட்டம். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது.

ஒரு வழியாக இன்று வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. சமையலில் உதவவில்லை என்றாலும் பாத்திரத்தை கழுவி வைத்தேன். அவளை கனமான பொருட்களை தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி வந்தவளை மகாராணி போல பார்த்து கொள்வது என் கடமை. இரண்டு நாட்களாக தீபா டென்ஷனாகவே இருக்கிறாள். செலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம் வந்துவிட்டது. வசதியாக வாழ்ந்தவள். எப்படியும் சமாளித்து கொள்ளலாம் என்று அவளுக்கு ஆறுதல் கூறி வந்தேன். சனிக்கிழமை வீட்டில் சொல்லலாம் என்று சொன்னதற்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை. மௌனம் சம்மதம். வீட்டிலிருந்து உதவி கிடைத்தாலும் அதை ஏற்பதாக இல்லை. சமாளிக்க முடியாத பட்சத்தில் வண்டியை வித்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். எப்படியும் முப்பதாயிரம் கிடைக்கும். அதை வைத்து மூன்று மாதத்தை ஓட்டிவிட்டால் போதும். வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்திலே புது வண்டி வாங்கி விடலாம். இதை தீபாவிடம் சொல்லவில்லை.

”இந்த காலாண்டில் XXXXX நிறுவனம் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது சென்ற வருடத்தின் இதே காலாண்டை காட்டிலும் ஒரு சதவிகிதமே குறைவு. உலக பொருளாதார தேக்க நிலையிலும் 12 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது பிரமிக்கத்தக்கது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்” டீவியில் ஓடிக்கொண்டிருந்தது

தீபா கம்பெனிதான். ஷேர் நஷ்டக்கணக்கு ஓரளவு குறைந்திருக்கும்.

மாலை ஆறு மணி. தீபாவிற்காக காத்திருந்தேன். தேவையில்லாமல் அழைப்பதில்லை என்று முடிவு எடுத்திருந்தோம்.

வீடு திறக்கும் சத்தம் கேட்டது. கம்ப்யூட்டரை விட்டு ஹாலிற்கு வந்தேன்.

தீபாவுடன் வினோ வந்திருந்தாள். அவளைக் கைத்தாங்களாக பிடித்து உள்ளே அழைத்து வந்தாள். எழுந்து போய் தீபாவைப் பிடித்து கொண்டேன். தீபா மிகவும் களைத்துப் போயிருந்தாள்

“என்ன வினோ, தீபாக்கு என்ன ஆச்சு? ஏதாவது மயக்கமா?”

”ஒண்ணுமில்லை. அவளை படுக்க வை”

வைத்தேன்.

“சிவா, ஆபிஸ்ல கொஞ்சம் பிரச்சனை”

“”

“உனக்கே தெரியும் இப்ப சிச்சுவேஷன் சரியில்லை. அதனால பிரக்னண்ட் லேடீஸ் எல்லாத்துக்கும் மூணு மாசம் மேட்டர்னிட்டி லீவ் கொடுத்தா ஆப்பரேட்டிங் மார்ஜின் அஃபக்ட் ஆகும்னு”

“ஆகும்னு”

“தூக்கறாங்களாம். அதான்…”

“திஸ் இஸ் அன்ஃபேர். இவ்வளவு எத்திக்ஸ் பேசிட்டு எப்படி பெண்களுக்கு எதிரா இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணறாங்க?”

“பிராஃபிட் கணக்கு காட்டணுமில்லையா?”

“சரி, இப்ப தீபாவை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அதானே?”

“இல்லை அவ ப்ரெக்னண்ட்னு ஆபிஸ்ல யாருக்கும் தெரியாது”

“அப்பறம் என்ன பிரச்சனை?”

“உனக்கும் இப்ப வேலை இல்லை. வீட்டு லோன் வேற ஹெவியா இருக்காம்.”

“வினோ. டோண்ட் கில் மி. தீபாக்கு என்ன ஆச்சு?”

”அதுக்கு பயந்து அவ அபார்ஷன் பண்ணிட்டா”

உள்ளே தீபாவின் விசும்பல் சத்தம் கேட்டது. மெதுவாக உள்ளே சென்று அவள் அருகில் அமர்ந்தேன்.

..................................


இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, February 10, 2010

வாழையடி வாழை

அந்த வீடு தெருவின் கடைசியில் இருந்தது. சிமெண்ட் ரோடிலிருந்து ஒரு அடி உள்வாங்கியிருந்து. காப்பி கலர் பெயிண்ட் அடித்த க்ரில் கதவு ஆள் உயரம் இருந்தது. நீல நிற சுண்ணாம்பு. அடையாளம் சரியாக இருப்பதை உணர்ந்து, வெளியே இருந்து குரல் கொடுத்தாள் சாந்தி. அவள் அணிந்திருந்த அந்த பூப்போட்ட பாவடையில் பூக்கள் உதிர்ந்திருந்தன.


“அக்கா, அக்கா”


உள்ளே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் சத்தம் இவளுக்கு நன்றாக கேட்டது. அவளுடைய குரல் உள்ளிருப்பவர்களுக்கு கேட்க வாய்ப்புகள் இல்லை என்பதை புரிந்து கொண்டாள்.


க்ரில் கதவை உள்ளே தள்ளிவிட்டு, போர்டிக்கோவிற்குள் சென்றாள். காலிங் பெல்லை அழுத்திய இரண்டாவது நிமிடத்தில் வெல்கம் என்று எழுதியிருந்த ஸ்கிரினை திறந்து வந்த அந்த அம்மாவிற்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம்.


“என்னம்மா வேணும் உனக்கு?”


“என் பேரு சாந்திக்கா. வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு ரவி அண்ணாக்கிட்ட சொல்லியிருந்தீங்களாம். அவர் தான் அனுப்பனார்” சொல்லிவிட்டு அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்தாள்.


“உன் வீடு எங்கமா இருக்கு?”


“ரெண்டு தெரு தள்ளி இருக்குற அந்த ஆட்டோ ஸ்டாண்டு பின்னாடி இருக்குக்கா”


“படிக்கறியாமா? வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?”


“பத்தாவது படிக்கறேன்கா. அப்பா பஸ் ஸ்டாண்ட்ல லோடு எறக்குதுக்கா. அம்மா வீட்டு வேலை பாக்குதுக்கா. ஒரு அக்கா பதினொண்ணாவது படிக்குதுக்கா. ரெண்டு தங்கச்சி இருக்குங்கக்கா”


“இங்க வேலை அதிகம் இல்லைமா. உங்க அம்மாவை வேணும்னா வர சொல்லேன்”


“அம்மா ஏற்கனவே மூணு வீட்ல வேலைப் பாக்குதுங்கக்கா. காலைல ஆறு மணிக்கு போச்சுனா பத்து மணிக்கு தான் வரும். நீங்க காலைல ஏழு மணிக்கு வரணும்னு சொன்னீங்கனு ரவி அண்ணா சொல்லுச்சு. அதான் நான் வந்தேன்க்கா”


“வயசுப் பொண்ண வேலைக்கு வெச்சா ஐயா திட்டுவாருனு பாக்கறேன். வெறும் பாத்திரம் வெளக்குற வேலை தான். துணி தொவைக்கறதுக்கு எல்லாம் மெஷின் இருக்கு. என் பையன் வாங்கி கொடுத்திருக்கான். ரெண்டே பேர் தான். வந்தா அர மணி நேரத்துல முடிஞ்சிடும். மாசம் எரநூறு ரூபா. உங்க அம்மா வர முடியுமானு கேட்டு பாரும்மா”


“பத்து மணிக்கப்பறம்னா பரவாயில்லையாக்கா?”


”பத்து மணிக்கு அப்பறமா? வீட்ல சமையல் எல்லாம் செய்ய வேணாமா? ஏழு மணிக்குள்ள எப்ப வந்தாலும் சரி. கேட்டு சொல்லு”


அதற்கு பிறகு என்ன பேசுவதென்று சாந்திக்கு தெரியவில்லை. வார்த்தைகளை தேடினாள். எதுவும் கிடைக்கவில்லை. அவளுடைய ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.


“சரிக்கா”


முதல் வேலைக்கான இண்டர்வியூவில் தோற்ற சோகம் அவளுடைய நடையில் தெரிந்தது. இரண்டு பேர் இருக்கும் வீட்டில் பாத்திரம் விளக்க மாசம் இருநூறு ரூபாய் அதிகம் என்று அவளுக்கு தெரியும். அவளுடைய அம்மா வேலை செய்யும் டாக்டர் வீட்டில் நானூறு ரூபாயிற்கு துணி துவைத்து, வீட்டை கூட்டி, வெள்ளி மற்றும் விரத நாட்களில் வீட்டை கழுவி, பாத்திரம் விளக்கி, சமையலுக்கும் உதவ வேண்டும். ஏதாவது உடம்பிற்கு முடியவில்லை என்றால் கலர் கலராக மாத்திரை தருவார்கள். வீட்டு வேலை பாதிப்பது அவர்களுக்கு பிடிக்காது.


ஒரு வாரம் சென்ற நிலையில் எலக்ட்ரீஷியன் ரவி அண்ணாவின் குரல் வெளியே கேட்டது. சாந்தியின் அம்மாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவளைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தவுடன் வெளியே சென்றாள்.


“அதெல்லாம் ஏழு மணிக்குள்ள வந்துடுவா. சொல்லிடு” அவளுடைய அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். முதல் வேலை கிடைத்துவிட்டது.


பழகிய வேலைதான் என்றாலும் பழகாத இடம் என்பதால் பதட்டத்துடன் சென்றாள்.


“வாம்மா. நான் மொதல்ல ஐயாக்கிட்ட சொல்லும் போது வேணாம்னு தான் சொன்னாரு. அப்பறம் படிக்கிற பொண்ணு, மாசம் இரநூறு ரூபாய் கிடைச்சா படிப்புக்கு உதவும்னு நான் சொன்ன உடனே சரினு சொல்லிட்டாரு”


என்ன சொல்வதென்று தெரியாமல் மெலிதாக சிரித்து வைத்தாள்.


“இங்க பாரும்மா. வேலை அதிகம் இல்ல. பாத்திரம் மட்டும் வெளக்கினா போதும். ரெண்டே பேர் தான். சரியா?”


“சரிக்கா”


“ஏழு மணிக்கு வந்தா அர மணி நேரத்துல ஓடிடலாம். முடிஞ்சா சாயந்திரம் ஆறு மணிக்கு ஒரு நடை வந்துட்டு போ. வேலை பாதியா குறைஞ்சிடும். சரியா?”


“சரிக்கா”



இரண்டு பேருக்கு சமையலுக்கு பயன்படும் பாத்திரத்திற்கும் நான்கு பேருக்கு சமையலுக்கு தேவைப்படும் பாத்திரத்திற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை முதல் நாளே புரிந்து கொண்டாள். தினமும் காலை ஏழு மணிக்கு முன்பு வந்து எட்டு மணிக்குள் சென்று கொண்டிருந்தாள். பூஜை விளக்கில் எண்ணெய் சரியாக போகவில்லை, குக்கரில் அரிசி ஒட்டிக் கொண்டிருந்தது என்ற இரண்டு கம்ப்ளைண்ட் மட்டும் தான் ஒரு வாரத்தில் வந்திருந்தது.


ஒரு வாரம் சென்றிருந்த நிலையில், வேலை முடித்து வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.


“சாந்தி கொஞ்சம் இரு. ஒரு வாய் காபி குடிச்சிட்டு போ”


“இல்லைங்கக்கா” தயங்கினாள்.


“உனக்குனு தனியாவாப் போட போறேன். இரு குடிச்சிட்டு போகலாம்”


வாசளருகே தயங்கி நின்று கொண்டிருந்தாள். எங்கே நிற்பது என்று அவளுக்கு தெரியவில்லை. ஹாலில் பெரிய எல்.சி.டி டீவி இருந்தது. அவ்வளவு பெரிய டீவியை அவள் அதற்கு முன்பு பார்த்ததில்லை. ஓடாத டீவியைக்கூட பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.


”அப்படியே நிக்கற நேரத்துல, அந்த மூலையில தொடப்பம் இருக்கு பாரு. அதை எடுத்து வீட்டைப் பெருக்கிடுமா. கால் முட்டி எல்லாம் வலிக்குது. அங்கங்க ஆம்பளைங்க சமையலே செய்யறாங்க. இங்க எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு. பொண்டாட்டிக்கு முடியலையே, அவளுக்கும் வயசாச்சே, கொஞ்சமாவது உதவணும்னு இந்த ஆம்பிளைக்கு தோணுதா”


வீட்டம்மா புலம்பல் நிற்பதற்கும் இவள் பெருக்கி முடிப்பதற்கும் சரியாக இருந்தது. பித்தளை டம்ளரில் காப்பி அவளுக்கு தயாராக இருந்தது. அடுத்த நாள் அது டீயாக மாறியிருந்தது. அதன் பிறகு அவளுக்கு தினமும் டீ கிடைத்தது. வெள்ளிக்கிழமைகளிலும் விரத நாட்களிலும் டிபன் கிடைத்தது. அதற்கு காத்திருக்கும் நேரத்தில், வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.


வேலைக்கு சேர்ந்து நான்கு மாதமாகியிருந்தது.


“சாந்தி, முழாண்டு லீவுக்கு என் பொண்ணும், பேரப் பசங்களும் வரப் போறாங்க. துணி எல்லாம் அதிகமா தொவைக்க வேண்டியது இருக்கும். மெஷின்ல ரெண்டு வாட்டி போட்டா கரண்ட் பில்லு அதிகமாகும், தேவையில்லாம கவர்மெண்ட்க்கு காசு போகும். அதுக்கு பதிலா அது இல்லாதவங்களுக்கு போச்சுனா நல்லது. உங்க அம்மாவை வேணா பதினோரு மணிக்கு அப்பறம் வர சொல்லேன். சேர்த்து நானூரு ரூபாயா வாங்கிக்கலாம்”


“நானே தொவைக்கறேன்கா. எனக்கும் முழாண்டு லீவு தான். வீட்ல சும்மா தான் இருக்கேன்”


“அதுவும் சரிதான். உன் வயசுக்கெல்லாம் நான் கைல பச்சப்புள்ளயோட குடும்பமே நடத்தினேன்”


அவள் நினைத்ததைப் போல துணி துவைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்த வீட்டம்மாவின் பேரப் பிள்ளைகள் கிஷ்கிந்தாவிலிருந்து வந்திருப்பார்கள் போல. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று துணிகள் மாற்றினார்கள். அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல் அழுக்காக்கினர். அதை விட அவர்கள் பேசிய ஆங்கிலம் அவளுக்கு சுத்தமாக புரியாதது தான் கஷ்டமாக இருந்தது. அந்த வீட்டம்மாவிற்கும் புரியவில்லை என்பதில் ஒரு திருப்தி. பதினைந்து நாட்களில் அவர்கள் கிளம்பிவிட்டார்கள். நானூறு முன்னூறாகியதில் அவளுக்கு வருத்தம் இல்லை.


