தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, October 21, 2008

விடைபெறுகிறேன் நண்பர்களே!!!

ஒரு வழியா 2006 பிப்ரவரில ஆரம்பிச்ச ஆன்சைட் வாழ்க்கை இப்ப முடிவுக்கு வர போகுது. இங்க வந்ததுல ஒரு சில நல்லது நடந்தது. அதுல முக்கியமானது ப்ளாக் ஆரம்பிச்சி, உலமெங்கும் நண்பர்களை பெற்றது. 2006ல எழுதன அளவுக்கு ஆர்வமா அதுக்கு அப்பறம் எழுதல. இருந்தாலும் இந்த வலைப்பதிவு நண்பர்களோட இருக்குற தொடர்பு அப்படியே தான் இருக்குது.

இனிமே தொடர்ந்து எழுத முடியுமானு தெரியல. அடுத்த மூணு மாசம் பெங்களூர்ல நண்பர்களோட இருக்க போறேன். அதுக்கு பிறகு எங்கனு தெரியல. சென்னை வரலாம்னு ப்ளான். ஒரு வேளை மறுபடியும் ஆன்சைட்டாகவும் இருக்கலாம். நிச்சயமா சொல்ல முடியாது.

எப்படியும் அடுத்த மூணு மாசத்துக்கு வீக் எண்ட் எல்லாம் சென்னை தான். வலைப்பதிவர்களை எல்லாம் சந்திக்க முடியுமானு தெரியல. ஆனா ஃபோன் பண்ணா கண்டிப்பா பேச நேரமிருக்கும். ஆனா பேர் சொல்லாம பேசி மண்டை காய விட்றாதீங்கப்பா. எப்படியாவது ஃபோன் நம்பரை எல்லாருக்கும் அப்டேட் செய்கிறேன். (பெங்களூர்ல தமிழ் காலர் ட்யூன் வைக்க முடியுமா? ஃபோன் நம்பர் கேட்டு கால் பண்ணி பார்த்து அடிக்க மாட்டானுங்களே? )

பெங்களூர்ல நண்பர்கள் வீட்ல கம்ப்யூட்டரே இல்லை. கேட்டா டீவியும், DVD ப்ளேயரும் இருக்குனு சொல்றானுங்க. ஏன்னா காலேஜ்ல கம்ப்யூட்டர் வெறும் படம் பார்க்கவும், பாட்டு கேட்கவும் மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆபிஸ்ல க்ளைண்ட் நெட்வொர்க்ல வேற எதையும் அக்ஸஸ் பண்ண முடியாது. அதனால இனிமே பர்சனல் மெயில் செக் பண்றது கூட கஷ்டம் தான்.

எழுத நிறைய விஷயம் கிடைச்சாலும் எழுத முடியாது. இத தான் வெள்ளக்காரன் ஸ்டோன் சீ நோ டாக், டாக் சீ நோ ஸ்டோனு சொல்லிருக்கான்.

ஆசை ஆசையா பார்த்து பார்த்து வாங்கன பொருட்களை எல்லாம் பாதி ரேட்டுக்கு விக்கறது கஷ்டமா இருக்கு (5.1 Speaker விக்கறதுக்கு கடைசி வரைக்கும் மனசே வரலை. வாங்கறவனுக்கு பயங்கர சந்தோஷம்). இருந்தாலும் நாடோடி வாழ்க்கைனா இதெல்லாம் ஜகஜம்னு எடுத்துட்டு போக வேண்டியது தானு மனசை தேத்திக்கிட்டேன். இன்னும் பேக்கிங் வேலை இருக்கு. ஆணியும் ரொம்ப அதிகம். ஃபேர் வெல் பார்ட்டிகளும் நிறைய இருக்குது. இனிமே ப்ளாக் பக்கம் வர முடியுமானு தெரியல.

இத்தனை நாள் தொடர்ந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி.

நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மீண்டும் வந்து உங்களை தொல்லை செய்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

பாஸ்டனிலிருந்து சனிக்கிழமை கிளம்புகிறேன். தீபாவளி அன்று இந்தியாவில் இருப்பேன். அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!!

Tuesday, October 14, 2008

சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு சில டிப்ஸ்

நிறைய இடங்கள்ல ஆள் குறைப்பு நடந்துட்டு இருக்கு. இது இன்னும் அதிகமா இருக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கு. இந்த நேரத்துல நாம செய்ய வேண்டியதெல்லாம் என்ன?

1. முடிந்த வரை பெஞ்ச்ல இருக்காதீங்க. ஏதாவது ஒரு ப்ராஜக்ட்ல சேர்ந்திடுங்க. எனக்கு டெக்னாலஜி தெரியாதுனு சொல்லி ப்ராஜக்டை தவிர்க்காதீங்க. எந்த டெக்னாலஜியா இருந்தாலும் தெரிஞ்சிக்கலாம்.

2. நிறைய படிங்க. அதே மாதிரி முடிஞ்ச வரைக்கும் ஏதாவது சர்ட்டிபிகேஷன் பண்ணுங்க.

3. இந்த மாதிரி செய்தவுடனே அதை உங்க மேனஜருக்கு கண்டிப்பா தெரிவிங்க. மத்தவங்களுக்கும் அதோட முக்கியத்துவம்னு எடுத்து சொல்லி சும்மா கெயிட் பண்ணுங்க.

4. உங்களோட விசிபிலிட்டியை எப்படியாவது அதிகப்படுத்திக்கோங்க.

5. புது கம்பெனிக்கு தாவுவதை தவிர்க்கவும். பெரும்பாலும் Last in First Out பாலிஸி தான் இருக்கும்.

6. தேவையில்லாம தண்ட செலவு செய்யாதீங்க. புது ஃபோன், லேப் டாப்னு கண்டதெல்லாம் இந்த நேரத்துல வாங்காதீங்க.

7. முடிந்த வரை க்ரெடிட் கார்ட் பயன்படுத்துவதை குறைக்கவும். கைல இருந்து காசு கொடுத்தா தான் செலவு பண்ணறது தெரிஞ்சி கொஞ்சமாவது செலவை குறைப்போம். கைல காசை தொடாம எல்லாமே கார்ட்லயும் ஆன்லைன்லயும் பண்ணா எவ்வளவு செலவு பண்றோம்னு சுத்தமா தெரியாது.

