தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label கேள்வி. Show all posts
Showing posts with label கேள்வி. Show all posts

Monday, March 30, 2009

இது கண்ணன் பாடல் இல்லையா???

இந்த பாட்டு கண்ணன் பாட்டு இல்லைனு ஒரு ஆன்மீக பதிவர் சொல்றாரு. மக்களே! நீங்களே சொல்லுங்க. இது கண்ணன் பாட்டா இல்லையானு...

இந்த பாடலை பாடியவர் பரவை நாச்சியார் . அவர் கண்ணனை தன் பேரனாக நினைத்து பாடுகிறார்.

மதுர வீரன் தானே...
அவன உசுப்பிவிட்ட வீணே
இனி விசுலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே

(இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)

ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

(காட்டின் அரசனான சிங்கம் போல கம்பீரமாக நடந்து வருகிறான் என் செல்ல பேரன். அவன் சாதாரணமாக யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். அவனை உன் அசுரர்களை அனுப்பி சீண்டினால், அவர்கள் உதை பட்டு சாவார்கள். வேண்டாம் கம்சா...)

ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டால் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)


ஏ புலிய போல
ஏ புலிய போல துணிஞ்சவன்டா எங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீச போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தாஆஆஆ
ஆ ஆ ஆ இந்தா

(போராடும் குணம் கொண்ட புலியை போல் எதற்கும் அஞ்சாதவன் என் பேரன். அசுரர்களாகிய உங்கள் அனைவரையும் பஞ்சு மிட்டாய் போல் பிய்த்தெரிய போகிறான்.அந்த காலத்தில் பெரும்பாலும் மல்யுத்தமே நடைபெறும். அதில் அனைவரையும் பஞ்சை பிய்ப்பது போல் எளிதாக கொன்றனர் பலராமனும், கண்ணனும்)

ஏ சூறாவளி
ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்க எல்லாம் மிரண்டு போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வெச்சி நொறுக்குடாடே


(கண்ணனை அழிக்க சடகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ சூறாவளி கற்றாக மாறி ஊரையே அழித்து கொண்டு வருகிறான். அந்த சூறாவளி காற்றை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆனால் கண்ணனோ சடகாசுரனை அழித்து மக்களை காப்பாற்றுகிறான். அதனால் மகிழ்ந்து அனைவரும் முறுக்கு செய்து தீபாவளி அன்று சாப்பிடுகிறார்கள்.


ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்கள பனைமரமா புடுங்கி இப்ப வீச போராண்டி
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா



மீண்டும் கண்ணனை அழிக்க விருத்திகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ காளையை போல் உருமெடுத்து வருகிறான். அதை உணர்ந்த கண்ணன் அருகிலிருக்கும் பனைமரத்தை பிடுங்கி அடித்து விருத்திகாசுரனை கும்மென்று அடித்து கொன்று விடுகிறான்

இவ்வளவு பலம் வாய்ந்த என் கண்ணனோடு மோதாதே கம்சா என்று எச்சரிக்கிறார் பரவை நாச்சியார்...


இப்பவாது சொல்லுங்க, இது கண்ணன் பாட்டு தானே ;)

Monday, February 23, 2009

நான் கடவுள்! சில பதில்கள், பல கேள்விகள்

நேற்று ஒரு வழியாக நான் கடவுள் பார்த்தாகிவிட்டது. 

பல விமர்சனங்களுக்கிடையே எனக்கு படம் பிடித்திருந்தது. வலைப்பதிவில் பல கேள்விகளை முன் வைத்திருந்தனர் நம் நண்பர்கள். அந்த கேள்விகள் மனதில் பதிந்திருந்து படம் பார்த்ததால் சில எண்ணங்கள் உடனே என் மனதில் பட்டன. அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இது விமர்சனமல்ல. எனக்கு விமர்சனம் பண்ணவும் தெரியாது. ஒரு படத்தில் எது பிடித்திருந்தது எது மனதை நெருடியது என்ற மட்டுமே சொல்ல தெரியும்.

முதல் கேள்வி : கண் பார்வையற்றவருக்கு அழகில்லாதவரை திருமணம் செய்து வைத்தால் என்ன தவறு?

என் மனதில் தோன்றிய பதில். இந்த உலகத்தை நாமே பல முறை நம் பெற்றவர்களும், நண்பர்களும், சுற்றி இருப்பவர்களும் போட்டுவிடும் கண்ணாடியால் தானே பார்க்கிறோம். நமக்கு ஒரு சட்டை பிடித்து அதை அணிந்து வருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். அதை பார்த்து ஒரு பத்து பேர் ”என்ன பாலாஜி, இந்த மாதிரி டிசைன்ல சட்டை போட்டிருக்க. உனக்கு இது எடுப்பாக இல்லை” என்று சொன்னால் அடுத்த முறை அந்த சட்டை அணிய எத்தனை முறை யோசிப்போம். அது போலவே அம்சவல்லி உலகை தன்னை சுற்றி இருக்கும் தன் நண்பர்கள் மூலமே அறிகிறாள். அவளை என்ன செய்ய போகிறார்கள் என்பதே அவளுக்கு சொல்லப்படவில்லை. அவளுக்கு ஏதோ பெரிய தீங்க ஏற்பட போகிறது என்பது மட்டுமே அவளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். 