”என்ன சாந்தி பத்தாவது பாஸ் பண்ணதுக்கு சாக்லேட் எல்லாம் இல்லையா?”


“சாயந்தரம் வாங்கி தரேனு அம்மா சொன்னாங்கக்கா”


“சரி, மார்க் என்ன?”


“முன்னூத்தி எழுவத்தி எட்டுக்கா”


“என் பையன் நானுத்தி அம்பத்து நாலு வாங்கினான். நீயும் தான் படிக்கிறேன் படிக்கிறேனு சாயந்தரம் ஆறு மணிக்கு எல்லாம் ஓடற. என்னத்த படிச்சியோ தெரியல”


வீட்டம்மாவின் பையன் இதுவரை சாப்பிட்டத் தட்டை நகர்த்தியது கூட இல்லை என்பது அந்த வீட்டம்மாவைத் தவிர யாருக்கும் தெரியாது.


”இந்தா சாந்தி முன்னூறு ரூபா. காசு செலவுப் பண்ணாம புக் வாங்கிக்கோ. ஒழுங்கா படி. புரியுதா?”


“அக்கா எப்படி கேக்கறதுனு தெரியல. இந்த வருஷம் பள்ளிக்கூடத்துக்கு பாவடை தாவணிக் கட்டிட்டு போகணும். புது யூனிஃபார்ம் தைக்கணும். அம்மா வாங்கன காசு அக்காக்கு புக் வாங்கறதுக்கு சரியா போச்சு. ஒரு இரநூறு ரூபா சேர்த்து கொடுத்தா கொஞ்சம் பரவாலயா இருக்கும். சம்பளத்துல அம்பது அம்பது ரூபாயா பிடிச்சிக்கோங்கக்கா”


“இரநூறு ருபாயா? அவ்வளவு பணம் இப்ப இல்லையே. நான் ஐயாகிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன். ஆனா இந்த அம்பது அம்பதா பிடிக்கறது எல்லாம் வேணாம். அடுத்த மாசத்துல மொத்தமா பிடிச்சிக்குவேன். சரியா?”


“சரிக்கா”


எப்படியோ பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டாள்.


பத்து நாட்கள் சென்றிருந்த நிலையில்,


“என்ன சாந்தி, இந்த நேரத்துல வந்திருக்க?”


“பள்ளிக்கூடத்துல இருந்து வரேன்கா” அவள் கண்கள் கலங்கியிருந்தன.


“என்ன ஆச்சு? டல்லா இருக்க”


பேச ஆரம்பிப்பதற்குள் அழ ஆரம்பித்தாள்.


“என்ன ஆச்சு. அழாத சொல்லு”


“போன வருஷமே பள்ளிக்கூடத்துல யூனிஃபார்ம் கலர் மாத்தறேனு சொன்னாங்க. அப்பறம் மாத்தல. இப்ப போனா கலர் மாத்திட்டேனு சொல்றாங்க. நிறையப் பேர் துணி வாங்கி தைச்சிட்டோம்னு சொன்னோம். போன வருஷமே மாத்தறோம்னு சொன்னோம் இல்ல. அதை விசாரிக்காம நீங்க எப்படி எடுக்கலாம்னு திட்டினாங்கக்கா. எல்லாரும் சொல்லியும் கேக்க முடியாதுனு சொல்லிட்டாங்கக்கா. நான் ரெண்டு செட்டு தச்சிட்டேன்கா” திணறி திணறி சொல்லி முடித்தாள்.


“படிக்கிற பொண்ணு இப்படியா இருப்ப? என்ன கலர் யூனிஃபார்ம்னு விசாரிக்காமலா தைப்பாங்க?”


”இல்லைங்கக்கா. அதைப் பத்தி எதுவுமே சொல்லலைங்கக்கா. மார்க் ஷீட் வாங்க போகும் போது கூட எதுவும் சொல்லலை. இப்ப தான் அட்மிஷன் போடும் போது சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுனு தெரியலைங்கக்கா”


“உனக்கு போன தடவ சேர்த்து காசு கொடுத்தே நான் ஐயாகிட்ட திட்டு வாங்கினேன். இதை சொன்னா எனக்கு திட்டு விழும். படிப்புல அக்கரை இல்லாத பொண்ணுக்கு எல்லாம் எதுக்கு காசு கொடுக்கறனு”


என்ன பேசுவதென்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பினாள்.


அடுத்த நாள் வழக்கம் போல் ஏழு மணிக்குள் சென்றுவிட்டாள். அவள் கண்கள் வீங்கியிருந்தன. வீட்டம்மா எதுவும் விசாரிக்கவில்லை. அவளே பேச ஆரம்பித்தாள்.


“அக்கா, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னா சொல்லுங்கக்கா”


“ஏன்மா படிப்பை நிறுத்திட்டயா?”


“இல்லைக்கா. நேத்து ராத்திரி வீட்ல ஒரே சண்டைங்கக்கா. என்னை ஒரு வருஷம் படிப்பை நிறுத்த சொல்லி அப்பா சொல்லிடுச்சி. எனக்கு தான் தொடர்ந்து படிக்கணும்னு ஆசையா இருக்குக்கா. நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. அவுங்களுக்கும் என்ன மாதிரியே வேல கிடைச்சா எப்படியும் மொத மாசம் சம்பளம் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போயிடலாம்கா. இல்லைனா ஒரு வருஷம் வீட்ல தான். அப்பறமும் படிக்க முடியுமானு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சி ஏதாவது வீடு இருந்தா சொல்லுங்கக்கா. அவுங்களும் என்னை மாதிரியே நல்லா பாத்திரம் வெளக்குவாங்கக்கா”


.........................


இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Monday, July 20, 2009

அ.முத்துலிங்கத்துடன் சிறு(கதை) பயணம்

வீட்டில் ஒரு வாரமாக இணையம் இல்லை. அலுவலகத்தில் இருந்து எழுத நேரம் இல்லை. எழுத பல விஷயங்கள் கிடைத்த இந்த வாரத்தில் இப்படி அமைந்தது வருத்தமே.

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களான ஜெயமோகனையும், அ.முத்துலிங்கத்தையும் சந்தித்து பேசும் வாய்ப்பு இந்த வாரத்தில் அமைந்தது. ஒரு உண்மை என்னவென்றால் இவர்கள் இருவரின் எழுத்தையும் இவர்களை சந்திப்பதற்கு முன் நான் படித்ததில்லை என்பதால் அவர்களிடம் தரமான கேள்விகளை கேட்க எனக்கு தெரியவில்லை. இருப்பினும் உடன் வந்த நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களில் அவர்களுடைய ஆளுமையை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.

ஜெமோவைப் பற்றி எழுத நிறைய, நிறைய இருப்பதால் இந்த பதிவில் அவரைப் பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை.

அ.முத்துலிங்கம் அவர்களுடன் காரில் நான்கு மணி நேரம் பயணிக்கும் பொழுது ஓரளவு உரையாட முடிந்தது.

எழுத்தாளர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்களைப் போல பேசுவார்கள் என்ற எனது எண்ணம் நேற்று அடியோடு மாறியது. அ.முத்துலிங்கம் அவ்வளவு அமைதி. எந்த கேள்வியென்றாலும் ஒரு நிமிடம் தன்னை தயார் செய்து கொண்டு நிதானமாக பேச துவங்குகிறார். அவருடைய தமிழ் தேன்.

அவரிடம் பேசும் போது நான் பல அபத்தங்களை செய்தேன். ஆனால் அப்படி செய்தது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது. நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் க‌ற்றுக் கொண்ட‌வைக‌ளை உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

சென்ற‌ வார‌ம் அசோக‌மித்திர‌னின் மான‌ச‌ரோவ‌ர் ம‌ற்றும் இந்திரா பார்த்தசார‌தியின் வேர்ப‌ற்று ப‌டித்திருந்தேன். மான‌ச‌ரோவ‌ர் க‌தையில் இருக்கும் ஒரு த‌வ‌றை சுட்டிக்காட்டி அதைப் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

அதற்கு பிறகு நான் ஒரு கதையை சொல்லி, அதை நாவலாக எழுதலாம் என்று யோசித்து கொண்டிருப்பதாக சொன்னேன்.

"எந்த தமிழில் எழுதுவீர்கள்" என்று கேட்டார். எந்த தமிழ் என்றால் என்ன சொல்வதென்று எனக்கு புரியவில்லை.

"நான்காம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளின் தமிழ் ஒரு மாதிரி இருக்கும். பத்தாம் வகுப்பு பிள்ளைகளின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். ஒரு எழுத்தாளனின் தமிழ் வேறு மாதிரி இருக்கும். நீங்கள் எந்த தமிழில் எழுதுவீர்கள்?"

நான் மௌனமாக இருந்தேன்.

அவ‌ர் என்னிட‌ம் இந்த‌ கேள்வி கேட்ப‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம், அத‌ற்கு முன், "கதை எழுத, புத்தகம் படிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை" என்று சொன்ன கருத்து தான். அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னது தவறு என்று சில நிமிடங்களிலே புரிந்து கொண்டேன்.

மீண்டும் அவ‌ரே ஆர‌ம்பித்தார், உதாரணத்திற்கு ஜெயமோகனின் கிளம்புதல் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்

"இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும்"

"இதை நீங்கள் எப்படி எழுதியிருப்பீர்கள்?"

என் நீயூரான்கள் துரிதமாக வார்த்தைகளை தேடின.

"எனது விமானம் புறப்பட்டது என்று எழுதியிருப்பீர்களா?"

இருக்கலாம். இல்லை அதில் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம். இருந்தாலும் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி காணாமல் போனது என்று நிச்சயம் எழுதியிருக்க முடியாது.

"ஒரு எழுத்தாளனின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டும்"

மொழியை பயன்படுத்தும் அழகு தான் கதைக்கு உயிர் கொடுக்கிறது. அதை நான் இன்று வரை முயன்றதில்லை. முடியாது என்பது மட்டுமே என் எண்ணம். முடியாது என்று எண்ணுவதை விட முயன்று தோற்றால் ஒரு பெருமை இருக்கும் என்று தோன்றுகிறது.

அதன் பிறகு திண்ணை ராஜாராம் அவர்கள் இல்லத்தில் நடந்த சந்திப்பில், முத்துலிங்கம் அவர்கள் சிறுகதையைப் பற்றி குறிப்பிட்ட சில விஷயங்கள்.

சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விட மிக கடினமான விஷயம்.

அவர் நேர்காணல் எடுக்க சென்ற உலகின் மிக சிறந்த எழுத்தாளர் ஒருவரின் மேஜையில் ஆறு சிறுகதைகள் பாதி எழுதிய நிலையில் இருந்தனவாம். அவருக்கு ஒரு சிறுகதையை எழுதி முடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் ஆகுமாம்.

பிறகு இரவு திரும்பும் பொழுது மீண்டும் சிறுகதைகளைப் பற்றி கேட்க ஆரம்பித்தேன்.

"ஆங்கிலத்தில் இன்று வரும் சிறுகதைகளுக்கு நிகராக தமிழில் ஒரு கதை கூட வருவதில்லை. ஆங்கிலத்தில் சிறுகதைகள் சுமார் நாற்பது முதல்அறுபது பக்கங்கள் வரை இருக்கின்றன. சமீபத்தில் தமிழில் வந்த மிக சிறந்த சிறுகதை ஊமைச் செந்நாய். அதன் தரத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொள்ளுங்கள்."

ஊமைச் செந்நாய் படித்த பொழுது இது சிறந்த கதை என்பதை நானும் உணர்ந்தேன். படித்து முடித்து ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். அதை மீண்டும் படிக்க வேண்டும்.

இந்த நான்கு ‍ஐந்து மணி நேர உரையாடலில் ஒரு இடத்தில் கூட அவர், "என்னுடைய **** இந்த கதையில்...." என்று குறிப்பிடாதது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.

அதைப் போலவே அவருடைய சிறுகதை ஒன்றைப் பற்றி உடன் வந்த நண்பர் வேல்முருகன் ஒரு கேள்வியை முன் வைத்தார். ஒரு மகன் தன் தந்தை தன்னிடம் சொன்ன கதையை சொல்வதைப் போல ஒரு கதை. அதில் இவ்வாறு வருகிறது.

"அந்த சந்தையில் தான் நான் முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்"

இதில் சில வார்த்தைகளில் தவறு இருக்கலாம். "முதன்முதலில் அந்த பெண்ணைப் பார்த்தேன்" என்பது தான் இங்கே விவாதத்திற்கு எடுத்து கொண்ட வாக்கியம். இதில் அந்த பெண் என்பது அவன் தாயை அவர் பார்த்தை தான் குறிப்பிடுகிறது. ஆனால் இது வாசகர்களுக்கு அந்த தந்தை வேறு ஒரு பெண்ணை பார்த்ததாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாக வேல்முருகன் சொன்னார். சுஜாதாவைப் போன்ற எழுத்தாளர்கள் இவ்வாறு தவறு செய்ததில்லை என்றும், முத்துலிங்கமும் இவ்வாறு வேறு எங்கும் தவறு செய்ததில்லை என்றும் சொன்னார்.

பாபா இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. முத்துலிங்க‌ம் உட‌ன‌டியாக‌ ஏற்றுக் கொண்டார். அந்த‌ இட‌த்தில் அவ‌ர் ஒரு நிமிட‌ம் சிந்தித்தாக‌வும், அத‌ன் பிற‌கே எழுதிய‌தாக‌வும் சொன்னார். மீண்டும் ஒரு முறை ப‌டித்து அதை மாற்ற‌ ஏதாவ‌து வ‌ழி இருந்தால் செய்வ‌தாக‌ சொன்னார். அவ‌ருடைய‌ இந்த‌ பெருந்த‌ன்மை என‌க்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.