8. ஏதாவது பெருசா நடந்து வீட்டு விலையெல்லாம் குறைஞ்சா (வாய்ப்பு குறைவு தான்... இருந்தாலும்) வேலைல இருக்கறவங்க (கைல காசு இருக்கறவங்க) போட்டி போட்டு வாங்காதீங்க. அப்படி வாங்கினா மறுபடியும் விலையேறத்தான் செய்யும். கொஞ்சம் அமைதி காக்கறது நல்லது. பின்னாடி விலை ஏறும்னு போட்டி போட்டு வாங்கினா மறுபடியும் இதே நிலைமை தான் வரும்.

9. லிக்விட் கேஷ் வெச்சிருங்க. எல்லாத்தையும் அசட்டா வெச்சிருக்காதீங்க.

10. தினமும் "வரவு எட்டணா, செலவு பத்தனா" பாட்டை காலையில் எழுந்தவுடனேவும், படுக்க போவதற்கு முன்பும் கேட்கவும்.

இதுக்கு மேல விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க. ஒரு லிஸ்ட் தயாரிச்சிடலாம்...

Monday, October 13, 2008

தமிழ் சினிமா - கேள்வி பதில் ஆட்டம்

நம்மல இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்ட முரளி கண்ணனுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எப்படியும் பிறந்த ஒரு மாசத்துலயே பார்க்க ஆரம்பிச்சிருப்பேனு நினைக்கிறேன். வீட்ல அந்த அளவுக்கு படம் பார்ப்பாங்க. அப்படி ஒரு மாசத்துல இல்லைனாலும் ஆறாவது மாசத்துல “தீராத விளையாட்டு பிள்ளை”க்கு என்னை தூக்கிட்டு போனாங்க. அங்க எங்க பக்கத்துல உட்கார்ந்து என்னை தூக்கினவங்களை எங்க அம்மாவுக்கு பிடிச்சி போச்சு. அப்பறம் விசாரிச்சு பார்த்த எங்க அம்மாவோட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்க மாமா இப்பவும் சொல்லுவாரு தீராத விளையாட்டு பிள்ளைக்கு போய் என்னை மாட்டிவிட்டுட்டியேடா மாப்பிளைனு. இது நடந்தது திருக்கோவிலூர் தனலட்சுமி தியேட்டர்ல.

நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்னா “நாயகன்”. அப்ப எங்க பாட்டி வீட்ல அடிக்கடி வாடகைக்கு டெக் எடுப்பாங்க. காலைல நல்ல மழை பெஞ்சுட்டு இருந்துச்சு. எழுந்தவுடனே டெக்ல நாயகன் படம் போட்டுட்டாங்க. கூரைல இருந்து தண்ணி சொட்டிட்டு இருந்ததெல்லாம் ஞாபகமிருக்கு. எங்க மாமா பசங்க எல்லாம் ஏமாத்தி பள்ளிக்கூடம் மட்டம் போட்டுட்டாங்க. எப்பவுமே பாலாஜி நல்ல பையனு சொல்லி சொல்லியே என்னை ஏமாத்திடுவாங்க. நான் மட்டும் பள்ளிக்கூடம் கிளம்பிட்டு இருந்தேன். சரியா நான் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பும் போது தான் நிழல்கள் ரவி செத்து கமல் அழுவுற சீன். கிளம்பவே மனசில்லை. நான் போக மாட்டேனு சொன்னா எங்க அம்மாவுக்கு எங்க அப்பாக்கிட்ட இருந்து திட்டு விழும். அதனால போகறதுக்கு கொஞ்சம் கூட மனசில்லாம பள்ளிக்கூடம் போனேன். அந்த தென்பாண்டி சீமையிலே பாட்டு ரொம்ப நாளைக்கு காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்தது. 

மத்தபடி தியேட்டர்ல பார்த்த படம்னா, கள்ளக்குறிச்சில கீத்து கொட்டாய்ல பார்த்த ”வல்லவன் ஒருவன்”. அந்த படத்துக்கு போகும் போது சரியா வீட்டை பூட்டாம போயிட்டோம்னு பயிந்துட்டு படம் போட்ட கொஞ்ச நேரத்துலயே வந்துட்டோம். பூட்டினவங்க சரியா பூட்டாம வந்துட்டாங்களேனு கடுப்பா இருந்துச்சு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

போன வாரம் சரோஜா பார்த்தேன். சென்னை 28 இயக்கிட்டு இப்படி ஒரு படம் இயக்கிருக்காரேனு வருத்தமா இருந்துச்சு. சென்னை 28 நம்ம படம்னு ஒரு ஃபீலிங் இருந்துச்சு. பொண்ணுங்களை கடத்தற படம் சமீபத்துல நிறைய பார்த்ததும் (அஞ்சாதே, Silence of the lambs, வேட்டையாடு விளையாடு, அப்பறம் நான் எழுதின ஆடு புலி ஆட்டம் இந்த மாதிரி நிறைய) படம் பிடிக்காம போனதுக்கு காரணமா இருக்கலாம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வெள்ளி - ஐயா, தாம் தூம், நாயகன் (ரித்திஷ்)
சனி - Horton Hears a who, Iron Man, Pink Panther, You've got Mail, ஜெயம்கொண்டான்
ஞாயிறு - சக் தே இந்தியா
திங்கள் (இன்று) - அரசாங்கம். (இதை எழுதும் போது குருவி பார்த்துட்டு இருக்கேன். இண்டர்வெல் முடிஞ்சிருக்கு. தாங்க முடியல...)

அரசாங்கம்ல வேற யாராவது கதாநாயகனா நடிச்சிருக்கலாம். இல்லைனா விஜயகாந்த் இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த படத்துல நடிச்சிருக்கலாம். கொஞ்சம் இங்கிலீஷ் பேசறதையும் Gaptain தவிர்த்திருக்கலாம். படம் விறுவிறுப்பா இருந்தது உண்மை. 