அவளுக்கு தெரியப்படுத்துபவர்களும் அந்த விஷயத்தை அவர்கள் மனதில் மிகவும் கொடுமையானவன் என்று பதிந்த நாயர் மூலம் தெரிந்து கொள்வதாலே அப்படி ஒரு முடிவுக்கு வருகின்றனர். யாருக்கும் சிந்திக்க அவகாசமில்லை. அப்படி சிந்தித்து முடிவெடுக்கவும் அவர்களுக்கு உரிமையில்லை. அவர்கள் மேல் எதுவும் தப்பிருப்பதாகவும் எனக்கு தோன்றவில்லை. அவர்களால் அருவருப்பாக பார்க்கப்படும் அந்த நபரும் குணத்தால் நல்லவராகவே எனக்கு தெரிகிறார். நல்ல முறையில், அவளுக்கு வேண்டியவர்கள் சொல்லியிருந்தால் அம்சவல்லி அவரை மனந்திருக்கலாம்.

மாற்று திறன் கொண்டவர்களுக்கு\ வாழ முடியாதவர்களுக்கு மரணம் தான் வரமா? அவளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்க முடியாதா?

இங்கே கடவுள்\கடவுளாக தன்னை நினைத்து கொண்டிருக்கும் ருத்ரன் தானாக வரம் அளிக்கவில்லை. அப்படி அளித்திருந்தால் அங்கே எத்தனை பேருக்கு வரம் அளித்திருக்க வேண்டும். அது அம்சவல்லியாக கேட்ட வரம். அது ருத்ரனுக்கு நியாயமாக பட்டது. அதனால் அதை அவன் அளித்தான். அது ருத்ரனுக்கு மட்டும் தான் நியாயமாக பட்டதா? அப்படி இருந்தால் அவன் அம்சவல்லியை எரித்துவிட்டு வரும் பொழுது அங்கே நின்றிருப்பவர்கள் யாரும் கதறி அழுதிருப்பார்கள். அங்கே அவளை நேசித்தவர்களுக்கும் அது வரமாகவே பட்டது. 

திடீரென்று தாண்டவன் வருவதும்\ தனியாக சண்டை போடுவதும் படத்தில் ஒட்டவில்லை.

இதுல எனக்கு எதுவும் பெருசா ஒட்டாத மாதிரி தெரியல. நீதிமன்றத்தில் இருந்து ருத்ரன் வருவதை தாண்டவன் பார்க்கிறார். நீதிமன்றத்திற்கெதிரில் சண்டை போடவோ, தாக்கவோ முடியாது. ருத்ரன் அங்கிருந்து நேராக செல்லுமிடம் அந்த குன்று தான். அதனால் அதனருகில் சண்டை. அங்கேயும் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான். தாண்டவனுடன் இருப்பவர்கள் யாரும் மற்றவர்களை பெரிதும் அடிப்பதோ, காயப்படுத்துவதாகவோ காட்டப்படவில்லை. அது முழுக்க முழுக்க தாண்டவனால் நடத்தப்படுகிறது. தாண்டவனும் நல்ல உடல் வளம் கொண்டவன்தான். அதனால் தனியாக சண்டை போடுவது வித்தியாசமாக தெரியவில்லை.

எனக்கு மனதில் தோன்றிய சில கேள்விகள்\ நெருடல்கள்.

1. ருத்ரன் காசியிலிருந்து புறப்படும் போது உனக்கு எதுவும் உறவுகளில்லை. நீ அனைத்தையும் உதறிவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார். அவன் அதை அவன் தாயிடம் தூமைனா என்னனு தெரியுமில்லை என்ற காட்சியிலே முடித்துவிடுகிறான். அதற்கு பிறகு அவன் அவர்களை சந்திக்கவில்லை. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பாமல், இரண்டு தண்டனைகளையும், ஒரு வரத்தையும் கொடுக்கும் வரை அங்கு தங்கியிருக்க வேண்டிய அவசியமென்ன? அதற்கு பிறகு அங்கிருந்து காசி கிளம்ப வேண்டிய காரணமென்ன? அவன் காசியிலிருந்த வந்த காரணத்தில் இதுவும் ஒன்றா?

2. அம்சவல்லி பாடும் பாடல்களுக்கு அந்த பின்னனி இசை அவசியமா?

3. நீதிமன்ற காட்சியில் அவரை குற்றவாளியாக நீதிபதி ஏற்காமல் காவல் துறை ஆய்வாளரை கேள்வி கேட்குமிடம் சரியாக புரியவில்லை.

4. இவன் தான் என் பிள்ளை என்று ருத்ரனை அந்த தந்தை கண்டுபிடிப்பது கொஞ்சம் நெருடினாலும், ருத்ரன் தான் அவர்களின் பிள்ளையா? இல்லை ஒரு தாயின் குறையை போக்க அவன் குருஜி அனுப்பி வைக்கிறாரா? ருத்ரன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஒரு படத்தை பார்த்து நிற்பதும், பிறகு அவன் தந்தையிடம் இவனை நீதான் கொன்னயா?னு கேட்குமிடம் அவன் சின்ன வயதில் நம்மை காசியில் விட்டு சென்றார்கள் என்று கோபத்தில் கேட்டதா இல்லை மகனை காசியில் கொண்டு வந்து விட்டு சென்றவன் எதை வேண்டுமானுலும் செய்வான் என்று கேட்பதா?

5. தாண்டவனின் கையாள் முருகனிடம் வேலை செய்வோர், முருகன் கோவிலில் பிச்சை எடுப்பது எதை குறிப்பதற்காக? 

