ஒரு வழியா வந்த வேலைகள் எல்லாம் முடிச்சாச்சு. நாளைக்கு காலைல சென்னை போனவுடனே கடைசியா ஒரு தடவை ஷாப்பிங் போயிட்டு பேக்கப் பண்ணா சரியா இருக்கும். இந்த பஸ் இவ்வளவு நேரம் ஏன் எடுக்காம இருக்காங்கனு புரியல. இருக்குற நாலஞ்சு சீட்டும் இங்கயே ஃபில் ஆனாத்தான் எடுப்பனு வெயிட் பண்ணிட்டு இருக்கறது, ஓபாமா வந்தா உலகமே மாறிடும்னு நினைக்கிற மாதிரி முட்டாள் தனமா தான் தெரியுது. போற வழியில யாரும் ஏறாமலா போயிடுவாங்க. இதுவே வீக் எண்டா இருந்தா ரஜினி படத்துக்கு தியேட்டர் நிரம்பற மாதிரி இந்நேரம் பஸ்ல நின்னுட்டு வர அளவுக்கு கூட்டம் இருந்திருக்கும்.
பரவாயில்லை, திருமங்கலத்துல கடைசி நேரத்துல ஓட்டு பதிவான மாதிரி மக்களும் கடைசி நேரத்துல ஏறி கண்டக்டர் வயித்துல பாலை வாத்துட்டாங்க. வெளியில சென்னை, சென்னைனு சத்தம் போட்டு சாமார்த்தியமா ஏத்தின பையன் பேரு ஒருவேளை ”அ”ல ஆரம்பிக்குமோ? சரி நமக்கு எதுக்கு இந்திய அரசியல்?
என் சீட்டுக்கு பக்கத்துல வந்து நின்ற அந்த பெரியவருக்கு எப்படியும் அறுவதில் இருந்து அறுவத்தைந்து வயதிற்குள் இருக்க வேண்டும். கைல வெச்சிருந்த சூட்கேஸை மேல வைக்க திணறி கொண்டிருந்தார். சரினு நானும் எழுந்து அதை வைக்க அவருக்கு உதவினேன். சூட்கேஸ் கொஞ்சம் கனம் அதிகம் தான். அவர் அதை கீழையே வைத்திருக்கலாம். அப்படி வெச்சா கால் வைக்க கொஞ்சம் சிரமமாத்தான் இருந்திருக்கும்.
இந்தியால இப்பவெல்லாம் பொண்ணுங்க பசங்க பக்கத்துல தயங்காம உக்கார்ந்து வராங்கனு டீம்ல எல்லாரும் சொன்னாங்க. சில கதைகள்ல கூட படிச்சேன். ஆனா இந்த முறை நாலஞ்சு முறை பஸ் பயணம் செய்தும் என் பக்கத்துல எந்த பொண்ணும் உக்காரல. முப்பத்தி மூணு வயசு, அஞ்சு வயசு குழந்தைக்கு அப்பனா இருந்துட்டு இப்படியெல்லாம் யோசிக்கலாமானு நீங்க கேட்கலாம். நான் எதுவும் தப்பான எண்ணத்துல அப்படி யோசிக்கல. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரிஞ்சிக்கிற எண்ணம். அவ்வளவு தான்.
”பஸ் ஏறிட்டேன். மாப்பிளை தான் வந்து ஏத்திவிட்டு போனாரு. காலைல வந்துடுவேன்” பேசி முடித்துவிட்டு அலைப்பேசியை அணைத்தார் அந்த பெரியவர். போன முறை சென்னைல இருந்து வரும் போது ஒரு பையன் என் பக்கத்துல உட்கார்ந்திருந்தான். இப்ப இவர் பேசின இதே விஷயத்தை சொல்ல அவனுக்கு ஒரு மணி நேரமானது. எதிர்முனைல இருக்கறவங்க நிச்சயம் பையனா இருக்க முடியாது. இதுக்கு பேரு தான் ஜெனரேஷன் கேப்.
“ரொம்ப தேங்க்ஸ் தம்பி” பேச ஆரம்பித்தார் பெரியவர். எனக்கு ஆச்சரியம். இதுவரை பயணம் செய்யும் போது யாருமே என்னிடம் பேசவில்லை. எல்லாரும் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஏதோ ஒரு MP3 பிளேயரில் பாட்டு கேட்டு கொண்டிருந்தனர். சில சமயம் விஜய் தோளை குலுக்கி குலுக்கி பேசிக்கொண்டிருந்த காமெடிக்கு சிரித்து கொண்டிருந்தனர்.
“Thats fine. இதுல என்ன இருக்கு?”