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

உன்னால் முடியும் தம்பி

உதயமூர்த்தி கேரக்டரும், அந்த தாத்தா கேரக்டரும், அக்கம் பக்கம் பாராட சின்ன ராசா பாட்டும் எப்பவும் மனசை பிசைஞ்சிக்கிட்டே இருக்கும். நம்ம படிச்ச படிப்புக்கு இந்த சமுதாயத்துக்கு நல்லது ஏதாவது செய்யனும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்

பாபா. 

படம் மட்டும் பாட்ஷா மாதிரி இருந்திருந்தா....


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

மை டியர் குட்டிச்சாத்தான். 3-D.

ரீ-ரிலிஸ்ல பார்த்தேன். ரொம்ப ரசிச்சேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கைல எந்த பேப்பர்ல சினிமா பத்தி கிடைச்சாலும் தவறாம வாசிக்கறதுண்டு. ஆனா பாதிக்கு மேல டுபாக்கூரா இருக்கும்னு ஒரு நம்பிக்கை :)
குமுதம், விகடன், சினிக்கூத்து, வண்ணத்திரை, வாரமலர் இப்படி எதுவும் விடறதில்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?

பொதுவா எனக்கு காதல் பாட்டு எல்லாம் பிடிக்காது. தன்னிம்பிக்கை கொடுக்கற பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அதனால அதிகமா பிடிச்சது பட்டுக்கோட்டையார் பாடல்கள் தான். சோக பாட்டு எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதே மாதிரி ஃபீலிங்ஸ் பாட்டும். குத்து பாட்டு ஓகே :) 

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நிறைய தெலுகு படம் பார்ப்பேன். அது ஊருக்கே தெரியும். அதிகம் தாக்கிய படம்னா “ஆ நலுகுரு”.  அட்டகாசமான படம். அதுக்கு அடுத்து பொம்மரில்லு.

உலக திரைப்படம்னா - ஆங்கிலப்படம் தான். அதுல ரொம்ப பிடிச்ச படம்னா "Terminal". "shawshank redemption"ம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அதை விட பிடிச்ச படம் Terminal. 

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இதுவரை இல்லை. தொடர்ந்து டெவில் ஷோ எழுதியிருந்தா ஆட்டோ வந்திருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப நல்லா இருக்கு. வித விதமான படங்கள். ஒரு பக்கம் ஹை பட்ஜட் படங்கள், ஒரு பக்கம் லோ பட்ஜட்லயே கலக்கற படங்கள். இப்படி நிறைய வெரைட்டி படங்கள் நமக்கு காத்திருக்கிறது. 

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எல்லார் வீட்லயும் நாடகம் பார்த்து உயிர வாங்குவாங்க. டீவியையும் ப்ளாக் பண்ணிட்டா ரொம்ப நல்லா இருக்கும். அப்படி நடந்தா நான் நிறைய புத்தகம் படிப்பேன். சின்ன பசங்க எல்லாம் சாயந்திரம் வீட்டை விட்டு வெளியே வந்து ஏதாவது ஓடி பிடிச்சி விளையாடுவாங்க. ஆனா இது ஒரு வருஷம்னு இல்லாம ஒரு ஏழு எட்டு வருஷமிருந்தா நல்லா இருக்கும் :)

சரி... அஞ்சு பேரை கூப்பிடுனுமாம்...

1. நாகை சிவா 
2. தேவ்
3.KRS
4. ராயல் ராம் 
5. இளா



Wednesday, October 08, 2008

ஆடு புலி ஆட்டம் - சில தகவல்கள்

தொடர் கதை எழுதறங்கறது ரொம்ப கஷ்டமான விஷயம்னு ஒரு வருஷமா எழுதாம இருந்தேன். மறுபடியும் எழுதலாம்னு பனி விழும் மலர்வனம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சி ஆறுமாசத்துல வெற்றிகரமா நான்கு பகுதிகள் எழுதி முடிச்சிருந்தேன். அப்ப அப்ப நிறைய பேர் ஞாபகப்படுத்தும் போது எழுதாம இருக்கமேனு எனக்கே என் மேல கடுப்பா இருந்துச்சு.


முதல்ல பனி விழும் மலர்வனம்னு எழுத ஆரம்பிக்கும் போது ஒரு அழகான காதல் கதையா இருக்கனும்னு நினைச்சி தான் ஆரம்பிச்சேன். அதுவும் கதாநாயகன் வேலை தேடறனு பொய் சொல்லி அப்பாவியா நடிக்கறதும், அரை குறையா தெரிஞ்சிக்கிட்டே தனக்கு நிறையா தெரியும்னு கதாநாயகி அலப்பற விடற மாதிரியும் இருக்கனும். அப்பறம் கதாநாயகி நாயகனுக்கு சொல்லி கொடுக்கறனு தப்பு தப்பா சொல்லி கொடுக்கறதும் அதை கதாநாயகன் அவள் உணராத வண்ணம் அவளுக்கு சொல்லி கொடுத்து அவள் வேலை வாங்கறதுதான் கதை. கடைசியா நாயகன் கூகுள் வேலையை விட்டுட்டு அவள் சேரும் இந்தியன் கம்பெனில அவளுக்கு லீடா வந்து சேர மாதிரி முடிக்கலாம்னு ப்ளான்.


நாலு மாச கேப் விட்டதுல இந்த கதை எழுதற மூடே போயிடுச்சு. அப்ப தான் பெங்களூர்ல நான் இருக்கும் போது தெரிஞ்சவங்க ஒருத்தவங்களுக்கு வந்த மடல் ஞாபகத்துக்கு வந்துச்சு. இந்த மாதிரி நான் ஆரக்கிள்ல வேலை செய்யறேன். நீங்க என் கூட ஃபிரெண்ட்லியா பழகனா நான் வேலை வாங்கி தறேன்னு ஒரு நாதாரி மெயில் அனுப்பியிருந்தான். அது மட்டுமில்லாம நான் சென்னைல இருக்கும் போது இதே மாதிரி எனக்கு நிறைய பொண்ணுங்க ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அவுங்க எல்லாம் என் கூட என் கார்ல மஹாபலிபுரமெல்லாம் வருவாங்க. I badly miss them. இங்க பெங்களூர்ல பொண்ணுங்க எல்லாம் அதை விட நல்லா பழுகுவாங்கனு சந்தோஷமா வந்திருக்கேன். நீங்க என் கூட நல்ல ஃபிரெண்டா இருந்தா நான் உங்களுக்கு நிறைய உதவி செய்வேன். அதுவுமில்லாம என் கார்லயே எங்க வேணும்னாலும் போகலாம். Eagerly waiting for your reply.