"அங்கு தான் முதன் முதலில் என் அம்மாவைப் பார்த்தார்" என்று வரலாமா என்று நான் கேட்டேன். அது தவறு என்று இருவரும் சொன்னார்கள். அவர் தந்தை பார்க்கும் போது அவள் அவனுக்கு அன்னை இல்லை. என்னுடைய தவறை உடனடியாக புரிந்து கொண்டேன்.

ஒரு முக்கிய‌மான‌ விஷ‌ய‌த்தை சொல்ல‌ த‌வ‌றிவிட்டேன். நான் அசோக‌மித்திர‌ன் க‌தையைப் ப‌ற்றி சொன்ன‌வுட‌ன், "அசோக‌மித்திர‌ன் க‌தைக‌ள் ப‌டிக்க‌ எளிமையாக‌ இருந்தாலும், ஆழ‌மான‌வை. அவ‌ற்றை ஒரு முறைக்கு மேல் ப‌டிக்க‌ வேண்டும். அவ‌ரைப் போல எளிமையாகவும், அழுத்தமாகவும் எழுதுவ‌து மிக‌வும் க‌டின‌மென்றும் சொன்னார்"

முத்துலிங்க‌த்தின் க‌தைக‌ள் த‌வ‌ற விட‌க்கூடாத‌வை என்று சந்திப்பிற்கு வந்த ட்விட்ட‌ர் புக‌ழ் இல‌வ‌ச‌க் கொத்த‌னாரும் சொன்னார்.

அ.முத்துலிங்கம் அவ‌ர்க‌ளின் புத்த‌ங்க‌ளை இங்கே வாங்க‌லாம். இங்கேயும் வாங்க‌லாம்.

சிறுக‌தைக‌ளை இங்கேயும் வாசிக்க‌லாம். நானும் வாசித்துவிட்டு உங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்கிறேன்.

Thursday, June 25, 2009

உரையாடல் போட்டிக்கான கதை

சாப்ட்வேர் களம் இல்லாம ஒரு நல்ல கதை எழுதணும்னு ஆசைப்படும் போது, தானா ஒரு செய்தி வந்து மாட்டியது. அந்த உண்மை சம்பவத்தை வைத்து எழுதியது இந்த கதை.


தலைப்பு உபயம் : பெனாத்தலார்

வழக்கம் போல உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Wednesday, June 03, 2009

பத்தாம் நாள் (சிறுகதை போட்டிக்கு)

பாரதப் போரின் ஒன்பதாம் நாள் இரவு.

துரியயோதனன் அந்த‌ கூடார‌த்திலிருந்து வெளியேறி சில‌ நாழிகைக‌ள் ஆகியிருந்த‌ன‌. பிதாம‌க‌ருக்கு உற‌க்க‌ம் வ‌ர‌வில்லை. கூடார‌த்திற்குள் அங்கும் இங்கும் ந‌ட‌ந்து கொண்டிருந்தார்.

வெளியே பிண‌க்குவிய‌ல்க‌ளை போர்களத்திலிருந்து எடுப்பதில் இரு த‌ர‌ப்பு வீர‌ர்க‌ளும் மும்ம‌ர‌மாக‌ ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர். காய‌ம‌டைந்த‌ வீர‌ர்க‌ளுக்கு ம‌ருத்துவ‌ சேவைக‌ளும் ஒரு ப‌க்க‌ம் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. கை கால்க‌ளை இழ‌ந்த‌ வீர‌ர்க‌ளும் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த‌ன‌ர். போர் கள‌த்திற்கு உள்ளே வ‌ந்துவிட்டால் வெற்றி அல்ல‌து ம‌ர‌ண‌ம் ம‌ட்டுமே என்ப‌து அவ‌ர்க‌ளுக்கு தெரிந்திருந்த‌து. ஊன‌த்தைக் கார‌ண‌ம் சொன்னால் உடலில் உயிர் தங்க‌ கார‌ண‌மிருக்காது என்ப‌து அங்கே எழுத‌ப்ப‌டாத‌ விதி.

எதையும் பார்க்க‌ பிடிக்காம‌ல் சிறிது நேர‌ம் க‌ண்மூடி இருக்க‌லாம் என்ற‌ எண்ண‌த்தில் அங்கே இருந்த‌ ப‌டுக்கையில் த‌ன் பெரும் ச‌ரீர‌த்தை சாய்த்தார்.

அவர் அறியாம‌லே அவ‌ரை நித்திரா தேவி அணைத்துக் கொள்ள‌ முய‌ன்றாள்.

"தேவவிரதா"

"ம‌க‌னே தேவவிரதா. எழுந்திரு. உன்னைப் போன்ற‌ மாவீர‌ர்க‌ள் போர் க‌ள‌த்தில் உற‌ங்க‌லாமா?"

திடுக்கிட்டு எழுந்தார் பிதாம‌க‌ர். இது நிச்ச‌ய‌ம் அன்னையின் குர‌ல் தான். ச‌ந்தேக‌மே இல்லை. இந்த அற்புத குரலைக் கேட்டு எத்த‌னை ஆண்டுக‌ளாகின்ற‌ன‌.

"தாயே! தாங்க‌ளா? எங்கிருக்கிறீர்க‌ள்? த‌ங்க‌ள் குர‌லைக் கேட்டு எத்த‌னை ஆண்டுக‌ளாகின்ற‌ன‌? த‌ய‌வு செய்து என் க‌ண் முன்னால் வ‌ந்து த‌ரிச‌ன‌ம் தாருங்கள்"

"மக‌னே! அத‌ற்கான‌ நேர‌ம் வ‌ரும் பொழுது நானே உன் கண் முன் தோன்றுவேன். இப்பொழுது உன‌க்கு வ‌ர‌ இருக்கும் அவ‌ப்பெய‌ரை நீக்க‌வே ஓடோடி வ‌ந்தேன்"

"அவ‌ப்பெய‌ரா? என‌க்கா? என்ன‌ தாயே சொல்கிறீர்க‌ள்"

"உல‌கில் யாரும் செய்ய முடியாத காரிய‌த்தை செய்து தேவவிரத‌னாக‌ இருந்த‌ நீ அன்று பீஷ்ம‌ன் ஆனாய். ஆனால் அந்த‌ பெய‌ருக்கே க‌ள‌ங்க‌ம் வ‌ரும் செய‌லில் நீ ஈடுப‌ட‌லாமா?"

"என்ன‌ தாயே சொல்கிறீர்க‌ள். நான் என்ன‌ த‌வ‌று செய்தேன்?"

"ம‌க‌னே! இந்த‌ப் போரில் துரியோதனன் உட‌னிருந்து பாண்ட‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ போரிடுகிறாயே. இது அநீதியல்லவா?"

"நான் என்ன‌ செய்வேன் தாயே. த‌ந்தையில்லாத‌தால் தான் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ நினைத்திருக்கும் யுதிஷ்டிர‌னுக்கும், த‌ந்தை க‌ண் பார்வை இழ‌ந்த‌தால் தான் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ நினைத்திருக்கும் துரிய‌னுக்குமிடையே மண் ஆசையால் ந‌ட‌க்கும் போரில் நானும் ஒரு ப‌கடைக்காய் ஆக்க‌ப்ப‌ட்டுள்ளேன்"

"ம‌க‌னே! இது ம‌ண்ணிற்காக‌ ந‌ட‌க்கும் போர் அல்ல‌. இது ப‌ல‌ பெண்க‌ளுக்கு நீ இழைத்த அநீதிகளுக்காக‌‌ ந‌ட‌க்கும் போர்"

"நான் பெண்க‌ளுக்கு அநீதி இழைத்தேனா? என்ன‌ கொடுமை இது தாயே? என் மீது இப்ப‌டி ஒரு அபாண்ட‌மான‌ ப‌ழியா?"

"ம‌க‌னே எந்த‌ தாயும் த‌ன் ம‌க‌ன் மீது எந்த‌ கால‌த்திலும் ப‌ழி சும‌த்திய‌தாக‌ வ‌ர‌லாறு இல்லை. உன்னை ப‌ழியிலிருந்து காப்ப‌த‌ற்காக‌வே ஓடோடி வ‌ந்துள்ளேன்"

"என்ன‌ ப‌ழி என்று த‌ய‌வு செய்து சொல்லிவிடுங்க‌ள் தாயே. என் த‌லையே வெடித்துவிடும் போல் தோன்றுகிற‌து"

"விசித்ர‌வீரிய‌ன் திரும‌ண‌த்திற்கு காசி ராஜ‌னின் ம‌க‌ள்க‌ளை க‌வ‌ர்ந்தாயே. நினைவு இருக்கிறதா ம‌க‌னே?"

"ச‌த்ரிய‌ த‌ர்ம‌த்திற்கு எதிராக‌ எதுவும் செய்ய‌வில்லையே தாயே"

"எது ச‌த்ரிய‌ த‌ர்ம‌ம் ம‌க‌னே? உன் பொறுப்பில் வ‌ளர்ந்த‌ த‌ம்பியை வீர‌மாக‌ வ‌ளர்த்து அவ‌னை சுய‌ம்வ‌ர‌த்திற்கு அனுப்பி க‌வ‌ர்வ‌து தானே த‌ர்ம‌ம். அதைவிடுத்து மாபெரும் வீர‌னான‌ நீ, உன் த‌ம்பிக‌ளை உன‌க்கு நிக‌ராக‌ வ‌ள‌ர்க்காம‌ல் விட்டாய். க‌ந்த‌வ‌ர்க‌ளின் வீர‌ம் தெரிந்திருந்தும் சத்ய‌வ‌தியின் முத‌ல் ம‌க‌ன் சித்ராங்கதனைப் போருக்கு அனுப்பினாய். அவ‌ன் வீர‌ சொர்க‌ம் அடைந்தான். அடுத்த‌ ம‌க‌னை சிறுவ‌ய‌திலே அரிய‌னையில் ஏற்றி நீயே ஆட்சி புரிந்தாய். அவ‌னை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இக‌ழ‌ வேண்டும் என்று அவ‌ன் சார்பில் நீ சென்று பெண்க‌ளை க‌வ‌ர்ந்து வ‌ந்தாய்"

"போதும் தாயே! த‌ய‌வு செய்து நிறுத்தவிடுங்க‌ள். இது எதுவும் நான் திட்டுமிட்ட‌ செய்த‌த‌ல்ல‌. எல்லாம் த‌ற்செய‌லான‌தே"

"நீ சொல்வ‌தை இன்று இந்த‌ உல‌க‌ம் ஏற்றிருக்கிற‌து ம‌க‌னே. அது என்றும் ஏற்கும் என்று சொல்ல‌ முடியாது. நான் சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லிவிட்டு சென்றுவிடுகிறேன். ம‌ற்ற‌து உன்
விருப்ப‌ம்"

"சொல்லுங்க‌ள் தாயே"

“மகனே! பெண்களை நீ கைப்பாவை என்று நினைத்தாய். அதனால் தான் உன் முன்னால் ஹஸ்தினாபுர அரசவையில் உங்கள் நாட்டு மருமகளையே துகிலுருகினான் பாவி துச்சாதனன்”

"தாயே அது என் த‌வ‌றில்லை. நாட்டிற்காக‌ ம‌னைவியை வைத்த‌வ‌ன் யுதிஷ்டிர‌ன்"

"அதைத் த‌ட்டிக்கேட்காம‌ல் வேடிக்கைப் பார்த்த‌வ‌ன் நீ"

"வார்த்தைக‌ளால் என்னைக் கொல்லாதீர்க‌ள் தாயே"

"ம‌க‌னே! இதையெல்லாம் விட அவ‌ப்பெய‌ர் உன‌க்கு வ‌ர‌ப்போகிற‌து"

"இதையெல்லாம் மிஞ்சும் அவ‌ப்பெய‌ரா? என்ன‌ தாயே அது?"

"காந்தார‌ நாட்டு ம‌ன்ன‌ன் ம‌க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ந்து பார்வைய‌ற்ற‌ திருதிராஷ்டிர‌னுக்கு க‌ட்டி வைத்தாயே. நினைவிருக்கிற‌தா?"

"நான் க‌வ‌ர்ந்து வ‌ர‌வில்லை. அவ‌ளாக‌ விரும்பியே வ‌ந்தாள்"

"ம‌க‌னே! பெண் த‌ர‌வில்லையென்றால் உன் நாட்டின் மேல் என் ப‌டைக‌ள் பாயும், உன் நாடு சின்னா பின்ன‌ம் ஆக்க‌ப்ப‌டும் என்று நீ சொன்ன‌தைக் கேட்டு எந்த‌ப் பெண் தான் வராம‌ல் போவாள். அப்பொழுதும் அவ‌ளைக் காக்க‌ அவ‌ள் ச‌கோத‌ர‌ர்க‌ள் நூறு பேர் வ‌ந்தார்க‌ளே. அந்த‌ மாவீர்க‌ளை சிறைப்பிடித்தாய்"

"என் வீர‌த்திற்கு முன்னால் அவ‌ர்க‌ள் கால் தூசு பெறாத‌வ‌ர்க‌ள் தாயே"

"ம‌க‌னே எது வீர‌ம்? வெற்றி பெறுவோம் என்று தெரிந்து போரிடுவ‌தா? ப‌ல‌ தெய்வீக‌ அஸ்திர‌ங்க‌ளை வைத்துக் கொண்டும், இச்சை ம‌ர‌ண‌ம் என்று வ‌ர‌த்தையும் வைத்துக் கொண்டு போரிடுவ‌தா வீர‌ம்? வெற்றி பெறுவோம் என்ற‌ ந‌ம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பெண்ணைக் காக்க‌ போரிட்டார்க‌ளே காந்தார ம‌ன்ன‌ன் குமார‌ர்க‌ள். அது வீர‌ம்"

"தாயே. இப்பொழுது என்னை சூழ்ந்துள்ள‌ அவ‌ப்பெய‌ர் தான் என்ன‌? அதை ம‌ட்டும் சொல்லிவிட்டு த‌ய‌வு செய்து இங்கிருந்து அக‌ன்று விடுங்க‌ள் தாயே!"

