"ஏ! பயங்கரமா குளிருது. ஒரு முத்தம் கொடேன்”
“என்ன?”
“குளிருக்கு முத்தம் தான் மருந்துனு வெள்ளைக்காரன் சொல்லியிருக்கான். அதான் கேக்கறேன். ப்ளீஸ்”
“உதை வாங்கப் போற. இத்தனை நாள் நல்லா பையனா இருந்துட்டு திடீர்னு அட்டகாசம் பண்றியா?”
“முத்தம் கேட்டா கெட்ட பையனா? லவ் பண்ற பொண்ணுக்கிட்ட கேட்காம தெருவுல போற வரவக்கிட்டயா கேட்பாங்க?”
“ஏன் தைரியமிருந்தா கேட்டு பாரேன்”
“நான் என்ன காரணமில்லாமலா கேட்டேன். -10 டிகிரி ஃபேரன்ஹீட்ல இருந்து உள்ள வந்திருக்கோம். நம்ம ஊர் கணக்கு படி பார்த்தா -25 டிகிரி செல்சியஸ். அதனால தானே கேட்டேன்”
“ “
“என்னது இது கன்னத்துல கொடுக்கற. அதுவும் இதுக்கு பேரு முத்தமா? வெறும் சத்தம்”
“இதுக்கு மேல நீ பேசன உன் கன்னத்துல வரும் ரத்தம்”
“என்ன டீ.ஆர் மாதிரி பேசற. பெரிய கவிஞினு மனசுல நினைப்பா?”
“என்னது கவிஞியா?”
”கவிஞர்க்கு பெண் பால் கவிஞி தானே”
“அப்பா. செம்ம மொக்கை”
“சரி அது இருக்கட்டும். நான் கேட்ட முத்தம் என்னாச்சு”
“நான் சொன்ன ரத்தம் மறந்து போச்சா ?”
“டேய் மணி பன்னெண்டு ஆச்சு... எழுந்திரி”
“ஆஹா முத்தத்துக்கும், ரத்தத்துக்கும் நடுவுல இது என்ன புது சத்தம்?”
“டேய் எழுந்திரிடா. சாப்பிட போகலாம். பசிக்குது”
ஆஹா. இவ்வளவும் கனவா?
“டேய் இந்த வெயில்ல இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்க. எழுந்திரிடா”
“டேய் நீ போய் சாப்பிடு. இப்படி ஒரு முக்கியமான கனவு கண்டுட்டு இருக்கும் போது எழுப்பிட்டியேடா பாவி. போய் தொலை”
“டேய் பகல் கனவு பலிக்காதுடி. ஒழுங்கா எழுந்திரி. அப்பறம் தனியா போக போர் அடிக்குதுனு என்னைய மறுபடியும் கூப்பிட்டு டார்ச்சர் பண்ணுவ”
“மச்சான். பகல் கனவு பலிக்காதா?” வேகமாக எழுந்து உட்கார்ந்தான்.
“நாதாரி. பன்னெண்டு மணிக்கு காணறது பகல் கனவாடா? அது மதிய கனவு. இந்த நேரம் வரைக்கும் எந்த நாயும் தூங்காதுனு நினைச்சி எவனும் இது வரைக்கும் பழமொழி சொன்னதில்லை. நான் வேணா புது மொழியா உனக்காக ஒண்ணு க்ரியேட் பண்றேன். மதிய கனவு மறக்காது. ஓகேவா?”
”அப்படினா?”
“பழமொழி சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது. புரியுதா?”
“டேய். எவ்வளவு சூப்பர் கனவு தெரியுமாடா? இப்படி அநியாயமா கெடுத்துட்டடா”
“சரி என்ன கனவு சொல்லி தொலை”
“நானும் தீபாவும் கார்ல ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு வரோம். வெளிய -10 டிகிரி ஃபேரன்ஹீட். கார் பார்க் பண்ற இடத்துல இருந்து வீட்டுக்கு வர வழியெல்லாம் செம குளிர். அதுல அஞ்சு நிமிஷம் நடந்து வீட்டுக்கு வறோம். பயங்கர குளிர்”
“அதான் இந்த சென்னை வெயில்லையும் போர்வையை இழுத்து போட்டு தூங்கனையாக்கும்? அது சரி, இது நடக்கறது எங்க? ஸ்விசர் லேண்ட்லயா? செலவே இல்லாம கூப்பிட்டு போயிட்ட போல?”