அந்த மெயில் ஐடி அவனுக்கு எப்படி கிடைச்சிருக்கும்னு ஆராய்ச்சி பண்ணும் போது தான் அவன் ஏதோ Freshers Groupக்கு புத்திசாலித்தனமா மெயில் அனுப்பி பொண்ணுங்க மெயில் ஐடி பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிது. அது எப்படினா நான் இந்த மெயில் ஐடிக்கு ரெஸ்யூம் அனுப்பினேன். எனக்கு இந்த கம்பெனில இருந்து கால் லெட்டர் வந்துச்சு. நீங்களும் அனுப்புங்க அப்படினு குருப்க்கு ஒரு மெயில் வரும்.  அதை பார்த்தவுடனே எல்லாரும் அவுங்க ரெஸ்யும் அனுப்புவாங்க. That's it.

அந்த கான்செப்ட்ல யோசிக்கும் போது, அப்படியே ஃபேக் பிரச்சனையையும் சேர்த்து உருவான கதை தான் “ஆடு புலி ஆட்டம்”.


இந்த கதை யோசிக்கும் போது ரெண்டு ஐடியா வந்துச்சு. ஒண்ணு பிரச்சனையை கேள்விப்பட்டவுடனே போலிஸ்கிட்ட போயி போலிஸுக்கும் வில்லனுக்கும் நடக்குற ஆட்டம் தான் ஆடு புலி ஆட்டம்னு வைக்கலாம். ரெண்டாவது கதாநாயகனே டீல் பண்ற மாதிரி. இப்படி இருக்கும் போது தான் கப்பிக்கு ஃபோன் பண்ணி ரெண்டு ப்ளாட்டையும் சொல்லி எப்படி கொண்டு போகலாம்னு கேட்டேன். எனக்கு எப்பவுமே இந்த மாதிரி சந்தேகம் வந்தா ஒண்ணு கப்பிக்கு ஃபோன் பண்ணுவேன் இல்லைனா KRS அண்ணாக்கு ஃபோன் பண்ணுவேன்.


கப்பி செலக்ட் பண்ணது தான் இப்ப எழுதியிருக்க ப்ளாட். முதல் ப்ளாட்ல எழுதியிருந்தா வேட்டையாடு விளையாடு மாதிரி ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா அதுல நிஜமாலுமே போலிஸ் எப்படி டீல் பண்ணிருப்பாங்கனு ஆராய்ச்சி பண்ணிட்டு தான் எழுதியிருப்பேன்.


அப்பறம் ஒவ்வொரு பாகமும் நான் எழுதி முடிச்சிட்டு அவுங்க ரெண்டு பேருக்கும் ப்ரூஃப் பாக்க அனுப்பிடுவேன். கப்பி எப்படியும் படிச்சிட்டு எனக்கு சொல்லிடுவான். கதைல ஏதாவது டயலாக் புரியாத மாதிரி இருந்தா இல்லைனா எழுத்துப்பிழை எல்லாம் சரி பண்ணி கொடுப்பான்.


அதே மாதிரி கதை 12 பாகம் முடிச்சதுக்கப்பறம் தேவ் அண்ணாக்கு அனுப்பி வெச்சேன். அதுல எப்படி இருக்கும்னா எழாவது பாகத்துல வில்லன் வந்துடுவான். அப்ப இருந்து அவன் பேச ஆரம்பிச்சிடுவான். அப்பறம் மாத்தி மாத்தி பேசற மாதிரி வரும். ஆனா சஸ்பென்ஸ் சுத்தமா இருக்காது. அதை அவர் மாத்த சொன்னாரு. அப்ப தான் படிக்கறவங்க இன்வால்வ் ஆவாங்கனு சொன்னாரு. அவர் ஐடியா படி மாத்தி மறுபடியும் அஞ்சு பாகம் எழுதினேன். தேவ் அண்ணா ஜட்ஜ் பண்ணது சரி தான். ஓரளவு சஸ்பென்ஸ் இருந்தது நல்லதுக்கு தான்.


ப்ளாகர் இல்லாம என் ரூமேட் தனா எனக்கு ரொம்ப உதவி செஞ்சான். ஒவ்வொரு பாகத்தையும் படிச்சிட்டு விறுவிறுப்பா போகுதானு தவறாம சொன்னான். சில இடங்களில் வரும் ஆபாசமான வார்த்தைகளை மாஸ்க் பண்ண சொல்லி கண்டிப்பாக சொல்லிவிட்டான். KRS அண்ணாவும் அதை சொன்னார்.


இத்தனை பேர் உதவியால தான் என்னால சுமாராவாது கதை எழுத முடியுது. அது போக ஒவ்வொரு பகுதிக்கும் வந்து உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.


இத்தனை நாள் கழிச்சி ஏன் இதை சொல்றான்னு பாக்கறீங்களா? இப்ப தான் அந்த கதையை PDFல அழகா ஃபார்மெட் பண்ணி, படமெல்லாம் போட்டு போட்டிருக்கேன். PDFஆக மாற்ற உதவிய இளா அண்ணாவிற்கும் நன்றிகள் பல. இது வரை படிக்க தவறியவர்கள் இங்க டவுன்லோட் பண்ணி படிக்கலாம். அதே மாதிரி ஃபார்வேர்டும் பண்ணலாம்.

Tuesday, October 07, 2008

முட்டாப்பய

"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.

அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.

Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது.

"ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஏமாற்றமாக தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்யா.

"Congrats சொன்னா ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல தெரியல. இவனுக்கெல்லாம் ஒரு அவார்ட்" மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு மேனஜர் சிவாவை கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்து சென்றார்.