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது... இன்னும் ஒரு நான்கைந்து முறை பார்த்துவிட்டு கேட்கிறேன்.

Saturday, January 24, 2009

பயணம்...

ஒரு வழியா வந்த வேலைகள் எல்லாம் முடிச்சாச்சு. நாளைக்கு காலைல சென்னை போனவுடனே கடைசியா ஒரு தடவை ஷாப்பிங் போயிட்டு பேக்கப் பண்ணா சரியா இருக்கும். இந்த பஸ் இவ்வளவு நேரம் ஏன் எடுக்காம இருக்காங்கனு புரியல. இருக்குற நாலஞ்சு சீட்டும் இங்கயே ஃபில் ஆனாத்தான் எடுப்பனு வெயிட் பண்ணிட்டு இருக்கறது, ஓபாமா வந்தா உலகமே மாறிடும்னு நினைக்கிற மாதிரி முட்டாள் தனமா தான் தெரியுது. போற வழியில யாரும் ஏறாமலா போயிடுவாங்க. இதுவே வீக் எண்டா இருந்தா ரஜினி படத்துக்கு தியேட்டர் நிரம்பற மாதிரி இந்நேரம் பஸ்ல நின்னுட்டு வர அளவுக்கு கூட்டம் இருந்திருக்கும். 

பரவாயில்லை, திருமங்கலத்துல கடைசி நேரத்துல ஓட்டு பதிவான மாதிரி மக்களும் கடைசி நேரத்துல ஏறி கண்டக்டர் வயித்துல பாலை வாத்துட்டாங்க. வெளியில சென்னை, சென்னைனு சத்தம் போட்டு சாமார்த்தியமா ஏத்தின பையன் பேரு ஒருவேளை ”அ”ல ஆரம்பிக்குமோ? சரி நமக்கு எதுக்கு இந்திய அரசியல்?

என் சீட்டுக்கு பக்கத்துல வந்து நின்ற அந்த பெரியவருக்கு எப்படியும் அறுவதில் இருந்து அறுவத்தைந்து வயதிற்குள் இருக்க வேண்டும். கைல வெச்சிருந்த சூட்கேஸை மேல வைக்க திணறி கொண்டிருந்தார். சரினு நானும் எழுந்து அதை வைக்க அவருக்கு உதவினேன். சூட்கேஸ் கொஞ்சம் கனம் அதிகம் தான். அவர் அதை கீழையே வைத்திருக்கலாம். அப்படி வெச்சா கால் வைக்க கொஞ்சம் சிரமமாத்தான் இருந்திருக்கும். 

இந்தியால இப்பவெல்லாம் பொண்ணுங்க பசங்க பக்கத்துல தயங்காம உக்கார்ந்து வராங்கனு டீம்ல எல்லாரும் சொன்னாங்க. சில கதைகள்ல கூட படிச்சேன். ஆனா இந்த முறை நாலஞ்சு முறை பஸ் பயணம் செய்தும் என் பக்கத்துல எந்த பொண்ணும் உக்காரல. முப்பத்தி மூணு வயசு, அஞ்சு வயசு குழந்தைக்கு அப்பனா இருந்துட்டு இப்படியெல்லாம் யோசிக்கலாமானு நீங்க கேட்கலாம். நான் எதுவும் தப்பான எண்ணத்துல அப்படி யோசிக்கல. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரிஞ்சிக்கிற எண்ணம். அவ்வளவு தான்.

”பஸ் ஏறிட்டேன். மாப்பிளை தான் வந்து ஏத்திவிட்டு போனாரு. காலைல வந்துடுவேன்” பேசி முடித்துவிட்டு அலைப்பேசியை அணைத்தார் அந்த பெரியவர். போன முறை சென்னைல இருந்து வரும் போது ஒரு பையன் என் பக்கத்துல உட்கார்ந்திருந்தான். இப்ப இவர் பேசின இதே விஷயத்தை சொல்ல அவனுக்கு ஒரு மணி நேரமானது. எதிர்முனைல இருக்கறவங்க நிச்சயம் பையனா இருக்க முடியாது. இதுக்கு பேரு தான் ஜெனரேஷன் கேப். 

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி” பேச ஆரம்பித்தார் பெரியவர். எனக்கு ஆச்சரியம். இதுவரை பயணம் செய்யும் போது யாருமே என்னிடம் பேசவில்லை. எல்லாரும் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஏதோ ஒரு MP3 பிளேயரில் பாட்டு கேட்டு கொண்டிருந்தனர். சில சமயம் விஜய் தோளை குலுக்கி குலுக்கி பேசிக்கொண்டிருந்த காமெடிக்கு சிரித்து கொண்டிருந்தனர்.

“Thats fine. இதுல என்ன இருக்கு?”

“பெட்டி கொஞ்சம் கனம். அதான் தூக்க முடியல. கீழ வெச்சா கால் இடிச்சிட்டே இருக்கும். எப்படியும் வெச்சிடலாம்னு தைரியத்துல தூக்கிட்டேன்”

“ஆமாங்க. கொஞ்சம் கனம் தான். இனிமே இவ்வளவு கணமான பெட்டியையெல்லாம் தூக்காதீங்க. மூச்சு பிடிச்சிக்கும்”

“ம்ம்ம். தம்பி, மெட்ராஸா?”