“பெட்டி கொஞ்சம் கனம். அதான் தூக்க முடியல. கீழ வெச்சா கால் இடிச்சிட்டே இருக்கும். எப்படியும் வெச்சிடலாம்னு தைரியத்துல தூக்கிட்டேன்”
“ஆமாங்க. கொஞ்சம் கனம் தான். இனிமே இவ்வளவு கணமான பெட்டியையெல்லாம் தூக்காதீங்க. மூச்சு பிடிச்சிக்கும்”
“ம்ம்ம். தம்பி, மெட்ராஸா?”
“இல்லைங்க. நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாம் கடலூர்ல. மாமியார் ஊரு சென்னை. இப்ப ஒரு பத்து வருஷமா யூ. எஸ்ல இருக்கேன்”
“ஓ பத்து வருஷமா? அப்ப நிச்சயம் இங்க வந்து செட்டிலாகமாட்டீங்க?”
“இப்பொழுதைக்கு வர ஐடியா இல்லை. மொத்தமா ரிட்டையர் ஆகிட்டு கட்டின சொஷியல் செக்கியூரிட்டி டேக்ஸ் எல்லாம் மாச மாசம் நமக்கு வர மாதிரி இருக்கும் போது வந்திடலாம்னு ஒரு எண்ணம். பார்க்கலாம்”
“இப்படி போன என்னுடைய நண்பர்களோட பசங்க யாருமே வரல” சொல்லிவிட்டு மெலிதாக சிரித்தார். அவரை பத்தி நாம விசாரிக்கலாமா இல்லை உரையாடலை முடிச்சிடலாமா? சரி நாமலும் நாலு கேள்வி கேட்டுட்டு தூங்க போகலாம். இல்லைனா நல்லா இருக்காது.
“நீங்க சென்னையா?”
“நான் இப்ப எந்த ஊருனு எனக்கே தெரியலைப்பா”
“புரியலைங்களே”
“என் சொந்த ஊரு கும்பகோணம் பக்கத்துல திருவிடைமருதூர். நான் ரெவண்யூ டிப்பார்ட்மெண்ட்ல வேலை பார்த்தேன். 2003ல ரிட்டயர்மெண்ட். 2005 வரைக்கும் நானும் என் மனைவியும் திருவிடைமருதூர்லயே இருந்தோம். 2005ல அவ என்னை விட்டுட்டு போயிட்டா. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் என் மகன் வீட்ல இருந்தேன். இப்ப கடைசியா ஒரு மூணு மாசம் என் பொண்ணுவீட்ல இருந்தேன். இப்ப மறுபடியும் என் மகன் வீடு. நாடோடி மாதிரி ஆகிட்டனோனு தோணுது” அவர் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. இதுக்கு மேல என்ன கேக்கறதுனே தெரியல. இதுக்கு மேல ஏதாவது கேட்டு அவர் அழுதார்னா என்ன பண்றது? மறுபடியும் அவரே தொடங்கினார்.
“நான் ஒரு சுகர் பேஷண்ட். எனக்கு காலைல எட்டு மணிக்கெல்லாம் பசி எடுக்க ஆரம்பிச்சிடுது. ஒரு ரெண்டு இட்லி செஞ்சு கொடும்மானு கேட்கறது தப்பாப்பா? ஹோட்டல் இட்லிக்கு சட்னி, சாம்பார் எல்லாம் தொட்டு சாப்பிட முடியல. எல்லாம் காரம் அதிகமா இருக்கு. பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு கிளம்பறாங்கனு எனக்கு புரியாம இல்ல. என்ன பண்றது, எனக்கு தாங்க முடியலையே. ஒன்பதரை மணிக்கு அஞ்சு இட்லி கொண்டு வந்து கொடுத்தா சரியா போயிடுமா? நான் சாப்பாட்டுக்கு எல்லாம் அலையலப்பா. பாழாப்போன வியாதி. வேளா வேலைக்கு சோறு கேட்குது. ” மீண்டும் ஒரு நிமிடம் மௌனம்.
“உங்க அப்பாவால கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா? பசங்க கொஞ்சம் லேட்டானாலும் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவாங்க. நான் அவுங்களை ரெடி பண்ணுவனா இல்லை இவருக்கு சமைச்சிட்டு இருப்பனா? நான் என்ன மத்த மருகளுங்க மாதிரி சாப்பாடு போடாமலா கொடுமைப்படுத்தறேன். இதைப் போய் உங்க அப்பா பெருசா சலிச்சிக்கிறாரு” இப்படினு என் காது படவே பேசறா. மொத ஒரு ஆறு மாசத்துக்கு பயம் இருந்துச்சு. இப்ப பயம், பாசம், மரியாதை எதுவுமே இருக்கற மாதிரி தெரியல. அதான் என் பையன், பேசாம கொஞ்ச நாள் நீங்க தங்கச்சி வீட்ல போய் தங்கிட்டு வாங்கப்பா. உங்களுக்கும் வேற இடம் இருக்குனு அவளுக்கு தெரியனும். ஊர்ல இருக்கற இடமெல்லாம் நீங்க அந்த பேர பசங்களுக்கு எழுதி வெச்சிடுவீங்களோனு ஒரு பயம் வந்தா தானா சரியாகிடும்னு அனுப்பிவெச்சான்.