"சிவா, நீ டெவலப் பண்ண டூல் இனிமே கம்பெனில இருக்கற எல்லாருக்கும் பயன்பட போகுது. உனக்கு இங்க நல்ல ஸ்கோப் இருக்கு"

"தேங்க்ஸ் சரவ்"

"ஆனா நீ டீம்ல யார்கிட்டயும் சரியா பேச மாட்றனு எல்லாரும் ஃபீல் பண்றாங்க. நானும் நீ டீம்ல மிங்கிலாகி பார்த்ததேயில்லை"

" "

"நீ ப்ரில்லியண்ட்தான். ஆனா இந்த மாதிரி கம்பெனில ப்ரில்லியண்டா இருக்கறதைவிட நல்ல டீம் வொர்க்கரா இருக்கனும். இது உன் கெரியரை
கெடுத்துடக்கூடாதுனு தான் உன்னை தனியா கூப்பிட்டு சொல்றேன். உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட சொல்லு. ஐ வில் ட்ரை டு கெட் இட் ரிசால்வ்ட்"

" "

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"அப்படியெல்லாம் இல்லை சரவ்"

"எல்லாம் நீ நடந்துக்கறதுல தான் இருக்கு. சரி. இனிமே டீம்ல எல்லார்கிட்டயும் சகஜமா பழகு. அப்பறமா பேசலாம்"

வெளியே வந்தவுடன் தன் இடத்திற்கு சென்று அமைதியாக வேலையை செய்ய துவங்கினான்.

9 மணி பஸ் பிடித்து கொரமங்களா சென்று சேரும் போது மணி 11 ஆகியிருந்தது. பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்

செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.

அந்த ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட வீட்டில் சிவா தனியே தங்கியிருந்தான். பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது. உடை மாற்றிவிட்டு படுக்கைக்கு சென்றான் சிவா.

அவனுக்கு அவன் மேனஜரிடம் பேசியதே நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"

"நீ புத்திசாலியா இருக்கறதால...நீ புத்திசாலியா இருக்கறதால"

"ஏன்டா உன் மண்டைல இருக்கறது என்ன மூளையா இல்லை களி மண்ணா? ஒரு தடவையாது பாஸாகறயா? எப்படிடா நீ ஒம்போதாம் க்ளாஸ் வரைக்கும் பாஸான?"

அமைதியாக நின்று கொண்டிருந்தான் சிவா.

"சரி கைய நீட்டு"

கையை நீட்டினான். கணக்கு வாத்தியார் சுப்பிரமணி அடித்த அடியில் அந்த பிரம்பு உடைந்து போனது.

"டேய் கோபாலு, போய் ஸ்டாஃப் ரூம்ல இன்னொரு பெரம்பு இருக்கும் அதை எடுத்துட்டு வா. இதுக்கெல்லாம் இவ்வளவு அடி வாங்கனாலும் உறைக்காது. நம்ம கைதான் வலிக்கும்"

கோபால் வேகமாக ஓடி போய் புது பிரம்பை கொண்டு வந்தான்.

ஃபெயிலானவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கி கொண்டிருந்தனர்.

"என்னமா கவிதா. நல்லா படிக்கிற பொண்ணு நீ. நீ போய் ஃபெயிலாயிருக்க. என்ன ஆச்சு?"

அமைதியாக தலையை குனிந்த படி நின்றிருந்தாள் கவிதா.

"சரி கையை நீட்டு. இந்த தடவை அடி வாங்கினா தான் அடுத்த முறை நல்லா படிப்ப"

அவள் பயந்து கொண்டே கையை நீட்டினாள்.

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம். என்ன?" சொல்லி கொண்டே அடித்தார்.

" "

"வர வர மாமியா கழுத போல ஆனாளாம்"

அவள் அழுது கொண்டே அமர்ந்தாள்.

அடுத்த நாள்.

ஆங்கில வகுப்பு

"மெமரி போயம்ஸ் எல்லாம் மூணு தடவை எழுதிட்டு வர சொன்னேனே. எல்லாம் நோட் எடுத்து வைங்க.
எழுதாதவங்க ஒழுங்கு மரியாதையா வெளிய வந்து முட்டி போட்டு எழுதிட்டு உள்ள வாங்க"

முதல் ஆளாக சிவா எழுந்து சென்றான்.

"அதான நீ எல்லாம் எங்க உருப்பட போற. உங்க அப்பா கூட கட்சில சேர்ந்துடு. இந்த பள்ளிக்கூடமாவது உருப்படும்"

முறைத்து கொண்டே சென்றான் சிவா.

"என்னடா முறைக்கிற? ஒழுங்கா போய் முட்டி போடு"

வகுப்பிலிருந்து ஒரு பதினைந்து மாணவர்கள் எழுந்து சென்றனர். கவிதா எழுந்து செல்வதை பார்த்தவுடன் ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"ஏம்மா கவிதா, நேத்து நான் மெமரி போயம்ஸ் எழுதிட்டு வர சொன்னேன் தானே?"

"ஆமா சார்" மெல்லிய குரலில் சொன்னாள் கவிதா.

"அப்ப ஏன் எழுதிட்டு வரல? உடம்பு ஏதாவது சரியில்லையா?"

அமைதியாக இருந்தாள்.

"ஏம்மா ஃபர்ஸ்ட் ரேங் எடுக்கற பொண்ணு. நீயே இப்படி இருக்கலாமா? சரி எல்லாரும் உள்ள போய் உக்காருங்க. நாளைக்கு எழுதிட்டு வாங்க"

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். மதிய உணவு வேளையின் போது அழுது கொண்டிருந்தாள் கவிதா. சிவாவிற்கு கவிதா அழுவதை பார்த்து பிடிக்காமல் நேராக அவளிடம் சென்றான்.

"ஏய் இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுவற? அவர் தான் முட்டி போட வேணாம்னு சொல்லிட்டார் இல்லை"

"நான் ஒண்ணும் அதுக்கு அழுவல"

"பின்ன? நேத்து அடி வாங்கனதுக்கா? எங்க கையை காட்டு"

அவள் கை சிவந்திருந்தது.