"சொல்கிறேன் ம‌க‌னே. அதை தடுக்கத் தானே வ‌ந்துள்ளேன்"

"சொல்லுங்க‌ள் தாயே. அதை நிச்ச‌ய‌ம் செய்கிறேன்"

"கௌர‌வ‌ர்க‌ளுக்காக‌ நீ போரிடுவ‌து வேறு எந்த‌ கார‌ண‌த்திற்காக‌வும் அல்ல‌, அவ‌ர்க‌ள் உன் மைந்த‌ர்க‌ள் தான் என‌ ப‌ர‌ப்ப‌த் திட்ட‌மிட்டுள்ளார்க‌ள் ம‌க‌னே. காந்தாரியை உன் ஆசைக்கு இணங்க வைக்கவே அவள் சகோதர்கள் நூறு பேரையும் நீ சிறையிலடைத்தாய் என பரப்பத் திட்டம். அது ம‌ட்டுமில்லாம‌ல் நீ செய்த‌ த‌வ‌றுக‌ள் அனைத்தையும் ப‌ட்டியிலிட‌ போகிறார்க‌ள். உண்மையும் பொய்யும், பாலும் நீரும் போல‌ க‌ல‌க்க‌ப்ப‌ட‌ உள்ளது மகனே, கலக்கப்பட உள்ளது. அதைப் பிரிக்க‌ அந்த‌ ஈச‌னாலும் முடியாது என்ப‌து உன‌க்கே தெரியும்"

"தாயே! என்ன‌ கொடுமை இது. காந்தாரியை என் ம‌க‌ள் போல‌ நினைத்து வாழ்ந்து வ‌ருகிறேன். நான் ப‌ல‌ த‌வ‌றுக‌ளை செய்திருக்க‌லாம். ஆனால் நான் என் தந்தைக்கு கொடுத்த‌ வாக்குறுதியைத் த‌வ‌றிய‌தில்லை"

"ம‌க‌னே! உன்னை அறியாத‌வ‌ளா நான்? என் ம‌க‌ன் உத்த‌ம‌ன் என்ப‌து என‌க்கு யாரும் சொல்லி தெரிய‌ தேவையில்லை ம‌க‌னே! நீ செய்த அரும்பெரும் காரிய‌த்தை உன‌க்கு முன்னும் உன‌க்கு
பின்னும் செய்ய‌ப்போகிற‌வ‌ர்க‌ள் யாரும் இல்லை. இருப்பினும் நீ செய்த‌ சில‌ த‌வ‌றுக‌ள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து உனக்கு எதிராக ராட்சச‌ உருவ‌ம் எடுத்துள்ள‌ன‌. அதிலிருந்து நீ
த‌ப்பிவிடு ம‌க‌னே! ச‌த்ரிய‌னுக்கு உயிரை விட‌ மான‌ம் தான் முக்கிய‌ம். நான் வ‌ருகிறேன்"

"தாயே! தாயே!!!"

பிதாம‌க‌ர் த‌ரையில் விழுந்து அழ‌தார்.

..................

அந்த கூடாரத்தின் உள்ளே ஒரு உருவம் புகுந்தது

"மகனே காரியம் முடிந்தது” அற்புதக் குர‌ல்

”விதுரரே! இன்னும் எதற்கு கங்கையின் குரல்?”

“மாற்ற மறந்துவிட்டேன் கண்ணா. நாளை அந்த பிதாமகன் ஆட்டம் முடிந்துவிடும்”

யுதிஷ்டிரன் அருகே கையில் புல்லாங்குழலுடன் உட்கார்ந்திருந்தான் கருநீலக் கண்ணன்.

“நாங்கள் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா சித்தப்பா?”

“ஆமாம் யுதிஷ்டிரா. அந்த துருபதன் மகளை பார்த்தனின் தேரில் ஏற்றி செல்ல சொல்”

“திரௌபதியையா?”

“திரௌபதியை இல்லை மகனே. தன்னை ஆண் என்று சொல்லிக் கொள்கிறாளே அவள் சகோதரி சிகண்டி. அவளை ஏற்றுங்கள்”

“புரிகிறது விதுரரே!. அதற்கு தகுந்த கதையை நான் கட்டிவிடுகிறேன்”

“கதை கட்டுவதில் உன்னை மிஞ்ச முடியுமா கண்ணா!”

...................

கௌரவ சேனையின் அந்த கூடாரத்தின் வெளியே குறுக்கும் நெடுக்குமாக ஒரு உருவம் நடமாடிக் கொண்டிருந்தது. சுமார் ஏழு அடி உயரத்தில் இருந்த அவனுடைய கைகள் அவனுடைய கால் முட்டி வரை நீண்டிருந்தது. ஒன்பது நாட்களாக போர் நடந்தும் தான் எதிர்பார்த்த எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்காததில் வருத்ததில் இருந்தான். அவனுடைய கூடாரத்தில் ஏதோ சத்தம் கேட்க வேகமாக உள்ளே நுழைந்தவன், அங்கே நின்றிருந்த உருவத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தான்.

“வாருங்கள் விதுரரே!”

“காரியம் கச்சிதமாக முடிந்து விட்டது சகுனி. நாளை பிதாமகன் வீழ்வான்”

”நிச்சயமாகவா?”

“ஆமாம். நீ இனி உன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். எனக்கு கொடுத்த வாக்கையும் மறந்துவிடாதே”

“நிச்சயமாக. போரில் அந்த கிழட்டு பிரம்மச்சாரி விழுந்துவிட்டால் மொத்த குருகுலமும் சர்வநாசம் தான். நீங்கள் தான் ஹஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தி”

“குருகுலமா?ஹா ஹா ஹா.
பீஷ்மனைத் தவிர இங்கு யார் குருகுலம்? இது வியாச குலம், பராசர குலம்”

“ஆமாம். நீங்கள் சொல்வதும் சரிதான்”

”சகுனி, உனக்கு மேலும் ஒரு காரியம் இருக்கிறது. நான் போரிலிருந்து ஒதுங்கியதைப் பார்த்ததும், கர்ணனை ஒதுக்கி வைத்துவிட்டான் அந்த கிழவன். அதில் ஏதாவது சூழ்ச்சி இருக்கலாம். நாளை கிழவன் விழுந்ததும் கர்ணனையும் சேர்த்துக் கொள். பார்த்தனைக் கொல்ல சக்தி அஸ்திரம் அவனிடம் தான் இருக்கிறது”

“கர்ணன் தானாக வந்து சேர்வான் விதுரரே. துரியன் என்ற மகுடி என் கையிலிருக்கும் வரை கர்ணன் என்ற பாம்பைப் பற்றி கவலை வேண்டாம். இருப்பினும் கர்ணன் மேல் உங்களுக்கு ஒரு பிரியம் இருப்பதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தன் கையில் அவன் வீழவும் வாய்ப்புகள் அதிகம்.”

“அதைப் பற்றி கவலை வேண்டாம். பிறப்பால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போலவே அவனுக்கும் பல இடங்களில் அநீதி செய்யப்பட்டதால் அவன் மேல் எனக்கு பிரியம் இருந்தது உண்மை தான். ஆனால் இந்த பிதாமகர் அவனை ஒதுக்கி வைத்ததும் எனக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. அவன் பிறப்பில் பல ரகசியங்கள் இருக்கலாம். அது வெளிவர நான் விரும்பவில்லை. மேலும் அவனுக்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தாலும், மன்னன் ஆனான். ஆனால் மன்னாள ஆரோக்கியமான ஒருவன் வேண்டும், என்ற நிலையில் உருவாக்கப்பட்ட நான், இன்று குருடனுக்கும், பொறாமைக்காரனுக்கும் கைக்கட்டி சேவகம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். நினைவில் வைத்து கொள் சகுனி, ஒருவரும் மிஞ்சக் கூடாது. அந்த சூதாடி யுதிஷ்டிரனையும் சேர்த்து!”

”நிச்சயமாக விதுரரே! நமக்கு இழைத்த அநீதிகளுக்கு இவர்கள் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. நாட்டை ஆள பிறந்த தங்களை தாசியின் மகன் என்று ஒதுக்கி வைத்து துரோகம் செய்ததற்கு பலனை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்”

”தாசியின் மகன் என்று மட்டுமா சொன்னார்கள்? வேசியின் மகன் என்று நடுசபையில் சொன்னான் என் குருட்டு அண்ணன் மகன் துரியோதனன். விசித்ரவீரியனை மணந்து என் தந்தை வியாசருக்கு முந்தானை விரித்த அம்பிகா, அம்பாலிகா பேரர்களுக்கு நிருபிக்கிறேன் யார் வேசி மகன் என்று”

(முற்றும்)

Sunday, May 31, 2009

உரையாடல் போட்டிக்கான எனது சிறுகதை

சிறுகதைப் போட்டி என்றால் முடிந்த வரை கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம். வெற்றி தோல்வி பற்றி பயம் இருந்தாலும் அதை விட கலந்து கொள்வதே மகிழ்வாக உள்ளது. பெரும்பாலும் என் கதைகள் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களம் கொண்டதாக இருப்பதாக ஒரு புகார் :). புதிதாக முயலும் பட்சத்தில், நன்றாக வருவதை விட்டுவிடாமல் இருக்கவும் வேண்டும் என்பது எனது ஆசை.

போட்டி என்று வரும் பொழுது நான் சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியைக் களமாக கொள்வது இல்லை. இந்த முறை அதையும் பொருட்படுத்தாது உரையாடல் போட்டிக்கு சாப்ட்வேர் இண்டஸ்ட்ரியையே களமாக வைத்து எழுதியிருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம், முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதை நான் உணர்ந்ததன் விளைவே.

Ethics, Values எல்லாம் வேலை செய்பவர்களுக்கே தவிர, நிறுவனங்களுக்கு இல்லை. அதைப் பதிவு செய்து வைப்பது என் கடமையாக நான் உணர்கிறேன். நாளை உலக பொருளாதாரம் சரியாகும் பட்சத்தில், புதிதாக வேலையில் வருபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். பணத்தை இஷ்டத்திற்கு செலவு செய்து பிறகு ஆப்பை அசைத்த குரங்கு போல மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட.

ரொம்ப பேசாதடா வெண்ட்ரு. கதை எங்கனு கேட்டீங்கனா... கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

Monday, May 25, 2009

சாப்ட்வேர் சக்கரம்!!!

காலங்காத்தால ஃபோன் பண்றதே இந்த அம்மாவுக்கு வேலையாப் போயிடுச்சி.

”என்னய்யா தூங்கிட்டு இருக்கியா?”

”இல்லை கபடி ஆடிட்டு இருக்கேன். ஏம்மா. எத்தனை தடவை சொல்லிருக்கேன். காலைல ஏழு மணிக்கு முன்னாடி ஃபோன் பண்ணாதீங்கனு. என்ன விஷயம்”

“இல்லய்யா, அந்த ரவி மாமா இருக்காரு இல்லை”

“ரவி மாமாவா? யார் அது?”

“என் அண்ணனோட சகலடா”

“சரி அவருக்கு என்னம்மா? சீக்கிரம் சொல்லுங்க. நான் இன்னும் ஒரு அரை மணி நேரம் தான் தூங்க முடியும்”

“உன் அத்தையோட தங்கச்சிப் பொண்ணு மீனாக்கு உங்க கம்பெனில வேலைக் கிடைச்சிருக்காம்”

“சரி. அதுக்கு?

“இப்ப தான் முதல் முறையா பெங்களூர் வருதாம். நேத்து தான் ரவி மாமா ஃபோன் பண்ணி விசாரிச்சாரு. நான் உன் நம்பரைக் கொடுத்திருக்கேன். ஏதாவது உதவி கேட்டா பண்ணுப்பா. சரியா?”

”ஏம்மா இப்படி எல்லாருக்கும் நம்பர் கொடுக்கற? எனக்கு இருக்குற வேலைக்கு அதெல்லாம் பண்ண முடியுமானு தெரியலை. காலைல எட்டரைக்கு போனா ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு தான் வரேன்”

“பாவம்யா. தனியா ஊரை விட்டு வருது. முடிஞ்ச வரைக்கும் உதவி பண்ணுயா. சரியா?”

“சரி சரி. இனிமே ஊருல இருந்து யாராவது வராங்கனு நம்பர் கொடுக்காதீங்க. நான் ராத்திரி பண்ணறேன்”

பேசிவிட்டு மீண்டும் படுத்தேன். கண்ணை மூடியவுடன் டார்டாய்ஸ் சுத்த துவங்கியது, திருக்கோவிலூர் தனலட்சுமி கல்யாண மண்டபத்தில் கொண்டு போய் என்னை நிறுத்தியது. நான் புது சட்டை, டிராயர் போட்டிருந்தேன். எனக்கு ஒம்பது வயதிருக்கலாம். அந்த அறை முழுக்க பெண்கள்.அந்த சிகப்பு, நீலம், வெள்ளை கலர் நிறைந்த ஜமக்கலத்தில் என் அக்காவுடன் அமர்ந்து  புளியங்கொட்டைகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தேன். 

“ஏய் என் அத்தை மடியில நீ ஏண்டி படுத்திருக்க. எழுந்திரிடி” பானுவின் குரல்.

“ஏய் இது ஏன் அத்தை. நான் எழுந்திரிக்க மாட்டேன்” மீனாவின் குரல்

“அத்தை! நீங்க எனக்கு தானே அத்தை. அவளுக்கு நீங்களே சொல்லுங்க அத்த” பானு என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நான் ரெண்டு பேருக்கும் அத்தை தான்மா. நீ வேணா இந்த மடில தலை வெச்சி படுத்துக்கோ” சொல்லிவிட்டு பானுவை படுக்க வைத்தார்கள்.

“என்னடி இப்பவே ரெண்டு பேரும் அத்தைக்கு சண்டை போடறீங்க. நாளைக்கு யாரு வினோத்தை கல்யாணம் பண்ணிக்க போறாங்களோ அவுங்களுக்கு தான் அவுங்க அத்தை. யாரு கட்டிக்கறீங்க சொல்லுங்க” பக்கத்திலிருந்த காந்தா பாட்டி சொல்லிவிட்டு சிரித்தாள். இதை கேட்டதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. வேகமாக எழுந்து என் அம்மா அருகே சென்றேன்.

“ஏய் ரெண்டு பேரும் எழுந்திரிங்க. இது எங்க அம்மா. நான் தான் எங்கம்மா மடில தலை வெச்சி படுப்பேன். வேணும்னா நீங்க ரெண்டு பேரும் உங்க அம்மா மடில தலை வெச்சி படுத்துக்கோங்க. எழுந்திரிங்க” சொல்லிவிட்டு எட்டி உதைக்க ஆரம்பித்தேன். பானு எழுந்துவிட்டாள். அதற்குள் காந்தா பாட்டி என்னை கையை பிடித்து இழுத்துவிட்டார்கள்.