“இல்லைங்க. நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாம் கடலூர்ல. மாமியார் ஊரு சென்னை. இப்ப ஒரு பத்து வருஷமா யூ. எஸ்ல இருக்கேன்”

“ஓ பத்து வருஷமா? அப்ப நிச்சயம் இங்க வந்து செட்டிலாகமாட்டீங்க?”

“இப்பொழுதைக்கு வர ஐடியா இல்லை. மொத்தமா ரிட்டையர் ஆகிட்டு கட்டின சொஷியல் செக்கியூரிட்டி டேக்ஸ் எல்லாம் மாச மாசம் நமக்கு வர மாதிரி இருக்கும் போது வந்திடலாம்னு ஒரு எண்ணம். பார்க்கலாம்”

“இப்படி போன என்னுடைய நண்பர்களோட பசங்க யாருமே வரல” சொல்லிவிட்டு மெலிதாக சிரித்தார். அவரை பத்தி நாம விசாரிக்கலாமா இல்லை உரையாடலை முடிச்சிடலாமா? சரி நாமலும் நாலு கேள்வி கேட்டுட்டு தூங்க போகலாம். இல்லைனா நல்லா இருக்காது.

“நீங்க சென்னையா?”

“நான் இப்ப எந்த ஊருனு எனக்கே தெரியலைப்பா”

“புரியலைங்களே”

“என் சொந்த ஊரு கும்பகோணம் பக்கத்துல திருவிடைமருதூர். நான் ரெவண்யூ டிப்பார்ட்மெண்ட்ல வேலை பார்த்தேன். 2003ல ரிட்டயர்மெண்ட். 2005 வரைக்கும் நானும் என் மனைவியும் திருவிடைமருதூர்லயே இருந்தோம். 2005ல அவ என்னை விட்டுட்டு போயிட்டா. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் என் மகன் வீட்ல இருந்தேன். இப்ப கடைசியா ஒரு மூணு மாசம் என் பொண்ணுவீட்ல இருந்தேன். இப்ப மறுபடியும் என் மகன் வீடு. நாடோடி மாதிரி ஆகிட்டனோனு தோணுது” அவர் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. இதுக்கு மேல என்ன கேக்கறதுனே தெரியல. இதுக்கு மேல ஏதாவது கேட்டு அவர் அழுதார்னா என்ன பண்றது? மறுபடியும் அவரே தொடங்கினார்.

“நான் ஒரு சுகர் பேஷண்ட். எனக்கு காலைல எட்டு மணிக்கெல்லாம் பசி எடுக்க ஆரம்பிச்சிடுது. ஒரு ரெண்டு இட்லி செஞ்சு கொடும்மானு கேட்கறது தப்பாப்பா? ஹோட்டல் இட்லிக்கு சட்னி, சாம்பார் எல்லாம் தொட்டு சாப்பிட முடியல. எல்லாம் காரம் அதிகமா இருக்கு. பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு கிளம்பறாங்கனு எனக்கு புரியாம இல்ல. என்ன பண்றது, எனக்கு தாங்க முடியலையே. ஒன்பதரை மணிக்கு அஞ்சு இட்லி கொண்டு வந்து கொடுத்தா சரியா போயிடுமா? நான் சாப்பாட்டுக்கு எல்லாம் அலையலப்பா. பாழாப்போன வியாதி. வேளா வேலைக்கு சோறு கேட்குது. ” மீண்டும் ஒரு நிமிடம் மௌனம்.

“உங்க அப்பாவால கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா? பசங்க கொஞ்சம் லேட்டானாலும் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவாங்க. நான் அவுங்களை ரெடி பண்ணுவனா இல்லை இவருக்கு சமைச்சிட்டு இருப்பனா? நான் என்ன மத்த மருகளுங்க மாதிரி சாப்பாடு போடாமலா கொடுமைப்படுத்தறேன். இதைப் போய் உங்க அப்பா பெருசா சலிச்சிக்கிறாரு” இப்படினு என் காது படவே பேசறா. மொத ஒரு ஆறு மாசத்துக்கு பயம் இருந்துச்சு. இப்ப பயம், பாசம், மரியாதை எதுவுமே இருக்கற மாதிரி தெரியல. அதான் என் பையன், பேசாம கொஞ்ச நாள் நீங்க தங்கச்சி வீட்ல போய் தங்கிட்டு வாங்கப்பா. உங்களுக்கும் வேற இடம் இருக்குனு அவளுக்கு தெரியனும். ஊர்ல இருக்கற இடமெல்லாம் நீங்க அந்த பேர பசங்களுக்கு எழுதி வெச்சிடுவீங்களோனு ஒரு பயம் வந்தா தானா சரியாகிடும்னு அனுப்பிவெச்சான். 

இங்க வந்து மூணு மாசமாகுது. சரி மாப்பிள்ளைக்கிட்ட மரியாதை குறையறதுக்கு முன்னாடி கிளம்பிடலாம்னு கிளம்பிட்டேன். அடுத்த முறை பையனும் வேணாம், பொண்ணும் வேணாம்னு திருவிடைமருதூர்க்கே கிளம்பிடலாமானு யோசிச்சிட்டு இருக்கேன். எங்க காலத்துல நாங்க பெத்தவங்களுக்கு சோறு போட்டோம், காசு மட்டும் கேட்காதனு சொல்லுவோம். இப்ப காசு கொடுக்கறோம், சோறு மட்டும் கேட்காதனு சொல்றாங்க. இதான் கால மாற்றம் போலிருக்கு”

“கவலைப்படாதீங்க. எல்லாம் இனிமே சரியாயிடும்” எதோ சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக சொல்லிவைத்தேன். 