"ஏன் இப்பல்லாம் ஒழுங்கா படிக்க மாட்ற? நல்லா தானே படிச்சிட்டு இருந்த? அத்தை ஏதாவது வேலை செய்ய சொல்லி திட்றாங்களா? இல்லை அந்த கிழவி ஏதாவது சொல்லுதா?"

அவன் கிழவி என்று குறிப்பிட்டது அவன் பாட்டியைத்தான். கவிதா சிவாவின் தாய் மாமன் மகள்.

அவனை சுட்டெரிப்பது போல முறைத்தாள்.

"சரி முறைக்காத. ஒழுங்கா சொல்லு. ஃபெயிலாயிடுவனு சொல்லியிருந்தா, அந்த பேப்பர் கட்டையே சுட்டுட்டு வந்திருப்பேன். நீதான் சொல்லாம விட்டுட்ட. நேத்து உன்னை அடிச்சப்பவே அந்தாள ரெண்டுல ஒண்ணு பார்த்திருப்பேன். அப்பறம் விஷயம் அப்பாக்கிட்ட போயிடும்னு தான் விட்டுட்டேன்"

அவள் அழுது கொண்டே இருந்தாள்.

"இப்ப சொல்றயா இல்லையா?"

"என்னைவிட நீ எத்தனை வருஷம் பெரியவன்?"

"ரெண்டு வருஷம். ஏன் இப்ப அதுக்கு என்ன?"

"ஒழுங்கா படிக்காம நீ ஏற்கனவே ரெண்டு வருஷம் பெயிலாயிட்ட. இப்ப நீ படிக்கற லட்சணத்துக்கு எப்படியும் பாஸாக மாட்ட. நான் நல்லா படிச்சா எங்க அப்பா எனக்கு படிச்ச மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுத்துடுவாறோனு பயமா இருக்கு. அதான் நானும் படிக்காம ஃபெயிலாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்"

"எனக்கு கட்டி கொடுக்காமவிட்டுடுவாறா என் மாமன். அவ்வளவு தான். உன்னைய தூக்கிட்டு போயாவது கட்டிக்க மாட்டேன்"

"தூக்குவ தூக்குவ" கண்ணை துடைத்து கொண்டே கேலியாக அவள் சொன்னது அவனை என்னமோ பண்ணியது.

"பார்த்துக்கிட்டே இரு. உன்னைய மட்டும் கட்டிகொடுக்க மாட்டேனு சொன்னா எங்க ஆளுங்களோட வீடு புகுறனா இல்லையானு"

"இவ்வளவு பண்றதுக்கு ஒழுங்கா படிச்சி பாஸாகறனு சொல்லலாம் இல்லை"

"ஏய். இதுக்கெல்லாம் படிக்க முடியாது. நான் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டு இருக்கேன். நீ என்னுமோ கஷ்டப்பட்டு படினு சொல்ற. அதெல்லாம் ஆகற விஷயமா? இந்த பழப்பசங்க தான் படிப்பானுங்க. நாங்க எல்லாம் வீரனுங்க. சூப்பர் ஸ்டார் மாதிரி படிக்காத மேதைங்க. புரியுதா?"

"என்னுமோ பண்ணு. ஆனா நீ பாஸாகற வரைக்கும் நானும் பாஸாக மாட்டேன். நீ வாங்குற அடியை நானும் வாங்கனும். இப்பல இருந்தே நான் உன் பொண்டாட்டியா பழகிக்கிறேன்."

"ஏய். நீ அடி வாங்கறத பார்த்துட்டு என்னால இருக்க முடியாது. உன்னை எந்த வாத்தியாவது அடிச்சானா அவனுக்கு அன்னைக்கு பூச தான். நீயே முடிவு பண்ணிக்கோ"

"இங்க பாரு, நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. நீ எப்படியும் எனக்கு அடுத்தோ எனக்கு முன்னாடியோ வர போறதில்லை. அதான் உன் இடத்துக்கு நான் வரேன். ஆனா அடி வாங்கும் போது தான் உயிர் போகற மாதிரி வலிக்குது. உனக்கும் அப்படித்தானே வலிக்கும்னு நினைக்கும்போது உன் வலியை அனுபவிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு"

அவன் எதுவும் பேசாமல் அவனிடத்திற்கு போய் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் கவிதா 4 முறை அடி வாங்கினாள். இரண்டு முறை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டு கொண்டிருந்தாள்.

அதன் பிறகு சிவாவின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. அடுத்து நடந்த மாத தேர்வில் சிவா பாஸ் மார்க் எடுத்திருந்தான். ஏதோ சூழ்ச்சி நடந்திருக்குமென ஆசிரியர்களும், சில மாணவர்களும் நினைத்து கொண்டனர்.

ஒரு ஞாயிறு மாலை அவன் கணக்கு ஆசிரியர் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றான்.

"என்னப்பா? யாரு வேணும்"

"இது கணக்கு வாதியார் சுப்பிரமணியம் வீடு தானே?"

"ஆமாம். நீ யாருப்பா?"

"நான் அவர் ஸ்டுடண்ட் மேடம். சார் இருக்காரா?"

"இருக்காருப்பா. உள்ள வா.
என்னங்க இங்க உங்களை பார்க்க உங்க ஸ்டுடண்ட் யாரோ வந்திருக்காங்க பாருங்க" சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

"வாப்பா. என்ன விஷயம்? வீடு தேடி வந்திருக்க?"

"சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"

"சரி உள்ளே வா". தனியாக அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவனை அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்.

"சொல்லுப்பா. என்ன பிரச்சனை?"

"சார். எங்க அப்பா கட்சி, அரசியல்னு இருந்துட்டாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்து யாரும் படிக்கனும்னு பெருசா சொன்னதில்லை. நான் ஃபெயிலானப்ப கூட அதை கேட்டுட்டு அங்க இருந்த எல்லாரும், எந்த வாத்திடா உன்னை ஃபெயிலாக்கனது. சொல்லு. அடிச்சி பாஸாக்க வைச்சிடறோம்னு தான் சொன்னாங்க. தவிர, என்னை படினு யாரும் சொன்னதில்லை. எனக்கு படிக்கனும்னு பெருசா தோனனதுமில்லை. ஆனா இப்ப திடீர்னு படிக்கனும்னு ஆசை வந்துடுச்சி சார். நானும் எவ்வளவோ கஷ்டப்பட்டு போன பரிட்சைக்கு படிச்சேன், ஆனா என்னால பாஸ் மார்க் மேல வாங்க முடியல சார். படிச்சது எல்லாம் பரிட்சைல மறந்து போகுது சார். எனக்கும் கணக்குல 100 மார்க் வாங்கனும், க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கனும்னு ஆசையா இருக்கு சார். நீங்க தான் உதவி செய்யனும்"

அவனை ஆச்சரியமாக பார்த்தார் சுப்பிரமணியம்.