“பொம்பளை புள்ளைங்களை இப்படி எட்டி உதைக்கலாமா? மகாலஷ்மிங்கப்பா. இப்படி எல்லாம் பொம்பளை புள்ளைங்களை எட்டி உதைச்சா தரித்தரம் வந்துடும்பா. இனிமே என்னைக்கும் இப்படிப் பண்ணாத. புரியுதா” அதட்டினார்கள்.

“அப்பறம் நான் சொன்னா எழுந்திரிக்க வேண்டியது தானே. எங்கம்மா மடில எதுக்கு அதுங்க தலை வெச்சி படுக்கணும்?”

“அவுங்க அத்தை மடில தலை வெச்சி படுத்திருக்காங்க. அத்தை மடி மெத்தையடினு பாட்டு கூட இருக்கே. நீ வேணும்னா போய் உங்க அத்தை மடில படுத்துக்கோ. இல்லைனா வெளிய போய் விளையாடு. போ” துரத்திவிட்டார்கள். நானும் கோபத்தில் மீண்டும் ஒரு முறை படுத்திருந்த மீனாவை எட்டி உதைத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். 

அதற்கு பிறகு அவளை பார்த்த நியாபகம் இல்லை. அவளைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுவதோடு சரி. என் அக்கா கல்யாணத்திற்கு கூட ரவி மாமா தான் வந்தாரே தவிர மீனா வரவில்லை.

குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பினேன். சரியாக எட்டரை மணிக்கு என் சீட்டில் இருந்தேன். ஆன்சைட் கால் ஆரம்பித்து ஒரு மணி நேரம் சென்றது. அவன் வாங்கிய திட்டை 10x ஆக மாற்றி எங்களுக்கு கொடுத்து கொண்டிருந்தாள். அதை நான் 20x ஆக மாற்றி டீமில் இருக்கும் ஜூனியர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். 

சரியாக பனிரெண்டரை மணிக்கு என் செல்போன் சிணுங்கியது.

“ஹலோ வினோத்?”

“யெஸ் ஸ்பீக்கிங்”

“நான் மீனா பேசறேன்”

“மீனா? எந்த மீனா”

ஃபோன் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.  அது தமிழ்நாடு நம்பர். இன்னும் பெங்களூர் நம்பர் வாங்கவில்லை போல. 

மறுபடி நான் அழைத்தேன்.

“மீனா, ஐ அம் டெரிபலி சாரி. காலைல அம்மா சொன்னாங்க. டென்ஷன்ல மறந்துட்டேன்”

“பரவாயில்லை. எனக்கும் என்ன ரிலேஷன்னு சொல்லனும்னு தெரியலை. அதான் வெச்சிட்டேன்”

“ஹா ஹா ஹா. தட்ஸ் ஃபைன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் வரேன்”

பில்டிங் நம்பரை சொன்னாள். ட்ரைனிங் பில்டிங் தான். 

வேகமாக ட்ரெயினிங் பில்டிங்கை நோக்கி நடந்தேன். அங்கே இருந்த கூட்டத்தில் யார் மீனா என்று தெரியவில்லை. அவள் எண்ணுக்கு அழைத்தேன். லைட் மஞ்சள் நிற சுடிதார் போட்டு சோபாவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணுடைய செல்ஃபோன் சிணுங்கியது. அது தான் மீனாவாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன். ஆனால் அந்த பெண் வடநாட்டுக்காரி போல் இருந்தாள். 

”ஹலோ கிருஷ்ணா”

என் பின்னாலிருந்த படியிலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். வெள்ளை நிற சுடிதாரில் தேவதை மாதிரி தெரிந்தாள் மீனா என்று சொல்லுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் இன்னும் பாரதிராஜா படத்திலிருந்து வெளி வரவில்லை என்று அர்த்தம். 

“மீனா?”

”யெஸ்”

“வெஜ்ஜா நான் வெஜ்ஜா?”

“என்னது?”

“வெஜ் சாப்பாடு வேண்டுமா நான் வெஜ் சாப்பாடு வேணுமானு கேட்டேன். அதுக்கேத்த ஃபுட் கோர்ட்க்கு போகலாம்”

“வெஜ்”

“அப்ப பக்கத்துல இருக்கற ஃபுட் கோர்ட்டேக்கே போகலாம்”

வழியில் எதுவும் பேசாமல் ஏதோ சிந்தனையிலே வந்தாள்.

சாப்பாடு வாங்கி கொண்டு எதிரெதிரில் அமர்ந்தோம்.

“சொல்லுங்க மீனா. ட்ரெயினிங் எல்லாம் எப்படி போகுது?”

“சொல்லுங்கவா? நான் உங்கள விட சின்ன பொண்ணு. மோர் ஓவர் நீங்க எனக்கு அத்தைப் பையன். அந்த ஞாபகம் இருக்கா?”

“அத்தைப் பையனா? இது என்ன காமெடியா இருக்கு. பானுக்கு தான் நான் அத்தைப் பையன். என்ன ஞாபகம் இல்லையா?”

முறைத்தாள்.

“சரி சரி. சாப்பிடு”

“சாப்பிட்டு தான் இருக்கேன். அப்பறம் உங்களால என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியல தானே? நான் எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?”

“என்ன பண்றது நான் அப்ப மாதிரியே இருக்கேன். நீ தான் ஆளே மாறிட்ட?”

“நிஜமாவா?”

“ஆமாம். சின்ன வயசுல அழகா சின்னதா குட்டி குரங்கு மாதிரி இருந்த”

“ஏய்ய்ய்”

“இரு சொல்லி முடிக்க விடு”

“சொல்லுங்க”

“இப்ப பெரிய குரங்கா மாறிட்ட”

கைல வெச்சிருந்த ஸ்பூனால அடிச்சிட்டா. 

”அப்பறம் உனக்கு எல்லாம் எந்த அறிவாளி இந்த கம்பெனில வேலை போட்டு கொடுத்தான்?”

”ஹான்...உங்களுக்கே ஒரு அறிவாளி வேலை கொடுக்கும் போது எனக்கு கொடுக்காமலா போயிடுவான். அது மட்டுமில்லாமல் இந்த கம்பெனிக்குனே நான் தனியா ப்ரிப்பேர் பண்ணேன்”

“ஏன்?”

“சும்மா தான்”

“நம்பிட்டேன்”

“நல்லது”

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து அவளை ட்ரைனிங் பில்டிங்கில் விட்டு வந்தேன். அவள் நினைவாகவே இருந்தது. சின்ன வயசுல எல்லாம் இவ்வளவு துடுக்குத்தனமா பேசின மாதிரி நியாபகமில்லை. ஒரு வேளை சின்ன வயசுல பயமா கூட இருந்திருக்கலாம்.

சரியாக ஐந்து மணிக்கு செல் ஃபோன் சிணுங்கியது. மீனா தான்.

“எனக்கு அஞ்சே காலுக்கு பஸ் இருக்கு”

“சரி”

“நான் அதுல போகவா?”

“ஒரு வாரம் கெஸ்ட் அவுஸ் தானே?”

“ஆமாம்”

“அடுத்து?”

“PG தேடணும். நீங்க ஹெல்ப் பண்றீங்களா?”

“நான் வேணா வீடு எடுக்கறேன். ரெண்டு பேரும் சேர்ந்து தங்கிக்கலாம்”

“”

“ஏய் சும்மா சொன்னேன். டென்ஷன் ஆகாத. வெயிட் பண்ணு. ஒரு சிக்ஸ் தேர்ட்டிக்கா கிளம்பலாம். நான் வண்டிலயே உன்னை கொண்டு போய் விடறேன். ஓகேவா?”

“ஹ்ம்ம்ம். அதுவரைக்கும் நான் எங்க வெயிட் பண்றது?”

“என் பில்டிங்கு வா. ஆனா எதுவும் தொந்தரவு பண்ணக்கூடாது. சரியா?”

“நான் எதுவும் தொந்தரவு பண்ணமாட்டேன். சமத்தா இருப்பேன்”

“சரி கீழ வந்து ரிசப்ஷன்ல இருந்து கூப்பிடு. நான் வந்து கூப்பிட்டு போறேன்”

அவளை என் க்யூபிக்களுக்கு அழைத்து வந்து அருகில் உட்கார சொல்லிவிட்டு வேலையை தொடர்ந்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியவில்லை. வேலை முடிந்த வரை ஆன்சைட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு புறப்பட்டோம்.

”அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா மாமா?”

“ஓய்... என்னது மாமாவா? ஒதை வேணுமா?”

“அப்பறம் வேற எப்படி கூப்பிடறது?”

“அத்தான்னு கூப்பிடு”

“நிஜமாவா? பக்கத்துல யாராவது கேட்டா சிரிக்க மாட்டாங்க?”

“ஏய்... சும்மா சொன்னேன். வினோத்னு கூப்பிடு”

“எப்பவுமேவா?”

“ஆபிஸ்குள்ள மாமானு கூப்பிடாத. புரியுதா?”

“அப்ப வெளிய கூப்பிடலாமா?”

“உன் ட்ரெயினர் கிருஷ்ணா எனக்கு ஃபிரெண்ட் தான். ட்ரெயினிங்ல பாஸ் ஆகணும்னு ஆசையில்லையா? ”

”சரி சரி இனிமே கூப்பிடல”.

அவளை என்னுடைய டூ-வீலரில் அழைத்து கொண்டு
 சில PGக்கு அழைத்து சென்று காண்பித்தேன். மாதம் இரண்டாயிரத்தி ஐநூறிலிருந்து நான்காயிரம் வரை இருந்தது. பொதுவாக ரூமிற்கு இரண்டு அல்லது நான்கு பெட். வீக் டேல பிரேக் ஃபாஸ்ட், டின்னர். வீக் எண்ட்ல லஞ்ச். எல்லாமே கேவலமா இருக்கும்னு தங்கியிருந்தவங்கல தனியா விசாரிச்சதல சொன்னாங்க. எப்படியும் ரெண்டு நாள்ல முடிவு பண்ணிடலாம்னு விட்டுட்டோம். 

மணி எட்டாகியிருந்தது. அப்படியே சுக் சாகரில் ஆளுக்கு ஒரு மசால் தோசை சாப்பிட்டு விட்டு அவளை கெஸ்ட் அவுஸில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வந்ததிலிருந்து அவள் நினைவாகவே இருந்தது. அவள் காலையிலிருந்து பேசியதெல்லாம் மீண்டும் ஒரு முறை மனதில் ஓடியது. எனக்கு இத்தனை வருடத்தில் அவளை பற்றிய நினைவு பெரிதாக வந்ததில்லை. 

எங்க அக்கா மட்டும் ஒன்றிரண்டு முறை அம்மாவிடம், மீனாவை நம்ம வீட்டுக்கு மருமகளா கூப்பிட்டு வந்திடலாம். நல்ல பொண்ணுனு சொல்லிட்டு இருப்பாங்க. அதுக்கு அம்மா, யாருக்கு யார்னு நம்ம கைல என்னமா இருக்கு. அதெல்லாம் நடக்கற அப்ப பார்த்துக்கலாம்னு சொல்லுவாங்க. அப்பவெல்லாம் என் மனசுல பெருசா எதுவும் தோன்றியது இல்லை. இன்னைக்கு ஒரே நாள்ல நானே மாறிட்டேன். எப்படியும் அக்காவை வெச்சி வழிக்கு கொண்டு வந்திடலாம். இல்லைனா பாவாக்கிட்ட சொல்லிக்கூட சொல்ல சொல்லலாம். மருமகன் பேச்சுக்கு வீட்ல எதிரா யாரும் பேசமாட்டாங்க.

அதுக்கு எல்லாம் முன்னாடி அவள் மனசுல என்ன இருக்குதுனு தெரிஞ்சிக்கனும். இது வரைக்கும் அவள் பேசினது தான் என்னை இப்படியே யோசிக்க வெச்சிருக்கு. இருந்தாலும் கடைசியா நான் உங்களை ரிலேட்டிவாதான் நினைச்சேனு சொல்லிட்டா, அலைபாயுதேல வர கார்த்திக் மாதிரி பல்பு வாங்க முடியாது. அவ மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சிக்குவோம். அதுக்கு அப்பறம் வீட்ல பேசலாம். 

இதுக்கெல்லாம் இப்ப அவசரம் இல்லை தான். ஆனா இப்படி ஒரு குழப்பத்துல என்னால இருக்க முடியாது, அவக்கிட்ட இப்படி ரெண்டுங்கெட்டான் தனமாவும் பேச முடியாது . இந்த வீக் எண்ட் எப்படியும் மீனாவோட தான் ஸ்பெண்ட் பண்ற மாதிரி இருக்கும். எப்படியும் அப்ப பேசிடலாம். இந்த வீக் எண்ட்ல எல்லாம் தெளிவாகிடலாம். அப்படி எதுவும் எண்ணம் அவளுக்கு இல்லைனாலும் ஓகே தான். இப்பவே எஸ்ஸாகிடலாம். மனசுல ஆசையை வளர்த்துக்கறது நியாயம் இல்லை. அவ ஆமாம்னு சொன்னா எப்படி இருக்கும். ஹார்ட்ல ஆக்சிஜன் சப்ளை குறைந்த மாதிரி இருந்தது. ஒரு பெருமூச்சு விட்டேன். வார இறுதிக்காக ஆர்வமாக காத்திருந்தேன்.

நான்கு நாள் ஓடிய வேகமே தெரியவில்லை. யாரோ கடிகார முள்ளை கையால வேகமா சுத்திவிட்ட மாதிரி இருந்தது. வெள்ளிக்கிழமை சரியாக நான்கு முப்பது ஆகியிருந்தது. திடிரென்று ராமகிருஷ்ணா ஹெக்டேவிடமிருந்து மெயில். அவர் க்யூபிக்கலிளிருந்த பக்கத்து கான்ஃபரன்ஸ் அறைக்கு வர சொல்லியிருந்தார்.
சரியாக ஐந்து நிமிடத்தில் அங்கு இருந்தேன். அவர் அங்கு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த அறைக்கு அவர் இது வரை வர சொல்லியிருந்த நேரங்களில் அங்கு கொண்டாட்டங்கள் தான் இருக்கும். இன்று என்ன கொண்டாட்டமென்று தெரியவில்லை. இன்று மீனாவுடன் ஏதாவது படத்திற்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். எங்கே நேரமாகிவிடுமோ என்று பயம்.