இங்க வந்து மூணு மாசமாகுது. சரி மாப்பிள்ளைக்கிட்ட மரியாதை குறையறதுக்கு முன்னாடி கிளம்பிடலாம்னு கிளம்பிட்டேன். அடுத்த முறை பையனும் வேணாம், பொண்ணும் வேணாம்னு திருவிடைமருதூர்க்கே கிளம்பிடலாமானு யோசிச்சிட்டு இருக்கேன். எங்க காலத்துல நாங்க பெத்தவங்களுக்கு சோறு போட்டோம், காசு மட்டும் கேட்காதனு சொல்லுவோம். இப்ப காசு கொடுக்கறோம், சோறு மட்டும் கேட்காதனு சொல்றாங்க. இதான் கால மாற்றம் போலிருக்கு”
“கவலைப்படாதீங்க. எல்லாம் இனிமே சரியாயிடும்” எதோ சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக சொல்லிவைத்தேன்.
“உங்கக்கிட்ட சொன்னதும் ஏதோ பாரமெல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்குது. சரி. நான் தூங்கறன்பா” சொல்லிவிட்டு இருக்கையை முடிந்த வரை பின் தள்ளி கண்ணை மூடினார்.
நானும் கண்ணை மூடினேன். ஏனோ தூக்கம் வரவில்லை. என் அப்பா இப்படி யாரிடமெல்லாம் புலம்பினாரோ. தெரியவில்லை. அவர் நண்பர்கள் யாரும் அவர் புலம்பியதாக சொல்லவில்லை.
அப்படி அவர் புலம்பியிருந்தால் அவர்கள் என்னை வெறுத்திருப்பார்கள் தானே. அவர்கள் என்னை வெறுக்கவில்லை. அதனால் அவர் புலம்பியிருக்க வாய்ப்பில்லை. அவருக்கு என் மேல் வருத்தமா என்று கூட எனக்கு தெரியவில்லை. இவர் சொல்லியதை போல் என் அப்பாவிற்கு சர்க்கரை நோய் இல்லை. அப்படியிருந்தாலும் அவருக்கு வேளா வெலைக்கு சரியான நேரத்திற்கு உணவு இருந்தது. அவர் சாப்பாட்டை பத்தி என்னிடம் ஏதாவது முறையிட்டாரா? ஆம். ஒரு முறை ஏதோ சொல்லவந்தார்.
“வினோத்”
“சொல்லுங்கப்பா”
“காலைல இந்த கார்ன் ஃபிலேக்ஸ், பிரெட் எல்லாம் சாப்பிட ஒரு மாதிரி இருக்குப்பா. மொஷன் பிரச்சனையா இருக்கு. இதெல்லாம் சாப்பிடறதால தானு நினைக்கிறேன். வேற எதுவும் கிடைக்காதா?”
“இந்தியன் ஸ்டோர்ல தோசை மாவு கிடைக்கும்ப்பா. அது வாரம் முழுசா வராது. வாரத்துல ஒரு நாள், ரெண்டு நாள் கலந்து சாப்பிட்டுக்கலாம். சரியாப்பா?”
“ம்ம்ம்”
வேற என்ன என்கிட்ட கேட்டிருக்காரு? கரெக்ட். இன்னொரு முறை...
“வினோத்”
“சொல்லுங்கப்பா”
“வர புதன்கிழமை பதினாலாம் தேதி தான?”
“ஆமாப்பா? ஏன் ஏதாவது விசேஷயமா?”
“அன்னைக்கு உங்க அம்மா பிறந்த நாள்ப்பா. வருஷா வருஷம் நானும் உங்க அம்மாவும் கோவிலுக்கு போவோம். இந்த வருஷம் அவ இல்லைனாலும் நானாவது கோவிலுக்கு போகனும்னு ஆசைப்படறேன்”
“ஷிட்... எப்படி மறந்தேன்? கண்டிப்பா போகலாம்பா”
.............
“என்னப்பா, கோவில் பிடிச்சிருந்ததா?”