“உங்கக்கிட்ட சொன்னதும் ஏதோ பாரமெல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்குது. சரி. நான் தூங்கறன்பா” சொல்லிவிட்டு இருக்கையை முடிந்த வரை பின் தள்ளி கண்ணை மூடினார்.

நானும் கண்ணை மூடினேன். ஏனோ தூக்கம் வரவில்லை. என் அப்பா இப்படி யாரிடமெல்லாம் புலம்பினாரோ. தெரியவில்லை. அவர் நண்பர்கள் யாரும் அவர் புலம்பியதாக சொல்லவில்லை. 

அப்படி அவர் புலம்பியிருந்தால் அவர்கள் என்னை வெறுத்திருப்பார்கள் தானே. அவர்கள் என்னை வெறுக்கவில்லை. அதனால் அவர் புலம்பியிருக்க வாய்ப்பில்லை. அவருக்கு என் மேல் வருத்தமா என்று கூட எனக்கு தெரியவில்லை. இவர் சொல்லியதை போல் என் அப்பாவிற்கு சர்க்கரை நோய் இல்லை. அப்படியிருந்தாலும் அவருக்கு வேளா வெலைக்கு சரியான நேரத்திற்கு உணவு இருந்தது. அவர் சாப்பாட்டை பத்தி என்னிடம் ஏதாவது முறையிட்டாரா? ஆம். ஒரு முறை ஏதோ சொல்லவந்தார்.

“வினோத்”

“சொல்லுங்கப்பா”

“காலைல இந்த கார்ன் ஃபிலேக்ஸ், பிரெட் எல்லாம் சாப்பிட ஒரு மாதிரி இருக்குப்பா. மொஷன் பிரச்சனையா இருக்கு. இதெல்லாம் சாப்பிடறதால தானு நினைக்கிறேன். வேற எதுவும் கிடைக்காதா?”

“இந்தியன் ஸ்டோர்ல தோசை மாவு கிடைக்கும்ப்பா. அது வாரம் முழுசா வராது. வாரத்துல ஒரு நாள், ரெண்டு நாள் கலந்து சாப்பிட்டுக்கலாம். சரியாப்பா?”

“ம்ம்ம்”

வேற என்ன என்கிட்ட கேட்டிருக்காரு? கரெக்ட். இன்னொரு முறை...

“வினோத்”

“சொல்லுங்கப்பா”

“வர புதன்கிழமை பதினாலாம் தேதி தான?”

“ஆமாப்பா? ஏன் ஏதாவது விசேஷயமா?”

“அன்னைக்கு உங்க அம்மா பிறந்த நாள்ப்பா. வருஷா வருஷம் நானும் உங்க அம்மாவும் கோவிலுக்கு போவோம். இந்த வருஷம் அவ இல்லைனாலும் நானாவது கோவிலுக்கு போகனும்னு ஆசைப்படறேன்”

“ஷிட்... எப்படி மறந்தேன்? கண்டிப்பா போகலாம்பா”

.............

“என்னப்பா, கோவில் பிடிச்சிருந்ததா?”

“என்னப்பா சாமி சிலையெல்லாம் பளிங்குல இருக்கு? எதோ பொம்மை பாக்கற மாதிரி இருக்குப்பா. நம்ம சாமி மாதிரியே ஒரு ஃபீல் இல்லை வினோத்”

“இது குஜராத்தி கோவில்ப்பா. அப்படி தான் இருக்கும். இதுவும் சாமிதானப்பா”

“ம்ம்ம்ம்”

பக்கத்திலிருக்கும் பெரியவர் நன்றாக தூங்க ஆரம்பித்துவிட்டார். ஜன்னல் இடுக்குகளில் புகுந்து குளிர்காற்று என் முகத்தில் அடித்து கொண்டிருந்தது. அதை போலவே என் அப்பாவின் நினைவுகளும்...

கடைசியா அப்பா கேட்டது...

“வினோத். நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே”

“சொல்லுங்கப்பா”

“என்னால இதுக்கு மேலயும் இங்க இருக்க முடியுமானு தெரியல. நான் இந்தியா போயிடலாம்னு பிரியப்படறேன்”

“ஏன்ப்பா ஷாலினி உங்கள சரியா கவனிக்கலையா? இல்லை என் மேல ஏதாவது தப்பா?”

“அதெல்லாம் இல்லைப்பா. எனக்கு தான் ஒத்து வரலை. இந்த கார்ன் ஃபிளேக்ஸ், பிரேட், முதல் நாள் சமையலை சூடு பண்ணி அடுத்த நாள் மதியம் சாப்பிடறது, ஃப்ரோசன் பரோட்டா 

இதெல்லாம் கூட நான் என் பேத்திக்காகவும், உங்களுக்காகவும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போனதுக்கப்பறம் இருக்குற அந்த தனிமை தான் ஒரு மாதிரி இருக்கு. ஏதோ சூன்யமா இருக்குற மாதிரி இருக்குப்பா”

“இந்தியா போய் எப்படிப்பா, எங்க இருப்பீங்க? அங்கயும் அதே தனிமை தான? நாம வேணா எல்லாரும் சேர்ந்து இந்தியா போயிடலாமா? ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோங்க. நான் வேற வேலை பார்க்கறேன்”

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் வினோத். இனிமே உங்களால எல்லாம் அங்க வர முடியாது. இப்ப இந்தியால வயசானவங்களுக்கு நிறைய ஹாஸ்டல்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. எல்லா வசதியும் அங்க இருக்கும்னு சொல்றாங்க. அந்த மாதிரி ஏதாவது ஒண்ணுல சேர்ந்துக்கறேன்”

“யூ மீன் முதியோர் இல்லம்? எப்படிப்பா என்கிட்ட இந்த மாதிரி பேசறதுக்கு உங்களுக்கு மனசு வந்தது?”