சரியாக நான்கு நாற்பத்தைந்திற்கு அவர் வந்து சேர்ந்தார். பொறுமையாக பேச ஆரம்பித்தார். குலோபல் எக்கனாமிக் கண்டிஷன்களினால் கம்பெனி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சில நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டிய நிலை கம்பெனிக்கு வந்துள்ளதாகவும், அதை ஒவ்வொரு கட்டமாக செய்ய வேண்டிய நிலையில் இன்று எங்களை நீக்குவதாகவும் தெரிவித்தார். அங்கே திடீரென்று சலசலப்பு  எழுந்தது. ஒவ்வொருவரும் எப்படி எங்களை அதில் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டார்கள். இது ஒவ்வொரு ப்ராஜக்டிலும் சீனியர் மேனஜர்கள் மேனஜர்களுடன் பேசி எடுத்த லிஸ்ட். இதை எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார். எங்களுக்கு இரண்டு சாய்ஸ்கள் இருப்பதாக தெரிவித்தார்.

ஒன்று தற்கொலை. மற்றொன்று கொலை.

அங்கே யாருக்கும் சிந்திக்க நேரமில்லை. அனைவரும் மேனஜரை ஃபோனில் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். யாரும் எடுக்கவில்லை போல. அனைவரையும் அங்கே ஒரு ஃபார்ம் கொடுத்து அதை நிரப்பிவிட்டு கிளம்ப சொன்னார்கள். யாரும் அவர் இடங்களுக்கு செல்ல கூடாது. அரை மணி நேரத்தில் கம்பெனியை விட்டு வெளியேறிவிட வேண்டும். அவர்களின் 
பொருட்கள் அவர்கள் கொடுத்துள்ள விலாசத்திற்கு வந்து சேரும். அனைவரும் அவர்களுடைய டேக் (ஐடி கார்ட்)ஐ கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. இப்படி ஒரு நிலை வரும் என்பதை யாரும் யூகிக்கவில்லை. என்னையும் சேர்த்து தான். இந்த டைட்டானிக் கப்பல் மூழ்குமா என்று இறுமாந்திருந்த கேப்டன் எட்வர்ட் ஸ்மித் நிலைக்கு நாங்களும் ஆளாகியிருந்தோம்.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க தவிர்த்தோம். தரையைப் பார்த்து கொண்டே பில்டிங்கை விட்டு வெளியே வந்தேன். கடைசி ஒரு முறையாக கம்பெனியை சுற்றி நடந்தேன். ஒவ்வொரு இடமும் ஒரு நிகழ்ச்சியை நினைவுப்படுத்தியது. ஃபுட் கோர்டில் இருந்த காபி டே, பல ட்ரீட்களை நியாபகப்படுத்தியது. பல சிரித்த முகங்கள் நினைவில் வந்து மறைந்தன.

 என் பிறந்த நாள் கொண்டாட்டத்தன்று அங்கு அனைவரும் என் முகத்தில் தடவிய கேக் சுவை நாவில் தோன்றி மறைந்தது. கால் செண்டர் பில்டிங் அருகே நடந்து கொண்டிருந்தேன். எத்தனை நாட்கள் இரவு ஒன்று இரண்டு மணி வரை வேலை பார்த்து இவர்களுடன் சேர்ந்து இரவு பணிரெண்டு மணிக்கு சுட சுட சாப்பிட்டது நினைவிற்கு வந்தது. மீண்டும் நான் வேலை செய்யும் பில்டிங் அருகே வந்து நின்றேன். ஐடி கார்ட் இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. அரை மணி நேரத்திற்கு முன்பு நான் இங்கு கோடிங் செய்து கொண்டிருந்தேன். 

மீனாவிடமிருந்து அழைப்பு வந்தது. அதை தவிர்த்து வீட்டிற்கு சென்றேன்.

இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. மீனாவிடமிருந்து நான்கைந்து SMSகள் மற்றும் மிஸ்ஸிடு கால்கள். அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வேலையில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் எனக்கு வேலை போய் விட்டதை என்னால் ஜீரணிக்கவும் முடியவில்லை. அன்று வந்திருந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்து பார்வையை ஓட்டினேன்.

அங்கே கொட்டை எழுத்தில் இருந்தது என் கவனத்தை ஈர்த்தது. 

”****** நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பத்தாயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது” 

Sunday, March 08, 2009

கல்லூரிப் பயணம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடையும் பொழுது மணி சரியாக ஏழு ஆகியிருந்தது. இன்னும் கோவை மாநகரம் ஆறு வருடத்திற்கு முன் இருந்ததை போலவே மிதமான குளிரோடு இருந்தது. கோவையில் தங்கியவர்கள் வேறு எங்கும் போக முடியாததற்கு அங்கிருக்கும் பண்பான மக்கள், சிறுவாணி தண்ணிருக்கு அடுத்த காரணம் இந்த குளிர்ச்சி தான்.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. வெளியே தொங்கி கொண்டிருந்த அந்த பதின்ம வயது நடத்துனரிடம், துடியலூர் என்றேன்.

“ஏறிக்கோங்க”

ஏறி அமர்ந்தேன். சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. சாய்பாபா காலனியை கடந்து செல்லும் போழுது ”தாலு சே தாலு மிலா” என்று என்னை பார்த்து கொண்டே ஆடிய ஷாலினி ஒரு நிமிடம் மனதில் வந்து மறைந்தாள். எட்டு ஐந்து மணிக்கு துடியலூர் சென்றடைந்தேன். துடியலூர் சுத்தமாக மாறியிருந்தது. நிறைய பேக்கரிகள் அழகழகான சீரியல் லைட்டுடன் இருந்தன. ஆலமரத்தடியில் இருந்த பெஞ்ச் கடை இல்லை.

ஐந்து நிமிட நடையில் மினி பஸ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். நான் இரண்டாமாண்டு படிக்கும் போது தான் மினி பஸ் அறிமுகமாகியிருந்தது. அதற்கு முன் டவுன் பஸ் தான்.
அதுவும் காலேஜிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாலே வட்டமலைப்பாளையம் பிரிவில் இறக்கிவிடுவார்கள். முதல் வருடம் முழுவதும் அந்த டவுன் பஸ் தான். மினி பஸ்
வந்தபிறகு டவுன் பஸ்ஸை எல்லோரும் மறந்து போனோம்.

நான் வந்த இரண்டாவது நிமிடம் பஸ் வந்து சரியாக என் முன்னால் நின்றது. நான் எந்த தயக்கமும் இல்லாமல் ஏறி ஒரு ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ”ஏ அசைந்தாடும் காற்றுக்கும், அழகான பூவுக்கும் காதலா, காதலா” ஓடிக்கொண்டிருந்தது. இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மினி பஸ்களின் தேசிய கீதம் போல. அடுத்த முப்பது நொடிக்குள் பேருந்து நிரம்பியது. ஐந்தாவது நிமிடத்தில் பயணம் ஆரம்பித்தது. என்னை சுற்றிலும் கல்லூரி மாணவர்கள். என் ஜூனியர்ஸ். எந்த வித பதட்டமோ, வருத்தமோ இன்றி ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டிருந்தனர். இருக்கை கிடைத்த மாணவிகள் அவர்களது வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்.

அனைவரது முகமும் மலர்ச்சியாக இருந்தது. ஆறு வருடத்திற்கு முன்பு என் முகமும் இப்படி தான் இருந்தது. எந்த வித வருத்தமும் இல்லாமல் அடுத்த நாளை பற்றி கவலைப்படாமல்
மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என் நினைவுகள் பின்னோக்கி செல்வதை தவிர்க்க நான் முயலவில்லை.

ஆகஸ்ட் இருபத்தி மூன்று, தொன்னுற்றி ஒன்பதாம் ஆண்டு. இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் என் கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள். விடுதிக்கு ஒரு
நாள் முன்பே வந்துவிட்டதால் ஒரு சிலர் நண்பர்களாகி இருந்தார்கள். அவர்களுடன் முதல் நாள் வகுப்பிற்கு சென்று அமர்ந்தேன். அறுபது பேர் வகுப்பில் இருபது பெண்கள் இருந்தார்கள்.

எனக்கு ஒருத்தி மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தாள். அவள் பெயர் என்னவாக இருக்கும் என்று நானே யோசிக்க ஆரம்பித்தேன்.

முதல் வகுப்பு கெமிஸ்ட்ரி வகுப்பு. கம்ப்யூட்டர் சயின்ஸிற்கும் கெமிஸ்டிரிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இருந்தாலும் பனிரெண்டாவதில் படித்த பாடம் என்றதால் கொஞ்சம் மகிழ்ச்சி. ஒவ்வொருவராக பெயர்களை சொல்லி கொண்டு வந்தார்கள். அவள் எழுந்திரிக்கும் பொழுது அவளை விட எனக்கு பதட்டம் அதிகமா இருந்தது. அவள் ஷாலினி என்று சொல்லி முடித்ததும் ”என்னை தாலாட்ட வருவாளா” பாடல் மனதில் ஒலித்தது.

ஹாஸ்டலுக்கு சென்றவுடன் ரேகிங் தொடங்கியது. தமிழில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் திட்டப்பட்டு மிச்ச மீதி இருந்த சொரனையை இழந்தோம். சீனியரை முறைத்தவர்கள்

அதிகமாக ரேகிங் செய்யப்பட்டார்கள். எகத்தாளம் பேசியவர்கள் அடி வாங்கினார்கள். ஒரு முறை என் அருகிலிருப்பவனிடம் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி சொல்ல சொன்னார்கள்.
அவனோ ’புத்திசாலி’த்தனமாக “நான் நல்ல குடும்பத்துல இருந்து வந்தவன். நான் கெட்ட வார்த்தையெல்லாம் பேச மாட்டேன்”னு சொல்ல ”அப்ப நாங்க எல்லாம் என்ன @#$%&^ குடும்பத்துல இருந்து வந்தமா?” சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் ஒரு அரை கொடுத்தார். அவர் கையிலிருந்த சோறும் சாம்பாரும் அவன் கன்னத்தில் இருந்தது. கன்னத்தை தொடைக்காம சாப்பிட சொன்னார்கள். இந்த நல்ல குடும்பத்திலிருந்து வந்தவன் அந்த நான்கு ஆண்டுகளில் பேசாத “நல்ல” வார்த்தைகளே இல்லை என்று மாறி போனான்.

இந்த எல்லா கொடுமைகளிலும் எனக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் காலேஜ் லேப் தான். முதல் ஆண்டில் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், வொர்க் ஷாப். மொத்தம் நான்கு லேப். இதில் மகிழ என்ன இருக்கு என்று நீங்கள் யோசிக்கலாம். அட்டெண்டென்ஸில் செந்தில்லுக்கு அடுத்த பெயர் ஷாலினி.

இருவரும் பிசிக்ஸ் லேபில் ஒரே குரூப். மீதி லேப்களில் அருகருகே இருந்தோம். ஷாலினி சாய்பாபா காலனியிலிருந்து வந்து கொண்டிருந்தாள். அவள் பிறந்தது படித்தது எல்லாமே கோயமுத்தூர் தான். கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் பேச ஆரம்பித்தாள். பிசிக்ஸ் லேபிள் ஸ்பெக்ட்ரோமிட்டர் பிரசம் வைக்கும் போது அது முக்கோண வடிவத்திற்கு பதிலாக ஹார்டின் வடிவத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ரெசனன்ஸ் காலம் அப்பேரட்டஸ் செய்யும் போது கையில் வைத்திருக்கும் இரண்டு ஃபோர்க்கையும் அடித்து பக்கத்திலிருக்கும் மாணவர்கள் காதில் நான் வைக்க அவர்கள் அலறியதை பார்த்து சிரித்தாள். நான் மும்மரமாக ஏதோ செய்து கொண்டிருக்கும் போது என் காதுக்கருகில் அதை வைத்தாள். நான் அலறியதை பார்த்து பழிப்பு காட்டி சிரித்தாள். மத்தவங்களுக்கு இப்படி தானே இருக்கும் என்றாள். அவள் தான் அதை செய்கிறாள் என்று தெரிந்திருந்தால் அது இளையராஜா இசையை விட நன்றாக இருந்தது என்று தோன்றியிருக்கும்.

கெமிஸ்ட்ரி லேபில் அவளுக்கு பிப்பட்டை சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அவளுடைய பிப்பட்டை வாங்கி உதவ நான் முயலும் போது அவளுடைய துப்பட்டாவால் நன்றாக துடைத்து
கொடுத்தாள். ஒரு மாதிரி இருந்தது. பிப்பட் இனித்ததை போல் இருந்தது. இல்லை வேறு ஏதோ மோசமான சுவை. என்ன என்று நான் யோசிக்கும் முன் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். தவறுதலாக சோடியம் ஹைட்ராக்சைடை வேகமாக இழுத்துவிட்டேன். எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி பேசன, இப்படி ஆகிவிட்டதே என்று சொல்வதை போல் இருந்தது அவள் பார்வை. இருந்தாலும் அழகாக சிரித்து கொண்டிருந்தாள். இப்படி நாளொரு லேபும், பொழுதொரு தவறுமாக எங்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது.

முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தோம். பத்து நாட்கள் சென்ற நிலையில் லெட்ரல் எண்ட்ரி மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அன்று தான் கேசவனும் வந்தான். எங்கே அமர்வது என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது நான் நகர்ந்து இடம் விட்டேன். அவன் பார்வையில் ஒரு அலட்சியம் இருந்தது. இண்டர்வெலில் எங்கள் வகுப்பு மாணவர்களே லேட்டரல்களை ரேகிங் செய்ய ஆரம்பித்தார்கள். நாட்டு சரக்கடிப்பவனை ”எங்க இந்த பீர் அடிச்சிட்டு பேசு”னு சொல்வதை போல் இருந்திருக்கும் . கேசவனை கூப்பிட்டு பாட சொன்னார்கள். அரை நிமிடம் யோசித்தவன், ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” என்று கண்ணை மூடி பாட ஆரம்பித்ததும் அனைவரும் அமைதியானோம். நான்கு நிமிடத்தில் அவன் முடித்ததும் அனைவரும் கை தட்டினார்கள். எதையும் மதிக்காமல் வெளியே சென்றுவிட்டான். அடுத்த ரெண்டு வகுப்பிற்கு அவன் வரவில்லை.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பழக ஆரம்பித்தான். அவன் வீடு காலேஜிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் தான். அதனால் அடிக்கடி அல்லு போட்டு இடிகரைக்கு சாப்பிட போகும் போது அவன் வீட்டிற்கும் செல்வோம். சில சமயம் சனி, ஞாயிறன்று சிக்கன் சாப்பிட அவன் வீட்டிற்கு அழைக்கப்படுவோம். வெக்கம் மானமில்லாமல் அனைவரும் பேய் தீனி தின்று வருவோம். அது மட்டுமில்லாமல் இண்டர்வெலில் அவனுடைய டிபன் பாக்ஸை காலி செய்துவிடுவோம். ஹாஸ்டலில் காலையில் டிபன் சாப்பிடுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சில சமயம் அவனிடம் முதல் நாள் மெனு சொல்லிவிடுவோம். அதிகமாக சொல்லப்படுவது அரிசி, பருப்பு சாதமும் உருளைகிழங்கு வறுவலும் தான். அவனும் சரியாக கொண்டு வந்துவிடுவான்.

எங்களுள் ஒருவனாக அவன் சீக்கிரம் மாறி இருந்தான். ஆனால் பெண்களுடன் பேசுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அவன் முதல் நாள் பாடிய பாட்டிற்கு அவனுக்கு ஒரு வழக்கமான ஒரு லவ் ஃபெயிலியர் ஃப்ளாஷ் பேக் இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தேன். பின்பு ஒரு நாள் விசாரிக்கும் போது அப்படி எதுவும் இல்லையென்றும் ஏதோ அவனுக்கு பெண்களை பிடிப்பதில்லை என்றும் சொன்னான். அழக ரசிக்க கத்துக்கணும்னு நான் சொன்னவுடன், பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான். கண்டிப்பா ஆண் பன்னிகளுக்கு அழகாத்தான் தெரியும் என்று சொல்ல நினைத்து பேக் ஃபையர் ஆகிவிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.

இந்த நேரங்களில் ஷாலினியுடன் என் நட்பு லேப் தவிற பிற நேரங்களிலும் தொடர்ந்தது. கேசவன் இல்லாத நேரங்களில் அவளுடைய இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்து பேசி கொண்டிருந்தேன். அவளுடைய தம்பி முதல் நாள் அவளிடம் சண்டை போட்டதிலிருந்து கடைசியாக அவள் வாங்கிய புஜ்ஜி வரை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். புஜ்ஜி அவளுடைய பிங் நிற டெட்டி பொம்மை. பூனைக்கு தான் புஜ்ஜி என்று வைப்பார்கள் என்று நான் சொன்னதை அவள் ஏற்று கொள்ளவில்லை. கடைசியாக டெட்டியிடமிருந்து எனக்கு அந்த பெயர் வந்துவிட்டது. செந்தில் என்று அவள் கூப்பிடுவதை விட புஜ்ஜி என்று கூப்பிடுவது எனக்கு பிடித்திருந்தது. கேசவனுக்கு அந்த பெயர் தெரிந்ததும் என்னடா புஜ்ஜி, பஜ்ஜி என்று கிண்டல் செய்தான்.

மினி பஸ் காலேஜ் நிறுத்தத்தில் வந்து நின்றது. பஸ் முழுதும் காலியானது. இடிகரைக்கு செல்பவர்கள் இரண்டு மூன்று பேர் தான் இருந்தார்கள். காலேஜ் முழுதாக மாறியிருந்தது. தெரிந்த முகங்கள் ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தேன். வாட்ச்மேன் மாறியிருந்தார். வேறு யாரும் தெரியவில்லை. வண்டி புறப்பட்டது. காம்பவுண்ட் சுவரையும் மீறி பிரமாண்டமான ஆடிட்டோரியம் கண்ணில் பட்டது. அங்கே நடந்த முதல் நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.

அப்பொழுது நாங்கள் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தோம். கல்சுரல்ஸ் நிகழ்ச்சி. ”தில் யே பே செனு வே, ரஸ்தே பே நெயின் வே” ஷாலினி வட இந்திய ஆடையுடன் ஆடி கொண்டிருந்தாள். வேகமாக சென்று முதல் சீட்டிலிருந்த ஜீனியர் ஒருவனை எழுப்பிவிட்டு அமர்ந்தேன். ”தாலு சே தாலு மிலா” என்னை பார்த்து கொண்டே ஆடி கொண்டிருந்தாள். அட்டகாசமான நடனம். அவள் நடனம் முடிந்ததும் மேடைக்கு பின்னால் சென்று அவளை வாழ்த்தலாம் என்று புறப்பட்டேன். சரியாக அந்த நேரம் பார்த்து கதவருகே கேசவன் நின்றிருந்தான். இறுதியாக நடக்கும் பாட்டு போட்டியில் அவனை கலந்து கொள்ள சொல்லி அனைவரும் வற்புறுத்தி கொண்டிருந்தனர். அவனை கேட்காமலே அவன் பெயரை நான் கொடுத்திருந்தேன். என்னை பார்த்ததும் பிடித்து கொண்டார்கள்.

எப்படியும் ஷாலினி ஒரு ப்ரைஸ் வாங்கிடுவா. பசங்க சைட்ல இருந்து ஒருத்தவங்க கலந்துக்க வேண்டாமா? சும்மா பாடுடா, நிச்சயம் ப்ரைஸ் நமக்கு தான். எவ்வளவோ ஏத்திவிட்டு அவனை ஒத்துக்கொள்ள வைத்தோம். பிறகு அந்த இடத்தை விட்டு நழுவி ஷாலினியை தேடி சென்றேன். அங்கே ஷாலினி குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். நான் அவளை கூப்பிட்டேன். திரும்பவில்லை. விசும்பல் சத்தம் கேட்டது. ஷாலினி அழுது கொண்டுருந்தாள்.

என்ன நடந்தது என்று கேட்டதற்கு எதுவும் சொல்லவில்லை. விசும்பல் மட்டும் வந்து கொண்டிருந்தது. ”என்னடா ஆச்சு. சொல்லுடா” என்று நான் சொன்னதும் என்னையே ஒரு நிமிடம் பார்த்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள். அவள் ஆடி முடித்து வந்ததும் அவள் மேல் யாரோ மோதிவிட்டானாம். அவள் திரும்பி முறைத்ததற்கு, ”என்னடி பெரிய பத்தினியாட்டம் முறைக்கற. எப்ப பார்த்தாலும் அந்த செந்திலோட உரசிக்கிட்டே தானே சுத்துவ. நான் உரசுனா என்ன வந்துச்சாம்” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவன் டிப்பார்ட்மெண்ட் பசங்கள் அவனை இழுத்து கொண்டு சென்றுவிட்டார்களாம். அவன் MSc சாப்ட்வேர் நான்காம் ஆண்டு மாணவன் என்றும், பெயர் தெரியவில்லை என்றும், தண்ணி அடித்திருந்தான் என்றும் சொன்னாள்.

ஷாலினியுடன் ஆடிய MSc மூன்றாம் ஆண்டு மாணவியின் துணை கொண்டு அவன் யாரென்று கண்டுபிடித்தேன். அவனை தேட ஆரம்பித்தேன். அவன் ஆடிட்டோரியத்திற்கு பின்னால் நின்று
யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டு தம் அடித்து கொண்டிருந்தான். அவனுடன் நான்கைந்து பேர் இருந்தார்கள். என்னை பார்த்ததும் ஒரு நிமிடம் குழம்பி பிறகு நான் யார் என்பதை புரிந்து கொண்டான். ”சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாலே” கேட்டு கொண்டிருந்தது. ”வந்துட்டாருடா ரோமியோ” என்று நக்கலாக சொல்லி சிரித்தான். ஒரு நிமிடத்தில் அவன் கண்ணாடி உடைந்திருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. என் இடது கண்ணத்தில் லேசாக ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவன்
நெற்றியில் லேசாக ரத்தம். அவனுடன் இருந்த ஒருவனுடைய சட்டை கை மட்டும் கிழிந்திருந்தது. அங்கே கேட்ட சத்தத்தில் EEE HOD அந்த பக்கம் வந்துவிட்டார். அனைவரும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விட்டோம்.

நான் ஹாஸ்டலில் என் அறையில் இருந்தேன். இருபது நிமிடத்தில் கேசவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுக்கு என்னை அடித்துவிட்டார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தது. காரணம் தெரியவில்லை. பயங்கர கோபமாக வந்தான். எவன்னு சொல்லுடா, நாளைக்கு ஒருத்தவனும் NGGO காலனியை தாண்ட மாட்டானுங்க. துடியலூர்ல இருந்து பசங்கள வர சொல்லிடறேன். அவனுங்களுக்கு எல்லாம் சூ#$ கொழுப்பெடுத்து ஆடுது போல. நாளைக்கு வாங்கினா தான் தெரியும். சரி, இப்ப நீ என் கூட வா. இன்னைக்கு ராத்திரி எங்க வீட்ல தங்கிக்கோ. நாளைக்கு பார்த்துக்கலாம் என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுக்கு காரணம் சொல்லவும் விருப்பமில்லை. வேறு சட்டை எடுத்து போட்டு கொண்டு கிளம்ப சொன்னான். தயங்கி கொண்டே கிளம்பினேன்.

ஆடிட்டோரியத்திற்கு முன்னால் நின்ற கேசவனுடைய சாமுராயை எடுத்து கொண்டு கிளம்பினோம். யாரோ, ”கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” பாடி கொண்டிருந்தார்கள். முடிந்தவுடன் யாருக்கு பரிசு என்பதை கேட்டுவிட்டு செல்லலாம் என சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அங்கிருந்து கிளம்பி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டது. MSc நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் ஒரு பத்து பேர் இருந்தார்கள். அங்கே இருந்த NGGO காலனியை சேர்ந்தவனிடம் கேசவன் சமாதானம் பேச முயற்சி செய்தான். ஏன்டா நாளைக்கு ஒருத்தன் கூட காலனியை தாண்ட முடியாதுனு சொன்னியாம். விடுதியில் அவன் என்னிடம் பேசியது அதற்குள் அவர்களுக்கு வந்து சேர்ந்திருந்தது. அதில் ஒருத்தனிடம் செல் ஃபோன் இருந்தது.

அந்த இடத்தை சரியாக மினி பஸ் கடந்து கொண்டிருந்தது. இப்பொழுது முன்பு போல அங்கே முள் செடிகள் இல்லை. ரியல் எஸ்டேட் காரர்கள் அங்கே ஒரு குச்சியில் போர்ட் மாட்டியிருந்தார்கள். தார் ரோட் இருந்தது.

நீ என்ன பெரிய கூ*யாடா? துடியலூர்ல இருந்து பசங்களை வர வெச்சா நாங்க பயந்துடுவோமா? அப்படி அவனுங்க வந்தா மட்டும் எங்களை என்னடா பண்ணுவான். பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் மாட்டியிருந்த காப்பு வெளியே வந்து அவன் கைப்பிடிக்குள் வந்தது. ஏதோ தப்பு நடக்க போகிறது என்று எனக்கு தொன்றியது. அந்த நிலவொளியில் அங்கே நடக்கவிருந்த பயங்கரம் எனக்கு புரிய ஆரம்பித்தது. கேசவனும் அதை புரிந்து கொண்டான். ஆனால் அவன் செயல் பட ஆரம்பிப்பதற்குள் அந்த காப்பு கேசவனின் வலது பக்க நெற்றியை பதம் பார்த்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த நான், அங்கே அருகே ரோடு போட கொட்டி வைத்திருந்த ஒரு கல்லை எடுத்து அவன் பின் தலையில் அடித்தேன். இருவருடைய கெட்ட நேரமும் வேலை செய்தது. கல்லை எடுக்கும் போதோ அவனை அடிக்கும் போதே என் கையிலிருந்து நீண்டிருந்த அதன் ஆறு இஞ்ச் கூர்மையான பகுதியை நான் கவனிக்கவில்லை. அந்த கல் அவன் தலையில் அப்படியே சொறுகி கொண்டது. ஒரு பக்கம் கேசவன் நெற்றியிலிருந்து ரத்தம் ஒழுக, மறு பக்கம் பின் மண்டையில் கல் பாய்ந்த அந்த மாணவன். அவன் தலையிலிருந்து கல்லை என்னால் எடுக்க முடியவில்லை. அங்கே இருந்த அனைவரும் ஓடிவிட்டார்கள்.

நான் அப்படியே அந்த கொட்டி வைத்திருந்த ஜல்லியின் மேல் அமர்ந்து விட்டேன். என்ன நடந்தது, என்ன செய்வது என்றே புரியவில்லை. ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தில் ஆயிரம் பேர் இருந்தார்கள். ஆம்புலன்ஸ், போலிஸ் ஜீப் இரண்டும் வந்தது. போலிஸ் ஜீப்பில் நானும், ஆம்புலன்சில் கேசவனும், தலையில் கல் சொருகியிருந்தவனும் ஏற்றப்பட்டோம். அன்று அடிப்பட்டவுடன் ஓடியவர்கள் தவறாமல் வந்து சாட்சி சொன்னார்கள். நன்னடத்தையால் ஆறு ஆண்டுகள் முடித்து வெளியே விட்டார்கள். நேராக கேசவனை பார்க்க வந்துவிட்டேன். இதோ
இடிகரை வந்துவிட்டது.