"நீ இப்படி பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. வாழ்க்கைல எந்த ஒரு விஷயத்துல வெற்றி பெறதுக்கு இந்த விஷயங்கள் தான் முக்கியம். அது ஆர்வம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி. இது இருந்தா தானா ஜெயிக்கலாம். சரி, போன வருஷம் நடந்த உலக கோப்பைல பாகிஸ்தானோட அதிக ரன் அடிச்சது யாரு?"

"சித்து சார்... 93 ரன் அடிச்சாரு"

"ரஜினியை ராபின் ஹூட்னு எந்த படத்துல சொல்லுவாங்க?"

"நான் சிகப்பு மனிதன் சார்"

"பாரு. இதெல்லாம் உனக்கு எப்படி நியாபகமிருக்கு?"

" "

"எல்லாத்துக்கும் ஆர்வம் தான் காரணம். அப்பறம் அதை நினைச்சிட்டே கொஞ்ச நேரம் இருக்கறது. சித்து 93 எடுத்து அவுட் ஆனப்ப இன்னும் 7 அடிச்சிருக்கலாமேனு கொஞ்ச நேரம் முழுக்க மனசுல இருக்கும். ரஜினி படமும் அப்படிதான். அப்படி யாராவது இருந்து இந்த சமூகத்தை திருத்தினா எப்படி இருக்கும்னு இருக்கும். இப்படி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டதுக்கப்பறம் அதை பத்தி மனசு கொஞ்ச நேரம் சிந்திச்சா அது அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"

அவர் பேசுவதை ஆர்வமாக அவன் கேட்டு கொண்டிருந்தான். நன்றாக படிக்க வேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தெரிந்ததை அவர் கவனித்தார். இவன் இவ்வளவு மாறியதற்கு காரணத்தை அவர் அறியவில்லை.

சிவாவின் நடத்தையில் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அவன் கண் எப்பொழுதும் சிவந்தேயிருந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் முன் அவன் முகம் கழுவி வந்தான். அவன் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கொள்வதை பார்த்த நண்பர்களுக்கு அவன் ராத்திரி அதிகமாக தூங்குவதில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அடுத்து நடந்த ஒவ்வொரு தேர்விலும் அவன் படிப்படியாக முன்னேறி கொண்டே வந்தான்.

கவிதாவிற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளும் அவனுடன் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தாள். அவளை சில பாடங்களில் அவன் முந்தியதும், அனைவருக்கும் முன் பதில் சொல்லியதும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி அவன் வீட்டுக்கு சென்று அத்தையிடம் அவன் படிக்க ஆரம்பித்ததை சொல்லி சந்தோஷப்பட்டாள். அவன் அம்மாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

"எங்க இவனும் இவுங்க அப்பா மாதிரியே ஆயிடுவானோனு பயந்துட்டு இருந்தேன். நல்ல வேளைம்மா இவன் படிக்க ஆரம்பிச்சிட்டான். இந்த வருஷம் மட்டும் இவன் பாசாயிட்டா நம்ம கொலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்க வைக்கறேனு வேண்டிக்கிட்டிருக்கேன்"

"அத்தை அவர் படிக்கறத பார்த்தா ஸ்டேட் ரேங் எடுத்துடுவாரோனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க என்னனா பாசானா போதும்னு வேண்டிக்கிட்டிருக்கீங்க"

"என்னுமோ நல்லா படிச்சா சரிதான்"

ஒரு வழியாக பத்தாவது தேர்வை நல்ல படியாக எழுதி முடித்தனர் சிவாவும், கவிதாவும். சிவா பெரும்பாலும் கணக்கு வாத்தியார் சுப்பிரமணி வீட்டிலே தங்கி படித்தான். கணக்கில் கண்டிப்பாக நூத்துக்கு நூறு வாங்குவான் என நம்பினார் சுப்பிரமணி.

"சார் தந்தி வந்திருக்கு" போஸ்ட்மேன் சொல்லியதை கேட்டதும் கவிதாவும் அவள் அம்மாவும் பயந்தே விட்டனர்.

கவிதாவின் அப்பா தந்தியை வாங்கி பார்த்தார். மிகவும் சந்தோஷமாக கவிதாவை அழைத்தார்.

"கவிதா இந்த நம்பர் நம்ம சிவாதானு கொஞ்சம் சொல்லு 973654673"

"ஆமாம்பா. மாமாது தான். ஏன்ப்பா? என்னாச்சு?"

"இது உன் நம்பர் தானே 973654662"

"ஆமாம்பா. ஏன்? சீக்கிரம் சொல்லுங்கப்பா"

"நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான். அனேகமா டிஸ்ட்ரிக்ட்ல முதல் மார்க் நீ தானு நினைக்கிறேன். என் ஃபிரெண்ட் மெட்ராஸ்ல இருந்து பார்த்து தந்தியடிச்சிருக்கான். இரு நான் போய் சிவாட்ட சொல்லிட்டு வந்திடறேன். என் தங்கச்சி கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா"

கவிதாவால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து சந்தோஷப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

"அப்பா, அத்தைட்ட நான் போய் சொல்லிட்டு வந்திடறேன்பா. ப்ளீஸ்பா"

மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை சைக்கிளில் அனுப்பி வைத்தார். சந்தோஷமாக சைக்களில் வேகமாக மிதித்து வந்தாள் கவிதா.

................