“வினோத் டோண்ட் கெட் எக்சைட்டட். இது அந்த மாதிரி இல்லை. நான் உன்னை பதினோராவதுல ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டனே. ஞாபகமிருக்கா?”

“இருக்குப்பா.”

“உன் மேல பாசம் இல்லாமலா சேர்த்தேன்”

“இல்லை”

”உன்னை கவனிக்க முடியாம சேர்த்தனா?”

“இல்லை”

“அதே மாதிரி தான் இதுவும்”

ஒரு வழியாக அப்பா ஹாஸ்டலில் சேர்ந்து ஒரு வருடமிருந்தார். தினமும் பேசியது குறைந்து வாரத்திற்கு ஒரு முறை ஆனது, பிறகு மாதத்திற்கு இருமுறை ஆனது. பிறகு அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று போன் வந்தது. வந்து சேர்வதற்குள் அவர் சென்று சேர்ந்துவிட்டார். சரியாக ஒரு வருடமாகிறது. இந்த முறை வந்ததில் இருந்த சொத்துக்களை எந்த வில்லங்கமும் இல்லாமல் விற்றாகிவிட்டது, பெங்களூரிலிருக்கும் எனது ஆப் ஷோர் மக்களுக்கு ஒரு வாரம் ட்ரெயினிங் கொடுத்தாகிவிட்டது. நாளை மறுநாள் டாலர் தேசத்திற்கு கிளம்ப வேண்டியது தான்...

அப்பா, நீங்க என்னை ஹாஸ்டலில் சேர்க்காமலே இருந்திருக்கலாம். நான் அதிக மதிப்பெண் எடுக்காமல் இங்கேயே படித்து, இங்கேயே வேலை பார்த்து, இங்கேயே உங்களை பார்த்து கொண்டிருந்திருக்கலாம்...

பக்கத்திலிருந்த பெரியவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்...





Tuesday, May 01, 2007

இது கண்ணன் பாடல் இல்லையா???

இந்த பாட்டு கண்ணன் பாட்டு இல்லைனு ஒரு ஆன்மீக பதிவர் சொல்றாரு. மக்களே! நீங்களே சொல்லுங்க. இது கண்ணன் பாட்டா இல்லையானு...

இந்த பாடலை பாடியவர் பரவை நாச்சியார் . அவர் கண்ணனை தன் பேரனாக நினைத்து பாடுகிறார்.

மதுர வீரன் தானே...
அவன உசுப்பிவிட்ட வீணே
இனி விசுலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே

(இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)

ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

(காட்டின் அரசனான சிங்கம் போல கம்பீரமாக நடந்து வருகிறான் என் செல்ல பேரன். அவன் சாதாரணமாக யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். அவனை உன் அசுரர்களை அனுப்பி சீண்டினால், அவர்கள் உதை பட்டு சாவார்கள். வேண்டாம் கம்சா...)

ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டாள் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)


ஏ புலிய போல
ஏ புலிய போல துணிஞ்சவன்டா எங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீச போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தாஆஆஆ
ஆ ஆ ஆ இந்தா

(போராடும் குணம் கொண்ட புலியை போல் எதற்கும் அஞ்சாதவன் என் பேரன். அசுரர்களாகிய உங்கள் அனைவரையும் பஞ்சு மிட்டாய் போல் பிய்த்தெரிய போகிறான்.அந்த காலத்தில் பெரும்பாலும் மல்யுத்தமே நடைபெறும். அதில் அனைவரையும் பஞ்சை பிய்ப்பது போல் எளிதாக கொன்றனர் பலராமனும், கண்ணனும்)

ஏ சூறாவளி
ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்க எல்லாம் மிரண்டு போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வெச்சி நொறுக்குடாடே


(கண்ணனை அழிக்க சடகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ சூறாவளி கற்றாக மாறி ஊரையே அழித்து கொண்டு வருகிறான். அந்த சூறாவளி காற்றை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆனால் கண்ணனோ சடகாசுரனை அழித்து மக்களை காப்பாற்றுகிறான். அதனால் மகிழ்ந்து அனைவரும் முறுக்கு செய்து தீபாவளி அன்று சாப்பிடுகிறார்கள்.


ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்கள பனைமரமா புடுங்கி இப்ப வீச போராண்டி
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா



மீண்டும் கண்ணனை அழிக்க விருத்திகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ காளையை போல் உருமெடுத்து வருகிறான். அதை உணர்ந்த கண்ணன் அருகிலிருக்கும் பனைமரத்தை பிடுங்கி அடித்து விருத்திகாசுரனை கும்மென்று அடித்து கொன்று விடுகிறான்

இவ்வளவு பலம் வாய்ந்த என் கண்ணனோடு மோதாதே கம்சா என்று எச்சரிக்கிறார் பரவை நாச்சியார்...