“என்னப்பா சாமி சிலையெல்லாம் பளிங்குல இருக்கு? எதோ பொம்மை பாக்கற மாதிரி இருக்குப்பா. நம்ம சாமி மாதிரியே ஒரு ஃபீல் இல்லை வினோத்”
“இது குஜராத்தி கோவில்ப்பா. அப்படி தான் இருக்கும். இதுவும் சாமிதானப்பா”
“ம்ம்ம்ம்”
பக்கத்திலிருக்கும் பெரியவர் நன்றாக தூங்க ஆரம்பித்துவிட்டார். ஜன்னல் இடுக்குகளில் புகுந்து குளிர்காற்று என் முகத்தில் அடித்து கொண்டிருந்தது. அதை போலவே என் அப்பாவின் நினைவுகளும்...
கடைசியா அப்பா கேட்டது...
“வினோத். நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே”
“சொல்லுங்கப்பா”
“என்னால இதுக்கு மேலயும் இங்க இருக்க முடியுமானு தெரியல. நான் இந்தியா போயிடலாம்னு பிரியப்படறேன்”
“ஏன்ப்பா ஷாலினி உங்கள சரியா கவனிக்கலையா? இல்லை என் மேல ஏதாவது தப்பா?”
“அதெல்லாம் இல்லைப்பா. எனக்கு தான் ஒத்து வரலை. இந்த கார்ன் ஃபிளேக்ஸ், பிரேட், முதல் நாள் சமையலை சூடு பண்ணி அடுத்த நாள் மதியம் சாப்பிடறது, ஃப்ரோசன் பரோட்டா
இதெல்லாம் கூட நான் என் பேத்திக்காகவும், உங்களுக்காகவும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போனதுக்கப்பறம் இருக்குற அந்த தனிமை தான் ஒரு மாதிரி இருக்கு. ஏதோ சூன்யமா இருக்குற மாதிரி இருக்குப்பா”
“இந்தியா போய் எப்படிப்பா, எங்க இருப்பீங்க? அங்கயும் அதே தனிமை தான? நாம வேணா எல்லாரும் சேர்ந்து இந்தியா போயிடலாமா? ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோங்க. நான் வேற வேலை பார்க்கறேன்”
“அதெல்லாம் எதுவும் வேண்டாம் வினோத். இனிமே உங்களால எல்லாம் அங்க வர முடியாது. இப்ப இந்தியால வயசானவங்களுக்கு நிறைய ஹாஸ்டல்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. எல்லா வசதியும் அங்க இருக்கும்னு சொல்றாங்க. அந்த மாதிரி ஏதாவது ஒண்ணுல சேர்ந்துக்கறேன்”
“யூ மீன் முதியோர் இல்லம்? எப்படிப்பா என்கிட்ட இந்த மாதிரி பேசறதுக்கு உங்களுக்கு மனசு வந்தது?”
“வினோத் டோண்ட் கெட் எக்சைட்டட். இது அந்த மாதிரி இல்லை. நான் உன்னை பதினோராவதுல ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டனே. ஞாபகமிருக்கா?”
“இருக்குப்பா.”
“உன் மேல பாசம் இல்லாமலா சேர்த்தேன்”
“இல்லை”
”உன்னை கவனிக்க முடியாம சேர்த்தனா?”
“இல்லை”
“அதே மாதிரி தான் இதுவும்”
ஒரு வழியாக அப்பா ஹாஸ்டலில் சேர்ந்து ஒரு வருடமிருந்தார். தினமும் பேசியது குறைந்து வாரத்திற்கு ஒரு முறை ஆனது, பிறகு மாதத்திற்கு இருமுறை ஆனது. பிறகு அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று போன் வந்தது. வந்து சேர்வதற்குள் அவர் சென்று சேர்ந்துவிட்டார். சரியாக ஒரு வருடமாகிறது. இந்த முறை வந்ததில் இருந்த சொத்துக்களை எந்த வில்லங்கமும் இல்லாமல் விற்றாகிவிட்டது, பெங்களூரிலிருக்கும் எனது ஆப் ஷோர் மக்களுக்கு ஒரு வாரம் ட்ரெயினிங் கொடுத்தாகிவிட்டது. நாளை மறுநாள் டாலர் தேசத்திற்கு கிளம்ப வேண்டியது தான்...
அப்பா, நீங்க என்னை ஹாஸ்டலில் சேர்க்காமலே இருந்திருக்கலாம். நான் அதிக மதிப்பெண் எடுக்காமல் இங்கேயே படித்து, இங்கேயே வேலை பார்த்து, இங்கேயே உங்களை பார்த்து கொண்டிருந்திருக்கலாம்...
பக்கத்திலிருந்த பெரியவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்...