"டேய் சிவா கடைசியா ஒரு தடவை அவளை பார்த்துட்டு வந்துடுடா. அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்" சிவாவின் அம்மா அழுது கொண்டே சொன்னார்.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தான் சிவா. அனைவரும் எவ்வளவு சொல்லியும் அவன் கடைசி வரை கவிதாவை சென்று பார்க்கவில்லை. அவள் மேல் வண்டியேற்றிவிட்டு சென்ற அந்த கார் டிரைவரை எப்படியும் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து சில நாட்களில் அதையும் விட்டுவிட்டான்.

..............

"கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"

"ஆண்டவா நான் மறுபடியும் முட்டாளாவே ஆயிடறேன். எனக்கு என் கவிதாவை மட்டும் திருப்பி தா. நான் முட்டாளாவே இருந்துடறேன்... நான் முட்டாளாவே இருந்துடறேன். எனக்கு எந்த அவார்டும் வேண்டாம். கவிதாவை மட்டும் கொடு. ப்ளீஸ்"

வழக்கம் போல் அவன் தலையணை முழுதும் கண்ணீரால் ஈரமாகியிருந்தது...

Friday, October 03, 2008

தூறல்

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது...

வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.

இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல... மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க... அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.

அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.

கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ என்ன பொண்ணு இவ... யாராவது பார்த்தா... உடனே சிரிக்கணுமா???

பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்... i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.

சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்... வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.

மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.

சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் "C" போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.

மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.

"கார்த்திக்... இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?" அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.

"சாரி... நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே... எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு" சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.

அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.

பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.

"ஹாய்... நான் இங்க உக்காரலாமா?" ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.

வழக்கத்தைவிட i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.

அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.

சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.

எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.

"ரொம்ப தேங்கஸ்ங்க..." தயங்கியவாறே சொன்னேன்.

"ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்" புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.

"இல்லைங்க...சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்"

"ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க...
பை த வே, ஐ அம் ஆர்த்தி"

"ஐ அம் கார்த்திக்"

இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.

பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்...

"கார்த்திக்... உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க"

"உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க"

"ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்"

"சரிங்க"

"பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க"

"சரி... போலாமா?"

சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.

அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்...

"ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்... தனியா சாப்பிட்டு இருந்த... உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?"

"நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்"

"ஏன்?"

"யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது"

"யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?"

"வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்"

"இல்ல... யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்"

"ஏன்கிட்ட செல் போன் இல்ல"

"என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?"

"3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்"

"சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு... " குறித்து கொண்டாள்

காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்... இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.

அடுத்த நாள்...

"ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?"

"ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்"

"சரி... இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்"

"எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?"

"நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்... ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல"

"நிஜமாவா?"

"ஆமாம்... சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்"

"சரி..."

வார இறுதியன்று கடைக்கு சென்றோம்...

"லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ... இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்"

"எனக்கு சாதரண மாடலே போதும்... காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்"

"நீ சும்மா இரு...நான் செலக்ட் பண்றேன்... உனக்கு ஒன்னும் தெரியாது"

"சரிங்க... நீங்களே எடுங்க"

கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது... ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.

"பாத்தியா... உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்"

"சரி சரி... எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க... வா போகலாம்"

அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.

வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்...

திங்கள் காலை அலுவலகத்தில்

"கார்த்திக்... புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு...கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு" ஹாசினி

"ஆமாம்... நேத்துதான் வாங்கினேன்"

"எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?" ராஜிவ்

"உங்களுக்கு இல்லாமலா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க..."
அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.

ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது.

"கார்த்திக்... இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி...
நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"

"ஓகே... நான் பாத்துக்கறேன்"

"கார்த்திக்... புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க... ஏதாவது விசேஷமா?" மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க... சும்மா வாங்கனும்னு தோனுச்சு... வாங்கிட்டேன்"

"சரி... இன்னைக்கு டீம் லஞ்ச்... எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்"

"ஷுர்... கண்டிப்பா வரேன்"

மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்... எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க... நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு...

வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.

"கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்... எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?"

"ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல... எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... அதனால சொன்னேன்"

"சரி... அப்ப அப்ப போன் பண்ணு"

"கண்டிப்பா பண்றேன்"

அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.

"ஹலோ கார்த்திக்கா???"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்... நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்" அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது

"கடைசியா???" இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
"ஆர்த்திக்கு என்னாச்சு???"

"நீங்க இங்க வாங்க... அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல... சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க... நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்"

அந்த நம்பர் மனதில் பதிந்தது...

சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்...

ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.

ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்... என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.

"கார்த்தி... அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு"

"ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல"

"நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்"
ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்

"அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே... உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல."

"ஆர்த்தி... உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட"

"ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்...
நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி... என்ன சரியா???"

ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்...

காலை 7 மணி...

வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.

"ஹாய்... நான் இங்க உக்காரலாமா?"

"தாராளமா"

"என் பேர் கார்த்திக்..."

"நான் பாலாஜி..."

(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்...)

Wednesday, October 01, 2008

Software Recession Comedy

இந்தியால இருக்குற மென்பொருள் நிறுவனங்களின் CEO எல்லாம் டாக்டரின் ரசிகர்களாக இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.

TCS : 
நீ 10%ஐ (வேலையை விட்டு) தூக்கினா தூசு
நான் தூக்கினா மாஸூடா 

(எப்படியும் 15,000 பேர் வெளிய வருவாங்க)


Satyam:
எவ்வளவோ தூக்கிட்டோம், இப்போ தூக்க மாட்டோமா?


Infosys:
எவன் வேலையை விட்டு தூக்கினா எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஹெட் லைன்ஸுல வந்து, சாப்ட்வேர் மக்கள் எல்லாம் கதி கலங்குவாங்களோ அவன் தான் Infosys.


Wipro:
நான் ஒரு தடவை (மக்களை) வேலையை விட்டு தூக்கணும்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் (ஏன்னா 80% ஸ்டாக் என்கிட்ட தான் இருக்கு).


CTS: 
வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்க, CTSல இருக்கறவன் TCSல சேருவான் (ஃபீல்ட் சரியானவுடனே) TCSல இருக்கறவன் CTSல சேருவான்.