இப்பவாது சொல்லுங்க, இது கண்ணன் பாட்டு தானே ;)

Tuesday, March 20, 2007

விசித்திர குப்தன்

என்ன கொடுமை சரவணன்??? என்னைய பார்த்து உங்கிட்ட இருக்கிற 5 விசித்திரமான குணம் என்னனு சொல்ல சொல்லிருக்கான் நம்ம பாசக்கார பையன் "ஜி". இதுக்கு முன்னாடி 9 விசித்திரமான குணங்களை சொல்ல சொல்லிருந்தாரு பாபா. அதுக்கே என்ன எழுதறதுனு தெரியாம எஸ்ஸாயிட்டேன். அவரும் பெருந்தன்மையா சின்ன பையன்னு விட்டுட்டாரு. சரி இப்ப ரெண்டு பேருக்காகவும் சேர்ந்து எழுதிடலாம்...

ஏற்கனவே நான் ப்ளாக் படிச்சிட்டு சிரிக்கறதை பார்த்த என் புது ரூமேட் என்னை விசித்திரமாத்தான் பாக்கறாரு. சரி இருந்தாலும் சொல்றேன்...

1. ராமாயணம், மகாபாரதம் - இந்த கதைகள் ஓரளவுக்கு தெரியும். அதனால எங்க வீட்ல இருக்கற பெரியவங்களுக்கு (எங்க பாட்டி, எங்க அக்கா மாமியார்) எல்லாருக்கும் நல்லா கதை சொல்லுவேன். நான் சொல்றதை கேட்க கேட்க அவுங்களுக்கு அப்படியே ஆனந்தமா இருக்கும். அதுல நிறைய நீதிய வேற சொல்லுவேன். கடைசில சொல்லி முடிச்சிட்டு இதெல்லாம் வெறும் கதை தான். உண்மையா நடக்கல. அதே மாதிரி இது ஒரு ஆள் எழுதின கதையில்லை. பல வருடங்களாக சொல்லப்பட்ட கதைகள். அதனால தான் ஓரளவுக்கு எல்லா பாத்திரங்களோட வெற்றி தோல்விக்கும் சரியான காரணங்கள் இருக்குனு சொல்லிடுவேன். அவுங்களுக்கு இதுக்கு இவன் சொல்லமலே இருந்திருக்கலாம்னு தோனும்.

2. கோவில் - நான் கோவிலுக்கு போகும் போது அங்க கூட்டமே இருக்கக்கூடாதுனு நினைப்பேன். விசேஷ நாட்களில் கோவிலுக்கு போவது சுத்தமாக பிடிக்காது. கோவில்ல நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன். அதே மாதிரி கோவில்ல எவ்வளவு நெருக்கமானவர்களை பார்த்தாலும் பேச பிடிக்காது. ஆனா நிறைய பேர் அங்க தான் வந்து பாசமா பேசுவாங்க.

3. மதிப்பெண் - மார்க்குக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுக்காத மாதிரி இருந்தாலும், லேப்ல 90க்கு கீழ போட அனுமதிக்கவே மாட்டேன். அனுமதிக்க மாட்டேனா மார்க் ஷீட்டை புடுங்கிக்குவன்னு இல்லை. அந்த அளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணனும்னு ஆசைப்பட்டு செய்வேன். ஆனா தியரிக்கு படிக்க மாட்டேன். அதே மாதிரி ப்ராப்ளமேட்டிக் சப்ஜக்டா இருந்தா அதுல க்ளாஸ்ல முதல் மார்க் வரணும்னு படிப்பேன். தியரில மார்க் எடுக்கறது எல்லாராலையும் முடியும் ஆனா திறமை இருக்கவன் மட்டும் தான் ப்ராப்ளமாட்டிக் சப்ஜக்ட்ளையும், லேப்லயும் (சோப்பு போடாம) மார்க் வாங்க முடியும்னு ஒரு நினைப்புல திரியுவேன்.

4. சோம்பேறி - என் அளவுக்கு யாராவது இருப்பாங்களானு தெரியல. காலேஜ்ல சேர்ந்த புதுசுல காலேஜ் முடிஞ்சி வந்து 5 மணிக்கு படுத்து அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு எழுந்த நாட்கள் ஏராளம். இப்பவும் சனி, ஞாயிரெல்லாம் 1 மணிக்குத்தான் எழுந்திரிப்பேன். சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு சாப்பிடாம இருந்த நாட்கள் எல்லாம் உண்டு.

5. சினிமா - பிடித்த படங்களை எத்தனை முறை போட்டாலும் பார்ப்பேன். குறிப்பா பழைய படங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி ரஜினி, கமல் படங்களும் ரொம்ப பிடிக்கும். பாட்ஷா படத்தை 100 முறைக்கு மேல பார்த்திருப்பேன். இப்ப போட்டாலும் முதல் தடவை பார்க்குற மாதிரி பார்ப்பேன். இதுக்கு தான் வீட்ல திட்டு விழும். பார்த்த படத்தையே எத்தனை தடவை பார்ப்பனு. பாட்டு கேக்க மாட்டேன். காமெடி சீன் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். காமெடி ரொம்ப பிடிக்கும்.