இடிகரையில் இந்த ஆறு ஆண்டுகளில் எந்த மாற்றமும் பெரிதாக காணப்படவில்லை. நேராக என் கால்கள் கேசவன் வீட்டிற்கு அழைத்து சென்றது. கதவு திறந்திருந்தது. நண்பர்கள் புடை சூழ வந்து கேசவனையும், அப்பாவையும் கிண்டல் செய்து கொண்டே சாப்பிட்ட அந்த முன் அறை விரிச்சோடி இருந்தது. அந்த குரல்கள் இன்னும் அந்த சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உள்ளே சென்றேன். சிமெண்ட் தரையில் இன்னும் குளிர் இருந்தது. இடது பக்கம் இருந்த அறை இருட்டாக இருந்தது. கேசவன் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். பல நாள் வழிக்கப்படாத தாடி, காலில் விலங்குடன் இருந்தான். அவன் அருகே சென்று அமர்ந்தேன். அவன் கண்களை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவன் கால்களில் நிறைய தழும்புகள். நெற்றியில் வலது பக்கம் இன்னும் அந்த தழும்பு தெரிந்தது. அவனுக்கு நான் யார் என்று தெரியவில்லை. அம்மா சமையலறையில் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்து மினி பஸ்ஸில் சென்று அமர்ந்தேன். பத்து நிமிடம் கழித்து புறப்பட்டது. பஸ்ஸில் நான்கைந்து பேர் மட்டும் இருந்தார்கள். ஆடிட்டோரியத்தை கடந்து செல்லும் பொழுது உள்ளே இருந்து ”தாலு சே தாலு மிலா” கேட்டு கொண்டிருந்தது. ஷாலினி என்னை பார்த்து சிரித்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.

நான் சத்தம் போட்டு அழுவதை அந்த எட்டு கண்களும் கவனித்து கொண்டிருந்ததை பற்றி நான் வருத்தப்படவில்லை.

Friday, February 27, 2009

செல்வி!

ரொம்ப நாளாக அரசல் புரசலாக கேள்வி பட்ட விஷயம் தான். எந்த அளவிற்கு உண்மை என தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக ஏற்பட்ட அந்த எண்ணம் இன்று உச்சத்திற்கு சென்றதால் அதைப் பற்றி விசாரிக்கலாம் என முடிவு செய்து கிளம்பிவிட்டேன். மதன் தான் இதற்கெல்லாம் சரியான ஆள். அரசாங்க உத்தியோகத்தில், உயர்ந்த பணியில் இருக்கும் என் ஒரே நண்பன்.



சரியாக பதினெட்டு மணிக்கு அவன் அலுவலக கட்டிடத்திற்கு வந்துவிட்டேன். சோதனை செய்யும் ஸ்கானர் அருகே கண்ணை பொருத்திய இரண்டு நொடிகளுக்குள் அருகிலிருக்கும் லிப்ட் தானாக திறந்தது. உள்ளே நுழைந்தவுடன் கதவு மூடி சரியாக அவன் அறைக்கு முன் கதவு திறந்தது. நான் வெளியே வந்ததும் கதவு மூடி அந்த இடத்தில் ஒரு லிஃப்ட் வந்தததற்கோ கதவு திறந்ததற்கோ அறிகுறி இல்லாமல் மறைந்தது.



"டேய் ரகு. வாடா. உனக்காக தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" மேசை மீது இரண்டு பாட்டில் விஸ் இருந்தன.



"எப்படிடா இருக்க?"



"பார்த்தா எப்படி தெரியுது?"



"பாட்டில் எல்லாம் பார்த்தா அப்படியே தான் இருக்கற மாதிரி தெரியுது. ஆனா தொப்பை மட்டும் தான் கொஞ்சம் பெருசா இருக்கு"



என் பேச்சைக் கேட்டு சத்தமாக சிரித்தான். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியிலிருப்பவர்களுக்கு மட்டும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது என கேள்விப்பட்டது அவனைப் பார்த்ததும் உறுதியாகிவிட்டது.



"நீ இன்னும் அப்படியே இருக்க"



எனக்கு ஒரு கிளாஸ் கொடுத்துவிட்டு அவனும் ஆரம்பித்தான். மூன்று ரவுண்ட் முடியும் வரை பழைய கதைகளைப் பேசி கொண்டிருந்தோம். ஒரு வழியாக நான் வந்த விஷயத்தை பற்றி கேட்டான்.



"சொல்லுடா ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்ன?"



"பிராஜக்ட் EQH உண்மையாவே இருக்கா?"



"இருக்கு" அவன் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது.



"வெளில மக்கள் பேசிக்கிற அளவுக்கு இருக்கா?"



"வெளில மக்கள் என்ன பேசிக்கறாங்க?"



"நமக்கு யார் மேலயாவது கோபமோ, வெறுப்போ இருந்தா அதை இந்த ஹியுமனாய்ட்ஸ் மூலமா தீர்த்துக்கலாம்னு"



"இதெல்லாம் பழைய கதை. இப்ப எங்கயோ போயாச்சு"



"அதுல எதுவும் பிரச்சனையில்லைனா எனக்கு அதை பத்தி முழுசா சொல்லேன்"



"EQH இந்த நூற்றாண்டின் அற்புதமான கண்டுபிடிப்புனு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எந்த அளவுக்கு உண்மைனு தெரியல. இருந்தாலும் சொல்றேன் கேளு"



"ம்ம்"



"பெரும்பாலும் கொலைகள் கோபத்தாலும், வெறுப்பினாலும் தான் நடக்குது. அந்த மாதிரி இறந்தவங்களோட பிணத்தை பார்த்ததும், அவுங்களை கொல்லனும்னு நினைச்சவங்களுக்கு இறந்தவங்க மேல இருக்குற கோபம் மறைஞ்சி அனுதாபம் ஏற்படுது. ஆனா அதுக்கப்பறம் இறந்தவன் உயிரோட வர முடியுமா? "



"முடியாது"

"கரெக்ட். அதுக்கு கண்டுபிடிச்சது தான் இந்த பிராஜக்ட். Emotion Quenching Humanoids. இப்ப ஒரு காலேஜ் பொண்ணுக்கு அவ பாய் ஃபிரெண்டு மேல கோபம்னு வை. அந்த பையனை மாதிரியே அச்சு அசலா ஹியுமனாய்ட்ஸ் செஞ்சி அந்த பொண்ணுக்கு கொடுத்துடுவோம். அதை அவள் கோபம் தீர வரைக்கும் அடிச்சி உதைச்சி கொலையே செஞ்சி போடலாம். அப்படி அவன் செத்ததை பார்த்ததுக்கப்பறம் அவளுக்கு அவன் மேல இரக்கம் வந்துடுது. மறுபடியும் பழைய காதல். அவ்வளவு தான். ஒரு உயிரையும், காதலையும் காப்பாத்தியாச்சு"



"ஹியுமனாய்டை அடிக்கறதுக்கு அந்த பையனை நிஜமாலுமே அடிக்கறதுக்கும் வித்தியாசமிருக்குமில்லையா? அப்பறம் எப்படி அந்த பொண்ணுக்கு திருப்தி ஏற்படும்"



"எல்லாம் சைன்ஸ் நண்பா. ஹியுமனாய்ட், அச்சு அசலா அவ பாய் ஃபிரண்ட் மாதிரியே இருக்கும். சிலிக்கான் தோல். அடிச்சா வர ரத்தம் கூட நிஜ ரத்தம் மாதிரியே இருக்கும். டெஸ்ட் பண்ணா தான் கண்டுபிடிக்க முடியும். குரல் கூட அவன் குரலே தான். எல்லாருடைய தகவலும் அரசாங்கத்துக்கிட்ட இருக்கும் போது இதெல்லாம் சாதாரணம்."



"ம்ம்"



"இப்ப இதையெல்லாம் தாண்டி எங்கயோ போயாச்சு. பிடிச்ச பொண்ணு சொன்னா கூட செய்து கொடுப்பாங்க. எல்லாம் துட்டு தான். ஆனா இந்த மாதிரி வாங்கறவங்களை எல்லாம் அரசாங்கம் தீவிரமா கண்காணிப்பாங்க. எங்கே நிஜத்திலயும் செஞ்சிடுவாங்களோனு"



"அப்பறம் எதுக்கு செய்து கொடுக்கனும்"



"மக்களை திருப்திப்படுத்தனும்னு தான். அதுவும் நம்ம கேக்கற மாதிரி ப்ரோக்ராம் பண்ணி கொடுப்பாங்க. செக்ஸ்காக தயாரிச்சி கொடுக்கறதுல தான் வெரைட்டி ரொம்ப அதிகம். உன்னை விரும்பி வந்து உன் கூட படுக்கற மாதிரியும் பண்ணலாம், உன்னை பிடிக்காம லேசா திமிர மாதிரியும் நீ வலுக்கட்டாயமா மடக்கி சம்மதிக்க வைக்கற மாதிரியும் பண்ணலாம். போன வாரம் என் கீழ வேலை செய்யற ஒருத்தன் ஒரு பொண்ணை சொல்லி நான் அவளை ரேப் பண்ணனும். அதுக்கு ஏத்த மாதிரி ப்ரோக்ராம் பண்ணி கொடுனு சொல்லிருக்கான்"



"அப்பறம்"



"அது லேசா திமிரும்னு நினைச்சிருக்கான். கொஞ்சம் எடக்கு முடக்கானதுல அவனோட முன் பல்லு ஒண்ணு காலி"



"இவ்வளவு கஸ்டமைஸ்டா பண்ணி தருவாங்களா?"



"தருவாங்க. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி செலவாகும். அடுத்து அதுக்கு ஏத்த மாதிரி அரசாங்கம் உனக்கு தெரியாம உன்னை தீவிரமா கண்காணிக்கும்"



"வேற ஏதாவது பிரச்சனை?"



"வேற எதுவுமில்லை. ஏன் இவ்வளவு தீவிரமா விசாரிக்கற?"



சொல்லலாமா?



"ஒண்ணுமில்லை. என் கூட வேலை செய்யறவன் ஒருத்தன் சொன்னான், எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கையில்லைனு சொல்லிட்டேன்"



"இது ஓரளவுக்கு பிரச்சனையில்லாதது தான். கவர்மெண்ட் சைட்லயே போட்டிருக்கான் இல்ல. ஆனா விலை அதிகம். இந்த மாதிரி கண்காணிப்பாங்கனு வெளிய தெரியாது. அவ்வளவு தான்"



"ஹிம்ம்ம்ம்"



வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அதே சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருந்தது. செல்வி மேல் இவ்வளவு கோபம் வருமென்று கனவிலும் நினைத்து பார்த்ததில்லை. அவள் எனக்கு ஏதோ ஒரு வகையில் துரோகம் செய்கிறாள் என்று மனதில் பதிந்து விட்டது. அதற்கு காரணம் அவள் சென்ற வாரம் இரண்டு நாள் அலுவலகத்திற்கு செல்லாமல், சென்றேன் என்று பொய் சொன்னது தான் காரணமா இல்லை எனக்கு தெரியாது என்று நினைத்து கொண்டு அவள் இரவு நேரங்களில் பக்கத்து அறையில் செய்யும் அரட்டை தான் காரணமா என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம். ஆனால் அவள் எனக்கு துரோகம் செய்வதாக என் மனதில் பதிந்து விட்டது. அதை நீக்க வேண்டும். அதுவும் நான் கொடுக்கும் தண்டனையை அவள் ஏற்ற பிறகு. என் காலில் விழுந்து கேட்கும் மன்னிப்பிற்கு பிறகு.



இதை என் செல்வி நிச்சயம் செய்ய மாட்டாள். நான் கொடுக்கும் தண்டனைக்கு பிறகு செல்வி என்ன, எந்த மனிதனாலும் மன்னிப்பு கேட்க முடியாது. அதனால் தான் ஹியுமனாய்டை தேர்வு செய்தேன்.



ஒரு வழியாக அரசாங்கத்திற்கு மனு போட்டு அதை அரசாங்கம் ஏற்று கொண்டுவிட்டது. மகிழ்ச்சி. இவ்வளவு தெளிவாக கேட்பார்கள் என்று நினைக்கவில்லை. சரியாக பதினைந்து மணிக்கு வீட்டிற்குள் வர வேண்டும். பயத்துடன் என் அருகில் வந்து, நின்று என் தலையை கோத வேண்டும். பிறகு நான் எனக்கு இப்படி துரோகம் செஞ்சிட்டியேனு அவளை மூன்று முறை கத்தியால் குத்துவேன். பிறகு என் காலில் விழுந்து, "நான் எந்த தப்பும் செய்யல, என்னை மன்னிச்சிடுங்க"னு சொல்லி சாக வேண்டும். அவ்வளவு தான். எவ்வளவு சுலபமான விஷயம் இல்லையா?



என்னை மாதிரி இவ்வளவு சுலபமான ப்ரோக்ராமிங் வேலை கொடுத்தவன் இந்த நூற்றாண்டில் எவனும் இருக்க மாட்டான். ஆனால் விலை தான் என் மூன்று மாத சேமிப்பை விழுங்கிவிட்டது. பரவாயில்லை.



இன்று அலுவலகத்தில் சொல்லி பதினான்கு மணிக்கே கிளம்பிவிட்டேன். நிஜ செல்வி எப்படியும் இருபத்தியொரு மணிக்கு குறைவாக வர மாட்டாள். அதற்குள் நான் ஒப்பாரியையே முடித்துவிடலாம். சரியாக பதினான்கு நாற்பத்தி ஐந்திற்கு டைனிங் டேபிள் அருகே கையில் கத்தியுடன் அமர்ந்துவிட்டேன்.



உள்ளே ஒரு பயம் தொற்றி கொண்டுவிட்டது. அரசாங்க அனுமதியுடன் கொல்வாதாக இருந்தாலும் எனக்கு முதல் கொலையல்லவா? அதுவும் செல்வியை போலவே இருக்கும் ஹியுமனாய்டு. அவர்கள் கொடுத்த எண்ணை அழைத்து வேண்டாம் என்று சொல்லிவிடலாமா? இல்லை. இதை செய்தாக வேண்டும். என் செல்விக்காகவாவது செய்தாக வேண்டும். அப்பொழுது தான் நான் அவளுடன் கவலையின்றி குடும்பம் நடத்த முடியும்.


சரியாக பதினைந்து மணி. கதவு திறந்தது. செல்வி பயம் நிறைந்த கண்களோடு என் அருகில் வந்தாள். அறைக்குள்ளிருக்கும் அத்தனை ஆக்சிஜனையும் என் நுறையிரலுக்குள் பாய்ச்சினேன்.


"எனக்கு துரோகம் பண்ணிட்டியே செல்வி" அவள் மேல் பாய்ந்து என் கையிலிருக்கும் கத்தியால் அவளை கோபம் தீரும் வரையில் குத்தினேன். என் கை முழுக்க சிவப்பு நிறமாயிருந்தது.


ரத்தம் வெளியேற வெளியேற சோகை படர கீழே விழுந்தாள் செல்வி. "என்னை மன்னிச்சுடுங்க.. என்னை விட்டுடுங்க". தத்ரூபமான நிரல்.. அருமை.


அழைப்பு மணி அடித்தது