”அதெல்லாம் இல்லைடா. நாங்க ரெண்டு பேரும் பாஸ்டன்ல ஆன்சைட்ல இருக்குற மாதிரி கனவு. நேத்து ஆன்சைட் கால்ல ரெண்டு பேரும் இருக்கும் போது அங்க -10னு சொன்னாங்க. அதுக்கு அவ அந்த ரூம்லயே அந்த குளிரோட எஃபக்டை கொடுத்தா. அது மனசுல பதிஞ்சு போச்சு. அதான் கனவுல வந்துடுச்சு. ரெண்டு பேரும் ஒரே அப்பார்ட்மெண்ட். டூ பெட்ரூம்.”
“ஓ. அந்த ரேஞ்சுக்கு போயிட்ட. சரி, அப்பவாது லவ் பண்றனு சொல்லி தொலைச்சயா இல்லை இதயம் முரளி மாதிரி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தியா?”
“நான் லவ் சொன்னனானு தெரியலை. ஆனா ரெண்டு பெருக்கும் காதலிக்கறோம்னு தெரிஞ்சிருந்தது. முத்தம் கொடுக்க வந்தா, அந்த நேரம் பார்த்து எழுப்பிட்ட. பாவி”
”ஓ. அந்த அளவுக்கு. மொதல்ல லவ்வை சொல்லி தொலைடா. இல்லைனா எவனாவது பிக் அப் பண்ணிட்டு போயிட போறான்”
“நானும் சொல்லலாம்னு தான்டா பாக்கறேன். ஆனா அவக்கிட்ட போனாலே அவ பார்க்கற பார்வைலயே என் வாய்ல வார்த்தை நின்னுடுது”
“இந்த பார்வை, போர்வைனு சொல்லியே வீணா போக போற. மூடிட்டு திங்க கிழமை போனவுடனே சொல்லிடு. சரியா?”
“எப்படி சொல்றதுனு ஏதாவது ஐடியா கொடேன்”
“நான் ஐடியா கொடுக்கறது இருக்கட்டும். நீ போய் பல்லு விளக்கிட்டு வா. கப்பு தாங்கல. இந்த கப்புல நான் யோசிச்சா எதுவும் ஒர்க் அவுட் ஆகாது”
...
“சரி இப்ப சொல்லு”
“நான் சொல்றது இருக்கட்டும், எப்படி சொல்லலாம்னு ஏதாவது நீயே யோசிச்சி வெச்சிருப்பியே. அதை எடுத்து விடு”
"எனக்கும் அடிக்கது தோணும். ரொம்ப சாதாரணமா இப்படி சொல்லலாமா? I want to share the rest of my life with you னு”
“ஏதோ ஷேர் ஆட்டோ பிடிக்க கூப்பிடறனு நினைச்சிக்க போறாடா. என்னுமோ ஃபாதர் ஆஃப் பாரின் கண்ட்ரி ரேஞ்சுக்கு பேசறியே. இந்த மாதிரி எல்லாம் பேசறதுக்கு இது என்ன கௌதம் மேனன் படமா? தமிழ்ல சொல்லுடா என் வெண்ட்ரு”
“கவிதை மொழியில சொல்லலாமா?”
”எங்க சொல்லு பார்க்கலாம்?”
“வானமோ நீலம்...
நீதான் என் பாலம்”
”நிறுத்து நிறுத்து... இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே”
“சென்னை 28ல அவன் இதை ஆரம்பிப்பான். முடிக்காம விட்டுடுவான். அதான் நான் கண்டினியூ பண்ணலாம்னு பார்த்தேன்”
“அதுக்கு
இலையோ பச்சை
நீ ஒரு எச்சை” னு அவ கண்டினுயூ பண்ணா என்ன பண்ணுவ?”
“ஏன்டா அபசகுனமா பேசிட்டு இருக்க?”
“டேய், ரொம்ப சாதாரணமா சொல்லுடா. இதை இவ்வளவு காம்ப்ளிக்கேட்டடா மாத்தாத. புரியுதா?”
“சாதாரணமானா எப்படி?
”அவளை உனக்கு எதுக்காக பிடிக்கும்னு யோசிச்சி பாரு. அதையே அவக்கிட்ட சொல்லி புரிய வை”
“அப்படி நான் சொல்லி அவ புரிஞ்சிக்கலைனா?”
“அவ புத்திசாலினு புரிஞ்சிட்டு ஃபிரியா விடு. நல்ல பொண்ணா உங்க வீட்ல பார்ப்பாங்க, அவளை கல்யாணம் பண்ணிக்கோ”
“போடா நாயே. இப்படியெல்லாம் சொல்லாத”
“எப்படியாவது சொல்லி தொலை. இப்ப எனக்கு பசிக்குது. வா சாப்பிட போகலாம்”
(தொடரும்...)