6. பொறுப்பு - ரொம்ப பொறுப்பான பிள்ளை மாதிரி திரியுவேன். பெங்களூர்ல இருக்கற வரைக்கும் ரூம்ல அக்கவுண்ட் எல்லாம் நான் தான் பார்த்துக்குவேன். அதே மாதிரி தினமும் ரூம்ல சமைக்கிறது எல்லாமே என்னை கேட்டுதான் நடக்கும். என்னைவிட பொறுப்பானவங்க இருந்தா நான் எந்த பொறுப்பையும் ஏத்துக்க மாட்டேன். அதே மாதிரி எனக்கு கொடுத்த பொறுப்புல யாரும் தலையிட்டாலும் பிடிக்காது.
யாராவது அவுங்க கஷ்டத்தை சொன்னா அவுங்களைவிட அந்த பிரச்சைனையை தீர்க்க நான் அதிகம் சிந்திப்பேன், முயற்சி செய்வேன். இதுவே பல நேரங்களில் பிரச்சனையாகிவிடும். ரூம்ல வேலை தேடறவங்க யாராவது படிக்கலைனா பயங்கரமா திட்டுவேன். கூப்பிட்டு வெச்சி தனியா பயங்கரமா அட்வைஸ் பண்ணுவேன். பூச்சாண்டி வராங்கற ரேஞ்ச்ல பாலாஜி வரானு சில சமயம் ரூம்ல வேலை தேடறவங்களை பயமுறுத்துற சம்பவங்களும் நடந்திருக்கு. இப்பவும் சில சமயம் பசங்களுக்கு வேலை தேடறதுக்கு எது படிக்கனும்னு போன் பண்ணி சொல்லுவேன். அவங்க மனசுல திட்னாலும் திட்டுவானுங்க. இருந்தாலும் கவலைப்பட மாட்டேன்.

7. ராகு காலம் - கடலூர்ல ஹாஸ்டல்ல சேர்ந்தப்ப, ஒவ்வொரு வாரமும் உடம்பு சரியில்லாம போயிடும். ஒரே காரணம் டான்சில்ஸ் தான். ஆனா ஞாயித்தி கிழமை ராகு காலத்துல போறதாலதான் உடம்பு சரியில்லாம போயிடுதுன்னு வீட்ல சொல்லி சொல்லி எதை செஞ்சாலும் ராகு காலம் பார்த்து செய்ய ஆரம்பிச்சிட்டேன். ஆனா பாருங்க எங்க காலேஜ் எல்லா செமெஸ்டரும் ராகு காலத்துல தான் ஆரம்பிப்பானுங்க. இதனால தான் எனக்கு சரியா மார்க் வர மாட்டிங்குதுனு வீட்ல கதை விடுவேன். கொஞ்சம் செண்டிமெண்ட் பார்ப்பேன்.

8. காபி - எனக்கு காபி ரொம்ப பிடிக்கும். ஆனா அது இப்படித்தான் இருக்கனும்னு ஒரு ரூல்ஸ் இருக்கு. பால்ல தண்ணி ஊத்த கூடாது. நல்ல ஸ்ட்ராங்க இருக்கனும். சக்கரை அதிகமா இருக்கக்கூடாது. காபினா கொஞ்சம் கசக்கனும். கோவை அண்ணபூர்ணால காப்பி குடிச்சிருக்கீங்களா??? அந்த மாதிரினு வெச்சிக்கோங்க.

9. மொக்கை - ஓவரா மொக்கை போடுவேன். ஹாஸ்டல்ல எவனுக்கு போர் அடிச்சாலும் எங்க ரூம்ல எங்கிட்ட பேச வந்திடுவானுங்க. பரிட்ச சமயம்னா எவனும் ரூம் பக்கமே வரமாட்டானுங்க. என் ரூமேட்ஸ் கூட வேற ரூமுக்கு ஓடிடுவானுங்க. அப்பறம் வேற வழியில்லாம ரூமுக்கு வெளிய டேபிலும் சேரும் எடுத்து போட்டு போற வரவன வம்புக்கு எழுத்துட்டு இருப்பேன்.

சரி அடுத்த 5 பேரை கூப்பிடனுமாம். நான் கூப்பிடறேன். நீங்க எழுதிருந்தா ஃபிரியா விடுங்க. இல்லைனா கண்டிப்பா எழுதுங்க...

1. கப்பி
2. தம்பி
3. ஜொள்ளு பாண்டி
4. KRS
5. செந்தழல் ரவி

Thursday, January 25, 2007

பகுத்தறிவு என்றால் என்ன???

சர்வேசன் அவர்களின் சர்வே தலைப்பை பார்த்து கொஞ்சம் குழம்பிய நிலையிலே இந்த பதிவை இடுகிறேன்...

பகுத்தறிவு என்றால் என்ன???
எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு. ஒருவனுக்கு இறை நம்பிக்கையே நல்ல வழியில் அவன் வாழ்க்கையை நடத்த உதவுமெனில் அது அறிவின்மையா???

எவ்வளவு துன்பம் வாழ்வில் ஏற்பட்டாலும் நல்ல வழியில் வாழ்ந்தால் இறைவன் எப்படியும் உதவுவான் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையில் போராடும் ஒருவன் அந்த நம்பிக்கையின் காரணமாகவே வெற்றியடைகிறான் என்றால் அவனுக்கு பகுத்தறியும் ஞானமில்லை என்று அர்த்தமா???

இறை நம்பிக்கையின்மையா பகுத்தறிவு??? அது நாத்திகம் தானே?

கொஞ்சம் யாராவது உதவுங்களேன்!!!